Friday, June 25, 2010

இந்தியாவில் வாழும் 97 சதவீத மக்களுக்கு வச்சாச்சு ஆப்பு...


ஆளும் காங்கிரஸ் அரசின் தற்போதைய மகத்தான சாதனை மீண்டும் ஒரு முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு..! இதனால் இந்தியாவில் வாழும் 97 சதவீத மக்களுக்கு வச்சாச்சு ஆப்பு..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்ரவை கூட்டம், இன்று தில்லியில் கூடி விவாதித்தது. ‌ விலை உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 35 அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்கப்பட்டுள்ளது.  டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் , பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3. 73 அதிகரிக்கிறது. இத்தகவலை பெட்ரோலிய துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார். அது மட்டுமின்றி இனி பெட்ரோலியப் பொருற்களின் நிறுவனங்களே அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலையினை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், அதில் மத்திய அரசு தலையிடாது என்றும் முடிவு செய்துள்ளது.

இந்த விலை உயர்வால் சாமன்ய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவித்தார்.  மண்ணெண்ணெய்க்கான மானியம் தொடரும் என்றார். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறதாம்.

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 3% பேர் மட்டுமே பணக்காரர்கள் ஆவர்.. மீதமுள்ள  97 சதவீத மக்களனைவரும் நடுத்தர, மற்றும் ஏழை வர்க்கத்தினரும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவரே ஆவர்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால், விலைவாசி விண்ணை உடைத்துக் கொண்டு செல்லப் போகிறது. ஏற்கனவே தற்போது விலைவாசி விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும்.

ஒரு கிலோ அரிசியில் விலை 30 ரூபாய்... சர்க்கரை விலை 40 ரூபாய்... இப்படி அத்தியாவசிய பொருட்களின் விலை இப்போதே உச்சத்தில் இருக்க, இந்த விலையேற்றம் மேலும் அதனை உச்சாணிக்குத்தான் கொண்டு செல்லும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணை உட்பட அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் ஏறத்தான் போகின்றன. இதனை சாக்காக வைத்துக் கொண்டு பதுக்கல்காரர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டத்தான் போகின்றனர்.

இவ்விலை உயர்வால் அம்பானியோ, அமிதாப்போ, சோனியாவோ, மத்திய அமைச்சர்களோ, அரசிழல்வாதிகளோ பாதிக்கப் படப்போவதில்லை. கோடி வீட்டு குப்பனும், குடிசை வீட்டு சுப்பனும்.. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரும்தான்.


இனி உணவகங்கள், விடுதிகள் எவற்றிலும் சென்று நிம்மதியாய் சாப்பிடக் கூட முடியாது... நம் தேசம் முன்னேறுகிறதோ இல்லையோ... விலைவாசியில் ஏறுகிறதய்யா..?

நம் மக்கள் என்று விழிக்கிறார்களோ... அன்றுதான் அவர்களுக்கு விடிவுகாலமே..! வாழ்க சனநாயகம்...!

Tuesday, June 15, 2010

ஆபாச தளங்களை உங்களுடைய பாலோவர்ஸ் பகுதியிலிருந்து நீக்க வேண்டுமா?

தமிழ்க் கூறும் நல்லுலகில் நமது கருத்துக்களை சொல்வதற்கு ஒரு அமுதசுரபியாக இருப்பது இணையதள வலைப்பூக்கள் ஆகும். அதில் அவரவர் கருத்துக்களை சுதந்திரமாக எழுதி தங்களின் அவாவினை சாந்தப்படுத்திக் கொள்கின்றனர்.

அந்த எழுத்துக்கள் யாரைக் கவருகிறதோ..அவர்கள் அதற்கு வாசகர்களாகி விடுகின்றனர். அதனை ஒன்றிணைக்கும் பணியை கூகிள் பிளாக்கர், "Followers' பகுதியில் செய்ய வைக்கிறது.

தேன்கூட்டில் தேனை சேகரிப்பது போல வலைக்குடிலில் வாசகர்களை சேர்ப்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல..! அதிலும் சில அயோக்கியர்களால் ஆபாச வலைத்தளங்கள் புகுத்தப்படுகின்றன.

அதனை எப்படி தடுப்பது என புரியாமல் விழித்தவர்களில் நானும் ஒருவன். கண்டேன் சீதையை... அதை எப்படித் தடுப்பது என கண்டுகொண்டேன்... அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்..!

முதலில் உங்களது டாஷ்போர்டுக்கு செல்லுங்கள். அதில் நீங்கள் பல வலைக்குடில்கள் வைத்திருக்கலாம். ஓன்றே ஒன்று கூட வைத்திருக்கலாம். அந்த வலைக்குடிலுக்கு இணையாக வலது புறத்தில் (கீழே உள்ள படத்தைப் பார்க்க) பாலோவர்ஸ் எத்தனை பேர் என்பதை குறிப்பிட்டபடி இருக்கும். அது ஒரு இணைப்புதான் அதனை கிளிக் செய்யவும்...


அப்படிச் செய்ததும்.. அந்த பாலோவர் யார்..? அவரை சேர்க்கவா..? தடுக்கவா என குறிப்பிட்டிருக்கும். அதில் தடுத்து விடு (Block this user) என்பதை கிளிக் செய்யவும்... (கீழே உள்ள படத்தைப் பார்க்க)



அப்படிச் செய்ததும்.. அந்த பாலோவரை நிச்சயமாக தடுக்கவா? என குறிப்பிட்டிருக்கும். அதில் தடுத்து விடு (Block) என்பதை கிளிக் செய்யவும்... (கீழே உள்ள படத்தைப் பார்க்க)


அவ்வளவுதான்..இனி அந்த தளங்கள் உங்களது பாலோவர்ஸ் பகுதியில தெரியாது.