Friday, December 30, 2016

டெஸ்ட் கிரிக்கெட் 2016 – இந்தியா ஒரு பார்வை!


இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணிக்கு இந்த ஆண்டு வெற்றி ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அத்தனை உலக நாடுகளும் தோல்விகளைத் தழுவியிருக்கின்றன. ஆனால், இந்த ஆண்டில் தொடர்ந்து வெற்றிகளையே பதிவு செய்து வந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

மொத்தம் 12 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 9 போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளை டிராவிலும் முடித்திருக்கிறது. ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவவில்லை இந்திய அணி. இதே போன்ற சாதனைகளை இந்திய அணி இதற்கு முன் 1955, 1961, 1971, 1986, 1993, 2009 ஆகிய ஆண்டுகளில் படைத்திருக்கிறது.

2014-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு தோனி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவரையடுத்து, விராட் கோஹ்லி டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தோனி கூல் கேப்டன் என்றால் கோஹ்லி ஆக்ரோஷமான கேப்டன் என பெயர் எடுத்தவர்.

அவரது தலைமையில் 2015-இல் சில போட்டிகளில் தவறினாலும், தவறுகளை சரிசெய்துகொண்டு, 2016-இல் விஸ்வரூபம் எடுத்தது இந்திய கிரிக்கெட் அணி. அதற்கு அணியின் பயிற்சியாளராக 2016-ஜூனில் அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக்கொண்டதும் முக்கிய காரணம். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி விளையாடிய மூன்று டெஸ்ட் தொடரையும் வென்று காட்டியிருக்கிறது.
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கெதிராக 2-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்து அணிக்கெதிராக 3-0 என்ற கணகிலும் வெற்றியை பதிவு செய்தது இந்திய கிரிக்கெட் அணி.

இதனையடுத்து, அலைஸ்டர் குக் தலமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியை 4-0 என்ற கணக்கில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ‘ஒயிட் வாஷ்’ செய்து சாதனை படைத்ததுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள். இந்த கிரிக்கெட் தொடரில் பல்வேறு சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியாக பார்த்ததற்கு காரணம் இருக்கிறது.

சின்ன பிளாஷ் பேக் போவோமோ…

கடந்த 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்ற தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 0-4 என்ற கணக்கில் தோற்றுப்போய் இந்தியா திரும்பியது. இந்த அணியில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் திராவிட், வீரேந்தர் ஷேவாக் உள்ளிட்ட ஜாம்பவான்களும் விளையாடி இருந்தனர். அப்படி இருந்தும் இந்தியாவால் சோபிக்க முடியவில்லை. ஒரு போட்டியைக் கூட டிரா செய்யமுடியவில்லை. படுதோல்வி அடைந்து இந்தியா அணி தாயகம் திரும்பியது.

அப்போது பெற்ற தோல்விக்கு, தற்போது விராட் கோஹ்லியின் தலைமையிலான இளம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பதிலடி கொடுத்து, பழி தீர்த்துக் கொண்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, இந்திய அணியும் 488 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 260 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய 176 ரன்களுடன் களத்தில் நின்றதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தெம்புடன் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி டாஸிலேயே தோற்றுப்போனது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, சித்தேஸ்வர் புஜாரா, கோஹ்லியின் சதங்களால் 455 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியை சுழலில் ரவி அஸ்வின் சாய்க்க, 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் இன்னிங்ஸிலும் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 204 ரன்கள் எடுத்த இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு 405 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில்  கடின இலக்கை விரட்ட நினைக்காமல் டிரா செய்ய நினைத்த இங்கிலாந்து அணியின் கனவை ரவி அஸ்வின், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரின் சுழல் கூட்டணி தகர்த்தது. 158 ரன்களுக்குள் சுருண்ட இங்கிலாந்து 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் மண்ணைக் கவ்வியது.

சண்டீகரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சிற்கு தாக்குப்பிடிக்கமுடியாத இங்கிலாந்து 283 ரன்களுக்குள் சுருண்டது. இரண்டாவது டெஸ்டில் காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் விரித்திமன் சஹாவிற்கு பதிலாக மூன்றாவது போட்டியில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தீவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இம்முறை அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட டெயிலெண்டர்களின் (கடைசி வரிசை ஆட்டக்காரர்கள்) அட்டகாசமான ஆட்டத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் குவித்தது. இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து இந்தியாவின் சுழலில் 236 ரன்களுக்குள் சுருண்டது. 104 ரன்களை எளிதில் விரட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அறிமுகப்போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் சதமடித்து அசத்தினார். 400 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்தது இங்கிலாந்து அணி. இந்த இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை ரவி அஸ்வினும், 4 விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜாவும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்திய அணியில் முரளி விஜய் 136 ரன்களும், கேப்டன் விராட் கோஹ்லி இரட்டைச் சதத்துடன் 235 ரன்களும், ஒன்பதாவது விக்கெட்டாக களமிறங்கிய ஜெயந்த் யாதவ் 104 ரன்களும் அடித்து சாதனை படைத்தனர். 631 ரன்கள் குவித்த இந்திய அணி, இங்கிலாந்தை விட தனது முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மீண்டும் அஸ்வின் சுழலில் சிக்கிக்கொண்டது. 6 விக்கெட்டுகளை அஸ்வினும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்த இங்கிலாந்து 195 ரன்களுக்குள் ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கோஹ்லியை விமர்சித்திருந்தார். அதற்கு இந்தப்போட்டியில் இரட்டைச் சதம் மூலம் பதிலைத் தந்திருந்தார் விராட் கோஹ்லி.

இந்த தொடரின் கடைசி போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற இருப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் வார்தா புயல் சென்னையை வாரிச் சுருட்டி வீசி இருந்தது. அடை மழையில் சேப்பாக்கம் மைதானம் ஈரமுகத்தோடு அழுது கொண்டிருக்க, கேலரியில் உள்ள சேர்கள் எல்லாம் சிதைந்து கிடக்க, திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் இருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக இருந்தது தள்ளிப்போய்விடுமோ என்ற அச்சமும் சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடையே இருந்தது.

வார்தா புயலுக்குப்பின் அமைதி ஏற்படவே, திட்டமிட்டபடி 5-வது டெஸ்ட் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அனைத்து வீரர்களும் கறுப்பு ரிப்பனோடு களத்தில் இறங்கினர்.

ஆறுதல் வெற்றியேனும் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் டாஸ் வென்ற  இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. மொயீன் அலி 146 ரன்கள் குவிக்க, டெயிலெண்டர்களான டாவ்ஸனும் ரஷீத்தும் அரை சதம் அடிக்க 477 ரன்கள் என்ற வலுவான நிலையில் தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கௌஷல் ராகுல் 199 ரன்கள் குவித்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பார்த்தீவ் படேல் 77 ரன்கள் குவித்தார். தனது மூன்றாவது போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் கருண் நாயர், இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்து 303 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றார். இவரது சிறந்த ஆட்டத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த அணிகளின் பட்டியலில் 7-ஆம் இடத்தைப் பிடித்தது சாதனை படைத்தது.

கடைசி நாள் ஆட்டம் மீதம் இருக்க இங்கிலாந்து அணி வசம் பத்து விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் தடுப்பாட்டத்தைக் கடைபிடித்தால் போட்டி டிராவில் முடிந்துவிடும் என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் கூட விழவில்லை. சென்னை மைதானம் என்பதாலும், ரவி அஸ்வினின் சுழல் தாக்குதல் இருக்கும் என்பதாலும் அஸ்வினின் சுழல் வீச்சிற்கு தயாரானது போல் விக்கெட் கொடுக்காமல் ஆடினர். இதனால், இந்த போட்டி டிராவில்தான் முடியப்போகிறது என ரசிகர்களும் நினைக்க ஆரம்பித்த வேளையில் ரவீந்திர ஜடேஜாவின் சுழல் ஜாலம் அங்கிருப்பவர்களை அசர அடித்தது. 48 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சடசடவென்று சரித்துக்காட்டினார் ஜடேஜா. டெஸ்ட் அரங்கில் ஜடேஜாவின் சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது. 207 ரன்களுக்குள் ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது.

முச்சதத்தைக் குவித்து ஆட்டநாயகன் விருதுபெற்ற கருண் நாயர் ‘’முச்சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஆடியது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.
கருண் நாயரின் முச்சதத்தைப் பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முச்சதம் அடித்த இந்திய வீரர்கள் கிளப்பிற்கு வரவேற்கிறேன். இந்த கிளப்பில் 12 ஆண்டுகள் 8 மாதங்களாக தனிமையில் தனிமையில் இருந்துவிட்டேன். வருக கருண் நாயர்’ என்று பதிவிட்டிருந்தார். இரண்டு முறை முச்சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக். மற்றொரு டிவிட்டர் செய்தியில் ‘கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்தை, இந்திய அணி வென்றிருக்கிறது. வாழ்த்துகள்’’ என்றும் ஷேவாக் குறிப்பிட்டது வைரலானது.
இந்திய அணியின் வெற்றிக்குப்பிறகு, இங்கிலாந்து அணியை சுழலில் வாரிச்சுருட்டிய ஜடேஜாவைப் பாராட்டும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘யெஸ்..யெஸ்… யெஸ்… ஜட்டு… பார்சல் சம் லட்டு டூ இங்கிலாந்து’ என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியவர்களை வீழ்த்தியிருக்கிறீர்கள். இதே ஆட்டம் இங்கிலாந்திலும் தொடரட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தோல்விக்குப்பிறகு பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் “இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியானது. நாங்கள் ரன்கள் குவிக்க தவறிவிட்டோம். கிடைத்த கேட்சுகளை கோட்டை விட்டதால், அதற்கான பலனை அனுபவித்தோம். விராட் கோஹ்லி தலைமையிலான அணி சிறப்பாக ஆடியது.” என்றார்.

தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோஹ்லி “இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனமாக இருந்தோம். ஒவ்வொரு வீரரும் தனக்காக ஆடாமல், அணிக்காக ஆடினர். வெற்றியைப் பரிசாக பெற்றிருக்கிறோம்” என்றார்.
அனில் கும்ப்ளேவின் வழிகாட்டுதலில் 2016-ஆம் ஆண்டை சிறப்பாக முடித்திருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, மூன்று முக்கிய இளம் வீரர்களை அடையாளம் கண்டிருக்கிறது. கௌஷல் ராகுல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர் ஆகிய இந்த மும்மூர்த்திகளும் இந்திய டெஸ்ட் அணிக்கு கிடைத்த பலம் என்றே சொல்ல வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாத் “இந்த மூன்று பேரும் இந்திய ஏ அணியின் தரமான தயாரிப்புகள். அப்போதிலிருந்தே இவர்களை அடையாளம் கண்டு, அணிக்குள் சேர்த்தோம்’’ என்றார்.

ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தரவரிசையில் இந்திய அணி முதலிடம். 2016- ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற இரட்டை விருதைப் பெற்ற மகிழ்ச்சியில் தமிழக வீரர் ரவி அஸ்வினும் இருக்கிறார்.

தனி மனிதர் ஒருவரால் வெற்றி காணப்படுவதல்ல கிரிக்கெட். சரியான வீரர்களை தேர்வு செய்யும் நேர்மையான தேர்வாளர், வீரர்களின் குறைகளைக் கண்டறிந்து அதை நிறையாக மாற்றச்செய்யும் பயிற்சியாளர், களத்தில் அணி வீரர்களின் தோளோடு தோள் இணைந்து, அரவணைத்து வழிநடத்திச் செல்லும் கேப்டன் என இந்த மூன்றும் வெகுநாட்களுக்குப்பிறகு இந்திய அணிக்கு வாய்த்திருக்கிறது.

இதே நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர வேண்டும். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அசைக்க முடியாத அணியாக வலம் வர வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.
இங்கிலாந்திற்கு எதிரான தொடரை வென்றபோது, வீரேந்திர ஷேவாக் ‘உலகிற்கே கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியவர்களை, வீழ்த்தியிருக்கிறது நமது இந்திய அணி. பெருமையாக இருக்கிறது’ என்று ட்விட்டியிருந்தார். இதுபோன்ற உத்வேகங்களும், ஊக்குவிப்புகளும் அணிக்கு நிலையானதாக இருக்கட்டும்.

வரும் புத்தாண்டு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்.

Tuesday, April 26, 2016

சிலம்பாட்டம் விளையாடலாமா?


தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டத்தை கடந்த ஒரு மாத காலமாக கற்றுக்கொண்டு வருகிறேன். பால பாடத்தில் இருக்கும்போதே பெரிய வித்தையை மக்கள் முன் காட்டவேண்டிய கட்டாயம் நேற்றுமுன்தினம் எங்கள் குழுவுக்கு ஏற்பட்டது. தாம்பரம் சானடோரியம் அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12:30 வரை திருவீதி உலா நடந்தது. அதில் எங்கள் சிலம்பாட்டக் குழுவின் விளையாட்டும் இடம்பெற்றது.

அதில் நான் ஆடிய தீப்பந்த விளையாட்டு இது... இந்த நிகழ்வு நடந்த அன்று காலைதான் முதன் முதலாக இதற்கு பயிற்சி எடுத்தேன்... அன்று இரவே இதை மக்கள் முன்பு அரங்கேற்றினேன்... எல்லாப் புகழும் எனது சிலம்பாட்ட வாத்தியாருக்கே...

Tuesday, March 22, 2016

'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சியில் அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!


இரு தினங்களுக்கு முன்பு, அதாவது சென்ற ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் ‘ஆசிரியர் வைபவம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. முழுக்க முழுக்க அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது திறனை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினனாக எனை அழைத்திருந்தனர். அக்கல்லூரியின் கரேஞா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கியது.

காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை 5.40க்கு நிறைவடைந்தது. 20 அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமைகள் முதன்முறையாக அரங்கேற்றம் கண்டன. புகை நமைக்கு பகை என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் உரை நிகழ்த்தினார். அது உரை என்பதை விட ‘தனி நடிப்பு’ மூலம் செய்து அசத்தினார்.
                                                                      தனிநடிப்பு ஆசிரியருக்கு பாராட்டு

அடுத்து வந்த ஆசிரியை ‘ராதை மனதில்… ராதை மனதில் என்ன ரகசியமோ…’’ என்ற பாடலுக்கு மனதை ஈர்க்கும் வகையில் நடமாடி கைத்தட்டல்கள் பெற்றார். அடுத்து வந்த ஆசிரியை ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். ஒரு ஆசிரியை நளவெண்பா பாடலை தானே பாடி, இசையமைத்து குறுந்தகடாக அங்கு வெளியிட்டார்.


அரசுப்பள்ளி மாணவர்கள் குழு ஒன்று அனாசயமாக ஆங்கிலத்தில் நல்ல பழக்கவழக்கங்களை நாடகமாய் நடித்துக் காட்டி கைத்தட்டல்களை அள்ளியது. அசந்து போனேன். மற்றொரு அரசுப்பள்ளி மாணவிகள் குழு, தாய்லாந்து மங்கைகளைப் போல் ஆடை, அலங்காரம் செய்தபடி, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு நடமாடி உள்ளத்தை கொள்ளை கொண்டனர்.

அவரை அடுத்து வந்த ஆசிரியர் மிமிக்ரி மூலம் தேசபக்தி கதையை செப்புவித்தார். அடுத்து அரங்கேறிய ஆசிரியை தமிழக நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கரகாட்டத்தை ஆடினார். அவர் ஆடியது மட்டுமின்றி அரங்கத்தில் உள்ளோரையும் ஆட்டம் போட வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.

                                         மிமிக்ரி மூலம் தேசபக்தி கதை சொன்ன ஆசிரியருக்கு பாராட்டு

அடுத்த வந்த ஆசிரியர் தான் இயக்கிய திகில் குறும்படத்தை திரையிட்டார். ஒலிக்கலவையும், கேமராவும் மிக நேர்த்தியாக இருந்தது. பின்னணி இசை பயமுறுத்திற்று. அட்டகாசமான திகில் குறும்படம் அது.


52 வயது நிரம்பிய அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா…’ பாடலை தாள லயத்தோடு, ஸ்ருதி பிசகாமல் பாடினார். பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவரை… அவ்வளவு நேர்த்தி…

நான் ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் திறனைக் காட்டியபோது, அவர்களை உற்சாகப்படுத்தி பேசியதைக் கேட்டு, அங்கு பார்வையாளராக வந்திருந்த ஆசிரியை, மேடையேறி மூன்று பாடல்களைப் பாடிக் காட்டி பரவசம் கொள்ளச் செய்தார்.

அடுத்து வந்த ஆசிரியர் பியானோ வாசித்தார். அப்துல் கலாம் குறித்து  எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு செய்த வீடியோவை திரையிடச் செய்தார். அடுத்த அந்த பாடலுக்கு மேடையில் நடனமாட, கீழிருந்த ஒரு மாணவி அவரோடு சேர்ந்து துள்ளாட்டம் போட்டது பார்வையாளர்களான எங்களை பரவசப்படுத்தியது. மாணவர்களே எழுதிய கதைப்புத்தகம் ஒன்று, அரசுப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் அங்கு வெளியிட்டப்பட்டது.

அரசுப்பள்ளி ஆசிரியைகள் குழு ஒன்று, வில்லுப்பாட்டினை அரங்கேற்றியது. அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவத்தை சினிமா பாடல்களின் மெட்டுகளில் வடிவமைத்து பாடி அசத்தினர்.

                                                             குறுந்தகடு வெளியீடு
எனது கையால் ‘பலூன்’ என்ற குறும்படம் வெளியிட வைத்தனர். ரைம்ஸ் பாடல் குறித்த சிடி ஒன்றையும் எனது கையால் வெளியிட வைத்தார்கள். மகிழ்வாக இருந்தது.

ஒரு ஆசிரியர் சோப்பு, சாக்பீஸ் ஆகியவற்றில் பல்வேறு சிற்பங்களும் முட்டை ஒடுகளால் ஓவியங்களும் வரைந்து காட்டி அசத்தினார். ஒரு ஆசிரியர் பறவைகளின் குரல்களை எழுப்பிக்காட்டினார்.
இன்னும் மறக்கவியலா நிகழ்வினை அந்த நிகழ்ச்சி உள்ளடக்கியிருந்தது. விழாவின் முடிவில் பங்குபெற்ற அத்தனை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கேடயம், சான்றிதழ் வழங்கி கௌரவித்தேன். அவர்களது மகிழ்ச்சியில் நானும் மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன்!

                                                            நளவெண்பா பாடிய ஆசிரியைக்கு பாராட்டு

வில்லுப்பாட்டு பாடிய ஆசிரியை குழுவினர் என்னோடு குழுவாக படம் எடுத்துக் கொண்டது மட்டுமின்றி, தங்களது பள்ளி மாணவர்களைப் பற்றி பேசினர், அவர்கள் பள்ளிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர்.


அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் இவ்வளவு திறமைகள் புதைந்து கிடக்கின்றனவா என்று உண்மையிலேயே அதிசயித்துப் போனேன். வாழ்த்துகள் அரசுப்பள்ளி ஆசிரியர்களே... உங்கள் அபரிமிதமான திறன்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! இதை மாநில அளவில் ஏன் நாம் நடத்தக்கூடாது என்ற எண்ணத்தினை இந்த நிகழ்ச்சி என்னுள் ஏற்படுத்தியது. விழாவின் இறுதியில் குழுப்படம் எடுத்தனர்.



இந்த நிகழ்ச்சியை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காக திருப்பத்தூர் ஜேஸிஸ் சங்கம் நடத்தியது. அரசுப்பள்ளி ஆசிரியர்களான சுமித்ரா, பாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திக்காட்டினர். அவர்களுக்கு இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி கிரண், ஜோலார்பேட்டை ரயில்நிலைய மாஸ்டர் வெங்கடாசலம், இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த அன்புத் தோழர் சிகரம் சதீஷ் ஆகியோரை மறக்கவே இயலாது.

போய் வருகிறேன் திருப்பதூரே… என்றபடி அங்கிருந்து கிளம்ப மனமின்றி கிளம்பி வந்தேன். இனிமையான அனுபவம் அது..!

Friday, March 18, 2016

திருப்பத்தூரில் நடைபெறும் 'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சி

வணக்கம் அன்பு நெஞ்சங்களே...

பத்திரிகை உலகில் அடி எடுத்து வைத்து 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சச்சின் தெண்டுல்கர் முதல் சாமன்யன் வரையிலும், திரை உலக பிரபலங்கள் முதல் திடலில் திரியும் சிறுவன் வரையிலும், அரசு அதிகாரிகள் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரை பேட்டி எடுத்திருக்கிறேன். பலவித கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு... சென்ற ஆண்டின் இறுதியில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிற்றிதழ் குறித்த பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக, பயிற்சியாளராக கலந்து கொண்டேன். மேடை ஏறி, நான் கற்றதை மற்றவருக்கும் கற்பிக்கும் வாய்ப்பு அது... கற்பித்து மகிழ்ந்தேன். என் கல்வியின் கற்பினைக் கண்டு மகிழ்ந்தேன்...

நாளை மறுதினம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கலை அறிவியல் கல்லூரியில் 'ஆசிரியர் வைபவம்' என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 40 அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பலநூறு பார்வையாளர்கள் முன்பு தங்களது தனித்திறமைகளை மேடையேற்ற இருக்கிறார்கள்.  அத்தகைய நிகழ்வில் நானும் ஒரு கௌரவ அழைப்பாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். இதற்கு முழுமுதற் காரணமாய் இருக்கும் ஆசிரியை சுமித்ரா அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கிறேன். எனை இந்த அளவிற்கு வளர்த்து விட்ட எமது ஆசிரியப் பெருமக்கள், எனது பெற்றோர், எனது குடும்பத்தினர், எனது நண்பர்களாகிய நீங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பங்கிருக்கிறது.

திருப்பத்தூருக்கு உங்களனைவரையும் என் சார்பில் அழைக்கிறேன்..!




Monday, March 07, 2016

உலகின் தற்போதைய பெண் தலைவர்கள்! - மகளிர் தின சிறப்புப் பதிவு!



 
உலகில் மொத்தம் 205-க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இத்தனை நாடுகளில் எத்தனை பெண்கள் அதிபராகவோ, பிரதமராகவோ இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால் 16 பேர் காணக்கிடைத்தார்கள். உலகில் சரிபாதி பெண்கள்தான். 205 நாடுகளில் 16 நாடுகளில் மட்டுமே பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதாவது, உலகிலுள்ள நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் எண்ணைக்கையை கணக்கிட்டால் ஆறரை சதவீதம் மட்டுமே பெண்கள் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார்கள். மீதம் 93 சதவீதம் பேர் ஆண்களாகவே இருக்கிறார்கள்… இனி அந்த பதினாறு பெண் தலைவர்களைப் பார்க்கலாம்…

ஏஞ்சலா மெர்கல் (Anjelo merkel) அதிபர், ஜெர்மனி
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் அதிபராக பதவி வகித்து வருபவர் ஏஞ்சலா மெர்கல். இவர், இந்நாட்டின் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், முன்னதாக, 2005, 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். 2013-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர் இவர். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்படவர்.

எல்லன் ஜான் ஸன் சர்லீப், (Ellen Johnson Sirleaf) அதிபர், லைபீரியா
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முதல் பெண் அதிபராக 2005-இல் தேர்ந் தெடுக்கப்பட்டவர் எல்லன் ஜான் ஸன் சர்லீப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். 2011-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டவர். 2012-ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதிப் பரிசினை வென்றவர். இந்நாட்டின் 42-வது அதிபராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

டாலியா கிரிபவுஸ்கைடே, (Dalia Grybauskaitė) அதிபர், லித்துவேனியா
வட ஐரோப்பா பகுதியில் உள்ள நாடு லித்துவேனியா. இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை அதிபராக இருக்கும் இவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்நாட்டினரால் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் இவர் கராத்தேவில் ‘கறுப்பு பட்டை’ பெற்றவர்

தில்மா ரூசெப், (Dilma Rousseff) அதிபர், பிரேசில்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் 36-வது அதிபராக பதவி வகித்து வருகிறார் தில்மா ரூசெப். இந்நாட்டின் முதல் பெண் அதிபரும் இவர்தான். 2011-ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வரும் இவர், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மாகணத்தின் தலைவராக பதவி வகித்திருக்கிறார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டாம் முறையாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.

அடிபெடே ஜஜாகா, (Atifete Jahjaga) அதிபர், கொசோவோ
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசோவோ நாட்டின் நான்காவது அதிபரும், அந்நாட்டின் முதல் பெண் அதிபருமான அடிபெடே ஜஜாகா,  முன்னதாக அந்நாட்டு காவல் துறையில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். அமெரிக்காவின் எப்பிஐ அகாதெமியில் படித்து பயிற்சி பெற்றவர் இவர்.

பார்க் ஷியுன் ஹை, (Park Geun-hye) அதிபர், தென் கொரியா
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் பெண் அதிபராக பதவி வகித்து வரும் பார்க் ஷியுன் ஹை, கிராண்ட் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டின் அதிபரான முதல் நபரும் இவரே. எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் இவர். கிழக்காசிய நாடுகளில் வலிமைமிக்க பெண்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.

மிச்செல் பேச்லெட், (Michelle Bachelet) அதிபர், சிலி
இலத்தீன் அமெரிக்க நாடான சிலி நாட்டின் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக 2006-லிருந்து 2010 வரை பதவியிலிருந்தவர். பின்னர், .நா. பெண்கள் அமைப்பின் தலைவராக இருந்த அவர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தப் பதவியை ராஜிநாமா செய்து விட்டு மீண்டும், அரசியலுக்கு வந்தார். 2014 முதல் மீண்டும் இந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார்.

கொலிண்டா கிராபர் கிட்ரோவிக் (Kolinda Grabar-Kitarović), அதிபர், குரோஷியா

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் ஒன்று குரோஷியா. இந்நாட்டின் முதல் பெண் அதிபராக சென்ற ஆண்டு பிப்ரவரியில் பதவி ஏற்றுக் கொண்டவர். குரோஷியக் குடியரசின் நான்காவது அதிபர், மிக இளம் வயதிலேயே அதிபர் ஆனவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. கன்சர்வேட்டிவ் குரோஷியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சியைச் சேர்ந்தவர் இவர்.

அமீனா குயூரிப், (Ameenah Gurib) அதிபர், மொரீஷியஸ்
இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். பணக்கார நாடான இங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் சென்ற ஆண்டு பதவி ஏற்றார். சுற்றுச்சூழலியல் விஞ்ஞானியான இவர், மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

பிந்த்யா தேவி பண்டாரி, (Bidhya Devi Bhandari) அதிபர், நேபாளம்
உலகின் மிக உயரமான சிகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் நேபாளம். இந்நாட்டின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் வித்யா தேவி பண்டாரி, கடந்த ஆண்டு அக்டோபரில் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
அதிபர் வித்யா தேவி பண்டாரி நேபாளத்தின் மன்னர் ஞானேந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவந்தார். அவரது பெருமுயற்சியால் மன்னரின் சர்வாதிகார ஆட்சி 2008ல் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்தது. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசானபிறகு வித்யா தேவி நேபாளத்தின் இரண்டாவது அதிபராக ஆகியுள்ளார்.

ஹில்டா ஹெயினே, (Hilda Heine) அதிபர், மார்ஷல் தீவுகள்
 பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மைக்ரோனேசியா தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதி மார்ஷல் தீவுகள். 72,000 பேர் வசிக்கும் இத்தீவின் தலைநகரம் மஜுரோ. 29 பவளத் தீவுகளை உள்ளடக்கியது இந்த மார்ஷல் தீவுகள். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக, இரு வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றிருக்கிறார் ஹில்டா ஹெயினே. அமெரிக்காவில் உள்ள சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். ஆரம்ப காலங்களில் இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்.


ஷேக் ஹசீனா, பிரதமர், வங்கதேசம்
நமக்கு அண்டை நாடாக இருக்கும் வங்கதேசத்தின் தற்போதைய பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. இந்நாட்டின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரகுமானின் முதல் மகள் இவர். 1981-லிருந்து வங்கதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவரும் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராக, 1996-ல் பதவியேற்றார். மீண்டும் 2009-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், இன்று வரை பொறுப்பில் இருக்கிறார். இந்நாட்டின் முதல் பெண் பிரதமராக இருந்தவர் காலிதா ஜியா.

போர்டியோ சிம்ப்ஸன் மில்லர் (Portia Simpson-Miller), பிரதமர், ஜமைக்கா

கரீபியின் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவின் முதல் பெண் பிரதமராக இருப்பவர் போர்டியோ சிம்ப்ஸன் மில்லெர். ஜமைக்காவின் மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த இவர், முதன்முதலாக 2006-ல் பிரதமராக பதவியேற்றார். ஓராண்டுக்குள் தேர்தல் வந்துவிடவே இவரது பதவிக்காலம் முடிந்து போனது. மீண்டும் 2012-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், தற்போது வரை பொறுப்பில் இருக்கிறார்.

பீட்டா ஸசிட்லோ, (Beata Szydło) பிரதமர், போலந்து

மத்திய ஐரோப்பிய நாடான போலந்தில் சட்டம் மற்றும் நீதிக்கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகித்து வருகிறார் பீட்டா ஸசிட்லோ. இந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் இவர். இவருக்கு முன்னதாக, ஹான்னா சுச்சோக்கா, ஈவா கொப்பாக்ஸ் ஆகியோர் பெண் பிரதமர்களாக இருந்துள்ளனர். பீட்டா ஸசிட்லோவுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமராக இருந்தவர் ஈவா கொப்பாக்ஸ்.

சாரா கூகொங்கெல்வா, (Saara Kuugongelwa) பிரதமர், நமீபியா 

தென்மேற்கு ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடு நமீபியா. தென்னாப்ரிக்க நாட்டிடமிருந்து அதிகார பூர்வமாக 21 மார்ச் 1990-ல் இந்த நாடு குடியரசானது. அந்நாட்டில், முதல் பெண் பிரதமராக, தற்போது பதவி வகித்து வருகிறார் சாரா கூகொங்கெல்வா. இந்நாட்டின் நான்காவது பிரதமர் இவர். பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், அந்நாட்டின் திட்ட கமிஷன் துறையின் டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்திருக்கிறார். 2003-ல் நிதியமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். இவர் ஸ்வபோ பார்ட்டி என்று அழைக்கப்படும் தென்மேற்கு ஆப்ரிக்க மக்களின் கூட்டமைப்புக் கட்சியின் சார்பில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

எர்னா சோல்பெர்க், (Erno Solberg), பிரதமர், நார்வே

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயின் பிரதமராக இருக்கிறார் எர்னா சோல்பெர்க். இந்நாட்டின் 28-வது பிரதமர் மற்றும் இந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் இவர். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் இருந்து வரும் இவர், புள்ளியியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்கிறார். உள்ளாட்சி அதிகாரம் மற்றும் மண்டல வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார் எர்னா. 

(படம் உதவி: புதிய தலைமுறை கல்வி வார இதழ்)