Wednesday, September 30, 2020

இரண்டு தோல்விகளுக்குப்பிறகு முதல் வெற்றியைப் பெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்!


நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 11-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, 100-வது போட்டியில் களமிறங்கினார் டேவிட் வார்னர். தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்க, தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி உற்சாகத்தோடு களமிறங்கியது.

ஹைதரபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த போட்டியில் விளையாடிய விரித்திமான் சாஹா, முகம்மது நபி ஆகியோருக்கு பதிலாக கேன் வில்லியம்ஸன், அப்துல் சமது ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றனர். அப்துல் சமது முதன் முதலில் இப்போட்டியில்தான் அறிமுக வீரராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆவேஷ் கானிற்கு பதிலாக காயத்திலிருந்து மீண்ட இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். 

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், இரவில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால், முதலில் ஹைதராபாத் அணியை பேட் செய்ய அழைத்தார்.

ஹைதரபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர்.

இருவரும் முதல் ஐந்து ஓவர்களில் நிதானமாகவே ஆடினர். மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய நான்காவது ஓவரின் கடைசி பந்தில், காலில் வாங்கிய பேர்ஸ்டோ அதிர்ஷ்டவசமாக எல்.பி.டபிள்யூவிலிருந்து தப்பினார். அப்போது ஹைதராபாத் அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.

ஆறாவது ஓவரை ஆன்ரிச் நோர்ட்ஜே வீச அந்த ஓவரில் டேவிட் வார்னர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டார். பேட்டிங் பவர் பிளேவில், 6 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்திருந்தது.

ஒன்பதாவது ஓவரை அமித் மிஸ்ரா வீச, வீசிய முதல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய, பேட்டில் பந்து  பட்டு, தேர்ட் மேன் திசையில் பவுண்டரியாக மாறியது. அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. அதற்கு அடுத்த பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய பேட்டின் விளிம்பில் பட்டபந்து நேரே விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டிடம் தஞ்சமடைந்தது. அவுட் என்று ரிஷப் பண்டும், அமித் மிஸ்ராவும் நடுவரிடம் முறையிட்டனர். அவர் அவுட் கொடுக்க மறுக்கவே, டிஆர்எஸ் முறையில் ரிவியூ கேட்டனர். மூன்றாம் நடுவர் அதை அவுட் என்றார். டேவிட் வார்னர் 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 45 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

அடுத்து வந்த மணீஷ் பாண்டே அமித் மிஸ்ராவின் வீசிய பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க, அந்த பந்து காகிசோ ரபடாவின் கையில் தஞ்சமடைய, அவர் 3 ரன்களில் நடையைக் கட்டினார்.

ஜானி பேர்ஸ்டோவுடன் கேன் வில்லியம்ஸன் ஜோடி சேர்ந்தார். 15 ஓவர் வரை இருவரும் நிதானமாகவே ஆடினர். 15 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 112 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ 40 ரன்களும், வில்லியம்ஸன் 18 ரன்களும் எடுத்திருந்தனர்.

பேர்ஸ்டோ பந்துக்கு பந்து ரன் என்ற கணக்கில் நிதானமாக ஆடிக்கொண்டே வர, கேன் வில்லியம்ஸன் அதிரடியில் இறங்கினார். 16வது ஓவரிலும், 17வது ஓவரிலும் தலா இரண்டு பவுண்டரிகளை விளாசினார் வில்லியம்ஸன். 

ஜானி பேர்ஸ்டோ, காகிசோ ரபடா வீசிய 17.1 ஓவரில் தனது அரை சதத்தை எட்டினார். விரைவான அரை சதம் இல்லையென்றாலும், அணியின் எண்ணிக்கையை உயர்த்த இவரது அரை சதம் உதவியது. இதில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் மட்டுமே அடங்கும். ரபடா வீசிய அதே ஓவரின் ஐந்தாவது பந்தினை மிட் ஆப் திசையில் பேர்ஸ்டோ தூக்கி அடிக்க, நோர்ட்ஜே அழகாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார்.

அடுத்த ஓவரை நோர்ட்ஜே வீச, இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அப்துல் சமது ஒரு சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசி அணிக்கு நம்பிக்கை  ஏற்படுத்தினார்.

கடைசி ஓவரை ரபடா வீச, அவரது வேகப்பந்துவீச்சில், கேன் வில்லியம்ஸன் அக்ஷர் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் எடுத்திருந்தார்.

20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல் சமது 12 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

புவனேஸ்குமார் வீசிய முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரையடுத்து ஷிகர் தவாணுடன் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கைகோர்த்தார்.

ஷிகர் தவாண் அடித்து ஆட ஸ்ரேயாஸ் அவ்வப்போது ரன்களை எடுத்த வண்ணம் இருந்தார். பேட்டிங் பவர்பிளேவில், 6 ஓவர் முடிவில் டெல்லி அணி 1 விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்திருந்தது.

7வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானிடம் கொடுத்தார் டேவிட் வார்னர். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அப்துல் சமதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இவரையடுத்து ஷிகர் தவாணுடன் ரிஷப் பண்ட் கைகோர்த்தார். டெல்லி அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், அற்புதமான பீல்டிங்கும் டெல்லி அணியை திணற வைத்தன.

தவாண் 34 ரன்கள் எடுத்திருந்தபோதும், ரிஷப் பண்ட் 28 ரன்கள் எடுத்திருந்த போதும், ரஷீத் கான் சுழலில் வீழ்ந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

4 ஓவர்கள் வீசி, 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹைதராபாத் அணியின் ரஷீத் கானிற்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.

தோல்விக்குப் பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் "பனிப்பொழிவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எங்களின் கணிப்பு பொய்யாகிவிட்டது. டெல்லி அணி சிறப்பாக ஆடினார்கள். நாங்கள் இன்னும் நன்றாக விளையாடி இருக்க வேண்டும். 162 ரன்கள் என்பது எட்டிப்பிடித்திருக்க வேண்டிய இலக்குதான். அடுத்த போட்டியில் மீண்டு வருவோம்" என்றார்.

வெற்றிக்குப்பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் "இந்த தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறோம். அதிக பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றாலும் ஓடி ஓடி ரன்களை எடுத்தோம். அந்த கடின உழைப்பிற்கு பலன் கிடைத்திருக்கிறது. எங்களது அணியின் வேகப்பந்து விச்சாளர் மிட்செல் மார்ஷ் காயமடைந்திருப்பது கவலை அளித்தது என்றாலும், அந்த இடத்தை இளம் பந்துவீச்சாளரான அபிஷேக் சர்மா நிரப்பிவிட்டார். ரஷீத்தின் சுழல் வீச்சு அணிக்கு பக்கபலமாக இருந்தது. எங்கள் அணிக்கு இப்போது நம்பிக்கை பிறந்துவிட்டது” என்றார்.

மோ.கணேசன்

#IPL2020 #DCvsSRH #ஐபிஎல்2020 #டெல்லி_கேபிடல்ஸ் #சன்ரைஸர்ஸ்_ஹைதராபாத்

Tuesday, September 29, 2020

201 ரன்கள் குவித்த பெங்களூரு – விரட்டிப்பிடித்த மும்பை இந்தியன்ஸ் – சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ்


மோ.கணேசன்


நேற்று, துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின், 1-0-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் இப்போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஓரு தோல்வி, ஒரு வெற்றியுடன் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது.

கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய சவுரப் திவாரிக்கு பதிலாக இஷான் கிஸான் களமிறங்கினார். ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டிருந்தனர். கடந்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த டேல் ஸ்டெயின், உமேஷ் யாதவ் மற்றும் ஜோஷ் பிலிப்பே ஆகியோருக்கு பதிலாக குர்கிரீத் சிங், இஷ்ரு உதானா, ஆடம் ஸாம்பா ஆகியோர் களமிறங்கினர்.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸில் தோற்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் நிதானம் காட்டிய ஆரோன் பிஞ்ச் மூன்றாவது ஓவரிலிருந்து அதிரடி காட்ட ஆரம்பித்தார். 2.2 ஓவரில் ஆரோன் பிஞ்ச் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார் ரோஹித் சர்மா. அப்போது ஆரோன் பிஞ்ச் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதற்கான விலையை மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்தது.

ஒரு புறம் படிக்கல் நிதானமாக ஆட, மறுபுறம் வாண வேடிக்கை காட்டிய ஆரோன் பிஞ்ச் 31 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் அரை சதத்தை எட்டினார். 52 ரன்கள் எடுத்திருந்த போது ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சில் கிரென் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

படிக்கல்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். வழக்கம்போல இம்முறையும் சொதப்பிய விராட் கோலி 11 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து, தீபக் சஹாரின் சுழலில் மிக எளிதாக ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இவரையடுத்து படிக்கல்லுடன், 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். அதுவரை நிதானமாக ஆடிய படிக்கல் அடித்து ஆட ஆரம்பிக்க, டிவில்லியர்ஸ் களமிறங்கியதிலிருந்தே அனைத்து பந்துகளையும் விரட்டி அடிக்க ஆரம்பித்தார்.

சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை 54 ரன்கள் எடுத்திருந்தபோது டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் பொல்லார்டின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இவரையடுத்து டிவில்லியர்ஸுடன் ஷிவம் துபே கைகோர்த்தார்.

டிவில்லியர்ஸ் நாலா புறம் சிக்ஸரும் பவுண்டரிகளுமாகப் பறக்கவிட்டு, 23 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதத்தை எட்டினார். ஷிவம் துபே தனது பங்கிற்கு சிக்ஸர்களாகப் பறக்கவிட, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைக் குவித்தது.

டிவில்லியர்ஸ் 55 ரன்களுடனும், ஷிவம் துபே 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பேட்டிங் செய்யத்தொடங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குயின்டன் டிகாக்கும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை சுழல்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரிடம் பந்தைக் கொடுத்தார் விராட் கோலி. கேப்டனின் நம்பிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்தது.

வாஷிங்டன் சுந்தரின் சுழலில் 8 ரன்களக் எடுத்திருந்தபோது மாற்று வீரரான பவன் நேகியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித் சர்மா. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், உதானா வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரான டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். குவின்டன் டிகாக்கும் நிலைக்கவில்லை. 14 ரன்கள் எடுத்திருந்தபோது சஹாலின் சுழலில் மாற்று வீரரான பவன் நேகியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

6.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ் அணி. இஷான் கிஸானுடன் கைகோர்த்த ஹர்திக் பாண்டியாவும் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆடம் ஸாம்பாவின் சுழற்பந்துவீச்சில் மாற்று வீரரான பவன் நேகியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது மும்பை அணி 11.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது. 52 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை.

தொடக்க வீரர்களின் சொதப்பல்களால் மும்பை அணியில் நடுவரிசை ஆட்டக்காரர்களின்மீது அழுத்தம் அதிகரித்தது. இஷான் கிஸானுடன் அதிரடி வீரரான பொல்லார்ட் களமிறங்கினார். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இஷான் கிஸான் அடுத்தடுத்து வாண வேடிக்கை காட்ட ஆரம்பித்தார். சிறப்பாக ஆடிய இஷான் கிஸான் 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டினார். 14.3 ஓவரில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது.

33 பந்துகளில் 102 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. மும்பை அணி தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, இஷான் கிஸானும், பொல்லார்டும் சிக்ஸர்களாப் பறக்கவிட ஆரம்பித்தனர். பொல்லார்ட் 6 ரன்கள் எடுத்திருந்தபோது சஹாலின் சுழலில் படிக்கல்லிடம் கேட்ச் கொடுக்க அதை அவர் தவறவிட்டார். பொல்லார்ட் 15 ரன்கள் எடுத்திருந்தபோது ஸாம்பாவின் சுழலில் மீண்டும் தூக்கி அடிக்க, எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்த பவன் நேகி கேட்ச் பிடிக்கத் தவறினார். இதற்கான விலையை பெங்களூரு அணி கொடுத்தது. அந்த ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸர்களைப் பறக்க விட்டார் பொல்லார்டு.

18 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலை இருந்தது. 17வது ஓவரை சஹால் வீச அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்ட பொல்லார்டு, 20 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட அதிவேக அரைசதத்தைக் கடந்தார்.

12 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரை நவ்தீப் ஷைனி வீசினார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 13 ரன்கள் கிடைக்க, 6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்த்து.

கடைசி ஓவரை இஷ்ரு உதானா வீசினார். முதல் இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்கள் எடுக்கப்பட, மூன்றாவது பந்தையும், நான்காவது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு பரவசப்படுத்தினார் இஷான் கிஸான். அடுத்த பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க துரதிர்ஷ்டவசமாக தேவ்தத் படிக்கல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 58 பந்துகளில் 9 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உள்பட 99 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. உதானா வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடிக்க, பவுண்டரியாக மாறியது. மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுக்க ஆட்டம் டையில் முடிந்தது.

பெங்களூரு அணி சார்பில் 4 ஓவர் விசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர். மற்ற பந்துவீச்சாளர்களான இஷ்ரு உதானா, நவ்தீப் சைனி, யஷ்வேந்திர சஹால், ஆடம் ஸாம்பா அனைவரும் ஒரு ஓவருக்கு 12 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்தனர்.

சூப்பர் ஓவர் முறையில் இரண்டாவதாக பேட் செய்த அணி முதலில் பேட்டிங் செய்யவேண்டும் என்பதால், பொல்லார்டும் ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கினர். நவ்தீப் சைனி வீசிய அந்த சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து மும்பை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸும், விராட் கோலியும் களமிறங்கினர். பும்ரா வீசிய மூன்றாவது பந்தில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்த்தாக நடுவர் அறிவித்தார். டிஆர்எஸ் முறையில் நடுவரின் முடிவு திரும்பப்பெறப்படவே, 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஆட்டத்தின் நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டிவில்லியர்ஸ். அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடவே, மறுமுனைக்கு வந்த கோலி, கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா “மிகச்சிறப்பான ஆட்டம். தொடக்கத்தில் நாங்கள் நன்றாக அடித்துவிளையாடி இருக்க வேண்டும். தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாமல் போனது ஏமாற்றம். இஷான் கிஸானின் ஆட்டம் பிரம்மிக்கும்படி இருந்தது. அவர் மீண்டும் பார்முக்குத் திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சியே. பொல்லார்டும் பார்முக்கு வந்ததில் மகிழ்ச்சி. அவரின் அதிரடி அணிக்கு மிகப்பெரிய பலத்தைத் தந்தது. சூப்பர் ஓவரில் இஷான் கிஸானை இறக்கியிருக்காலம். ஆனால் அவர் சோர்ந்துபோய் இருந்தார். அதனால்தான் பொல்லார்டுடன் ஹர்திக்கை களமிறக்கினோம். சூப்பர் ஓவரில் 7 ரன்கள் போதாது என்றாலும், அதிர்ஷ்டமும் தேவை. அடுத்த போட்டியில் மீண்டு வருவோம்” என்றார்.

வெற்றிக்குப்பிறகு விராட் கோலி “இந்த போட்டியைக் குறித்து விவரிக்க வார்த்தைகளே இல்லை. எங்களது வீரர்கள் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தனர். டிவில்லியர்ஸ் எங்களுக்க பலம். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் அற்புதமாக செயல்பட்டார். ஆடம் ஸாம்பா வீசிய கடைசி ஓவரைத் தவிர மிகச்சிறப்பாகவே பந்து வீசினார். பீல்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. சூப்பர் ஓவரை பும்ரா வீசுவார் என்று தெரியும். சிறந்த பந்துவீச்சாளர். அவரது பந்துவீச்சில் பவுண்டரி அடித்தாலே வெற்றி கிடைக்கும் என்று யோசித்தே டிவில்லியர்சும் நானும் களமிறங்கினோம். அற்புதமான ஆட்டம். வெற்றிபெற்றது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

ஆட்டநாயகன் விருதை டிவில்லியர்ஸும், அதிக சிக்ஸ் அடித்த வீர்ர் விருதை இஷான் கிஸானும் பெற்றனர்.

மூன்று போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டு தோல்வி, ஒரு வெற்றியோடு 2 புள்ளிகளுடன் தரவரிசைப்பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ளது. 2 வெற்றிகள், ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று தரவரிசைப்பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது பெங்களூரு அணி.

இன்று நடைபெறும் 11-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

#IPL2020 #MIvsRCB #ஐபிஎல்2020 #மும்பை_இந்தியன்ஸ் #ராயல்சேலஞ்சர்ஸ்_பெங்களூரு #சூப்பர்_ஓவர்

நீர் தெளிப்பான் எப்படி இயங்குகிறது தெரியுமா? - விளையாட்டாய் அறிவியல் | s...




நீர் தெளிப்பானும் மையவிலக்கு விசையும்... தோட்டத்தில் நீர்தெளிப்பான் எப்படி வேலை செய்கிறது? அதன் பின்னால் இருக்கும்  அறிவியல் தத்துவம் என்ன என்பதையும் இந்த வீடியோவில் விஞ்ஞான ரதம் அறிவரசன் நமக்கு விளக்குகிறார்...

தொடரும் உங்களது ஆதரவிற்கு எனது நன்றிகள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #vaalutv

Monday, September 28, 2020

இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் அணி! – விரட்டி அடித்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி!


மோ.கணேசன்

நேற்று,  சார்ஜாவில் உள்ள சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற, 9-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

தான் ஆடிய இரண்டு தகுதிச்சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பஞ்சாப் அணியும், தான் விளையாடிய ஒரு தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையில் ராஜஸ்தான் அணியும் இப்போட்டியில் களமிறங்கின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் எதிரணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் பஞ்சாப் அணி சார்பில் களமிறங்கவில்லை. எந்த மாற்றமும் இன்றி பஞ்சாப் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த்து. கடந்த போட்டியில் விளையாடிய யாஷ் ஜஸ்பால், டேவிட் மில்லர் ஆகியோருக்கு பதிலாக இப்போட்டியில் அங்கித் ராஜ்புத்தும், ஜாஸ் பட்லரும் களமிறங்கினர்.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்கார்ர்களான கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். கே.எல். ராகுல் நிதானமாகத் தொடங்க, மறுபுறம் மயங்க் அகர்வால் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசத் தொடங்கினார். சார்ஜா மைதானம் சற்று சிறியது என்பதால் நாலாபுறமும் பந்துகள் பறந்தன.

பஞ்சாப் அணி 4.3 ஓவரிலேயே 50 ரன்களைத் தொட்டது அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 50 ரன்களைக் கடந்தார். கே.எல்.ராகுலும் வேகம் காட்ட, பஞ்சாப் அணி 8.4 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.

35 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் அரை சதம் கடந்த கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் தனது 17-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். இருவரும் ராஜஸ்தான் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் வீதம் வந்துகொண்டே இருந்தது.  13.2 ஓவரில் 150 ரன்களைக் கடந்தது. 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த ராகுல், அங்கித் ராஜ்புத்தின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் கோபாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராகுல்-அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 183 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையையும் பெற்றது.

ஆரம்பத்தில் இருந்தே வாணவேடிக்கை காட்டி வந்த மயங்க் அகர்வால் 45 பந்துகளில், 9 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் ஐபிஎல்லில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். இவர் 106 ரன்கள் எடுத்திருந்தபோது டாம் கர்ரண் பந்துவீச்சில் சஞ்சு சாம்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிளென் மேக்ஸ்வெல்லும், நிக்கோலஸ் பூரனும் தங்கள் பங்குக்கு வாணவேடிக்கை காட்ட பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் 8 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியை விளாசி 25 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்ட களமிறங்கியது ராஜஸ்தான் அணி. அதன் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லரும் ஸ்டீவ் ஸ்மித்தும் களமிறங்கினர். ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் அடித்து ஆடினால்தான் வெற்றி என்ற கடின இலக்கோடு களமிறங்கயதால் ஜாஸ் பட்லர் அடித்து ஆட முயற்சிக்க,  4 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷெல்டன் காட்ரெல் பந்துவீச்சில் சர்ப்பிராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து ஸ்டீவ் ஸ்மித்துடன் சஞ்சு சாம்சன் கைகோர்த்தார். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடினர். ஸ்மித் ஒரு புறம் பவுண்டரிகளாக விளாச, மறுபுறம் சஞ்சு சாம்சன் சிக்ஸர்களாக விளாச ஆரம்பித்தார். 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் ஐபிஎல் தொடரில் தனது 10-வது அரை சதத்தை எட்டிய ஸ்டீவ் ஸ்மித், ஜிம்மி நீஷம் பந்துவீச்சில் முகம்மது ஷமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 9 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களாக இருந்தது. 11 ஓவரில் 124 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. அதாவது 66 பந்துகளில் 124 ரன்கள். கைவசம் எட்டு விக்கெட்டுகள்.

சஞ்சு சாம்சனுடன் விளையாட ராகுல் திவேட்டியா களமிறக்கப்பட்டார். ஒரு புறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரை சதம் கடந்து, ஐபிஎல் தொடரில் தனது 12-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். மறுபுறம் ஆடிய ராகுல் திவேட்டியா நிறைய பந்துகளை வீண்டித்து ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்துக்கொண்டிருந்தார். இதனால் வெறுத்துப்போன சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிற்கெல்லாம் ஓடாமல் தவிர்த்துவிட்டு, அவரே ஸ்டிரைக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். 15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 150 ரன்களைத் தொட்டது. சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருக்க, திவேட்டியாவோ 21 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

30 பந்துகளில் 84 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. ராஜஸ்தான் அணி அவ்வளவுதான் என்றே ரசிகர்கள் முடிவுகட்டினர்.

அதற்கு ஏற்ப, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்திருந்தபோது முகம்மது ஷமியின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை 16.1 ஓவரில் 161 ரன்கள். 23 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. ராபின் உத்தப்பா திவேட்டியாவுடன் ஜோடி சேர்ந்தார். அவரும்

17 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்த்து. 18 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. 18-வது ஓவரை வேகப்பந்துவீச்சாளரான ஷெல்டன் கார்ட்டெல் வீசினார். அந்த ஓவரை திவேட்டியா எதிர்கொண்டார். அப்போது அவர் 23 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். கார்ட்ரெல் வீசிய ஓவரில் திடீரென விஸ்வரூபம் எடுத்த திவேட்டியா முதல் நான்கு பந்துகளை தொடர்ச்சியாக சிக்ஸருக்குப் பறக்கவிட்டு ஆச்சர்யப்படுத்தினார். 5 பந்தில் ரன் எடுக்க முடியவில்லை என்றாலும், 6வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரை அடித்து, தன்னை பேட்டிங் இறக்கியது சரிதான் என்று காட்டினார். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்து அசத்தினார் டிவேட்டியா. 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.

19வது ஓவரை முகம்மது ஷமி வீசினார். அவர் வீசிய இரண்டாவது பந்தில் ராபின் உத்தப்பா 9 ரன்கள் எடுத்திருந்தபோது நிக்கோலஸ் பூரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் தன் பங்கிற்கு அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாச, திவேட்டியா ஒரு சிக்ஸர் விளாசினார். ஷமி வீசிய கடைசி பந்தில்  திவேட்டியா மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது கணக்கில்  31 பந்துகளில் 7 சிக்ஸர் உள்பட 53 ரன்கள் அடங்கும்.

கடைசி ஓவரை ஸ்ரேயாஸ் கோபால் வீசினார். 6 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், முதல் பந்து டாட், இரண்டாவது பந்தில் ரியான் பராக் தனது ஸ்டம்புகளைப் பறிகொடுக்க டென்ஷன் எகிற ஆரம்பித்தது. 4 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய டாம் கர்ரண் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, அணியை வெற்றிபெற வைத்தார். ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் தொடரில் 215 ரன்களை சேஸ் செய்ததே மாபெரும் சாதனையாக இருந்தது. இந்த சாதனையைச் செய்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். ஐபிஎல் தொடரின் முதல் சீஸனி (2008)ல், கொல்கத்தா அணிக்கு எதிராக 215 ரன்களை சேஸ் செய்து அசத்தியது ராஜஸ்தான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சாதனையே மீண்டும் அதே அணி முறியடித்திருக்கிறது. மயங்க் அகர்வாலின் சதம் வீணாய்ப்போனது.

மேன் ஆப் தி மேட்ச் விருது ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.

தோல்விக்குப்பிறகு பேசிய கே.எல்.ராகுல், “எல்லா துறைகளிலும் சிறப்பாகவே செயல்பட்டோம். பீல்டிங்கில் ஜாஸ் பட்லர் அசத்தினார். சிக்ஸருக்கு போன பந்தை அற்புதமான பீல்டிங் திறமையால் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறந்து பந்தை உள்ளே தள்ளியதை பார்த்திருப்பீர்கள். பந்துவீச்சும் சிறப்பாகவே இருந்தது என்றாலும் ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பாக ஆடியது. இது எங்களுக்கு தோல்விதான் என்றாலும் அடுத்த போட்டியில் கம்பீரமாக மீண்டு வருவோம்” என்றார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மிம் “சஞ்சு சாம்சனின் அதிரடி அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்த்து. நானும் சஞ்சுவும் இணைந்த அமைத்த அடித்தளத்தை அடுத்து வந்த வீர்ர்கள் பயன்படுத்தி வெற்றி தேடித்தந்தனர். திவேட்டியாவினை களமிறக்கியது தவறு என்று எல்லோரும் நினைத்திருப்பீர்கள். அவர் நெட் பிராக்டீஸின்போது எப்படி விளையாடினார் என்பதை கணித்துதான் அவரை களமிறக்கினோம். அதை சிக்ஸர்களாக பறக்கவிட்டு, தன்னை களமிறக்கியது சரி என்று நிரூபித்தார். சிறப்பான வெற்றி. தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. 250 ரன்கள் அடித்தால்கூட விரட்டிப் பிடிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

#IPL2020 #RRvsKXIP #ஐபிஎல்2020

Sunday, September 27, 2020

தான் இறந்துவிடுவோம் என்று கணித்தாரா எஸ்பிபி? - தனக்கு சிலை வடிக்கச் சொன்ன எஸ்.பி.பி!


தன்னுடைய மரணத்தை முன்பே கணித்தாரா எஸ்பிபி? தன்னுடைய சிலையை ஜூன் மாதமே ஆர்டர் செய்திருக்கிறார் எஸ்பிபி

தன்னுடைய சிலையை செய்ய எஸ். பி.பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே ஆர்டர் கொடுத்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் ,ஆந்திராவை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் தன் சிலையை செய்ய ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், கொத்தபேட்டையை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம், மறைந்த தனது தந்தை சாமமூர்த்தி- தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளை செய்வதற்கு எஸ்.பி.பி ஆர்டர் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் உடையார் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட எஸ்.பி.பி தனது சிலை ஒன்றை செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சிலை செய்வதற்கு நேரில் வந்து ஆர்டர் தர முடியாது என்று கூறியதுடன், தேவையான போட்டோ ஷூட் செய்ய முடியாது என கூறி தனது புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்துள்ளார்.
சிற்பி ராஜ்குமார் சிலையை செய்து கொண்டிருந்த நேரத்தில்தான், எஸ்.பி.பி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து எஸ்.பி.பி திரும்பியதும் சிலையை ஒப்படைக்க சிற்பி உடையார் ராஜ்குமார் திட்டமிட்டுள்ளார். ஆனால், சிலையின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், எஸ். பி.பி இறுதிப் பயணம் நடைபெற்று விட்டது.
இதனால் தன்னுடைய மரணத்தை முன்னதாகவே உணர்ந்து இருப்பாரோ என்ற ஐயம் உறவினர்களிடையே எழுந்துள்ளது. தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என உணர்ந்தவராக எஸ்.பி.பி இருந்தது அவரது மரணத்திலும் நிகழ்ந்துள்ளது என்பதுதான் பெரும் சோகம்.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!


நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற
, 8-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியை எதிர்கொண்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியைக் கண்டிருந்த சன்ரைஸர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியைத் தழுவிய கொல்கத்தா அணியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கின.

டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

சன்ரைஸர்ஸ் அணியில் முந்தைய போட்டியில் விளையாடிய மிட்செல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் சர்மா ஆகியோருக்கு பதிலாக முகமது நபி, விரித்திமன் சாஹா, கலீல் அஹமது ஆகியோர் களமிறங்கினர். கொல்கத்தா அணி கடந்த போட்டியில் விளையாடிய நிகில் நாயக், சந்தீப் வார்ரியர் ஆகியோருக்கு பதிலாக கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகிய வீர்ர்களோடு களமிறங்கியது.

சன்ரைஸர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்கார்ர்களான டேவிட் வார்னரும், ஜானி பாரிஸ்டோவும் களமிறங்கினர். பேட் கம்மின்ஸின் அற்புதமான இன்ஸ்விங்கரில் 5 ரன்கள் எடுத்திருந்தபோது, தனது ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார் பாரிஸ்டோவ். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே வார்னருடன் இணைந்து மெல்ல மெல்ல அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 30 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது, வருண் சக்கரவர்த்தியின் சுழலில் அவரிடமே எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மணீஷ் பாண்டேவுடன் விரித்திமன் சாஹா கைகோர்த்தார்.

இருவரும் நிதானமாகவும் தேவையானபோது அடித்தும் ஆடினர். சிறப்பாக ஆடிய பாண்டே அரை சதம் அடித்தார். 38 ரன்களில் 51 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆந்த்ரே ரஸ்ஸலின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது எண்ணிக்கையில் மூன்று பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

சாஹா 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் சன்ரைஸர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. முகமது நபி ஆட்டமிழக்காமல் 11 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா அணியில் 7 வீரர்களை பந்துவீசப் பயன்படுத்திய தினேஷ் கார்த்திக், சன்ரைஸர்ஸ் அணியின் ரன் வேகத்தை திறமையாக கட்டுப்படுத்தினார். சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். விக்கெட்டுகளை அதிகம் வீழ்த்தவில்லை என்றாலும் எதிரணிக்கு ரன்களை வாரி வழங்காமல், பீல்டிங்கையும் சிறப்பாகச் செய்தது கொல்கத்தா அணி.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி. அதன் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

ரன் ஏதும் எடுக்காமல் சுனில் நரைன் நரைன் கலீல் அஹமது பந்துவீச்சில், வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சுப்மன் கில்லுடன் நிதீஷ் ராணா ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் சுப்மன் கில் நிதானமாக ஆட, நிதீஷ் ராணா 12 பந்துகளில் 6 பவுண்டரிகளை விளாசி எதிரணியை திணறடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே நடராஜன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரஷீத் கானின் சுழலில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கில்லுடன் இயான் மோர்கன் கை கோர்த்தார். இருவரும் வாண வேடிக்கை காட்ட ஆரம்பித்தனர்.

18வது ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை ருசித்த்து.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில், 62 பந்துகளில் 2 சிக்ஸர்கள். 5 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் குவித்தும், 29 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உள்பட 42 ரன்கள் குவித்த இயான் மோர்கனும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்துள்ளது. சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மேன் ஆப் தி மேட்ச் விருது கொல்கத்தா அணியின் சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டது.

தோல்விக்குப்பிறகு பேசிய டேவிட் வார்னர், “டாஸ் வென்றதும் பேட்டிங்கைத் தேர்வு செய்தது சரியான முடிவுதான். ஆனாலும் கொல்கத்தா அணியினர் பந்துவீச்சில் எங்களை கட்டுப்படுத்திவிட்டனர். பேட்டிங்கில் கூடுதல் கவனம் வேண்டும். பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக 30 முதல் 40 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பி இருக்கும்” என்றார்.

முதல் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் “அனைத்து துறைகளிலும் கடினமாக உழைத்த்தற்கு பலன் கிடைத்திருக்கிறது. அணியில் ஆல்ரவுண்டர்கள் இருப்பது கூடுதல் பலம். இளம் வீரர்கள் அதிக உத்வேகத்துடன் பங்களித்திருக்கிறார்கள். கமலேஷ் நார்கோட்டி போன்ற இளம் வீர்ர்கள் அணிக்கு பலம். சுப்மன் கில் பேட்டிங்கின்போது எந்த வித அழுத்தமும் இன்றி சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித் தந்தார். கேப்டனாக இருப்பதில் பெருமைப்பட்டாலும், எனது பேட்டிங்கில் நான் கவனம் செலுத்தவேண்டும். சிறப்பான வெற்றி” என்றார்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, சார்ஜாவில் உள்ள சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

-மோ.கணேசன் @ மோகனன்

#IPL2020 #KKRvsSRH

வாலுவிடம் ஆன்லைனில் நேரடியாக கதை கேட்கலாம் வாங்க!

         

அனைவருக்கும் வணக்கம்...

சென்றவாரம் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக உங்களை இக்கதை நிகழ்வில் சந்திக்க இயலாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தவாரம் சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டேன்.
வள்ளியம்மாள் மோகன் ராஜி நினைவு அறக்கட்டளையின் ஆன்லைனில் இரண்டாவது கதை சொல்லும் நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது...
உங்கள் குழந்தைகள், மாணவச் செல்வங்களோடு நீங்களும் வந்துடுங்க... கதையின் முடிவில் சிறு விவாதமும் வைத்துக்கொள்ளாலாம். குறித்த நேரத்திற்கு வந்துவிடுங்கள் சந்திப்போம்...
சந்திப்பு இணையத்தில் - ஜூம் ஆப் மீட்டிங்கில் உங்களை சந்திக்க வருகிறேன்...
கதையின் தலைப்பு: மாயக்குதிரை
தேதி: 27.9.2020
நேரம் : மாலை 6 மணி
மீட்டிங் ID: 720 3972 7263
பாஸ்வேர்டு: 12345
+++++++++++++++++++
Topic: வாலுவின் கதை நேரம்
Time: This is a recurring meeting Meet anytime
Meeting ID: 720 3972 7263
Passcode: 12345

Saturday, September 26, 2020

பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: டெல்லி அணியிடம் தோற்றபின்பு தோனி பேட்டி


நேற்று துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட்ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின், 7-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டை ஆனாலும், சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணியிடம் வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் அணியிடம் தோல்வி கண்டு, மூன்றாவது போட்டியில் கட்டாயம் வெற்றி வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி, வழக்கம்போல பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முந்தைய போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடிக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேஸில்வுட்டுடன் சென்னை அணி களமிறங்கியது. டெல்லி அணி கடந்த போட்டியில் விளையாடிய மோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக, அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான் ஆகிய வீர்ர்களோடு களமிறங்கியது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்கார்ர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவாண் ஆகியோர் முதல் பவர்பிளேவில் மிக நிதனமாக ஆடி விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டனர். 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்த்து. பவர் பிளே முடிந்ததும் இருவரும் மட்டையை சுழற்ற ஆரம்பிக்க பவுண்டரிகளாகப் பறந்தது.
ஷிகர் தவாண் 27 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஸ் சாவ்லாவின் சுழலில், எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். அப்போது டெல்லி அணி 10.4 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் பிரித்விக்கு தோள்கொடுக்க, அதிரடி காட்டிய பிரித்வி 35 பந்துகளில் அரை சதம் எட்டியவர், ஐபிஎல் தொடரில் தனது 5-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். மேலும் அதிரடியாக விளையாடிய பிரித்வி 43 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஸ் சாவ்லா வீசிய பந்தை இறங்கி அடிக்க முயன்றபோது, தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். அவரது கணக்கில் 9 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
ரிஷப் பண்டுடன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோர்க்க, அணியின் ஸ்கோர் சீராக உயரத் தொடங்கியது. ஸ்ரேயாஸ் 22 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, சாம் கர்ரண் வீசிய வேகப்பந்தில், பேட்டின் விளிம்பில் பட்டு தோனியின் அற்புதமான கேட்ச்சால் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 37 ரன்களுடனும், மார்க்கய்ஸ் ஸ்டோனிஸ் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷேன் வாட்ஸன், முரளி விஜய் ஆகியோர் வழக்கம்போல சொதப்பினர். முதல் விக்கெட்டாக ஷேன் வாட்ஸன் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸர் படேல் சுழலில் சிம்ரன் ஹெட்மயரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முரளி விஜய் தன் பங்கிற்கு 15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது நோர்ட்ஜெ பந்துவீச்சில் காகிசே ரபடாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய பாப் டூபிளஸிஸ் ஒரு புறம் போராடினாலும் மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. நான்காவது வீரராக தோனி களமிறங்கி இருக்க வேண்டும். அனுபவம் இல்லாத ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.
முரளி விஜய் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை 6 ஓவருக்கு 34. பாப் டூபிளஸிஸும், ருதுராஜ் கெய்க்வாட்டும் டெல்லி அணியின் சுழல்வீச்சை சந்திக்க முடியாமல் தடுமாறினர்.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பந்துகளை வீணடித்தது போல, ருதுராஜும் தன் பங்கிற்கு பந்துகளை வீணடித்து 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து, தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 9.1 ஓவரில் 44 ரன்கள் மட்டுமே எடுத்து தள்ளாடிக்கொண்டிருந்தது. 5-வது வீர்ராக தோனி களமிறங்குவார் என்று பார்த்தால், கேதர் ஜாதவ் அந்த இடத்தில் களமிறங்கினார்.
ஆரம்பத்தில் தடுமாறிய ஜாதவ் பிறகு கொஞ்சம் வேகம் காட்ட முயன்றார். டெல்லி அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், பீல்டிங்கும் சென்னை அணி வீரர்களை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. கேதர் ஜாதவ் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, நோர்ட்ஜே பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது சென்னை அணியின் எண்ணிக்கை 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து தள்ளாடிக்கொண்டிருந்தது.
26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இருக்கும்போது தோனி களமிறங்கினார்.
பாப் டூபிளஸிஸ் ஆரம்பத்தில் தடுமாறினாலும் போகப்போக அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 20 ரன்கள் எடுத்திருந்தபோதும், 41 ரன்கள் எடுத்திருந்தபோதும் சிம்ரன் ஹெட்மயரின் தடுமாற்றத்தால் கேட்ச்சில் இருந்து தப்பினார். அந்த வாய்ப்பை அவரால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. 43 ரன்கள் எடுத்திருந்தபோது ரபடா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதில் 4 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும்.
கேப்டன் தோனி 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ரபடா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்தும் ஆட்டத்தின் கடைசி பந்தில் ரபடா பந்துவீச்சில் அமித் மிஸ்ராவிடம் கேட்ச்கொடுத்து 12 ரன்களோடு ரவீந்திர ஜடேஜாவும் ஆட்டமிழக்க, சென்னை அணியின் ஆட்டம் 131 ரன்களோடு முடிந்துபோனது.
44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேன் ஆப் தி மேட்ச் விருது பிரித்வி ஷாவிற்கு வழங்கப்பட்டது.
தோல்விக்குப்பிறகு பேசிய தோனி, “அணியின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. அதை சரி செய்தாக வேண்டும். பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில பரிசோதனைகள் செய்து பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் அம்பதி ராயுடு விளையாடுவார். கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை களமிறக்க வேண்டும்” என்றார்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைஸர் ஹைதரபாத் அணியை, அபுதாபியில் உள்ள ஷேக் சையத் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

-மோ.கணேசன் @ மோகனன்