Tuesday, March 22, 2016

'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சியில் அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!


இரு தினங்களுக்கு முன்பு, அதாவது சென்ற ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் ‘ஆசிரியர் வைபவம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. முழுக்க முழுக்க அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது திறனை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினனாக எனை அழைத்திருந்தனர். அக்கல்லூரியின் கரேஞா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கியது.

காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை 5.40க்கு நிறைவடைந்தது. 20 அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமைகள் முதன்முறையாக அரங்கேற்றம் கண்டன. புகை நமைக்கு பகை என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் உரை நிகழ்த்தினார். அது உரை என்பதை விட ‘தனி நடிப்பு’ மூலம் செய்து அசத்தினார்.
                                                                      தனிநடிப்பு ஆசிரியருக்கு பாராட்டு

அடுத்து வந்த ஆசிரியை ‘ராதை மனதில்… ராதை மனதில் என்ன ரகசியமோ…’’ என்ற பாடலுக்கு மனதை ஈர்க்கும் வகையில் நடமாடி கைத்தட்டல்கள் பெற்றார். அடுத்து வந்த ஆசிரியை ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். ஒரு ஆசிரியை நளவெண்பா பாடலை தானே பாடி, இசையமைத்து குறுந்தகடாக அங்கு வெளியிட்டார்.


அரசுப்பள்ளி மாணவர்கள் குழு ஒன்று அனாசயமாக ஆங்கிலத்தில் நல்ல பழக்கவழக்கங்களை நாடகமாய் நடித்துக் காட்டி கைத்தட்டல்களை அள்ளியது. அசந்து போனேன். மற்றொரு அரசுப்பள்ளி மாணவிகள் குழு, தாய்லாந்து மங்கைகளைப் போல் ஆடை, அலங்காரம் செய்தபடி, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு நடமாடி உள்ளத்தை கொள்ளை கொண்டனர்.

அவரை அடுத்து வந்த ஆசிரியர் மிமிக்ரி மூலம் தேசபக்தி கதையை செப்புவித்தார். அடுத்து அரங்கேறிய ஆசிரியை தமிழக நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கரகாட்டத்தை ஆடினார். அவர் ஆடியது மட்டுமின்றி அரங்கத்தில் உள்ளோரையும் ஆட்டம் போட வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.

                                         மிமிக்ரி மூலம் தேசபக்தி கதை சொன்ன ஆசிரியருக்கு பாராட்டு

அடுத்த வந்த ஆசிரியர் தான் இயக்கிய திகில் குறும்படத்தை திரையிட்டார். ஒலிக்கலவையும், கேமராவும் மிக நேர்த்தியாக இருந்தது. பின்னணி இசை பயமுறுத்திற்று. அட்டகாசமான திகில் குறும்படம் அது.


52 வயது நிரம்பிய அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா…’ பாடலை தாள லயத்தோடு, ஸ்ருதி பிசகாமல் பாடினார். பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவரை… அவ்வளவு நேர்த்தி…

நான் ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் திறனைக் காட்டியபோது, அவர்களை உற்சாகப்படுத்தி பேசியதைக் கேட்டு, அங்கு பார்வையாளராக வந்திருந்த ஆசிரியை, மேடையேறி மூன்று பாடல்களைப் பாடிக் காட்டி பரவசம் கொள்ளச் செய்தார்.

அடுத்து வந்த ஆசிரியர் பியானோ வாசித்தார். அப்துல் கலாம் குறித்து  எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு செய்த வீடியோவை திரையிடச் செய்தார். அடுத்த அந்த பாடலுக்கு மேடையில் நடனமாட, கீழிருந்த ஒரு மாணவி அவரோடு சேர்ந்து துள்ளாட்டம் போட்டது பார்வையாளர்களான எங்களை பரவசப்படுத்தியது. மாணவர்களே எழுதிய கதைப்புத்தகம் ஒன்று, அரசுப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் அங்கு வெளியிட்டப்பட்டது.

அரசுப்பள்ளி ஆசிரியைகள் குழு ஒன்று, வில்லுப்பாட்டினை அரங்கேற்றியது. அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவத்தை சினிமா பாடல்களின் மெட்டுகளில் வடிவமைத்து பாடி அசத்தினர்.

                                                             குறுந்தகடு வெளியீடு
எனது கையால் ‘பலூன்’ என்ற குறும்படம் வெளியிட வைத்தனர். ரைம்ஸ் பாடல் குறித்த சிடி ஒன்றையும் எனது கையால் வெளியிட வைத்தார்கள். மகிழ்வாக இருந்தது.

ஒரு ஆசிரியர் சோப்பு, சாக்பீஸ் ஆகியவற்றில் பல்வேறு சிற்பங்களும் முட்டை ஒடுகளால் ஓவியங்களும் வரைந்து காட்டி அசத்தினார். ஒரு ஆசிரியர் பறவைகளின் குரல்களை எழுப்பிக்காட்டினார்.
இன்னும் மறக்கவியலா நிகழ்வினை அந்த நிகழ்ச்சி உள்ளடக்கியிருந்தது. விழாவின் முடிவில் பங்குபெற்ற அத்தனை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கேடயம், சான்றிதழ் வழங்கி கௌரவித்தேன். அவர்களது மகிழ்ச்சியில் நானும் மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன்!

                                                            நளவெண்பா பாடிய ஆசிரியைக்கு பாராட்டு

வில்லுப்பாட்டு பாடிய ஆசிரியை குழுவினர் என்னோடு குழுவாக படம் எடுத்துக் கொண்டது மட்டுமின்றி, தங்களது பள்ளி மாணவர்களைப் பற்றி பேசினர், அவர்கள் பள்ளிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர்.


அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் இவ்வளவு திறமைகள் புதைந்து கிடக்கின்றனவா என்று உண்மையிலேயே அதிசயித்துப் போனேன். வாழ்த்துகள் அரசுப்பள்ளி ஆசிரியர்களே... உங்கள் அபரிமிதமான திறன்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! இதை மாநில அளவில் ஏன் நாம் நடத்தக்கூடாது என்ற எண்ணத்தினை இந்த நிகழ்ச்சி என்னுள் ஏற்படுத்தியது. விழாவின் இறுதியில் குழுப்படம் எடுத்தனர்.



இந்த நிகழ்ச்சியை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காக திருப்பத்தூர் ஜேஸிஸ் சங்கம் நடத்தியது. அரசுப்பள்ளி ஆசிரியர்களான சுமித்ரா, பாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திக்காட்டினர். அவர்களுக்கு இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி கிரண், ஜோலார்பேட்டை ரயில்நிலைய மாஸ்டர் வெங்கடாசலம், இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த அன்புத் தோழர் சிகரம் சதீஷ் ஆகியோரை மறக்கவே இயலாது.

போய் வருகிறேன் திருப்பதூரே… என்றபடி அங்கிருந்து கிளம்ப மனமின்றி கிளம்பி வந்தேன். இனிமையான அனுபவம் அது..!

Friday, March 18, 2016

திருப்பத்தூரில் நடைபெறும் 'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சி

வணக்கம் அன்பு நெஞ்சங்களே...

பத்திரிகை உலகில் அடி எடுத்து வைத்து 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சச்சின் தெண்டுல்கர் முதல் சாமன்யன் வரையிலும், திரை உலக பிரபலங்கள் முதல் திடலில் திரியும் சிறுவன் வரையிலும், அரசு அதிகாரிகள் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரை பேட்டி எடுத்திருக்கிறேன். பலவித கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு... சென்ற ஆண்டின் இறுதியில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிற்றிதழ் குறித்த பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக, பயிற்சியாளராக கலந்து கொண்டேன். மேடை ஏறி, நான் கற்றதை மற்றவருக்கும் கற்பிக்கும் வாய்ப்பு அது... கற்பித்து மகிழ்ந்தேன். என் கல்வியின் கற்பினைக் கண்டு மகிழ்ந்தேன்...

நாளை மறுதினம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கலை அறிவியல் கல்லூரியில் 'ஆசிரியர் வைபவம்' என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 40 அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பலநூறு பார்வையாளர்கள் முன்பு தங்களது தனித்திறமைகளை மேடையேற்ற இருக்கிறார்கள்.  அத்தகைய நிகழ்வில் நானும் ஒரு கௌரவ அழைப்பாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். இதற்கு முழுமுதற் காரணமாய் இருக்கும் ஆசிரியை சுமித்ரா அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கிறேன். எனை இந்த அளவிற்கு வளர்த்து விட்ட எமது ஆசிரியப் பெருமக்கள், எனது பெற்றோர், எனது குடும்பத்தினர், எனது நண்பர்களாகிய நீங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பங்கிருக்கிறது.

திருப்பத்தூருக்கு உங்களனைவரையும் என் சார்பில் அழைக்கிறேன்..!




Monday, March 07, 2016

உலகின் தற்போதைய பெண் தலைவர்கள்! - மகளிர் தின சிறப்புப் பதிவு!



 
உலகில் மொத்தம் 205-க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இத்தனை நாடுகளில் எத்தனை பெண்கள் அதிபராகவோ, பிரதமராகவோ இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால் 16 பேர் காணக்கிடைத்தார்கள். உலகில் சரிபாதி பெண்கள்தான். 205 நாடுகளில் 16 நாடுகளில் மட்டுமே பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதாவது, உலகிலுள்ள நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் எண்ணைக்கையை கணக்கிட்டால் ஆறரை சதவீதம் மட்டுமே பெண்கள் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார்கள். மீதம் 93 சதவீதம் பேர் ஆண்களாகவே இருக்கிறார்கள்… இனி அந்த பதினாறு பெண் தலைவர்களைப் பார்க்கலாம்…

ஏஞ்சலா மெர்கல் (Anjelo merkel) அதிபர், ஜெர்மனி
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் அதிபராக பதவி வகித்து வருபவர் ஏஞ்சலா மெர்கல். இவர், இந்நாட்டின் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், முன்னதாக, 2005, 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். 2013-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர் இவர். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்படவர்.

எல்லன் ஜான் ஸன் சர்லீப், (Ellen Johnson Sirleaf) அதிபர், லைபீரியா
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முதல் பெண் அதிபராக 2005-இல் தேர்ந் தெடுக்கப்பட்டவர் எல்லன் ஜான் ஸன் சர்லீப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். 2011-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டவர். 2012-ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதிப் பரிசினை வென்றவர். இந்நாட்டின் 42-வது அதிபராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

டாலியா கிரிபவுஸ்கைடே, (Dalia Grybauskaitė) அதிபர், லித்துவேனியா
வட ஐரோப்பா பகுதியில் உள்ள நாடு லித்துவேனியா. இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை அதிபராக இருக்கும் இவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்நாட்டினரால் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் இவர் கராத்தேவில் ‘கறுப்பு பட்டை’ பெற்றவர்

தில்மா ரூசெப், (Dilma Rousseff) அதிபர், பிரேசில்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் 36-வது அதிபராக பதவி வகித்து வருகிறார் தில்மா ரூசெப். இந்நாட்டின் முதல் பெண் அதிபரும் இவர்தான். 2011-ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வரும் இவர், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மாகணத்தின் தலைவராக பதவி வகித்திருக்கிறார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டாம் முறையாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.

அடிபெடே ஜஜாகா, (Atifete Jahjaga) அதிபர், கொசோவோ
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசோவோ நாட்டின் நான்காவது அதிபரும், அந்நாட்டின் முதல் பெண் அதிபருமான அடிபெடே ஜஜாகா,  முன்னதாக அந்நாட்டு காவல் துறையில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். அமெரிக்காவின் எப்பிஐ அகாதெமியில் படித்து பயிற்சி பெற்றவர் இவர்.

பார்க் ஷியுன் ஹை, (Park Geun-hye) அதிபர், தென் கொரியா
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் பெண் அதிபராக பதவி வகித்து வரும் பார்க் ஷியுன் ஹை, கிராண்ட் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டின் அதிபரான முதல் நபரும் இவரே. எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் இவர். கிழக்காசிய நாடுகளில் வலிமைமிக்க பெண்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.

மிச்செல் பேச்லெட், (Michelle Bachelet) அதிபர், சிலி
இலத்தீன் அமெரிக்க நாடான சிலி நாட்டின் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக 2006-லிருந்து 2010 வரை பதவியிலிருந்தவர். பின்னர், .நா. பெண்கள் அமைப்பின் தலைவராக இருந்த அவர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தப் பதவியை ராஜிநாமா செய்து விட்டு மீண்டும், அரசியலுக்கு வந்தார். 2014 முதல் மீண்டும் இந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார்.

கொலிண்டா கிராபர் கிட்ரோவிக் (Kolinda Grabar-Kitarović), அதிபர், குரோஷியா

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் ஒன்று குரோஷியா. இந்நாட்டின் முதல் பெண் அதிபராக சென்ற ஆண்டு பிப்ரவரியில் பதவி ஏற்றுக் கொண்டவர். குரோஷியக் குடியரசின் நான்காவது அதிபர், மிக இளம் வயதிலேயே அதிபர் ஆனவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. கன்சர்வேட்டிவ் குரோஷியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சியைச் சேர்ந்தவர் இவர்.

அமீனா குயூரிப், (Ameenah Gurib) அதிபர், மொரீஷியஸ்
இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். பணக்கார நாடான இங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் சென்ற ஆண்டு பதவி ஏற்றார். சுற்றுச்சூழலியல் விஞ்ஞானியான இவர், மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

பிந்த்யா தேவி பண்டாரி, (Bidhya Devi Bhandari) அதிபர், நேபாளம்
உலகின் மிக உயரமான சிகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் நேபாளம். இந்நாட்டின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் வித்யா தேவி பண்டாரி, கடந்த ஆண்டு அக்டோபரில் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
அதிபர் வித்யா தேவி பண்டாரி நேபாளத்தின் மன்னர் ஞானேந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவந்தார். அவரது பெருமுயற்சியால் மன்னரின் சர்வாதிகார ஆட்சி 2008ல் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்தது. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசானபிறகு வித்யா தேவி நேபாளத்தின் இரண்டாவது அதிபராக ஆகியுள்ளார்.

ஹில்டா ஹெயினே, (Hilda Heine) அதிபர், மார்ஷல் தீவுகள்
 பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மைக்ரோனேசியா தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதி மார்ஷல் தீவுகள். 72,000 பேர் வசிக்கும் இத்தீவின் தலைநகரம் மஜுரோ. 29 பவளத் தீவுகளை உள்ளடக்கியது இந்த மார்ஷல் தீவுகள். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக, இரு வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றிருக்கிறார் ஹில்டா ஹெயினே. அமெரிக்காவில் உள்ள சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். ஆரம்ப காலங்களில் இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்.


ஷேக் ஹசீனா, பிரதமர், வங்கதேசம்
நமக்கு அண்டை நாடாக இருக்கும் வங்கதேசத்தின் தற்போதைய பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. இந்நாட்டின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரகுமானின் முதல் மகள் இவர். 1981-லிருந்து வங்கதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவரும் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராக, 1996-ல் பதவியேற்றார். மீண்டும் 2009-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், இன்று வரை பொறுப்பில் இருக்கிறார். இந்நாட்டின் முதல் பெண் பிரதமராக இருந்தவர் காலிதா ஜியா.

போர்டியோ சிம்ப்ஸன் மில்லர் (Portia Simpson-Miller), பிரதமர், ஜமைக்கா

கரீபியின் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவின் முதல் பெண் பிரதமராக இருப்பவர் போர்டியோ சிம்ப்ஸன் மில்லெர். ஜமைக்காவின் மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த இவர், முதன்முதலாக 2006-ல் பிரதமராக பதவியேற்றார். ஓராண்டுக்குள் தேர்தல் வந்துவிடவே இவரது பதவிக்காலம் முடிந்து போனது. மீண்டும் 2012-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், தற்போது வரை பொறுப்பில் இருக்கிறார்.

பீட்டா ஸசிட்லோ, (Beata Szydło) பிரதமர், போலந்து

மத்திய ஐரோப்பிய நாடான போலந்தில் சட்டம் மற்றும் நீதிக்கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகித்து வருகிறார் பீட்டா ஸசிட்லோ. இந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் இவர். இவருக்கு முன்னதாக, ஹான்னா சுச்சோக்கா, ஈவா கொப்பாக்ஸ் ஆகியோர் பெண் பிரதமர்களாக இருந்துள்ளனர். பீட்டா ஸசிட்லோவுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமராக இருந்தவர் ஈவா கொப்பாக்ஸ்.

சாரா கூகொங்கெல்வா, (Saara Kuugongelwa) பிரதமர், நமீபியா 

தென்மேற்கு ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடு நமீபியா. தென்னாப்ரிக்க நாட்டிடமிருந்து அதிகார பூர்வமாக 21 மார்ச் 1990-ல் இந்த நாடு குடியரசானது. அந்நாட்டில், முதல் பெண் பிரதமராக, தற்போது பதவி வகித்து வருகிறார் சாரா கூகொங்கெல்வா. இந்நாட்டின் நான்காவது பிரதமர் இவர். பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், அந்நாட்டின் திட்ட கமிஷன் துறையின் டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்திருக்கிறார். 2003-ல் நிதியமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். இவர் ஸ்வபோ பார்ட்டி என்று அழைக்கப்படும் தென்மேற்கு ஆப்ரிக்க மக்களின் கூட்டமைப்புக் கட்சியின் சார்பில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

எர்னா சோல்பெர்க், (Erno Solberg), பிரதமர், நார்வே

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயின் பிரதமராக இருக்கிறார் எர்னா சோல்பெர்க். இந்நாட்டின் 28-வது பிரதமர் மற்றும் இந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் இவர். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் இருந்து வரும் இவர், புள்ளியியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்கிறார். உள்ளாட்சி அதிகாரம் மற்றும் மண்டல வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார் எர்னா. 

(படம் உதவி: புதிய தலைமுறை கல்வி வார இதழ்)