Wednesday, September 17, 2014

அழகு..! - கோட்டோவியம்


எனது கல்லூரிப் பருவத்தில் ஓவியம் வரைவது எனது பொழுதுபோக்கு... 2001-ல் நான் வரைந்த ஓவியங்கள்....

Tuesday, May 20, 2014

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இலவசப் புத்தக வங்கிகள்!


கல்லூரிகளில் படிக்கும் சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவும் வகையில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இலவசப் புத்தக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் புத்தக வங்கிகளில் புத்தகங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். படித்து முடித்த பிறகு புத்தகங்களை பத்திரமாகத் திருப்பித் தர வேண்டும். அந்தந்த செமஸ்டர்களுக்கு உரிய புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். செமஸ்டர் முடிந்ததும் படித்த புத்தகங்களைக் கொடுத்து விட்டு, அடுத்த செமஸ்டருக்கு உரிய புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் செயல்படும் இந்த இலவசப் புத்தக வங்கிகள் குறித்த தகவல்கள் இதோ...

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புத்தக வங்கி

சென்னையில் 1964-ல் தொடங்கப்பட்ட இந்த புத்தக வங்கியில் தற்போது 70 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. புதிய புத்தகங்கள் வாங்குவதற்காக இந்த அமைப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் செலவிடப்படுகிறது. இந்தப் புத்தக வங்கி மூலம் இதுவரை 85 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். கலை, அறிவியல், பொறியியல் துறை படிப்புகளுக்கான புத்தகங்கள்  இங்கு இருக்கின்றன.

கல்லூரியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது கல்லூரி கட்டணம் செலுத்தியதற்கான ரசீது கொண்டு வந்து காட்டினால், இந்தப் புத்தக வங்கியில் புத்தகங்களைப் பெறுவதற்கான விண்ணப்பம் கொடுக்கப்படும். வரும் ஜூன் 5-ஆம் தேதியில் இருந்து ஜூன் 20-ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.  விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதில் உங்கள் புகைப்படத்தை ஒட்டி, கல்லூரி முதல்வரிடம் கையெழுத்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போதே என்னென்ன புத்தகங்கள் வேண்டும் என்பதையும் குறித்துக் கொடுக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 6 அல்லது 7 புத்தகங்கள் கொடுக்கப்படும். இந்தப் புத்தக வங்கியில் புத்தகங்களைப் பெற விரும்பும் கலை, அறிவியல் பட்ட மாணவர்கள் 200 ரூபாயும், பொறியியல் மாணவர்கள் 500 ரூபாயும் காப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் படிப்பு முடிந்ததும் திருப்பித் தரப்படும்.

விவரங்களுக்கு: ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புத்தக வங்கி, 4. அட்கின்சன் சாலை, வேப்பேரி,
சென்னை - 600 004.
தொலைபேசி: 044-25610369, 25610978
இணைய தளம்: http://ryabookbank.com


ஜெய்கோபால் கரோடியா அறக்கட்டளை இலவச புத்தக வங்கி
கடந்த 14 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஜெய்கோபால் கரோடியா அறக்கட்டளை இலவச புத்தக வங்கி மூலம், இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் படித்துப் பயனடைந்திருக்கின்றனர். இங்கு  36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கலை, அறிவியல், பொறியியல், எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளுக்கான புத்தகங்கள் படிக்க கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியானதும் இந்த புத்தக வங்கியை அணுகவேண்டும். ரேஷன் கார்டு ஜெராக்ஸ், கல்லூரி ஐடி ஜெராக்ஸ் ஆகியவற்றை காண்பித்து, விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒரு மாணவருக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்கப்படும்.

விவரங்களுக்கு: கேசவன், ஜெய்கோபால் கரோடியா அறக்கட்டளை இலவச புத்தக வங்கி, 6,7-வது தெரு, யு பிளாக், அண்ணா நகர், சென்னை - 600040
தொலைபேசி: 044-26203287, 26206261
இணைய தளம்: www.jgvvbookbank.org


ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச புத்தக வங்கி

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் இலவசப் புத்தக வங்கி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இந்தப் புத்தக வங்கி மூலம் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விவரங்களுக்கு: ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச புத்தக வங்கி, மயிலாப்பூர், சென்னை - 600004.
தொலைபேசி: 044-24621110


மாணவர் திறன் மேம்பாட்டுக் கழக இலவசப் புத்தக வங்கி

சென்னையில் 2009-ல் தொடங்கப்பட்ட மாணவர் திறன் மேம்பாட்டுக் கழக இலவச புத்தக வங்கியில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த புத்தக வங்கியில் தற்போது 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  புத்தகங்கள் இருக்கின்றன. கலை, அறிவியல், பொறியியல் பட்டப் படிப்பு மாணவர்கள் படிப்பதற்காக இலவசமாகப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மெரைன் என்ஜினீயரிங், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மட்டும் இங்கு புத்தகங்கள் இல்லை. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பெற்றோர், தெரிந்த நபர், கல்லூரி முதல்வர் அல்லது துறைத்தலைவரிடம் கையொப்பம் பெற்று, பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுக்கட்டணமாக ரூ.200 மட்டும் செலுத்த வேண்டியதிருக்கும். புத்தக சேவை மட்டுமின்றி மாணவர்களுக்கு எதிர்கால திட்டமிடல் குறித்து இலவச ஆலோசனையும்  இங்கு தரப்படுகிறது.

விவரங்களுக்கு: மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம்  இலவச புத்தக வங்கி, 44/48, எஸ்.பி. கோயில் 3-வது தெரு, திருவொற்றியூர் (பெரியார் நகர்), சென்னை - 600019
தொடர்புக்கு: 9444305581, 9444124519


எஸ்.எஸ்.எம். அறக்கட்டளை  இலவச புத்தக வங்கி

கும்பகோணத்தில் 2009-ல் தொடங்கப்பட்ட எஸ்.எஸ்.எம். அறக்கட்டளை இலவச புத்தக வங்கியின் மூலம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். தற்போது 2,500 புத்தகங்கள் இந்த புத்தக வங்கியில் இருக்கிறது. கலை அறிவியல் மற்றும் எம்பிஏ, எம்சிஏ கல்லூரி மாணவர்களுக்கான புத்தகங்கள் இங்கு கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி தொடங்கும்போது, அக்கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி புத்தக வங்கியை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படும். நேரடியாக இவர்களை அணுகும் மாணவர்களுக்கும், தகுதியின் அடிப்படையில் புத்தகங்களை வழங்குகிறார்கள். போட்டித்தேர்வுக்கான புத்தகங்களும் இங்கு படிப்பதற்கு வைத்திருக்கிறார்கள்.

எஸ்.எஸ்.எம். அறக்கட்டளை இலவச புத்தக வங்கி, 7/49 E, செல்வக்குமார் பாபு இல்லம், மெயின் ரோடு, புளியம்பேட்டை, கும்பகோணம் - 612 103.
தொடர்புக்கு: 9840020110


கோபால்ராஜன் - மங்களேஸ்வர் புத்தக வங்கி

தூத்துக்குடியில் 1996-ல் தொடங்கப்பட்ட கோபால்ராஜன் - மங்களேஸ்வர்  புத்தக வங்கி மூலம் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். தற்போது மூவாயிரம் புத்தங்கள் இந்த புத்தக வங்கியில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும்போது தூத்துக்குடியில் இருக்கும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நேரடியாக விண்ணப்பங்கள் அனுப்பப்படும். கல்லூரி முதல்வரே தகுதியான மாணவர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்து தருவார். புத்தகங்களை வாங்கிச் செல்லும் மாணவர்கள், அதில் பெயர் எழுதக்கூடாது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் புத்தகத்தைத் திரும்ப ஒப்படைத்து விடவேண்டும்.

விவரங்களுக்கு: பொன்னுசாமி, நிறுவனர், கோபால்ராஜன் - மங்களேஸ்வர்  புத்தக வங்கி,  4/56. தனசேகரன் நகர், இரண்டாவது தெரு,  தூத்துக்குடி - 628002
தொடர்புக்கு: 9944025528


ஸ்ரீமகாவீர் ஜெயின் இலவச புத்தக வங்கி:

ஸ்ரீமகாவீர் ஜெயின் இலவச புத்தக வங்கி 1972-ல் தொடங்கப்பட்டது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இங்கு தற்போது பொறியியல், கலை, அறிவியல் பட்ட மாணவர்களுக்கான 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12.30 மணி வரை இந்தப் புத்தக வங்கியில் புத்தகங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 20. பொறியியல் பிரிவு மாணவர்கள் ஆயிரம் ரூபாயும், கலையியல் பிரிவு மாணவர்கள் ஐநூறு ரூபாயும் காப்புக் கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும். இந்த கட்டணம் படிப்பு முடிந்ததும் திருப்பித் தரப்படும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் மற்றும் துறை தலைவர் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக  6 புத்தகங்கள் வழங்கப்படும்.

விவரங்களுக்கு: கமலேஷ் சேத், ஸ்ரீமகாவீர் ஜெயின் இலவச புத்தக வங்கி, குகுகு ஜெயின் பவன், 765. ஓப்பணக்கார வீதி, கோவை - 641001.
தொடர்புக்கு: 9363149468. 9894023235

 
ஸ்ரீவாசவி இலவச புத்தக வங்கி:

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஸ்ரீவாசவி இலவச புத்தக வங்கியில் 5 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. பொறியியல் மற்றும் கலையியல் பட்ட மாணவர்களுக்கான புத்தகங்களை படிக்க இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 6 புத்தகங்கள் வழங்கப்படும். பொறியியல் பட்ட மாணவர்கள் ஆயிரம் ரூபாயும், கலையியல் பட்ட மாணவர்கள் ஐநூறு ரூபாயும் காப்புக் கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும். இந்த கட்டணம் படிப்பின் இறுதியில் திருப்பித் தரப்படும்.

விவரங்களுக்கு: வி. சுரேஷ், ஸ்ரீவாசவி இலவச புத்தக வங்கி, 364, 364 அ, வைசியாள் தெரு, கோவை - 641001.
தொடர்புக்கு: 9150428956, 9443822062


ராக்சிட்டி வெல்பேர் அசோசியேஷன் புத்தக வங்கி:

திருச்சியில் ராக் சிட்டி வெல்பேர் அசோசியேஷன் புத்தக வங்கி 1998-இல் தொடங்கப்பட்டது. இந்தப் புத்தக வங்கியின் மூலம் இதுவரை 16 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இப்புத்தக வங்கியில் தற்போது 11 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. திருச்சியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்கள் மட்டும் இங்கு இலவசமாக படிப்பதற்கு வழங்கப்படுகின்றன. திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள 11 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஜூன் மாத தொடக்கத்தில், அவர்களது கல்லூரியின் மூலமாக இந்த புத்தக வங்கியை அணுகி, தங்களுக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். நூலக பராமரிப்புக் கட்டணமாக ஆண்டுக்கு  ரூ.20 மட்டும் செலுத்த வேண்டியதிருக்கும்.

விவரங்களுக்கு: அசோக் காந்தி, ராக்சிட்டி வெல்பேர் அசோசியேஷன் இலவச புத்தக வங்கி, 54-ஐ, ஜாபர் ஷா தெரு, பி.என். லாட்ஜ் எதிரில், திருச்சி - 620008
தொடர்புக்கு: 9150038420, 0431-2700296
 

தி புக் பேங்க் டிரஸ்ட்:  

1994-ல் தொடங்கப்பட்ட இந்த புத்தக வங்கியின் மூலம் இதுவரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இங்கு தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.  கலை, அறிவியல், பொறியியல், முதுநிலை மாணவர்கள் ஆகியோர்களுக்கான புத்தகங்கள் இங்கு வழங்கப்படும். கல்லூரிக் கட்டண ரசீது நகல், குடும்ப அட்டை நகல் கொடுத்தால் விண்ணப்பம் தருவார்கள். அதனை முறையாக பூர்த்தி செய்து, தெரிந்த ஒருவரிடம் கையொப்பம் பெற்று தரவேண்டும். பாதுகாப்புக் கட்டணமாக மாணவர்கள் ரூ. 250 செலுத்த வேண்டும். புத்தகங்களை இறுதியாக படித்து முடித்து தரும்போது இக்கட்டணம் திருப்பித் தரப்படும். போட்டித்தேர்வுக்கான புத்தகங்களும் இங்கு படிக்க கிடைக்கிறது.

விவரங்களுக்கு: தி புக் பேங்க் டிரஸ்ட், மேத்தா பில்டிங், 898, சிறுகுளம் ரோடு, சிவகாசி - 626123.
தொலைபேசி எண்: 04562 - 222727

**************
 
(நன்றி: புதிய தலைமுறை கல்வி, http://puthiyathalaimurai.com/last-week/3264)

Monday, April 28, 2014

கன்னிப்பேச்சு! - ஆனந்த விகடனில் வெளியான எனது குட்டிக்கதை


மைச்சர் பொன்னுரங்கம் இன்று சட்டசபையில் பேசியது எல்லோரையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.

சட்டசபைக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் என்றுமே வாய்திறக்காத அவர், இன்றுதான் வாய் திறந்திருக்கிறார். மற்றவர்களை வாய் பிளக்கவும் வைத்து விட்டார்!

"இன்று நாட்டில் எங்கே பார்த்தாலும் சாதிப்பிரச்னைகள், சாதிச் சண்டைகள்தான். பள்ளியில் சேரப்போனாலும் சரி, வேலைக்கு விண்ணப்பித்தாலும் சரி... சாதிதான் பூதம் போல் குறுக்கே நின்று பயமுறுத்துகிறது. இதை மாற்ற வேண்டும். அனைத்துச் சாதிகளையும் ஒழித்து விட்டு, இந்தியன் என்கிற பொதுவான ஓர் இனத்தை நாம் உருவாக்க வேண்டும். பள்ளிகளில் என்ன சாதி என்று கேட்பதைச் சட்டபூர்வமாக தடை செய்ய வேண்டும். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்..!'' இதுதான் சட்டசபையில் அவர் ஆவேசமாய் பேசியது.

சட்டசபையை விட்டு வெளியே வந்தபோது, முதல்வரே அழைத்துப் பாராட்டியது அமைச்சர் பொன்னுரங்கத்தைக் குஷிப்படுத்தியது.

''இலவச வீடுகள் வழங்குறதுல அந்தச் சாதிக்காரனுக்கு, இந்தச் சாதிக்காரனுக்குன்னு ஆயிரம் சிக்கல் இருக்கு. அதை இனிமே நீங்கதான் கவனிக்க போறீங்க...'' என்று முதல்வர் சொல்லவும், அவரது காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தார் பொன்னுரங்கம். 

தனது அலுவலகத்தில் பி.ஏ.வுக்கு சரமாரியாக உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார் அமைச்சர் பொன்னுரங்கம். 

''எலேய்... இலவச வூடு தர்றமுல்ல... முதல்ல நம்ம சாதிக்காரனுக்கு முன்னுரிமை குடுத்துடு. அப்புறமா மத்த சாதிக்காரனுக்குப் பார்த்துக்கலாம்!''

''என்ன தலைவா... சட்டசபையில சாதிக்கு எதிரா அவ்வளவு காட்டமா பேசினீங்களே..?''

''அட, யார்ரா இவன் புரியாதவன். அப்படி பேசினதாலதானே வீட்டு மனைகள் ஒதுக்குற அதிகாரமே என்கிட்ட வந்துச்சு. இதுக்குப் பேருதாண்டா அரசியல்! சரி சரி... வேலையைப் பாரு!''

பி.ஏ.வுக்கு தலை சுற்றியது.

****************************

(ஆனந்த விகடன் குழுமத்தில் மாணவ பத்திரிகையாளராக இருந்த போது, நானெழுதிய ஒரு பக்க கதை, 30.09.2001 தேதியிட்ட ஆனந்த விகடனில், 105-ஆம் பக்கத்தில் வெளியானது. இந்த கதை எழுதி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலை இப்போதுள்ள அரசியல் சூழலுக்கும் பொருந்துகிறது என்பதால், இங்கே பதிவிலிடுகிறேன்.

நன்றி: ஆனந்த விகடன்)

Sunday, April 06, 2014

எனது பிறந்தநாளுக்கு கூகுள் சொன்ன வாழ்த்து!

கூகுள் தனது பயனாளர்களின் பிறந்தநாளிற்கு அது வாழ்த்து தெரிவிக்கிறது... இன்று எனக்கு அது வாழ்த்து தெரிவித்திருக்கிறது... கூகுளுக்கு எனது நன்றி...

நமது ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்துவிட்டு, கூகுள்.காம் கொடுத்துப் பார்த்தால், பர்த்டே கேக் வடிவில் கூகுள் இருக்கும். அன்றைய தினம் உங்கள் பிறந்தநாள் எனில் (ஜிமெயிலில் உங்கள் சரியான பிறந்த தேதியை குறிப்பிட்டிருக்க வேண்டும்), அன்று உங்களுக்கும் இந்த இன்ப அதிர்ச்சி கிடைக்கும்... இதுபோன்ற விஷயங்களால்தான் கூகுள் என்றும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது... 

கூகுள் எனக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனேன்... நீங்களும் பாருங்களேன்...


Friday, April 04, 2014

கவுண்டமணியுடன் நடிகர் வடிவேலு திடீர் சந்திப்பு



ஏவிஎம் ஸ்டுடியோவின் நான்காவது ப்ளோரில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு கவுண்டமணி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ’49ஓ’ படப்பிடிப்பு பரபரத்துக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு இடைவேளையில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கிறார் கவுண்டமணி.



அவரைத்தேடி கருத்த உருவம் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அடங்கொக்கமக்கா… கருங்கரடி ஒண்ணு நம்மள தேடித்தான் வருது… ‘’அடியேய் சிகப்பி… எடுறி அந்த துப்பாக்கிய… இன்னிக்கி இந்த கரடியவாச்சும் சுட்டு நான் யாருன்னு ஊருக்கு காட்டுறேன்…’’ என்று பழைய படப்பிடிப்பு ஞாபகத்தில் தன்னையறியாமல் சவுண்ட் விடுகிறார்.

அந்த கருப்பு உருவம் கவுண்டமணியை நெருங்கும்போது கூட அவருக்கு வந்தது யாரென்று பிடிபடவில்லை.

வந்தவர் ஆதிவாசி போல் பார்வைக்கு தென்படவே, ‘யார் இந்த ஆதிவாசி? எதுக்கு என்னை தேடிகிட்டு வரான்? ஒன்னும் புரியலையே என்று மைண்ட் வாய்ஸில் பேசியபடி, தன்னை நோக்கி வரும் ஆதிவாசியையே திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. 



அருகில் ஆதிவாசி வந்ததும், திடீரென்று சுதாரித்துக் கொண்ட கவுண்டமணி ‘ஓஹோய்… ஒருவேளை இவன் (சூரியன் பட) குஞ்சாணி குரூப்பை சேர்ந்தவனா இருப்பானோ… ரெண்டு மூணு செக்ஸி கேர்ள்ஸ் சைடுல வச்சிகிட்டு… ‘சாமி… பூ மிதிக்க வாங்க சாமி’ன்னு கூப்பிட வந்துருப்பானோ…? இவனுங்ககிட்ட ஒருதரம் சிக்கி சீரழிஞ்சதே போதும்டா சாமி…’’ என யோசித்துக் கொண்டே, ஆதிவாசியைப் பார்க்கிறார். 

ஆதிவாசியின் கையில செல்போன் இருப்பதைப் பார்த்ததும்… டோய்… பாக்க ஆப்ரிக்கன் மாதிரி இருக்கான். அவங்கிட்ட செல்லுடோய்… ஒருவேலை செல்லுலயே கான்டாக்ட் வச்சிருப்பானோ.. நாமதான் போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆன டெலிபோன்ல இல்ல பேசுவோம்… இவன் எப்படி நம்மள கண்டுபிடிச்சான். ஒரு வேள செட்டியார் மதர் சொல்லியிருப்பாங்களோ… என் பலவாறு யோசித்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. 

அப்படி அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே…
அந்த உருவம் ‘அண்ணே…’ என்ற குரல் கொடுக்கிறது.



குரலைக் கேட்டதும் ‘இந்த குரலை நான் எங்கேயே கேட்டிருக்கேனே… என கவுண்டமணி யோசித்துக்கொண்டிருக்கும்போது, மீண்டும் அந்த உருவம் ‘’அண்ணே… அண்ணே…’’ என்று குரல் கொடுக்கிறது.

“ஐயோ… அம்மா… கருங்கரடி பேசுது… என்னை வேற அண்ணேண்ணு கூப்பிடுதடா சாமி…” என்று கதறியபடி தலைதெறிக்க ஓடப்போனவரை, ஆதிவாசியின் குரல் சட்டென்று தடுத்துநிறுத்தியது.

அண்ணே… நான்தான்னே ஒண்டிப்புலி செந்திலு…

அடேய்… டிபன்பாக்ஸ் தலையா… நாயே நீயாடா… ஏன்டா இப்படி ஆதிவாசி மாதிரி வந்து என்னை பயமுறுத்துற… என்ன சொன்ன? நீ ஒண்டிப்புலி செந்திலா…. இல்லடா… எங்கிட்ட ஒதைவாங்குன செந்திலு… 

அண்ணே… எப்பவுமே நான் உங்ககிட்ட ஒதை வாங்குன செந்திலுதான்…
என்னடா நாயே இது கோலம்… குஞ்சாணி குரூப்புதான் மறுபடியும் வந்துடிச்சோன்னு பயந்துட்டேன்டா…

இல்லண்ணே ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு குரூப்பு எங்கிட்ட வந்து ‘ஆதிவாசியும் அதிசய செல்பேசியும்’ படம் எடுக்கறோம். நீங்கதான் ஹீரோன்னானுங்க… அதுக்காக போட்டோ எல்லாம் எடுத்தானுங்க… அதுக்கப்புறம் என்ன ஆச்சின்னே தெரியலண்ணே… ஆளுங்களையே காணோம். நானும் அப்போ இருந்து இதே காஸ்ட்யூம்லதான் ஸ்டுடியோ ஸ்டுடியோவா அவங்களை தேடி சுத்தறேன். 

நீ நரியாச்சேடா… உன்னை வச்சி படம் எடுக்கறன்னு சொன்னவன், முதல் நாளே துண்டக்காணோம் துணியக்காணோம்னு ஓடிட்டானே… உன் முகராசி அப்படி..?

அண்ணே… எனக்கு வாய்ப்பு யாருமே தரமாட்டேங்கறாங்க…

பின்னே… உன் வாய வச்சிகிட்டு சும்மா இருந்தாதான… உனக்கெதுக்கு நாயே அரசியல்… அரசியல்வாதிங்கதான் அஞ்சிக்கும் பத்துக்கும் மேடையேறி கத்துறானுங்கன்னா… உனக்கேண்டா நாயே இந்த வேலை… சினிமாக்காரன் அரசியலுக்கு வந்து சாதிக்கறதெல்லாம் ஹீரோக்களுக்கு சரியாகும்… உனக்கெல்லாம் சரியா வருமா..? 

அண்ணே… தெரியாம பேசிபுட்டேண்ணே…

நீ தெரிஞ்சி பேசினியோ… தெரியாம பேசினியோ… இப்ப என்னையே இண்டஸ்ட்ரியில மதிக்க மாட்டேங்கறானுங்க… ஒருகாலத்துல ஓஹோன்னு இருந்தேன். இப்ப ஒரு படத்துக்கே சிங்கியடிக்கிறேன்…

அண்ணே… அண்ணே… இந்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கி கொடுங்கண்ணே… என்று செந்தில் கவுண்டமணியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அரச உடையில் ஒருவர் வந்து நிற்கிறார்.

யாருங்க நீங்க..? என்று செந்தில் அவரைப் பார்த்து கேட்க, ‘’என்னைத் தெரியல… என்னைத் தெரியல…’’

நீ என்ன அமெரிக்க அதிபராடா… பார்த்த உடனே தெரிஞ்சுகறதுக்கு… நீ யார்னு தெரியலன்னுதான கேக்கறான்… சொல்றா நாயே என்று கவுண்டமணி எகிற… வந்தவர் ‘’நான்தான் தெனாலி’’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், இடைமறிக்கினார் கவுண்டமணி.


சொரி புடிச்ச பெருச்சாளி மாதிரி இருக்க… நீ தெனாலியா?… கமலுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியமாடா… 

ஐயோ… நான் தெனாலி ராமன்னு சொல்ல வந்தேங்க… என்றவரிடம்
"அப்படி யாரையும் எங்கண்ணன் கேள்விப்பட்டதில்லையே?" என்று பக்கத்திலிருக்கும் செந்தில் கேள்வியை வீசுகிறார்.

‘’ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’’ என்கிறார் வந்தவர்.

அடங்கோ… என்கிட்டயே டக்கால்டி வேலை காட்டுறியா… நீ யார்ரான்னா..? ராமன், சோமன்னுகிட்டு… அப்ப நாங்கள்ளலாம் ராவணனாடா… என்று கோபம் பீறிட்டு வந்தவரை உதைப்பதற்கு காலைத் தூக்குகிறார் கவுண்டமணி.

அண்ணே… அண்ணே… உணர்ச்சி வசப்படாதீங்க… நாந்தான்னே… நாந்தான்னே… என வந்தவர் அலறுகிறார்.

இந்தக் குரலையும் எங்கேயோ கேட்டிருக்கேனே… என்று மண்டையைக் கீறியபடியே யோசித்தபடியே... நான்தான்னா.. யார்ரா நீ.. என்கிறார் கவுண்டமணி.

அண்ணே… நான்தான்னே உங்க வடிவேலு… வடிவேலு…

அடேய் வடிவேலு நீயாடா… நீ எதுக்குடா இங்க வந்த…

நான் வந்த கதைய சொல்லவா..? நொந்த கதையை சொல்லவா….ஆஆஆஆஆ… என்று ஒப்பாரி வைக்கிறார் வடிவேலு.

அடேய் ஆப்ரிக்கா குரங்கே… ஏண்டா இப்ப ஒப்பாரி வைக்கிற…
என்னத்தடா சொல்ல வந்த… சொல்லு..?

அந்த கருமத்தை எப்படிண்ணே என் வாயால சொல்லுவேன்…
அப்ப சொல்லாத…

இந்த நாயி உங்கள விட்டா… வேற யாருக்கிட்டண்ண போயி சொல்லும்..
அப்ப சொல்லு…

அந்த கருமத்தை எப்படிண்ணே என் வாயால… என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வாயிலேயே அடிக்கிறார் கவுண்டமணி.
மவனே… இதுக்கு மேல ஏதாச்சும் பேசின… இந்தா நிக்கறான் பாரு ஆதிவாசி… இவனுக்கு உன்ன மனுசக்கறியாக்கிடுவேன்.
விஷயத்த சொல்றா…

அண்ணே… உங்களுக்கு அப்புறம் ஆஹா ஒஹோன்னு வளர்ந்தண்ணே… ஒரு வீணாப்போனவனால வீதிக்கு வந்துட்டண்ணே… வீதிக்கு வந்துட்டண்ணே…

சொல்றா நாயே….

கேப்டனை எதுத்துதான் அரசியலுக்கு போனேன். மேடை மேடையா பேசினேன்… ஊரு ஊரா போயி பேசி, சின்னப்பட்டு, சீக்குப்பட்டு, அடிபட்டு, ஆவேசப்பட்டு, அசிங்கப்பட்டு…... என்று இழுத்துக் கொண்டே போக...

இடையில் குறுக்கிடும் கவுண்டமணி 'பிஞ்ச செருப்பாலயே அடிப்பேன்… சொல்ல வந்தத சொல்றா…'

'எல்லாம் முடிஞ்சி போச்சிண்ணே… என் சோலிய முடிச்சுப்புட்டாங்கண்ணே…''

நான் அப்பவே சொல்லல… அரசியல்ல இதெல்லாம் சாதரணம்னு… சரி விடு… இப்ப என்ன வேணும் உனக்கு…

அண்ணே… அரசியலே வேணாம்னு… அவனுக்கு ஓட்டுப் போடு… இவனுக்கு ஓட்டுப் போடுன்னு பேசிப் பேசியே என்னை வீணாக்கிக்கிட்டேன்.

பின்னே… அம்மா பாவம் சும்மா உடுமா..?

நீங்கதான் 49 ஓ படத்துல நடிக்கறீங்களே… யாருக்கும் ஓட்டு போடாதீங்கன்னு சொல்றதாமே இந்த ’49 ஓ’. அதான் இந்த கருத்தை சொல்றமாதிரி, இந்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தீங்கன்னா… இந்த வடிவேலு உங்க காலுக்கு செருப்பா இருப்பண்ணே…

நம்மள காலி பண்றதுக்கு இந்த ரெண்டு தடிப்பசங்களும் வந்திருக்கானுங்களே… என்று மனதில் நினைத்துக் கொண்ட கவுண்டமணி, ‘டேய் நானே இப்பவோ அப்பவோன்னு நடிச்சுகிட்டிருக்கேன். இந்த வயசுக்கப்புறமும் என்னை ஹீரோவா வச்சு படம் எடுக்குறாங்க. என்னை ஆள விடுங்கடா சாமி… அவன் அவன் வேலைய பாத்துகிட்டு போயிடுங்க… மீண்டும் என்கிட்ட வந்தீங்க அடிச்சே கொன்னுடுவேன்… இந்த டைரக்டர் வேற நம்மள கூப்பிட மாட்டேங்கறானே… என்ற கவுண்டமணி நினைத்துக் கொண்டிருக்கையில்…

சார்… ஷாட் ரெடி.. வாங்க என்று டைரக்டரிடமிருந்து குரல் வர, ‘ஐ யாம் எஸ்கேப்’ என்றபடி தலைதெறிக்க ஸ்டுடியோவிற்குள் ஓடி மறைகிறார் கவுண்டமணி.

(இது எனது கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல...)

Thursday, March 27, 2014

குக்கூ திரைப்படம் - கோட்டோவியம்

நான் ஆனந்த விகடன் குழுமத்தில் கடந்த 2001-ல் மாணவ பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ராஜு முருகன் விகடனில் உதவி ஆசிரியராக இருந்தவர்... அவருக்கு நான் ஜுனியர்...

அவரின் படைப்புதான் தற்போது திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'குக்கூ' திரைப்படம். அவருக்காக நான் வரைந்த கோட்டோவியம் இங்கே...


Friday, January 31, 2014

கல்லூத்துப்பட்டி ஆலமரம்!



ச்சிவெயில் மண்டையைப் பிளக்க, வானம் மேகங்களின்றி நிர்வாணமாயிருந்தது. அந்நேரத்தில் ஒருவன் ஆவேசமாய் கல்லூத்துப்பட்டியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். வழியெங்கும் பொட்டல் காடாய் கிடக்க, அவன் ஓடி வருகையில் களிமண் புழுதி, அவன் கழுத்து வரை பறந்தது. 

கல்லூத்துப்பட்டி என்றாலே பசுமை போர்த்திய வயல்வெளிகளும், வானை முட்டும் வாகை, கமுகு, தேக்கு, அரசு, ஆலம், தைல மரங்களும்தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு மரத்திற்கும் நூறு வயது இருக்கும். மும்மாரி மழை பொழிவது போல் வருசம் தவறாமல் அப்பகுதிகளில் மழை பெய்து விடும். இதனால் அந்த கிராமம் எப்போதும் பசுமையாகவே இருக்கும். 200 தலைக்கட்டுக்கள் கொண்ட கிராமம் அது. தண்ணீருக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை. கல்லில் கூட நீர் ஊற்றெடுக்கும் என்பதால்தான் அந்த கிராமத்திற்கு கல்லூத்துப்பட்டி என்றே அக்காலத்தில் பெயரிட்டிருந்தார்கள். அச்சிறப்பு வாய்ந்த கிராமமே மழையில்லா காரணத்தால் வறண்டு போய்க் கிடக்கிறது. தண்ணீர் பஞ்சத்தால் தவித்துக் கொண்டிருந்தது. அந்த ஊருக்குள்தான் அவன் காற்றைப் போல் நுழைந்து கொண்டிருந்தான்.


ஊருக்குள் நுழைந்ததுமே… “ஐய்யய்யோ…. எல்லோரும் வாங்கடா... நம்ம வீராசாமி ஐயாவை கோனேரிப்பட்டிக்காரனுவ வெட்டிப்புட்டானுகடா… எலேய்… நம்ம ஐயாவை வெட்டிப் புட்டானுகடா… வாங்கடா…” பெருங்குரலெடுத்து கத்தியபடி மேலத்தெருவுக்குள் ஓடினான். 

வீராசாமி ஐயாவின் பேரைச் சொன்ன அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் ஐம்பது பேர் கொண்ட கூட்டம் கத்தியும், கம்புமாக அவனைச் சூழ்ந்து கொண்டது.

அப்படி கூட்டம் உடனே கூடியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கிட்டத்தட்ட இருநூறு குடும்பங்கள் கொண்ட கல்லூத்துப்பட்டிக்கு வீராசாமி ஐயாதான் ஊர்ப் பெரியவர். அக்காலத்துப் படிப்பில் அஞ்சாங் கிளாஸ்தான் என்றாலும் அவரது சொல்லிலும், செயலிலும் ஐ.ஏ.எஸ் கூட தோற்றுப் போவார். அவ்வளவு அனுபவசாலி. இளம் வயதிலேயே அவரது மனைவி இறந்து போனாலும் கல்யாணம் ஏதும் செய்து கொள்ளாமல் ஊருக்காகவே வாழ்ந்து வருபவர். சுருங்கச் சொல்லணுமென்றால் கல்லூத்துப்பட்டியின் ஆலமரம் அவர்.

ஊருக்குள் யாருக்கேனும் பணப்பிரச்சினை என்றாலும், கல்யாணம் காட்சி என்றாலும், பஞ்சம் பிழைக்க வந்தாலும் எல்லோரும் பணம், பொருள், தானியமணி என்று அனைத்தையும் கொடுப்பவர். அதனால் அவருக்கு ஊருக்குள் எப்போதுமே தனி மரியாதை. 

அவருக்கு ஏரியை ஒட்டி இவருக்கு ஐந்து ஏக்கர் நிலமும், வற்றாத இரண்டு கிணறுகளும் இருக்கின்றன. எப்பஞ்சத்திலும் கல்லூத்துப்பட்டியிலுள்ள கிணறுகள் வற்றிப் போனதில்லை. ஆனால் இந்த வருசம் மழை பொய்த்ததால் எல்லா கிணறுகளும் வற்றி விட்டன. ஆனால் வீராசாமியின் இரண்டு கிணறுகள் மட்டும் வற்றாத அமுதசுரபியாய் இருந்தன. கல்லூத்துப்பட்டி கிராமத்தின் தாகத்தை தீர்ப்பதற்கு, தனது கிணற்றுத் தண்ணீரை தாராளமாக தந்து கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

ஊரில் நல்லது, கெட்டது எதுவானாலும் வீராசாமி ஐயாவின் காதுக்கு வராமல் இருக்காது. கோவில் திருவிழா... ஊர்க்கூட்டம் என எதுவானாலும் அவரிடம் கேட்டுவிட்டுத்தான் அங்கு எல்லா காரியமும் நடக்கும். ஊர்ப்பிரச்சினை என்றாலும் கூட அவரிடம்தான் வருவார்கள்.

ரண்டு நாட்களுக்கு முன்பு கூட அப்படித்தான் ஊரே திரண்டு, அவரது ஓட்டு வீட்டிற்கு முன்பு வந்து நின்றிருந்தது. ஊர் மக்களின் சத்தம் கேட்டு, வீராசாமி தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

அறுபதைத் தாண்டிய வயது என்றாலும், வைரம் பாய்ந்த கட்டையாக இருந்தார். மீசை முதற்கொண்டு நரைத்துப் போயிருந்தாலும், மீசையை வானம் பார்க்கும்படி வளர்த்து விட்டிருந்தார். கறுத்த உடம்பு. அக்காலத்திலேயே கல்லும், சுண்ணாம்புக் கலவையுமாய்க் கிடந்த ஐந்து காணி நிலத்தை, ஒத்தை ஆளாக இருந்து சீர்படுத்தி, வெள்ளாமை செய்தவர். வேட்டியும், சட்டை இல்லாத உடம்பில் துண்டோடு திண்ணையில் அமர்ந்தார்.

“என்னப்பா விஷயம்… ஊரே ஒண்ணு கூடி வந்திருக்கீங்க?” என்றார் வீராசாமி.

“ஐயா… உங்களுக்கு தெரியாததில்ல… நம்மூரைப் பொருத்தவரைக்கும் எந்த வருசமும் மழை பொய்க்காது. இந்த வருசம் மழை பொய்ச்சிடுச்சி. ஊரே தண்ணியில்லாம காய்ஞ்சு கெடக்கு. ஊரு சனம் தண்ணிக்கு பறவா பறக்குது. இத்தனை வருசம் இல்லாம, இந்த வருசம் இப்படி ஆயிடிச்சுன்னா… ஏதோ… சாமி குத்தமோன்னு நினைக்கறோம். அதான், திருவிழா எடுக்கலாம்னு பாக்கறோம்’’ என்றார் மேலத்தெரு பொன்னுச்சாமி.

“ம்ம்ஹும்…” என்ற அசட்டு சிரிப்பு சிரித்தார் வீராசாமி.

“எதுக்கு ஐயா சிரிக்கிறீங்க?” என்றார் நாகமணி பூசாரி. 

“ஏன்யா… ஊரே பஞ்சத்துல கெடக்கு… தண்ணியில்லாம நிலமெல்லாம் வயிறு வெடிச்சி கிடக்கு… அதுக்கு ஏதேனும் வழி பண்ணுவிங்களா… காசில்லா நேரத்துல போய் சாமிக்குத்தம்… திருவிழான்னு சொல்லிகிட்டிருக்கீங்க…’’ என்று ஊர்மக்களைப் பார்த்து கேட்டுவிட்டு, பூசாரி பக்கம் தன் பார்வையைத் திருப்பி, “யாரு… நாகமணி செஞ்ச வேலையா இது..?” என்றார்.

நாகமணி தலையைக் குனிந்து கொண்டார்.

“எலேய்… கல்லூத்துப்பட்டின்னாலே கல்லுல கூட ஊத்தெடுக்கும்டா.. அப்படியாப்பட்ட ஊரு இப்போ காய்ஞ்சி போச்சு… அதுக்கு என்ன காரணம்னு முதல்ல தெரிஞ்சிக்கோங்கடா…

பக்கத்து கிராமமான கோனேரிப்பட்டியில போன வருசம் தொடங்குன மினரல் வாட்டர் கம்பெனி, நிலத்தடி நீரை எல்லாம் ஒண்ணுக்கு பத்து போர் போட்டு வருசம் முழுக்க உறிஞ்சிகிட்டிருக்கு… வருசம் முழுக்க உறிஞ்சி எடுத்தா பூமித்தாய் என்னதாண்டா பண்ணுவா? அவ ரத்தத்தை உறிஞ்சுற மாதிரி அந்த கம்பெனி, நிலத்தடி நீரை உறிஞ்சிகிட்டிருக்கு.

நம்ம கெணத்துகள்ல தண்ணி ஊறுதுன்னா… அது அவளா பாத்து கொடுக்கற கொடை. நாம எப்பவும் அவ ரத்ததை உறிஞ்சினதுல்ல. நம்ம ஏரியில எப்பவும் தண்ணி வறண்டு போனதும் இல்ல. நம்ம முப்பாட்டன் காலத்துல கட்டின ஏரி, நேத்து வரைக்கும் நம்ம கிராமத்துக்கு பசுமையை கொடுத்துச்சு, நிலத்தடி நீர் வறண்டு போகாமயும் பாத்துக்கிச்சு. இப்ப எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. 

வானம் பொய்த்தாலும் நம்ம பூமி பொய்க்காம இருந்துச்சுடா… அப்படிப்பட்ட பூமியே மலடாக்கிடுச்சி அந்த மினரல் வாட்டர் கம்பெனி. மொதல்ல அந்த கம்பெனியை நம்ம கிராமத்துல அமைக்கறதாத்தான் இருந்தானுவ. அதுக்கு அந்த ஊரு பஞ்சாயத்து பிரசிடெண்டு தூது வந்தான். ஆனா நாந்தான் இங்க அமைக்க வேணாம்னு சொன்னேன். 

அதுக்கு அவன், ‘இது நம்ம எம்.எல்.ஏ.வோட கம்பெனிதான். இந்த கம்பெனிய அமைச்சா நல்ல லாபம் கெடைக்கும். உங்க ஊரு பயலுவலுக்கும் வேலை கெடைக்கும். நீங்க சொன்னதான் இங்க இருக்க பயலுக கேப்பானுக’ன்னான்… 

நம்ம அம்மா கொடுக்கற பாலை, நமக்கே தெரியாம திருடி எடுத்து, பாட்டில்ல அடைச்சி, நம்மகிட்டயே வெலைக்கு விக்கிற வேலைய பாக்கறதுக்காக எங்கிட்ட கேட்டான். தண்ணிங்கறது நம்மோட உசுரோட கலந்த ஒண்ணு. அதை விட்டுக் கொடுத்துட்டா… நம்மையே வித்துட்ட மாதிரி… அதெல்லாம் சரிப்படாது… மீறி எங்க கிராமத்துல பண்ணணும்னு நெனச்சா… ஒருபயலக் கூட விட்டு வைக்க மாட்டோம். பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்னு சொன்னேன்.

வீட்டுக்கு வர சீதேவிய வேணாம்னு சொல்றீங்க… நான் எங்க கிராமத்துலயே அந்த கம்பெனிய வச்சிக்க சொல்லிடறேன். இந்த ஊர்ல எப்பவும் தண்ணி வத்தாம இருக்குமேன்னுதான் கேட்டேன். எங்க ஊர்ல தண்ணி கெடைக்காதா என்ன? அப்டின்னுட்டு போயிட்டான்.’’ என்றார் வீராசாமி.

“அந்த கம்பெனிய இங்க அமைக்க விடாம பண்ணியது நீங்கதானா? அது இங்க அமைஞ்சிருந்தா… இப்ப இருக்க பஞ்சத்துக்கு வயல் வேலைதான் இல்ல. அந்த வேலை இருந்தாலாச்சும் பொழச்சிக்கிட்டிருக்கலாம்ல. வீணா கெடுத்துப்புட்டீங்களே பெரிசு?” என்று அந்த கிராமத்து இளவட்டப் பயல்களில் ஒருவனான கதிரேசன் கேட்டான்.

“கதிரேசா… அந்த கம்பெனிய இங்க அமைச்சிருந்தா.. அந்த கம்பெனி இங்க வந்த அடுத்த மாசமே, நம்ம ஊர் வறண்டு போயிருக்குமுடா… பக்கத்து கிராமங்கறதால ஒரு வருசம் தாக்குப் பிடிச்சிருக்கு… இதுமட்டுமில்லடா, உங்களுக்குன்னு தனியா பத்து லட்ச ரூபா வாங்கித் தரேன். வாங்கிக்கோங்க… எனக்கும் பத்து லட்ச ரூபா கெடைக்கும்… இந்த கிராமத்துலதான் தண்ணி எப்போதும் கெடைக்கும்ல.. என்ன சொல்றீங்கன்னு அப்பவே அவன் என்கிட்ட கேட்டான். நான் அதுக்கு அப்போ சம்மதிச்சிருக்கணும்ங்கறியா..?” என்றார்.

கதிரேசன் தலைகுனிந்து கொண்டான்.

மீண்டும் ஊர் மக்களைப் பார்த்து, “அந்த கம்பெனிக்காரனுங்க… போன வருஷத்துலருந்து தண்ணிய உறிஞ்சி எடுத்துகிட்டிருக்கானுங்க… நிலத்தடி நீரு கிடுகிடுன்னு இறங்கிடுஞ்சி. அதுல நம்மூரு தண்ணியும் காணாம போயிடிச்சு… நம்ம ஊரு தண்ணி பிரச்சினைக்கு அந்த கம்பெனியும் ஒரு முக்கிய காரணம்” என்றார்.

“அந்த கம்பெனியில நம்ம ஊர் ஆள்களும் வேலை செய்யறாங்க ஐயா. அவங்க இந்த மாதிரி ஏதும் சொல்லக் காணமே” என்றார் நடுத்தெரு முத்துசாமி.

“என்ன முத்து?, நம்மூர்க்கார பயலுக அங்க என்ன என்ஜினீயர் வேலைக்கா போறான். எடுபிடி வேலைக்குத்தானே போறான். இந்த வெவரமெல்லாம் அவனுக்கு எப்படி தெரியும். அதுமில்லாம, வேலை கொடுக்கறவனுக்கு விசுவாசமாதான் நம்மூர்க்கார பயலுக இருப்பானுக. அது நம்ம மண்ணோட குணம். தண்ணி பஞ்சத்துக்கு அந்த கம்பெனியும் ஒரு முக்கிய காரணம்னாலும், இதுக்கு இன்னும் வேற காரணங்களும் இருக்கு” என்றார். 

அது என்ன என்பது போல் முத்துசாமி மட்டுமின்றி ஒட்டு மொத்த கூட்டமே முகத்தில்  கேள்விக்குறியோடு வீராசாமியைப் பார்த்துது.
“பல நாடுகளோட சுயநல வேலைகளால வானிலை மாற்றமடைஞ்சிருச்சி. அதனாலதான் அடிக்கடி சூறாவளி, புயலு, பூகம்பம், பேய் மழை எல்லாம் பெய்யுது. சில ஊருங்க அழியுது… அதுல நம்மநாடும் விதிவிலக்கில்ல… அதுக்கு கொடுத்த விலைதான் குஜராத் பூகம்பமும், சுனாமி தாக்குதலும். இப்பகூட உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு பல ஆயிரம் பேரை பலிகொடுத்திட்டோம்… நாடுகதான் அப்படீன்னா… நம்ம அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருக்கானுக.. அதுக்கு உதாரணம் நம்ம ஊர் எம்.எல்.ஏ.வே இருக்கான். அவன்தான் அப்படீன்னனா, நம்ம ஊர்க்காரப் பயலுகளும் அப்படித்தான் இருக்கீங்க…” என்று காட்டமாக பேசினார் வீராசாமி.
“என்ன ஐயா..? கடைசியில நம்மூர்க்காரப் பயலுகளையே கடைசீல குத்தம் சொல்றீங்க” என்றார் மருதாசலம்.

“நம்ம பயலுகளுக்கு முன்னெல்லாம், ஊரு நலம் முக்கியமா இருந்துச்சு மருது… இப்போ சுயநலம் பெருகிப் போச்சு. நம்ம ஊர்ல நிறைய மரத்த வச்சிருந்தோம். வெட்டக்கூடாதுன்னும் ஊர் கட்டுப்பாடு வச்சிருந்தோம். எவன் கேக்கறானுக, ஒருத்தன் ஏரியை தூத்து செங்க சூளை போட்டிருக்கான். இன்னும் நெறைய பேர், எங்க நெலத்துல இருக்குற மரத்தைத்தான் வெட்டப்போறோம். ஊர்ல இருக்கறவங்ககிட்ட நாங்க எதுக்கு அனுமதி வாங்கணும்னு வெட்டி சாச்சிட்டானுங்க… இதெல்லாம் அழிவுக்குத்தான்னு எவனுக்கும் தெரியல. இன்னும் சிலர் வயல்வெளியை கூறு போட்டு வீட்டு மனையாக்கிட்டானுங்க…’’ என்று கூறியவர், தன் தோளில் கிடந்த துண்டால் முகத்தில் வழிந்த வியர்வையத் துடைத்துக் கொண்டார்.

‘வளர்ச்சியைப் போய் அழிவுன்னு சொல்லுதே பெரிசு’ என கிசுகிசுத்த மருதாசலம், “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ல வரீங்க..?” என்றார்.
“நம்ம ஊரைச் சுத்தி, நூறு வயசுக்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கு. அதுங்கதான் நம்ம ஊரைக் காப்பாத்தற சாமிங்க... அதை நாமதான் பத்திரமா பாதுகாக்கணும். மரங்களை இனி யாரும் வெட்டக் கூடாது. நம்ம முன்னோருங்க மரம் நட்டதுக்குப் பிறகு, நாம எந்த மரத்தையும் நடாம விட்டுட்டோம். இனி நம்ம கிராமத்தை சுத்தி எல்லோரும் ஆளுக்கு அஞ்சி மரம் நடணும். சிலதை மட்டும் வேரோட வெட்டி சாய்க்கணும்.” என்றார் தீர்க்கமாக.

“மரத்தை வெட்டக் கூடாதுன்னு சொன்ன நீங்களே இப்ப வெட்டணும்னு சொலறீங்க… ஏன்? இப்படி மாத்தி மாத்தி சொல்றீங்க” என்றான் கதிரேசன்.

“நம்ம ஊரைச் சுத்தி கருவேல மரம் எங்கெங்க இருக்கோ… அத்தனையும் தேடிப் பிடிச்சு, வேரோட வெட்டிச் சாய்க்கணும். அதுலயும் சீமைக் கருவேலமரம் இருக்கு பாரு, அதுகளை உருத்தெரியாம அழிச்சிரணும்.” என்றார் வீராசாமி.
“என்னங்க ஐயா… நம்ம ஊர்ல அதிகமா இருக்கிற மரமே கருவேல மரம்தான். அதைப் போய் வெட்டச் சொல்றீங்களே… ஆலும் வேலும் பல்லுக்குறுதின்னு அடிக்கடி நீங்கதான் சொல்லுவீங்க… அதைப் போய் வெட்டச் சொல்றீங்களே..?” என்றார் கீழத்தெரு முருகேசன்.

“அது உண்மைதான் முருகேசா… ஆலும் வேலும் என்பது ஆலமரத்தையும் வேப்ப மரத்தையும் குறிக்கும். கருவேல மரத்தையும் சீமைக் கருவேல மரத்தையும் இல்ல. இந்த ரெண்டு மரமும் நம்ம நாட்டு மரமில்ல. வெள்ளைக்காரன் நம்மநாட்டுக்கு கொண்டு வந்த சனியன்கள்ல இதுகளும் உண்டு. இந்த ரெண்டு மரமும் தண்ணியே இல்லாத இடத்துல கூட வளரும். நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்துல இருந்தாலும் அவ்ளோ ஆழம் வரைக்கும் நீண்டுகிட்டுப் போய் தண்ணிய உறிஞ்சிக் குடிச்சிரும். அதனால, நெலத்தடி நீரும் சுத்தமா கொறைஞ்சிரும். 

வயலுக்கு நீர் பாச்சினம்னா, வக்கனையா வாரிச் சுருட்டிக் குடிச்சுரும். பயிருக காஞ்சிடும். வெறகுக்குன்னு அதை நம்மூர்க்கார பயலுகளே வளக்கறானுங்க. அதை மாத்தணும். இந்த மரங்க நெலத்தடி நீரையும் வெஷமாக்குதுப்பா… அந்த மரத்துக்கு கீழ வேற எந்த மரத்தையும் வளர விடாது. இந்த மரத்தால கெடுதல்தான் அதிகம் முருகேசா… இந்த வெவரமெல்லாம் எனக்கே கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் தெரிஞ்சுது. 

போன வாரம், வேளாண்மை அலுவலகத்துக்கு போனப்ப, அங்க இருந்த தோட்டக்கலை அதிகாரி இந்த வெவரத்தை சொன்னாரு. இந்த மரங்களாலதான் ராமநாதபுரம் மாவட்டமே வறட்சியா போயிடிச்சுன்னு பொதுப்பணித்துறை அறிக்கையே அளிச்சிருக்குன்னும் சொன்னாரு. நம்ம சுத்துப்பட்டு கிராமங்கள்ல எல்லாம், அதிகமா கருவேலமும், சீமைக் கருவேலமும்தான் நிறைய இருக்கு. இங்க இருக்குற கருவேல மரங்க ஒவ்வொண்ணும், பக்கத்து ஊருல இருக்கிற மினரல் வாட்டர் கம்பெனிக்கு சமம். அதையெல்லாம் வேரோட வெட்டி சாச்சிட்டு, அதுக்கு பதிலாதான் ஆளாளுக்கு அஞ்சி மரம் நடணும்னு சொல்றேன்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில மத்த ஊருக்குப் போய் வேலை செய்யறத விட்டுட்டு, நம்ம ஊர்ல இருக்கிற இந்த ஆபத்தான மரங்கள முதல்ல வேரோட வெட்டி எறிவோம். நம்ம ஊர் ஏரியை தூர் வாருவோம். செங்க சூளைய காலி பண்ணுவோம்… ஊருக்குள்ள இருக்குற குளத்தை குப்பை மேடாக்காமா பாத்துக்குவோம். ஒவ்வொரு வீட்லயும் மழைநீர் சேகரிப்பு தொட்டிய கட்டுவோம். மழையால வீணா போற தண்ணிய, குளத்துக்கு திருப்புவோம்… மரங்களை அதிகம் நட்டுவைப்போம்…. இதை எல்லாம் செஞ்சோம்னாதான் அடுத்து வர்ற காலங்கள்ல, தண்ணி பஞ்சத்துல இருந்து நம்ம ஊரு தப்பிக்கும்.

நம்ம ஊரை சுத்தம் பண்ணுற வேலைகளை நீங்க பாருங்க… அந்த மினரல் வாட்டர் கம்பெனிய, நம்ம மாவட்டத்தை விட்டே காலி பண்ணுறதுக்கான வேலைய சட்டப்படி நான் பண்ணறேன். அப்பத்தான் நம்ம தண்ணி, நம்ம மண்ணுக்கும், நம்ம உசுருக்கும் கெடைக்கும்.  

இது நம்மூர்ல மட்டுமில்ல, நம்ம தமிழ்நாடு முழுக்க இதே நிலைதான். இந்த நிலைய மாத்தறதுக்கு, நாம முன்மாதிரியா இருப்போம். நம்மள பாத்து நம்ம நாடே மாறணும். இழந்த பசுமையை மீட்கணும்… எல்லோரும் என்ன சொல்றீங்க?” என்று ஊர் மக்களைப் பார்த்து சத்தமாய்க் கேட்டார்.

“அப்படியே செய்யறோம் அய்யா…” என்றனர் கோரஸாக…

அன்று எடுத்த முடிவின் காரணமாக, இன்று காலை மாவட்ட கலெக்டர் ஆபீஸிற்கு சென்ற வீராசாமி, ‘மினரல் வாட்டர் கம்பெனியை இழுத்து மூடணும்’ என்று ஊர் மக்கள் கையெழுத்திட்ட மனுவைக் கொடுத்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

இந்த விவகாரம் எம்.எல்.ஏ.வின் காதுகளுக்குப் போகவே, வீராசாமி கோனேரிப்பட்டிக்குள் வரும்போது, ஆட்களை விட்டு அவரை வெட்டி இருக்கிறான்.

ருக்குள் ஒடிவந்தவன் ஆவேசமாய் கூறியதைக் கேட்ட கல்லூத்துப்பட்டி மக்கள், எல்லோரும் ஒன்றாய்த் திரண்டு கோனேரிப்ப்பட்டியை துவம்சம் செய்ய கிளம்பினர். சிண்டு, நண்டு, சிறிசு, பெரிசு என எல்லோர் கைகளிலும் கட்டையோ, கழியோ, குத்தீட்டியோ ஆயுதமாகிக் கொண்டு அவர்களோடு பயணித்தது.


கல்லூத்துப்பட்டி ஊர் எல்லையை அவர்கள் தாண்டுவதற்குள், வீராசாமி இடுப்பில் பெரிய துண்டு ஒன்றைக் கட்டியபடி, ஊரை நோக்கி தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். அவரது வெள்ளைத் துண்டு, ரத்தக் கசிவால் சிவப்பாய் மாறிப்போயிருந்தது.

“ஐயா… சாமி… உங்களுக்கா இந்த நெலமை… கோனேரிப்பட்டிக்காரனுங்களை கொன்னு கூறுபோட்டுடறோம்யா…” என ஊர் மக்களே ஒன்று சேர்ந்து கோபாவேசப்பட்டனர்.

சைகையால் எல்லோரையும் தடுத்து நிறுத்திய வீராசாமி… “டேய்… பத்துபேரு வந்து நின்னாலும் ஒத்தை ஆளா சமாளிக்கறவண்டா இந்த வீராசாமி... வெட்ட வந்தவன் ஒவ்வொருத்தன் கொடலையும் சரிச்சுட்டுதான் வந்திருக்கேன். பேடிப்பய ஒருத்தன் பின்னால இருந்து வெட்டிட்டான். அவனையும் வுட்டு வைக்கல... இது என்னோட முடிஞ்சு போகட்டும்டா...

வெவரந்தெரியாம யாரும் நீங்க சண்டைக்கு போகாதீங்க… என்னை வெட்டினது கோனேரிப்பட்டிக்காரனுங்க இல்ல… எம்.எல்.ஏ.வோட ஆளுங்கதான்… அவனுங்கள நானே சாச்சிட்டேன்... எனக்கு பிள்ளை குட்டி ஏதுமில்ல... நீங்கதான் என் பிள்ளைங்க. உங்களுக்கு எல்லாமே இருக்கு... ஊரே பஞ்சத்துல கெடக்கும் போது வெட்டு, குத்துன்னு போயி உங்க குடும்பங்களை தவிக்க விட்டுடாதீங்கடா…” என்று பேசி நிறுத்தியவர், சற்று இழுத்து மூச்சுவிட்டிக் கொண்டார். இடுப்புப் பகுதியிலிருந்து ரத்தம் மேலும் கசியத் தொடங்கியது.

அதைப்பார்த்ததும் “வாங்க ஐயா ஆஸ்பத்திரிக்கு போவோம்…” என ஊர் மக்களே கதற…

“யேய்… எனக்கு ஒண்ணும் ஆகாது… எதுக்குடா அழுவுறீங்க… அழாதீங்கடா… ஆஸ்பத்திரிக்கு நான் போனேன்னாக்கா, அந்த நேரத்துல நீங்க கோனேரிப்பட்டிக்காரனுங்கள வெட்டி சாச்சிட்டு வந்துடுவீங்க… அது ஊரு பகையாப் போயிடும்… நம்ம ஊரு மேல பழி பாவம் வந்துடும்டா... அதனாலதான் முதல்ல உங்கள பாக்க வந்திருக்கேன்… காயம் பெரிசா இல்ல… அதனால எனக்கு ஒண்ணும் ஆகாது. நான், ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முன்னாடி, நீங்க எல்லோரும் எனக்கொரு சத்தியம் பண்ணி கொடுங்க…”

“ஐயா… சொல்லுங்கைய்யா, செஞ்சி கொடுக்கறோம்…” ஒவ்வொருவர் கண்களிலும் பூமியில் விழுந்த கண்ணீர் துளிகள் பூமியை நனைத்தன.

“எக்காரணம் கொண்டும் எனக்காக யாரும் கத்தி, கபடாவை தூக்கக்கூடாது. அந்த மினரல் வாட்டர் கம்பெனிக்காரனுங்களை விரட்டி அடிக்கணும்… அதை ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணா கூடி சட்டப்படி போராடினா கண்டீப்பா அது நடக்கும்… நம்ம மண்ணுக்காக நாமதான் போராடணும்… உங்களை மடக்கறதுக்காக பணத்தை கத்தை கத்தையா நீட்டுவானுங்க.. பஞ்சத்துல இருக்கோமேன்னு கைநீட்டி வாங்கிடாதீங்கடா… காசுக்கு அடிமையானா… அடுத்து வரும், நம்ம தலைமுறையே தண்ணியில்லாம, தடந்தெரியாம அழிஞ்சு போயிரும்… அழிக்க வேண்டிய மரத்தை அழிச்சி… நல்ல மரங்களை நடுங்கடா… இதை செய்யறோம் எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க…” என்றார்.

“அப்படியே செய்யறோம் ஐயா…” என்று ஊரே அழுதபடி குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே…

அதுவரை ஆலமரமாய் நின்றிருந்த வீராசாமி, தனது மீசையை முறுக்கியபடியே கீழே சரிந்தார். அவரது உடலில் இருந்து வழிந்த ரத்தம் கல்லூத்துப்பட்டி எல்லையை தாண்டாமல், அவர் ஊர் மண்ணை ஈரமாக்கத் தொடங்கியது.