Thursday, December 12, 2013

என்ன பெத்தவரு!



நேரம் அப்போது இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியேறி, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் எனது வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தேன். 

திடீரென என் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது. இப்போதானே தாமரையிடம் பேசினேன். ‘தாம்பரம் வந்துட்டேன்… வீட்டுக்கு வந்துகிட்டே இருக்கேன்’ன்னுதான் சொல்லிட்டேனே. மறுபடியும் கூப்பிடறாளோ என்று யோசித்தபடியே பேண்ட் பாக்கெட்டில் அடைந்திருந்த என் செல்போனை எடுத்தேன். அப்பாவிடமிருந்து அழைப்பு வந்துகொண்டிருந்தது. 

இந்நேரத்தில் அப்பா போன் பண்ண மாட்டாரே..? ஏதேனும் அவசரமோ? ஏதேனும் அசம்பாவிதமோ? என மனதிற்குள் குழப்பங்கள் கேள்விகளாக முளைக்கத் துவங்க, அழைப்பிற்கு உயிர்கொடுத்தேன். 

“சொல்லுங்கப்பா… அம்மா நல்லா இருக்காங்களா? நீங்க நல்லா இருக்கீங்களா..?” எனக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ஆத்தூரிலிருக்கும் அம்மாவின் இருமல் சத்தம் இங்கே கேட்டது.

“நாங்க நல்லாருக்கோம்ப்பா… தாமரை நல்லாருக்குதா? பேரனுங்க நல்லா இருக்காங்களா? வீட்லயா இருக்க?”

“இப்பதான் வீட்டுக்கு போயிட்டிருக்கேன்… எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா… என்னப்பா இந்த நேரத்துல திடீர்னு கூப்பிட்டிருக்கீங்க?”

“ஏம்பா… உன்ன நான் இந்த நேரத்துல கூப்பிடக்கூடாதா? தொந்தரவு ஏதாவது பண்ணிட்டனா?” அவர் குரலில் ஓர் ஏக்கம் தொனித்தது.

“ஐயோ… அப்படி எல்லாம் சொல்லலப்பா… எப்போதும் 8.30 மணிக்கெல்லாம் அம்மாவும் நீங்களும் தூங்கிடுவீங்களே… இந்த நேரத்தில கூப்பிட்டிருக்கீங்களே… ஏதாவது அவசரமான விஷயமான்னு கேட்க வந்தேன்பா…’’

“ஒண்ணுமில்லப்பா… தீபாவளி வரப்போகுது… குடும்பத்தோட வீட்டுக்கு வந்தீன்னா… நாங்க ரெண்டு பேரும் அன்னைக்காச்சும் சந்தோஷமா இருப்போம்”

“ஏம்பா இப்படி எல்லாம் சொல்றீங்க… நீங்க போன் பண்ணித்தான் என்னைக் கூப்பிடணுமா? நான் வரமாட்டேனா?”

“அதுக்கில்லப்பா… நீ சென்னைக்கு போய் எட்டு வருஷம் கூட ஆகல, உன்னோட முரட்டு குணத்தால 10 கம்பெனி மாறிட்ட… இப்பகூட நாலு மாசம் வேலை இல்லாம இருந்த… இப்பதான் உனக்கு வேலை கிடைச்சிருக்கு… லீவு கிடைக்கல… ஊருக்கு வரதுக்கு காசு இல்ல… அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி வராம இருந்துடக்கூடாது பாரு… அதான் இப்பவே போன் பண்ணி சொல்றேன்…”

“என்னப்பா செய்யறது… ஆபிஸ்ல மத்தவங்க செய்யற தப்பை தட்டிக் கேட்கறதால, என் சுயமரியாதையை உரசிப் பாக்கறானுங்க… வேலைய விட்டுடறேன். அதை நீங்க முரட்டுக் குணம்னு சொல்றீங்க..''

''ம்ம்ம்... விதை ஒண்ண போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்..''

''இந்த குணம் உங்கிகட்ட இருந்து வந்ததுதானப்பா.... அத போகட்டும்பா நான் பாத்துக்கறேன்... என் படிப்புக்கேத்த வேலை சென்னைலதாம்பா இருக்கு… அந்த ஒரு காரணத்துக்காக மட்டும்தான், நான் இந்த நரகத்துல இருக்கேன்… எனக்கும் உங்க கூடவே இருக்கணும்னுதாம்பா ஆசை… கூடிய சீக்கிரம் அங்கேயே வந்துடறேன்.”

“அது எனக்கும் தெரியும்பா… ஒரு நேரம் சமாதானமானாலும், இன்னொரு நேரம் பெத்த பிள்ளைங்க எங்ககூட இல்லையேன்னு மனசு ஏங்குதுப்பா… அந்த ஏக்கம் தீபாவளி, பொங்கல்ல நீங்க வரும்போது மட்டும் காணாப்போயிடும். அதான்பா போன் பண்ணினேன். காசு இல்லன்னு ஊருக்கு வராம இருந்துடாத…”

“இந்த ஆபீசுக்கு போயி ஒரு மாசம்தான் ஆகுது. லீவு எப்படின்னு தெரியலப்பா. என்னிடம் காசும் இப்போ இல்லதான்… நிலமை எப்படி இருக்குன்னு பார்த்துகிட்டு வரேன்…”

“இந்த மாதிரி காரணம் நீ ஏதும் சொல்லக்கூடாதுன்னுதான், இந்த நேரத்துல போன் பண்ணுறேன்… எது எப்படி இருந்தாலும் ஊருக்கு வராம இருந்துடாதப்பா… ஏதாச்சும் சொல்லி ஆபீசுல லீவு கேட்டுட்டு வந்துடு… வருசம் முழுக்க அம்மாவும் நானும் அனாதையாத்தான் கெடக்கறோம்… தீபாவளிக்கும் எங்கள அனாதையாக்கிடாதப்பா…”

“ஏம்பா இப்படி எல்லாம் பேசறீங்க… கூடிய சீக்கிரம் உங்களோடவே வந்துடறேன்”

“ஆயுசு முடியும்போது நீ வந்து என்னப்பா பலன்… வயசாயிப் போச்சு… உங்களை பெத்து வளக்கறதுக்காக நாங்க ரெண்டு பேரும் ஓடி ஓடி ஒழைச்சோம்… வளர்ந்த பிறகு பெத்தவங்க கூட இருக்கணும்னு ஒருத்தனும் நினைக்கல… இருக்கல… ஓய்வெடுக்கக்கூடிய வயசு வந்தும், இன்னும் ஒழைச்சிகிட்டுதான் இருக்கோம்… ஒழைக்கிறத பத்தி எங்களுக்கு கவலை இல்லப்பா… புள்ளைங்க ஒண்ணு கூட எங்களோட இல்லையேங்கறதுதான் பெருங்கவலையா இருக்கு…''

''அண்ணன்தான் பக்கத்துத் தெருவுலதானப்பா இருக்கான்...''

''யாரு உன் அண்ணனா... ம்ஹும்... அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். அவன் பொண்டாட்டி, உன் அம்மாகிட்ட சண்டை போட்டதால, அவன் தனிக்குடித்தனம் போயிட்டான். நீ மேல படிக்கப்போறேன்னு சென்னைக்குப் போன, படிச்சு முடிச்சதும். காதல்ன, உடனே கல்யாணம்ன… உன்னிஷ்டம் போல செஞ்சு வச்சோம். கல்யாணம் பண்ணுன மறுநாளே நீயும் சென்னைக்கு உன் பொண்டாட்டியோட போயிட்ட. உன் தம்பியாச்சும் எங்ககூட இருப்பான்னு பாத்தோம். அவனும் கல்யாணம் முடிஞ்சதும், மாமியார் வீடே கதின்னு போயிட்டான்… நாங்க ரெண்டு பேரும் தனியாத்தான கெடக்கறோம்… பெரியவன் பக்கத்து தெருவுல இருந்தும் இல்லாத மாதிரிதான். உன் தம்பி எங்கள சுத்தமா மறந்துட்டான். நீ ஒருத்தன்தான் அப்பா, அம்மா இருக்காங்கன்னுட்டு தீபாவளி, பொங்கல்னாதான் வீட்டுக்கு வர… எது எப்படியோப்பா… நீங்க எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதுவே எங்களுக்கு போதும். அப்படியே அந்த சந்தோஷத்தை ரெண்டு நாளைக்காச்சும் எங்களுக்கும் கொடுப்பா… அடுத்த தீபாவளிக்கு நாங்க உசிரோட இருக்கமோ, இல்லையோன்னு தெரியாதுப்பா… வயசாயிடிச்சில்ல… அதான் வந்து ரெண்டு நாளாச்சும் இருந்துட்டுப் போன்னு சொல்றேன்…”

“அப்பா இப்படி எல்லாம் சொல்லாதீங்கப்பா… மனசுக்கு கஷ்டமா இருக்கு…”

“உம் மனசு கஷ்டப்படணும்னு சொல்லலப்பா… நீ எங்க வராம இருந்துடுவியோங்கற எங்களோட மனக்கஷ்டத்ததாம்பா உங்கிட்ட சொல்றேன்…”

“கண்டீப்பா ஊருக்கு வரப் பாக்கறேன்பா… பட்டாசு எல்லாம் பஸ்ஸில, டிரெயின்ல எடுத்துட்டு வரக்கூடாதுங்கறாங்க… முடிஞ்சா உங்க பேரன்களுக்கு பட்டாசு வாங்கி வையுங்கப்பா…”

“சரிப்பா… அத நான் பாத்துக்கறேன்… நீ பத்திரமா குடும்பத்தோட வந்துருவல்ல…”

“வரப் பாக்கறேன்பா.. நீங்க போனை அம்மாகிட்ட குடுங்கப்பா பேசறேன்…”

“அம்மாவுக்கு ரொம்ப இருமலா இருந்துச்சுன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மருந்து கொடுத்தேன்… அரைத் தூக்கத்துல இருக்கா… காலைல அம்மாவ பேசச் சொல்றேன்பா… வீட்டுக்கு போனதும் மருமகளையும் பேரன்களையும் நான் கேட்டதா சொல்லுப்பா… நான் போனை வச்சிடறேன். பத்திரமா வீட்டுக்கு போப்பா” 

அப்பா போனை வைத்துவிட்டார். ‘அனாதையா இங்கே கெடக்கறோம்பா.. ரெண்டு நாளாச்சும் வந்து தங்கிட்டு போ… அடுத்த வருஷம் நாங்க இருக்கிறோமோ இல்லையோ…’’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் மனதை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருந்தது. கனத்த மனதோடு வீட்டிற்குப் போனேன்.

“தாமரை… தாமரை… என குரல் கொடுக்க, என் மனைவி தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்தாள். குழந்தைங்க தூங்கிட்டாங்களா?” என்று கேட்டபடி உள்ளே சென்றேன்.

“ம்ம் ஆதித்தன் முன்னமே தூங்கிட்டான்… சின்னவன்தான் உங்களுக்காக எதிர்பார்த்துகிட்டிருந்தான்… 'அப்பா துப்பாக்கி வாங்கி வரேன்னு சொன்னாரு.. பட்டாசு வாங்கிட்டு வரேன்னு சொன்னாரு'ன்னு காத்துகிட்டிருந்தான்… உங்களுக்காக தூங்காமா இருந்தவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தூங்கினான்… அது சரி... ஏன் இவ்ளோ லேட்டு… ஏன் உங்க முகம் வாடிப்போயிருக்கு… துப்பாக்கி வாங்கிட்டு வரலயா…” கேள்விக்கணைகளை சரமாரியாக வீசினாள்…

“சம்பளம் இன்னும் போடலம்மா… அதான் வாங்கி வரல…” என்றேன். சற்று இடைவெளி விட்டு “அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் பேசினாரு… தீபாவளிக்கு கண்டீப்பா ஊருக்கு வரச்சொல்றாரு…” என்றேன்.

“அப்பாவுக்கு நம்ம நிலமை தெரியாதா? இப்பதான் வேலையே கெடச்சிருக்கு. நாம வாங்கற 13,000 ரூபாய் சம்பளத்துல… நாலு மாச மளிகை கடை பாக்கி, பால் பாக்கி, வாடகை பிரச்சினை, ஸ்கூல் பீஸ், குழந்தைகளுக்கு டிரெஸ் என ஏகப்பட்ட செலவு இருக்கு… எப்படிங்க ஊருக்கு போறது… இவ்ளோ கஷ்டத்துல ஏங்க போகணும்… அடுத்த வருஷம் போயிக்கலாம்” என்றாள்.

“எனக்கும் அது தெரியும்… ஆனா, நிலமை அங்க நல்லா இல்ல… அம்மாவுக்கு உடம்பு சரியில்ல… அப்பாவுக்கும் உடம்பு முடியல போல … அவங்க என்னிடம் காசு பணம் கேக்கலம்மா… ரெண்டு நாள் குழந்தைங்களோட எங்க கூட இருந்துட்டு போங்கன்னுதான் சொல்றாங்க… ஏதாச்சும் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன். போயிட்டு வந்துடலாமே…” என நான் அவளிடம் கெஞ்ச, அரை குறை மனதோடு என் மனைவியும் சம்மதித்தாள். 

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன… நண்பனிடம் பணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டேன். தீபாவளிக்கு முதல் நாள் இரவு மனைவி, மகள், மகனோடு தாம்பரத்திலிருந்து ஆத்தூருக்கு பஸ்ஸில் புறப்பட்டு விட்டோம். கூட்டம் நிரம்பி வழிந்த அந்த பஸ்ஸில் இடம்பிடிப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது.



அன்று மாலையிலிருந்து இரவிற்குள் அப்பா நான்கு முறை போன் செய்து விட்டார். ‘ஊருக்கு கிளம்பிடுவல்ல?’, ‘ஊருக்கு வரதுக்கு காசில்லன்னு இருந்துடாத… எங்கேயாச்சும் காசு பொரட்டிகிட்டு வந்துடு… இங்க வந்ததுக்கப்புறம் நான் கொடுத்தனுப்பறேன்…’, ‘சீக்கிரமா கிளம்பி வா…’ என அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தார். பஸ் ஏறிவிட்டோம் என்ற தகவலைச் சொன்ன பிறகே அவர் குரலில் ஒரு நிம்மதி வந்ததை தெளிவாக என்னால் உணர முடிந்தது. பஸ் ஆத்தூரை நோக்கி போய்க்கொண்டிருந்தது.

தாம்பரத்திலிருந்து ஆத்துருக்கு பஸ்ஸில் செல்ல வேண்டுமென்றால், குறைந்தது 6 மணிநேரம் பயணம் செய்தாக வேண்டும். இரவில் கிளம்பியதால் பஸ்ஸில் ஏறியதும் தாமரையும் குழந்தைகளும் தூங்கிப்போனார்கள். நான் மட்டும் தூங்காமல் பழைய நினைவுகளில் மூழ்கினேன்.

அப்பாவும், அம்மாவும் காதலித்து திருமணம் செய்தவர்கள். பணக்கார குடும்பத்தில் பிறந்த என் அப்பா, எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் அம்மாவை கரம் பிடித்தார். வெயிலே தெரியாமல் வளர்ந்த என் அப்பா, எங்களுக்காக வெயில், மழை எனப்பாராமல் கூலிவேலைக்குப் போனார். கிடைக்கும் சொற்ப கூலியில் என் அப்பாவும் அம்மாவும் சிரமப்பட்டு எங்கள் மூன்று பேரையும் வளர்த்து ஆளாக்கினர். வறுமை காரணமாக அண்ணன் சிறுவயதிலேயே வேலைக்கு சென்று விட, தம்பிக்கு படிப்பு ஏறவில்லை என்பதால் ஆறாம் வகுப்பிற்குப் பிறகு அவனும் வேலைக்குப் போய் விட்டான். நான் மட்டுமே படித்தேன். எங்களுக்காக இளம்வயதில் வேலைக்கு போக ஆரம்பித்தவர், இன்று வரை வேலைக்கு போவதை நிறுத்தவில்லை. 

என் அண்ணன் பெற்றோரை மதிப்பதில்லை என்பதால், தம்பியிடம் படித்து படித்து சொல்லியிருந்தேன். ‘அண்ணன் சரியில்ல. அவன் அப்பா, அம்மா கூட இருக்க மாட்டான். நானோ படிப்புக்கேத்த வேலைன்னு சென்னைக்கு வந்துட்டேன். நீதான்டா அப்பா, அம்மா கூட இருக்கணும்’னு சொல்லியிருந்தேன். நான் சொன்னதெற்கெல்லாம் தலையாட்டினான். கல்யாணம் ஆனதும் அவன் பொண்டாட்டிக்காக தலையாட்டியவன், இன்றுவரை பெற்றவர்கள் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை.

யார் எப்படிப் போனாலும் தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து குடும்பத்தோடு ஆத்தூருக்கு வந்துவிடுவேன். பெற்றவர்களுடன் இந்த நாட்களிலாவது ஒன்றாக இருக்கிறோமே என்ற ஆத்ம சந்தோஷம் எனக்கு. என் குழந்தைகளுக்கும் தாத்தா, பாட்டி என்ற உறவுகளின் பாசத்தை உணர்த்தும் திருநாட்கள் அது என்ற மனத் திருப்தி. பழைய நினைவுகளில் மூழ்கிப்போனவன், இரவு ஒரு மணிக்கு மேல் எனை அறியாமல் தூங்கிப் போனேன். 

சரியாக அதிகாலை 5 மணிக்கு எனது செல்போன் அடித்து எழுப்பத் துவங்கியது… அப்பாதான் போனில் எனை எழுப்பிக் கொண்டிருந்தார். எடுத்தேன்… “எங்கப்பா வந்திருக்க… நேத்து ஆபிசுக்கும் போயிட்டு, வீட்டுக்கு வந்துட்டு, பிள்ளைங்களை கூட்டிகிட்டு பஸ்ல ஏறி, கூட்டத்துல கஷ்டபட்டிருப்ப… உன்னை அறியாம அசந்து தூங்கி, நம்ம ஊரை தாண்டி பஸ் போயிடிச்சின்னா என்ன பண்ணறது.. அதான் போன் பண்ணினேன். எங்கப்பா வந்திருக்க…?”

அப்பாவின் குரல் கேட்கும் போதே, தீபாவளி பிறந்து விட்டதற்கான அறிகுறியாய், தூரத்தில் பட்டாசுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்டன. 

“இருங்கப்பா… எங்க வந்திருகேன்னு பாக்கறேன்…” என்றபடி, பஸ் கண்ணாடியை உயர்த்திவிட்டு, வெளியே பார்த்தேன். பஸ் அம்மம்பாளையம் வந்துவிட்டிருந்தது. அடுத்து ஆத்தூர்தான். அப்பா எழுப்பவில்லையென்றால் கண்டீப்பாக ஆத்தூரைத் தாண்டி, சேலத்தில்தான் எழுந்திருந்திருப்பேன் எனத் தோன்றியது.

“எங்கப்பா வந்திருக்க” என அப்பாவின் குரல் மறுபடியும் எனை உசுப்ப… “அம்மம்பாளையம் வந்துட்டேன்பா… அவ்ளோதான்… இன்னும் பத்து நிமிஷத்துல ஊருக்கு வந்துடுவேன்” என்றேன்.

தாமரையையும் குழந்தைகளையும் எழுப்பினேன்… அரைத் தூக்கத்தில் இருந்த சின்னவனை தூக்கிக் கொண்டேன். பெரியவனை தாமரை எழுப்பிவிட்டாள். ஆத்தூர் முகப்பிலிருக்கும் ஊழவர் சந்தை ஸ்டாப்பில் பஸ்ஸை நிறுத்தச் சொன்னேன்.

உழவர் சந்தை ஸ்டாப்பில் பஸ் வந்து நின்றது. ஒரு கையில் சின்னவனோடும் மறுகையில் டிராவல் பேக்கோடும் இறங்கினேன். பின்னாடியே என் மனைவியும், பெரியவனும் இறங்கினர். அங்கே எங்களுக்காகவே அப்பா காத்திருந்தார். 

அப்பாவை பார்த்தபோது முன்பை விட மிகவும் மெலிந்திருந்தார். 60-களைத் தாண்டிய தேகம் என்பதால் தலை எல்லாம் நரைத்துப் போயிருந்தது. உடலில் ஒரு தளர்ச்சி தென்பட்டது.

தளர்ச்சி உடலில் இருந்தாலும், எங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் ‘வாப்பா… வாம்மா…’ என்று வரவேற்றபடி என்கையிலிருந்த பேக்கை வாங்கி, தன் சைக்கிளில் வைத்துக் கொண்டார். சைக்கிளில் இருந்த குட்டி சீட்டில் ஆதித்தனை தூக்கி உட்கார வைத்தார். அந்த குட்டி சீட், புத்தம் புதிதாய் இருந்தது.

நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எங்களுக்காக அப்பா வாங்கி வைத்த குட்டி சீட் அது. நாங்கள் வளர்ந்த பிறகு சீட்டை எடுத்துவிட்டிருந்தார். தற்போது அவரது சின்னப்பேரனுக்காக புதிதாய் வாங்கிப் பொருத்தியிருக்கிறார் என்பதை, அதன் பளபளப்பிலிருந்தே தெரிந்து கொண்டேன்.

“ஆதித்தா… நல்லா இருக்கியாப்பா…” என்று தன் மூத்த பேரனின் தலையைக் கோதினார். “நல்லாருக்கேன் தாத்தா” என்றான் ஆதித்தன். சின்னவனைப் பார்த்தார். “அகிலன் தூங்கிகிட்டிருக்காம்பா…” என்றேன். “சரி வாப்பா போவோம்” என்றபடி சைக்கிளைத் தள்ள ஆரம்பித்தார். 

ஐந்து நிமிடத்தில் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம். 30 வருடங்களுக்கு முன்பு கட்டிய ஓட்டு வீடு என்பதால், வீடு சற்றே சிதிலமடைந்திருந்தது.

வீட்டிற்குள் அம்மா எங்களுக்காக காத்திருந்தார். அவரைப் பார்க்கையில் எனக்கு திக்கென்று இருந்தது. அம்மா எலும்பும் தோலுமாய் ஆகி விட்டிருந்தார். இருவருக்கும் வயதாகி விட்டது என்பதை அவர்களது உடல்நிலை பூரணமாய் காட்டிக் கொடுத்தது.

தெருவிற்குள் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்திருந்தார்கள். பட்டாசு சத்தம் கேட்டு அகிலன் விருட்டென்று எழுந்து கொண்டான். எழுந்ததும் தாமரையிடம் போய் ஒட்டிக் கொண்டான்.

“வாம்மா… வாப்பா!” என்றார் அம்மா. “நல்லாயிருக்கீங்களாம்மா? என்று தாமரை கேட்டாள். “நல்லாருக்கேம்மா…” என்றவர், “ஆதித்தக் குட்டி… இங்க வாய்யா…” என்றார்.

“பாட்டி… உனக்கு நான் சேலை எடுத்துகிட்டு வந்திருக்கேன்” என்றான் ஆதித்தன்.

வருடா வருடம் அம்மாவிற்கு சேலை எடுத்துக் கொடுத்து விடுவேன். இந்த வருடமும் எடுத்து வந்திருந்தேன். ஆதித்தன் கையில் சேலையை கொடுத்து பாட்டியிடம் கொடுக்க சொன்னேன்.
 
“எனக்கு எதுக்குப்பா இதெல்லாம். நானென்ன வெளியவா போகப் போறேன். உழவர் சந்தை, வீடுன்னு கெடக்கிறேன்.” என்றார்.

“வாங்கிக்கோங்கம்ம்மா…” என்றாள் என் மனைவி. 

அம்மா வங்கிக் கொண்டார். அப்பா, எங்களிடம் எதுவும் வாங்கிக் கொள்ள விரும்ப மாட்டார். வருடா வருடம் அவருக்கு கம்பிக் கடையிலிருந்து வேட்டி, சட்டை வந்து விடும். ஆதலால் எனக்கு எதுவும் வேண்டாம் என்று விடுவார்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, உள்அறைக்குள் சென்று பேண்ட், சர்ட் ஒன்றை எடுத்து வந்தார் அப்பா. என்னிடம் கொடுத்து, “போட்டுக்கோப்பா. உனக்கேத்த சைஸ்தான்” என்றார். “எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்..? உங்களுக்கு வேட்டி சட்டை எங்கப்பா?” என்றேன்.

“அதுஒண்ணுமில்லப்பா.. வேட்டி சட்டை கொடுக்கறேன்னுதான் கடைக்காரன் சொன்னான். எனக்கு உன் ஞாபகம்தான் வந்துச்சி. போன வருஷம் கடைக்காரன் கொடுத்த வேட்டி, சட்டை அப்படியேதான் பொட்டியில கிடக்கு. நீ ஆபீஸ் போறவன்… உனக்கு தேவைப்படுமேன்னு பேண்ட், சட்டைய கொடுடான்னு கேட்டேன். கொடுத்துட்டான். நீ போட்டுக்கோப்பா’’ என்றார்.

மறுக்க முடியவில்லை வாங்கிக் கொண்டேன். எனது நண்பன் பிரேம் 2 ஆயிரம் ரூபாய் தீபாவளிக்கென்று கொடுத்திருந்தான். அம்மாவுக்கு, தாமரைக்கு, குழந்தைகளுக்கு டிரெஸ் எடுக்க 1400 செலவாகிவிட்டது. மீதமுள்ள 600 ரூபாயில், 500 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு சரியாகப் போய்விட்டது. நூறு ரூபாயை வைத்துக் கொண்டுதான் ஊருக்கு வந்திருந்தேன். அந்த நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்தேன். 

“நீ வச்சிக்கப்பா… எனக்கெதுக்கு..’’ என்றபடி வாங்க மறுத்துவிட்டார்.
மீண்டும் உள்ளே சென்றவர், பட்டாசு பாக்ஸ் ஒன்றை எடுத்து வந்து, ஆதித்தனிடமும் அகிலனிடமும் நீட்டினார்… “ஹையா பட்டாசு என்று உற்சாகமாய் கூவிக்கொண்டே இருவரும் பட்டாசுப் பெட்டியை ஆவலாய் பிரிக்க ஆரம்பித்தனர். என் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகம் சந்தோஷத்தில் பூரித்துப் போயிருந்தது. அவரும் ஒரு குழந்தை போல் மாறிப் போயிருந்தார். என் அம்மாவைப் பார்த்தேன். அவர் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

வீட்டை விட்டு வெளியே வந்தேன் தெருவிலுள்ளோர் ஒவ்வொருவரும் அன்போடு விசாரித்தனர். நன்கு விடிந்து விட்டிருந்தது. அப்பா சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைப்பக்கம் போய்விட்டார்.



அவர் திரும்பி வரும்போது ஆட்டுக் கறி, கோழி கறி, மீன் அனைத்தையும் வாங்கி வந்திருந்தார். பேரன்களும், மருமகளும் சாப்பிட வேண்டுமென்று அத்தனையும் வாங்கி வந்தார். நான் சைவம் என்பதால், எனக்கானதை அம்மா கவனித்துக் கொள்வார். 

தீபாவளி அன்று என் அப்பாவும் அம்மாவும் மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர். நாங்கள் வந்த மகிழ்ச்சி அது. அந்த தீபாவளி எங்களனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாய்ப் போனது.

றுநாள் பொழுது விடிந்தது. அப்பாவும் அம்மாவும் அதிகாலையிலேயே எழுந்து, உழவர் சந்தைக்கு போய்விட்டிருந்தனர்.8 மணிக்குமேல் எழுந்து வெளியே வந்தேன். தாமரையும் குழந்தைகளும் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தனர். 

வெளியே போவதற்காக எனது செருப்பைத் தேடினேன். ஒரு செருப்பு மட்டுமே இருந்தது. மற்றொன்றைக் காணோம். ‘காசில்லாத நேரத்தில.. இது என்ன புதுப்பிரச்சனை’ என்று யோசித்தபடியே, வீட்டிற்குள்ளும் வெளியேயும் பார்த்தேன் செருப்பைக் காணவில்லை. 

எனது கால் மிகவும் பெரியது என்பதால் யார் செருப்பும் எனக்கு சேராது. வெறும் காலோடு வெளியே போய்விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் காணமல் போன எனது செருப்பு, நாயால் குதறப்பட்டு, அறுந்து கிடந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த நாயை சபித்துக் கொண்டே செருப்பைப் பார்த்தேன். தைத்துப் போட முடியாத அளவிற்கு செருப்பு சிதைந்து போயிருந்ததால், ‘இனி அந்த செருப்பு உதவாது’ என வருத்ததுடன் வீட்டை நோக்கிச் சென்றேன்.

அதற்குள் அப்பா வீட்டிற்கு வந்து விட்டிருந்தார். அவர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும், நான் எங்கள் தெருவில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

வீட்டை நெருங்கினேன். “எங்கப்பா செருப்பு கூட போடாம வெளிய போயிட்டு வர?” என்றார் அப்பா.

“இல்லப்பா.. செருப்பு நல்லதாம்பா இருந்துச்சு. காலைல எந்திரிச்சி பாக்கறேன். ஒரு செருப்ப காணோம். வர வழிலதான் பார்த்தேன். அந்த செருப்பை நாய் எடுத்துகிட்டு போய், குதறி வச்சிடுச்சி. அத இனிமே போட்டுக்கவும் முடியாதுப்பா… அதான் வெறும் காலோட போயிட்டு வந்தேன். ஆபீஸிற்கு எதைப் போட்டுகிட்டு போகப்போறேன்னு தெரியல’’ என்றேன்.

சற்று யோசித்தவர். “சரி விடுப்பா… செருப்பில்லாம வெளிய போகாதே… நீ வீட்லயே இரு… நான் வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அரை மணி நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தவர், “என் கையில் 1,000 ரூபையைத் திணித்தார். இதுல செருப்ப எடுத்துக்க… மீதிப் பணத்தை ஊருக்கு போக வச்சிக்கப்பா…” என்றார்.

பணத்தை வாங்கிக் கொண்டு முதல் வேலையாக செருப்புக் கடைக்கு போனேன். எனது சைஸிற்கு ஏற்ற தோல் செருப்பை தேடிப்பிடித்து, 400 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். வரும் வழியில் தாமரையும் குழந்தைகளும் எதிரில் வந்தனர். 

“எல்லோரும் எங்கே போயிட்டு வர்றீங்க…” என்றேன்.

“கடைக்கு போயிட்டு வரோம்… ரெண்டு பேரும் ஸ்நாக்ஸ் வேணும்னு ஒரே அடம்…” என்றாள் தாமரை.

“சரி வாங்க போவோம்…” என்றபடி நான்கு பேரும் வீட்டை நோக்கி நடந்தோம். வீட்டை நெருங்கியதும், பக்கத்து வீட்டுகாரம்மா எனது மனைவியை வழிமறித்துப் பேசத் துவங்க, அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருக்கும் குரல் வெளியே கேட்டது.

“மாவு வாங்கிட்டு வரச் சொல்லி எப்ப சொன்னேன். இப்போ வரீங்க… என்னாச்சு உங்களுக்கு…” – இது அம்மாவின் குரல்.

“அது ஒண்ணுமில்ல புள்ள… காலைல பணம் தரேன்னு சொன்ன மேஸ்திரி, திடீர்னு, பணம் வர்றதுக்கு மூணு நாளு ஆகும்னுட்டான். அத நம்பித்தான், பையன் ஊருக்கு போகறதுக்கு காசு தரேன்னு சொல்லிருந்தேன். கடைசி நேரத்துல கைய விரிச்சுட்டான். அதுவுமில்லாம பையன் செருப்பு ஒண்ணை நாய் தூக்கிட்டு போயிடுச்சு.. பையன் வெறுங்கால்லயா நடப்பான். பார்த்தேன், சைக்கிளை எடுத்துகிட்டு போய், ஜெயபால் கடையில அடகு வச்சேன். 1,200 ரூபாய் கொடுத்தான். பையன்கிட்ட 1,000 ரூபாய கொடுத்துட்டேன். 200 ரூபாய நம்ம செலவுக்கு வச்சிருக்கேன். சைக்கிள் இல்ல பாரு… நடந்தே போய் மாவு வாங்கிட்டு வந்தேன். அதான் நேரமாயிடிச்சு…’’ இது அப்பாவின் குரல்.

என் மனைவி, அதற்குள் பேசி முடித்து விட்டிருந்தாள். “வாங்க போவோம்” என்றாள். ‘இரு கொஞ்ச நேரம்’ என்று அவளை நிறுத்தினேன்.

“சரி சரி இத இத்தோட விடு புள்ள… மருமகளோ, மகனோ வந்துடப் போறாங்க…” என்றார் அப்பா. இது என் மனைவியின் காதிலும் விழுந்தது.

“ஏங்க இப்படி பண்ணறீங்க… நீங்க வேலைக்கு வெளிய போக வர இருந்ததே, அந்த சைக்கிள் ஒண்ணுதான். அதையும் இப்போ அடகு வச்சிட்டு வந்துட்டேன்னு சொல்றீங்களே. பையன் வந்து கேப்பானே சைக்கிள் எங்கப்பான்னு…? அவனுக்கென்ன பதில் சொல்லுவீங்க…’’

“அட விடு புள்ள... நம்ம பையன் செருப்பில்லாம நடந்தா, நமக்குத்தானே வலிக்கும். அவன் கையில காசில்லன்னு அவன் பொலம்பக் கூடாது பாரு. வீட்டுக்கு வந்த மருமகளுக்கும், பேரன்களுக்கும் ஏதாச்சும் வேணும்னா, அவன் யாருகிட்ட போய் நிக்கறதுன்னு யோசிக்க கூடாது பாரு. அதான் சைக்கிளை அடகு வச்சிட்டேன். அவன் படிக்கிறப்போ முதல் முறையா அடகு வச்சேன். இப்போ அவனுக்காகத்தான அடகு வச்சிருக்கேன். இன்னும் மூணு நாள்ல மேஸ்திரி பணம் வந்துடும்னு சொல்லியிருக்கான். பணம் வந்ததும் சைக்கிளை வாங்கிக்கலாம். அதுவுமில்லாம சாயந்திரமான, கண்ணு வேற சரியா தெரியமாட்டேங்குது. சாயந்திரத்துக்கு மேல சைக்கிளை நான் ஓட்டிகிட்டு வர மாட்டேன். தள்ளிகிட்டுதான் வீட்டுக்கு வரேன். அதனால ஒண்ணும் பிரச்சினை இல்ல. பையன் கேட்டா… மேஸ்திரி சைக்கிளை வாங்கிட்டு போயிருக்காப்லன்னு நான் சொல்லி சமாளிச்சிக்கறேன். நீ வாய வச்சிகிட்டு சும்மா இரு” என்றார்.

அதற்கு மேல் அம்மா சமையல் கட்டில் பாத்திரங்களை எடுக்கும் சத்தம் கேட்கவே, நாங்கள் வீட்டினை நெருங்கினோம்.

வீட்டு வாசலில், எனது புது செருப்பை கழட்டி விட்டேன். பக்கத்தில் கிடந்த என் அப்பாவின் ரப்பர் செருப்பு மிகவும் தேய்ந்து போய், குதிகால் பகுதியில் ஓட்டையாகிக் கிடந்தது.

அதைப் பார்த்ததும் எனையறியாமல் கண்ணீர் துளிகள் அந்த ஓட்டையில் விழ ஆரம்பித்தன.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது நன்றி... you can visiit :http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

மோகனன் said...

நன்றி தோழரே... உமது இல்லம் எனது இல்லம் போன்றதே தோழரே...

சூரியா இராஜப்பா said...

கண்ணீர் துளிகள் நிறுத்த முடியாது அன்னா

மோகனன் said...

உண்மைதான் தோழரே...

என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை...

ஒவ்வொரு தந்தையும் என்னைப் பெத்தவரைப் போலத்தான்...

வே.நடனசபாபதி said...

மனதை தொட்ட கதை. கண்களில் கண்ணீர் தளும்பியது உண்மை.

bandhu said...

அப்படியே ஒரு தந்தையின் மன நிலையை எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள். தந்தை படும் கஷ்டத்தை எத்தனை பேர் உணர்கிறார்கள்? கடைசியில் அந்த தந்தைக்கு வருத்தம்தான் மிச்சம்!

மோகனன் said...

நன்றி நடனசபாபதி அவர்களே...

மோகனன் said...

இது கதையல்ல பந்து அவர்களே...

கடந்த ஆண்டு தீபாவளி அன்று என் தந்தையிடம் நான் கண்ட உண்மை இது...

நமைப்பெற்றவர்களுக்கு எது செய்தாலும் அவர்களது தியாகத்திற்கு ஈடாகா... ஈடாகா...

வருகைக்கும் வாசிப்பிறகும் நன்றிகள்...

Unknown said...

கதை நன்று.
கண்டிப்பாகக் கற்பனைக் கதையல்ல.
அப்படியானால்,
கண்ணீர் துளிகளோடு உங்கள் பாசம் நின்று விடாது அவரின் ஏழ்மை நிலையை மாற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள் நண்பரே

அடுத்த கதை தந்தை மெச்சும் தனயனாக பெருமித மிளிர்தலாக அமையட்டும்
வாழ்த்துகள்

மோகனன் said...

ஏழ்மையை விரட்டத்தான் இத்தனை பாடும்...

நிச்சயம் ஒருநாள் ஏழ்மையை வெல்வேன்... என் தாயையும் தந்தையையும் பெருமிதம் கொள்ள வைப்பேன்...