Thursday, November 19, 2009

உலகில் லஞ்ச, ஊழல் நடைபெறும் 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 84வது இடம்..!

உலகில் அதிகளவு லஞ்ச, ஊழல் நடைபெறும் 180 நாடுகளின் பட்டியலில் சோமாலியா முதலிடம் பிடித்தது. இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில் லஞ்ச, ஊழல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல். அதன் சார்பில் ஆண்டுதோறும் லஞ்சம் நிறைந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இப்பட்டியல் 10 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த அளவு புள்ளிகளைப் பெறும். அதிக புள்ளிகளைப் பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக
லஞ்சம் தாண்டவமாடும் நாடாக சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான், மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9 புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10 நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான், 5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.

அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8 புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.

நன்றி: Times of India and Dinakaran

4 comments:

vanathy said...

இந்தியா மற்றும் எனது முன்னாள் நாடு இலங்கை போன்றவை முதல் பத்தில் வருவதற்கு தகுதி வாய்ந்தவை. இந்த நாடுகளில் லஞ்சமே வாழ்க்கை முறையாகி விட்டதே.ஆரம்பத்தில் இலங்கை அவ்வளவு மோசமான லஞ்ச ஊழல் நாடாக இருக்கவில்லை ,ஆனால் கடந்த சில பல ஆண்டுகளாக இலங்கையும் இந்தியாவுக்கு நிகரான ஊழல் நாடாக புத்துயிர் பெற்று வருகிறது.
-வானதி

மோகனன் said...

வானதி அவர்களுக்கு முதல் வணக்கம்...

தங்களின் கருத்து முற்றிலும் ஏற்புடையதே...

மக்கள் தொகை பெருக்கமும், நிலையற்ற வாழ்க்கை முறையும், வறுமைப் பிணியும் அதிகமாகி விட்டன...

இதனால் பொதுநலம் மறைந்து, சுயநலம் பெருகிவிட்டது... அதன் விளைவால் நிகழ்கின்ற கூத்துகள்தான் இவைகளெல்லாம்...

வருகைக்கும், கருத்திற்கும் அன்பு கலந்த நன்றிகள்...

malarvizhi said...

கடவுளே !!! லஞ்சம் இல்லாத உலகத்தை இனி பார்க்கவே முடியாதா? உங்கள் தகவலுக்கு நன்றி.

மோகனன் said...

என்னங்க மலர்விழி...


உலகம் புரியாத ஆளா இருக்கீங்களா... இல்ல நடிக்கறீங்களா..?

உங்க கடவுளை பாக்கறதுக்கு கூட நீங்க லஞ்சம் கொடுத்துதான ஆக வேண்டியிருக்கு... (சிறப்பு தரிசனம்ங்கற பேர்ல...)

''திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'' இதுதாங்க அதற்கு முடிவு