Monday, May 16, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை (உண்மைச் சம்பவம்)

(படிக்க செல்வதற்கு முன்... - 2000 மாவது ஆண்டு, நான் பகுத்தறிவாளனாக மாறிய ஆண்டு. சாமி, பேய், பூதம் என எல்லாம் கட்டுக் கதை என்பதை உணர்ந்த ஆண்டு. ஆனால் 2001- ஆண்டில், எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவம் ஏற்பட்டது. அது இன்றுவரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த ஆண்டில் நான் சந்தித்த உண்மைச் சம்பவத்தை உங்களிடம் தொடர்கதையாக்குகிறேன். 2003-ல் நான் நடத்திய 'இளஞ்சிறகு' என்ற மாத இதழில் இந்த தொடர்கதையை எழுதியிருந்தேன். அதன்பிறகு இன்று இணையத்தில் வெளியிடுகிறேன்.  உங்களின் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன். 


-என்றென்றும் அன்புடன்
உங்கள் மோகனன்)

ங்கரும் ராமுவும் ஒரே சீராக டிவிஎஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நேரம் இரவு பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

அன்று அமாவாசையானதால் ஊரெங்கும் இருளடித்திருந்தது. பியூஸ் போனதால் தெருவிளக்குகள் தேமே என்று நின்று கொண்டிருந்தன.

டிவிஎஸ் வண்டி தெருவை விட்டு சாலையில் திரும்பியது. அந்த சாலையில் இவர்களது வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரு வெளிச்சப் புள்ளிகூட கண்ணில் படவில்லை.

டிவிஎஸ்ஸின் வெளிச்சம் தார்ச்சாலையில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. ‘குறுகிய பாலம் மெதுவாக செல்லவும்’ என்ற அறிவிப்புப் பலகையின் மேல் பட்ட வெளிச்சம், இடது வளைவின் காரணமாக மின்னி மறைந்தது.

பாலம் மெல்ல மெல்ல இவர்களை நெருங்கிக் கொண்டிருக்க, டிவிஎஸ் வண்டியின் சத்தத்தினூடே தூரத்தில் நாய் ஒன்று குரைக்கும் சப்தம் மெலிதாகக் கேட்டது.

“டேய் சங்கரு... ஊர் போய் சேர்றதுக்கு... இன்னும் எவ்வளவு நேரம்டா..?” என்று வண்டியை ஓட்டியபடியே கேட்ட ராமுவுக்கு வயது முப்பதிருக்கும். சங்கருக்கு ஒன்று விட்ட உறவு முறையில் மாமன்.

“ஆச்சி மாமா. இன்னும் ரெண்டு கிலோ மீட்டர்தான்..” என்று சொன்ன சங்கருக்கு வயது 20 இருக்கும். திடகாத்திரமான உடம்பு. பார்வைக்கு இந்திப்பட வில்லன் போல இருந்தான்.

குன்றத்தூரில் மாடுகளை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வருபவர் சங்கரின் அப்பா வேதாசலம். பணவசூலுக்காகத்தான் இருவரையும் சிங்கபுரம் வரை அனுப்பி வைத்திருந்தார்.

பணம் வசூலாவதற்கு நேரமானதால்தான், இந்த நள்ளிரவில் இருவரும் குன்றத்தூருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

பாலத்தின் மீது விர்ரென்று சென்று கொண்டிருந்த டிவிஎஸ், பாலத்தைக் கடந்ததும் திடீரென ஊமையாகி, மெதுவாய் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.

“என்னடா இது வண்டி திடீர்னு நின்னுடிச்சி... பெட்ரோல் இருக்குல்ல..?” என்று ராமு கேட்டான்

“வரும் போதுதான் ரெண்டு லிட்டர் பெட்ரோல் போட்டேன். அதுக்குள்ள தீர்ந்து போயிடுமா என்ன. அதெல்லாம் இருக்கு மாமா... வண்டியை என்கிட்ட கொடு மாமா... நான் பார்க்கிறேன்” என்றபடி டிவிஎஸ்ஸை ராமுவிடமிருந்து கைப்பற்றினான் சங்கர். கிளட்ச்சை பிடித்த படி வண்டியை உதைத்தான்.

வண்டியை பல முறை உதைத்தும் உசுப்பேத்தியும் பார்த்தான். ம்ஹீம்... வண்டிக்கு உயிர் வருவதாக இல்லை... ஏதோ டிபி நோயாளி குறட்டை விடுவதைப் போல “டொர்..டொர்..டொர்..” என முனகியபடி முடங்கிப் போனது.

“தள்ளுடா நான் பார்க்கிறேன்...” என்ற ராமு டிவிஎஸ்ஸின் என்ஜின் பகுதிக்குள் கையை விட்டு சோக்கைத் தேடினான்.

டிவிஎஸ்ஸின் வெளிச்சம்தான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அதன் இயக்கமும் நின்று போகவே எங்கும் இருள் மயமாயிருந்தது.

நல்லவேளையாக இருவரும் வெள்ளை சட்டை போட்டிருந்த்தால் இருவரின் உருவங்களும் தோராயமாக தென்பட்டது.

மின்மினி பூச்சிகள் ஆங்காங்கே வட்டமடித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் இரண்டு நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்த சத்தம் இருவரின் காதுகளிலும் தெளிவாக விழுந்தது.

“டேய் ரொம்ப இருட்டா இருக்குது... ஏதாவது இருந்தா எடுடா..?”

“இந்தா மாமா... பென் டார்ச்...”

 “ம்ஹீம்... என்ன ஆச்சிடா இந்த சனியன் புடிச்ச வண்டிக்கு... ச்சே…“ ராமு சலித்துக் கொண்டே டிவிஎஸ்ஸிற்கு உயிர் கொடுக்கப் பார்த்தான்.

ம்ஹீம்... ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்பது போல “ட்ர்ர்.. ட்ர்ர்… ட்ர்ர்…” என குறட்டை சத்தம் மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே தூங்கிப் போனது.

ராமுவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சங்கர், சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவன், பாலத்திற்கு இடது புறம் உள்ள இறக்கத்தில் பார்வையில் சற்று நிதானித்தான்.

அந்த கும்மிருட்டிலும் அங்கே வெள்ளை வெளேரென ஒரு நிழலுருவம் படுத்துக் கிடப்பது போல் சங்கருக்குத் தோன்றியது. “அடச்சே... பிரம்மைடா…” என தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டபடி, பார்வையை வேறு பக்கம் திருப்ப முயற்சித்தான். ஆனால் திருப்ப முடியவில்லை.

படுத்துக் கிடந்த நிழலுருவம் மெல்ல மெல்ல எழுந்து உட்கார ஆரம்பித்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கருக்கு பயம் கவ்விக் கொள்ளவே, “மாமா... மாமா... மாமா...” என ராமுவைக் கூப்பிட்டானே தவிர அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வரவில்லை.

அந்த உருவம் அவனை பார்த்தபடியே எழுந்து நின்றது.

ராமு அருகிலிருக்கிறான் என்ற தைரியத்தில் வாய் திறந்து “மாமா.. மாமா... அங்க பாரு... ஏதோ ஒன்னு வெள்ளையா தெரியுது…” என்று கத்தினான். அவன் கத்தியது அவனுக்கு மட்டுமே கேட்டது. அவனுடைய வார்த்தைகளை பயம் விழுங்கிக் கொண்டது. அவனுடைய உள்நாக்கு, வெளிநாக்கு என எல்லா நாக்கும் உலர்ந்து போய்விட்டிருந்தது.

அந்த பயத்திலும் அந்த வெள்ளை உருவத்தை உற்றுப் பார்த்தான் சங்கர். அந்த உருவம் பார்ப்பதற்கு மனித உருவம் போல தோன்றியது. அதன் முகம் பஸ்ஸில் அரைபட்டதைப் போல மிகவும் நசுங்கிப் போயிருந்தது.

எழுந்து நின்ற உருவம் ஒரு கையை அவனை நோக்கி நீட்டியது. அப்போது சாலை ஓரமாக நின்றிருந்த கம்பத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஆந்தை ஒன்று, அங்கிருந்த அமைதியை கிழிப்பது போல், "கூகூகூகூகூகூ...” என வேகமாய் அலறியபடி பறந்தோடியது.

ஆந்தையின் அலறலைக் கேட்டு திடுக்கிட்ட ராமு, சங்கரைப் பார்த்தபடி “டேய் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது... வண்டியைத் தள்ளு ஸ்டார்ட் ஆகுதான்னு பார்ப்போம்…” என்றான்.

சில்லென்று வீசிக்கொண்டிருந்த இரவு நேரக் காற்று மட்டும் ராமு சொன்னதை காதில் வாங்கிக் கொண்டது போல, அவன் முகத்தை வருடி விட்டு போனது. தான் சொன்னதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், சிலை போல சங்கர் நின்றிருப்பதை பார்த்த ராமுவுக்கு கோபம் ஏற்பட்டது.

“டேய்... நட்டநடு ராத்திரியில, வெட்டவெளியில மாட்டிகிட்டிருக்கோம்... வண்டியத் தள்ளுடாங்கறேன்...” அப்போதும் சங்கர் திரும்பவில்லை.

“டேய் சங்கர் உங்கிட்டதாண்டா சொல்றேன்.. அங்க என்னடா பார்வை...” என்றபடியே சங்கர் பார்த்த இடத்தை ராமுவும் பார்த்தான்.

அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. கோபம் தலைக்கேறவே... “டேய்…” என்றபடி சங்கரின் முதுகில் அடித்தான்.

அப்போதும் அவன் அசையாமலிருக்கவே... “டேய்.. சங்கர்... உன்னைத்தாண்டா...” என்றபடி அவனைப் பிடித்து உலுக்கினான்.
“மாமா... மாமா... மாமா...” என்றான்

"என்னடா..?" என்றபடி சங்கரின் முகத்தைப் பார்த்த ராமு அதிர்ந்து போனான். சில்லென்று காற்று வீசிக்கொண்டிருக்கையில் சங்கரின் முகம் குப்பென்று வியர்த்துப் போயிருந்தது. அவனது கண்கள் பீதியில் இருந்ததை அந்த இரவிலும் தெளிவாகத் தெரிந்தது.

“என்னடா மாப்ள... என்னடா..?” என்றான் ராமு

“மாமா.. அங்க ஏதோ வெள்ளையா ஒரு உருவம் தெரியுது மாமா..?” என்று சொன்னானே தவிர, அந்த திசையிலிருந்து அவன் பார்வையைத் திருப்பவே இல்லை.

அவன் சொன்ன இடத்தில் பென் டார்ச் அடித்துப் பார்த்த ராமுவிற்கு ஒன்றும் தெரியவில்லை. “டேய்… அங்க ஒண்ணுமே இல்ல... ஏண்டா உளர்ற... இதுக்குத்தான் பேய் படம் எல்லாம் பாக்காதங்கறது. நீ முதல்ல வண்டியைத் தள்ளு…” என்றபடி வண்டியில் உட்கார்ந்து கொண்டான் ராமு.

பயத்துடன் திரும்பிய சங்கர், சற்றே ஆறுதலடைந்து டிவிஎஸ்ஸை தள்ளினான். வண்டி ரோட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது.

ஒரு பத்தடி தூரம் தாண்டிய பின்பு அதுவரை தூங்கிக் கொண்டிருந்த வண்டி, திடீரென விழித்துக் கொண்டதைப் போல “விர்ர்ர்ரும்...” என்றபடி ஸ்டார்ட் ஆனது.

“அப்பாடா... ஸ்டார்ட் ஆயிடுச்சி, வந்து உட்காருடா…” என்று சொன்ன ராமு பின்னால் திரும்பிப் பார்த்தான்.

மறுபடியும் சங்கர் அதே இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, ராமு கோபத்தின் உச்சிக்கே சென்றான்.

“டேய்... இப்பவே மணி 11.55 ஆகுது. எப்படா வீடு போய் சேருவோம்னு நானே தவிச்சிகிட்டு இருக்கிறேன். சும்மா அந்த இடத்தையே பார்த்துகிட்டு நிக்கற... வந்து வண்டியில ஏறு...” என்று அதட்டினான் ராமு.

அதட்டலை உள்வாங்கிய சங்கர் “மாமா... அங்க வெள்ளையா ஒண்ணு இருக்குது மாமா... அது என்னையே பாக்குது...” என்றான்.

“டேய்... வீணா எங்கிட்ட மிதிவாங்காத... அங்க ஒண்ணுமே இல்ல... முதல்ல வண்டியில ஏறு... ஏண்டா இவ்வளவு நேரம்னு உங்கப்பாவும், அம்மாவும் என்னை திட்டப் போறாங்க...” என்றபடியே வண்டியை அரைவட்டம் போட்டு, அவனருகே நிறுத்திய ராமு “ஏறுடா வண்டியில...” என்றான். ராமுவின் வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது.

வண்டியில் ஏறி உட்கார்ந்தான் சங்கர். ராமு டிவிஎஸ்ஸை வேகமாகக் கிளப்பினான்.

மறுபடியும் அந்தப் பக்கம் பார்த்த சங்கர், அங்கே அந்த உருவம் இல்லாதது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

ஆனால், அவன் நிம்மதி கணநேரம் கூட நிலைக்கவில்லை. அந்த உருவம் மெல்ல மெல்ல இவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சங்கரை பயம் ஆட்கொள்ள ஆரம்பித்தது. தலையை ராமுவின் முதுகுப் பக்கம் திருப்பிக் கொண்டான். வண்டி சாலையில் சீறியபடியே போய்க்கொண்டிருந்தது.

சற்று தூரம் போனதும் தலையை திருப்பியவன், மூச்சு விட மறந்தான். மிக பக்கத்தில் வந்து விட்டிருந்த அந்த உருவம் பார்வைக்கு சற்றே புலப்பட்டது. அந்த முகம் முழுதும் நசுங்கிப் போயிருந்தது. அதன் வயிற்றின் இடது புறம் நீண்ட வெட்டுக்காயம். நெஞ்சுப் பகுதியில் ஏதோ குத்தியது போன்ற ஓட்டை தெரிந்தது.

சங்கரின் இதயம் உச்ச வேகத்தில் துடிக்கத் தொடங்க, உடலெங்கும் குப்பென வியர்க்க ஆரம்பித்தது. எவ்வளவோ முயற்சித்தும் அந்த உருவத்திடமிருந்து சங்கரால் பார்வையைத் திருப்ப முடியவில்லை.

அந்த உருவத்தையே வெறிக்க வெறிக்கப் பார்த்தான். அது மெல்ல சிரித்தபடியே அவன் மேல் இறங்க ஆரம்பித்தது.
(அடுத்த வாரம் தொடரும்..!)
++++++++++++++++++

கதையின் மற்ற பாகங்கள் படிக்க...

முதல் பாகம்இரண்டாம் பாகம்மூன்றாம் பாகம்,

17 comments:

பனித்துளி சங்கர் said...

தலைவா வணக்கம் கதையை வாசிக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் ஒரு முறை நீங்கள் கதைக்கு இணைத்திருக்கும் புகைப்படங்களை பார்க்கும்பொழுது பயம் பக்கவாட்டில் வந்து ஒட்டிக்கொள்கிறது . அதிலும் கதையில் எனது பெயரும் சங்கர் என்று வந்திருப்பது நினைத்து இன்று இரவு உறக்கம் வருமா என்ற பயமும் அதிகமாக எழும்பத் தொடங்கிவிட்டது . அருமையானத் தொடர் நண்பரே தொடருங்கள் மீண்டும் அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறேன்

மோகனன் said...

வாங்க தோழா...

முதல் ரசிப்பிற்கும், பாராட்டிற்கும் எனது நன்றிகள்... இது கதையல்ல... என் கண்முன்னே நடந்த உண்மைச் சம்பவம்...

தொடர்ந்து படிக்க வாங்க்க..!

மோகனன் said...

நன்றி சரோ...

தங்களின் அழகான கருத்திற்கு மிக்க நன்றி...

அடிக்கடி படிக்க வாங்க..!

raja said...

moghanan....really nice ... your way of real story telling...

மோகனன் said...

தங்களின் வருகைக்கும், அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தோழா...

அடிக்கடி படிக்க வாங்க..!

Unknown said...

i want see ramu photo

மோகனன் said...

அதற்கு நான் என் சொந்த ஊருக்குத்தான் போக வேண்டும் ஜெனி...

இப்போது அது முடியாத காரியம்...

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..!

அடிக்கடி படிக்க வாங்க..!

VISWAM said...

தொடக்கமே அருமை. வாழ்த்துக்கள்.

Natu said...

Neengal sonna adutha varam vanthu vidathu kathai engi Avaludan katherukerom

By
Bhuvana

மோகனன் said...

தங்களின் மேலான இணைப்பிற்கும், அழகான பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள் விஸ்வம்...

அடிக்கடி படிக்க வாங்க..!

Tamil selvam said...

WHEN U WRITE SECOND PART (STORY) ?

மோகனன் said...

அட வாங்க புவனா...

தங்களின் கேள்விக்கான பதில் - பிரசுரமாகிவிட்டது.

தாமதத்திற்கு மன்னிக்கவும்..!

அடிக்கடி படிக்க வாங்க..!

மோகனன் said...

அன்பு நண்பர் தமிழ் செல்வனுக்கு...

தங்களின் ஆர்வத்திற்கு எனது நன்றிகள்...

இன்றுதான் எழுதினேன்.. ஒவ்வொரு திங்களன்று மதியத்திற்குள் எழுதிவிடுவேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது நன்றிகள்...

அடிக்கடி படிக்க வாங்க..!

SheelaRamKumar said...

THIS STORY IS NICE................
BUT I NEED MORE AND MORE INTERESTING THINGS ABOUT YOUR STORY...........
CONGRATULATIONS........
ALL THE BEST FOR YOU.......

மோகனன் said...

நன்றி ஷீலா...

vicky said...

உங்கள் கதையை நான் படிப்பது இதுதான் முதல் முறை.நன்றாக இருக்கிறது.

மோகனன் said...

நன்றி விக்கி...

படிங்க...