Monday, June 27, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 (உண்மைச் சம்பவம்)

ந்த பஷீர்கிட்டயே விளையாடறியா..?” என்று சத்தமிட்டவர் தனது மனதிற்குள் மேலும் சில மந்திரங்களை உதிர்த்தபடி மற்றொரு ஊதுபத்திக் கத்தையை எடுத்து பற்ற வைத்தார். உடலை எரித்துக்கொண்டு தனது ஆவியை புகையாய் அது வெளியிட ஆரம்பித்தது ஊதுவத்திக் கத்தை. அதன் நறுமணம் கொஞ்சம் கூட வெளியே வரவில்லை.

சங்கரின் பின்புறம் உட்கார்ந்திருந்த வேதாசலமும் அவரது மனைவி கமலம்மாளும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்கள். நவநீதன் இடது பக்கம் சற்று தள்ளி அமர்ந்திருந்தான். சங்கரின் வலதுபுறம் அவனுடைய சித்தி சிவகாமி நின்று கொண்டிருந்தார்.



சங்கரின் மாமாவான ராமுவும், ராமுவின் நண்பன் வெள்ளியங்கிரியும் சற்று தூரமாக நின்றபடி, நடப்பதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பக்கத்தில் ஆட்டோ டிரைவர் கிலியுடன் நின்று கொண்டிருந்தார்.

சங்கர் இருந்த இடத்தைச் சுற்றி அந்த எருக்கங்குச்சியால் வட்டம் போட்டார். “யேய்.. உன்னை என் வட்டத்துக்குள்ள கொண்டு வந்துட்டேன். உன்னை இப்ப என்ன பண்ணறேன் பார்…” என்றார் பஷீர்.

பஷீர் பாய் மிகவும் கோபத்தில் இருந்த்து அப்பட்டமாய் தெரிந்தது. உருது மொழியில் மந்திரங்களை ஜபித்துக் கொண்டே அந்த ஊதுவத்தி கத்தையின் புகையை சங்கரின் முகத்தில் காட்டினார். அந்த புகை அவன் முகத்தில் பட்டு, இரு புறமும் பிரிந்து மேலே போயிற்று.

நேரம் செல்லச் செல்ல.. அசைவற்று கிடந்த சங்கர், மெல்ல மெல்ல நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தான். சற்று நேரத்திற்கெல்லாம் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து விட்டான். அவன் கண்கள் பஷீர் பாயை நேருக்கு நேர் பார்க்க ஆரம்பித்தன.

“யேய்.. யேய்.. யாரு நீ..? சொல்லு?” என்றார் பஷீர்.

“ம்... ம்...” என்ற சங்கரின் குரலிலும் கோபம் தெரிந்தது.

“ம்.. சொல்லு.. நீ யார்..?” என்றபடியே இடது கையால் இருந்த எருக்கங் குச்சியால் சங்கரின் தலையில் தட்டினார் பஷீர்

“அடிக்காத சொல்றேன்..!” என்று பதில் தந்த சங்கரை, நவநீதன் உற்றுப் பார்த்தான்.
சங்கரின் முகம் இப்போது தெளிவாக இருப்பது போல் தோன்றியது. அறுபது வாட்ஸ் பல்பு வெளிச்சம் அவன் முகத்தில் தெரிந்தது.

‘அதெப்படி இங்கே வர வரைக்கும், கடந்த இரண்டு நாளா சங்கருடைய முகம் இருட்டடைஞ்சி போய் இருந்திச்சி... இப்ப மட்டும் பிரகாசமாயிடுச்சே..!’ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நவநீதனை, பஷீர் பாயின் குரல் கலைத்தது.

“யேய்... நீ யாரு..? சொல்லுங்கறேன்ல...” சத்தமாகக் கேட்டபடியே சங்கரின் தலையில் இம்முறை ஓங்கி அடித்தார்

“அடிக்காதீங்க சொல்லிடறேன்...” என்றவன், சற்று அமைதி காத்து “நான் யாருன்னு சொல்லணுமா..?” என்று கேட்ட சங்கர், பஷீரை ஒரு மாதிரியாகப் பார்த்து சிரித்தான்.

“டேய்... பஷீர் பாய் முன்னாடி உக்காந்திருக்க... பதில் சொல்லலன்னா விடமாட்டேன் உன்னை...” என்று விட்டு, மனதிற்குள் ஏதோ முணுமுணுத்தவர், பத்தியின் புகையை சங்கரின் முகத்தில் நன்கு படும்படி காட்டினார்.

புகையை விரும்பாத சங்கர்... தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறே... “வேண்டாம்.. வேண்டாம்.. நான் யாருன்னு சொல்லிடறேன்” என்றான்.

“இப்ப தெரியுதா.. பஷீர் பாய் யாருன்னு..? ம்ம்.. சொல்லு நீ யாரு..?” என்று சொன்ன பஷீர் பாயைப் பார்த்து மலங்க மலங்க விழித்தது ஆவி. (இனி ஆவி என்றே  அழைப்போம்)


பஷீர் பாய் மறுபடியும் ஒரு மந்திரத்தை முணுமுணுத்து, சங்கரின் தலையில் தட்டவும், அது பேச ஆரம்பித்தது.

“என் பேரு கண்ணன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி காது குத்துக்காக மங்களபுரம் போயிட்டு வந்தேன். அப்போ வர்ற வழியில லாரி எம்மேல ஏறிடிச்சு... நான் இப்படி ஆயிட்டேன்” என்றது

“சரி இந்தப் பையன எப்ப பிடிச்ச..?”

“தினமும் இரவு 11 மணிக்கு எந்திரிப்பேன். அப்படியே என் வீட்டுக்கு போய் என் பொண்டாட்டி, புள்ளைங்கள பார்த்துட்டு வருவேன். அன்னிக்கு இந்த பையனும் இன்னொரு ஆளும், நான் எழுந்திரிக்கறப்ப டிவிஎஸ்ல வந்து கிட்டிருந்தாங்க. உடனே டிவிஎஸ்ஸை ஆப் பண்ணிட்டேன். பத்தடி தூரம் வண்டியை தள்ளிகிட்டு போய் ஸ்டார்ட் பண்ணினாங்க. உடனே நான் இந்த பையன புடிச்சிகிட்டேன்..” என்றது

“இன்னோரு ஆளு இருந்தாருன்னு சொல்ற... அவரை புடிக்கமா இவனை ஏன் பிடிச்ச..?” என்றார் பஷீர் பாய்.

இதைக் காதில் கேட்ட ராமுவுக்கு  தூக்கி வாரிப் போட்டது. ‘யோவ் பாயி... அதுகிட்ட போட்டுக் கொடுத்து என்னை காலி பண்ண பாக்கறியா..?’ என்று பஷீரின் சட்டையைப் பிடித்து கேட்க நினைத்தான். ஆனால் ஆவி மேல் உள்ள பயத்தாலும், அதை பேசவைக்கின்ற பஷீர் மேல் உள்ள பயத்தாலும் கிலிபிடித்தவன் போல் அங்கேயே நின்றான்.

“இந்த பையன் எனக்கு தெரிஞ்சவன்தான். என்னோட அக்கா சிவகாமியோட ஒண்ணு விட்ட மாமா பையன்” என்று அது சொல்லவும், சங்கரின் வலது புறம் நின்று கொண்டிருந்த சங்கரின் சித்தி திடீரென்று அழ ஆரம்பித்தார்.

‘அவர் ஏன் திடீரென்று அழுகிறார்..?’ என்று நவநீதன் குழப்பமாய் பார்க்க, அவன் குழப்பைத்தை அதிகப்படுத்துவது போல் ஆவியும், அலமேலுவைப் பார்த்தபடியே அழ ஆரம்பித்தது.

ஆவி அழுவதைக் கண்ட பஷீர் முதற்கொண்டு அங்கிருந்தோர் அனைவரும் குழப்பத்திற்கு ஆளானார்கள்.

“ஏய்... அந்தம்மாவைப் பார்த்து நீ ஏன் அழற...” என்றார் பஷீர்.

“ம்ம்ம்.. ம்ம்ம்.... அவங்கதான் என்னோட சிவகாமி அக்கா...” என்று சங்கரின் சித்தியைப் பார்த்த ஆவி, ஏக்கமாய் அழுதபடியே சொன்னது.

“அடப்பாவி... நாசமாப் போனவனே... உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டியே... உசுரோட இருந்தப்பதான் குடிச்சிட்டு தொல்ல கொடுத்த.. செத்துமாடா தொல்ல தர பாவி... வேதாசலம் மாமாவோட காசை எவ்ளோ தின்ன... அந்த நன்றி விசுவாசம் கொஞ்சம் கூட இல்லையா... கண்ணா... கண்ணான்னு எம் மாமா உன் மேல பாசமா இருந்தார். இப்ப அவரு கண்ணையே குத்த வந்திருக்கியே..!” என்று சிவகாமி தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். வேதாசலம் பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தார்.

“அக்கா... அக்கா...” என்றபடியே ஆவியும் அதிகமாய் அழ ஆரம்பித்தது.

சற்று நேரம் அமைதி காத்திருந்த பஷீர் பாய் சிவகாமியைப் பார்த்து “அழறத நிறுத்தும்மா..” என்றார்.

சிவகாமி அழுவதை நிறுத்த முடியாமல் சேலைத்தலைப்பால் தன் வாயைப் பொத்திக் கொண்டார். ஆனால் விசும்பல் வந்து கொண்டே இருந்தது.

சிவகாமியிடம் இருந்து சத்தம் வராமல் போகவே, சங்கரின் பக்கம் திரும்பிய பஷீர் “டேய்… போதும் அழறதை நிறுத்து...” என்றார்
சங்கரும் அழுவதை நிறுத்திக் கொண்டான்.

இதைகண்ட நவநீதன் கண்களுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை.. ‘இது எப்படி சாத்தியமாகும்?’ என்று அவன் மனதில் அடுக்கடுக்காய் எழுந்த கேள்விகளை பஷீரின் கணீர்க் குரல் கலைத்தது.

“சரிடா.. நீ வண்டியை பார்த்து ஓட்டி வந்திருக்கலாம்ல.. வண்டி ஓட்டும் போது என்ன தப்பு செஞ்ச..?” என்றார் பஷீர்.

“காது குத்து முடிஞ்சதும், என் கூட்டாளிங்களோட கொஞ்சம் தண்ணியடிச்சுட்டேன். ஆனா... நிதானமாத்தான் வண்டியை ஓட்டிகிட்டு வந்தேன். சிங்கபுரம் பாலத்தை தாண்டி வர்றப்ப, எதுக்கால வந்த லாரியின் லைட் வெளிச்சம் என்னை தடுமாற வைக்க, போதையும் கிறுகிறுக்க, லாரியில மோதிட்டேன். லாரி என் மேல ஏறிடிச்சி” என்றது அந்த ஆவி.

“தெரிஞ்ச  பையன்னு பிடிச்சிட்ட.. பரவாயில்ல... இத்தனை நாளா இந்த பையனோட இருந்தது போதும்... அவனவிட்டு ஓடிப் போயிடணும். போறியா..?” என்று அதிகாரமாக கேட்டார் பஷீர்.

“போகமாட்டேன்..!” என்று ஆவி சொன்னதுதான் தாமதம், அவனுடைய அக்காவான (சங்கரின் சித்தி) சிவகாமி அடிக்க ஓடி வந்தார்.

“டேய்.. கொள்ளையில போனவனே... ஒழுங்கா ஓடிப் போயிடு.. போய்த் தொலைடா.. ஏண்டா எங்களை இப்படி சித்திரவதை பண்ற…” என்று அடிக்க வந்தவரை, மிகவும் பாவமான முகத்தை வைத்துக் கொண்டு “அக்கா...” என்றது ஆவி.

சிவகாமியை பஷீர் தன் சைகையால் தடுத்து நிறுத்தினார்.

வேதாசலமும், கமலம்மாளும் நடந்ததைப் பார்த்துக் கொண்டு சிலையாக அமர்ந்திருந்தனர்.

பஷீர், சங்கரைப் பார்த்து “டேய்.. அதவிடு... பிரியாணி வேணுமா? சாப்பாடு வேணுமா..? கோழி முட்டை வேணுமா..? தோசை வேணுமா..? எது வேணுமோ அதை கேட்டு வாங்கி சாப்பிடுட்டு, பையன விட்டு ஓடிப் போயிடணும்... போறியா..? அப்படி போகலேன்னா எருக்கங் குச்சியாலே அடிச்சே உன்ன கொன்னுடுவேன். என்ன சொல்ற..?” என்றார்.

“எருக்கங் குச்சியா... வேணாம்.... நான் போயிடறேன்… ம்ம்” என்றது ஆவி.

“என்ன வேணும் கேளு..?” - இது பஷீர்

“கோழிமுட்டையும்... பிரியாணியும்..!” என ஆவலாய்க் கேட்டது ஆவி.

“அடி செருப்பால.. மணி இப்ப ராத்திரி 10. 45 ஆயிடிச்சு.. எந்தக் கடையும் இருக்காது... வேற ஏதாவது கேளு... சோடா... கலர் ஏதாவது வேணும்னா கேளு..?” என்றார் பஷீர்.

கேட்டது கிடைக்கலயே என்ற ஆதங்கத்தோடு பாயை ஒரு மாதிரியாக ஆவி பார்த்தது.

“என்னடா பாக்கற... இந்த பாயை என்ன பண்ணலாம்னா.. உன்னைதாண்டா ஒரு வழி பண்ணப் போறேன்… என்ன வேணும் கேளு…” என்று சங்கரின் தலையில் பட்டென்று ஒரு அடி அடித்தார்.



“அடிக்காதீங்க... பெப்ஸியும் முறுக்கும் வேணும்…” என்றது ஆவி.

பஷீர், வேதாசலம் பக்கம் திரும்பி “ரோட்டுப்பக்கம் ஒரு பெட்டிக் கடை இருக்குல்ல.. அங்க போய் பெப்ஸியும் முறுக்கும் வாங்கிட்டு வாங்க...” என்றார்.

வேதாசலம் ராமுவைப் பார்த்தார். அவன் முகத்திலிருந்த கிலியைப் பார்த்ததும், ‘இவன் போகமாட்டான்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவர், அவனருகில் யானை போல் நின்ற வெள்ளியங்கிரியைப் பார்த்தார்.

“டேய் வெள்ளியங்கிரி... ஓடிப் போய் பெப்ஸியும்.. முறுக்கும் வாங்கிட்டு வா..” என்றார்.

வேதாசலம் பார்வை தன் மீது பட்டபோதே படபடப்பிற்குள்ளான வெள்ளியங்கிரி, அவர் இப்படிச் சொன்னதும் “ஐயோ மாமா... நான் போக மாட்டேன்.. எனக்கு பயமா இருக்கு... நான் போகல...” என்றான். அவன் பதிலில் பீதி கலந்திருந்தது.

வேதாசலம் முகம் சுருங்கிப் போய்விட்டது. தன் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாயை எடுத்தவர், ‘பெரிய ஆளா இருக்கானுங்க.. இவனுங்களே இப்படி பயப்படறானுங்களே... இவனுங்களைப் போய் துணைக்கு கூட்டி வந்தோமே’ என தன்னைத் தானே நொந்து கொண்டார்.

அப்போது நவநீதனின் குரல் வேதாசலத்தை நிமிரவைத்தது. “காசை கொடுங்க! நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று சொன்னபடியே நவநீதன் அவர் முன்பு வந்து நின்றான்.

நூறு ரூபாயை அவனிடம் கொடுத்து “போய் வாங்கிட்டு வாப்பா...” என்றார்.

பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ஒற்றை சந்தில் கடையை நோக்கிப் போன நவநீதனை ராமுவும், வெள்ளியங்கிரியும் கிலியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதே நேரம், சந்திற்குள் போன நவநீதனை ஆவியும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.


8 comments:

Natu said...

நாங்கல்லாம் நல்ல இருக்குறது புடிக்கலையா இப்படி பயமுறுதுரிங்க.........!

மோகனன் said...

நான் அனுபவித்த உணர்வைத்தான் தருகிறேன்.. தங்களை பயமுறுத்துவதற்காக அல்ல...

அடிக்கடி படிக்க வாங்க..!

யூர்கன் க்ருகியர் said...

//‘யோவ் பாயி... அதுகிட்ட போட்டுக் கொடுத்து என்னை காலி பண்ண பாக்கறியா..?’ என்று பஷீரின் சட்டையைப் பிடித்து கேட்க நினைத்தான்//

//கோழிமுட்டையும்... பிரியாணியும்..!” என ஆவலாய்க் கேட்டது ஆவி.


“அடி செருப்பால.. மணி இப்ப 10. 45 ஆயிடிச்சு.. எந்தக் கடையும் இருக்காது... வேற ஏதாவது கேளு... சோடா... கலர் ஏதாவது வேணும்னா கேளு..?” என்றார் பஷீர்/
/



தல சும்மா சொல்லக்கூடாது ...கதை அருமையா எழுதறீங்க ...பேய் கதைன்னு படிச்சா காமெடியா போயிட்டு இருக்கு.

மோகனன் said...

காமெடியா இருக்கு உங்களுக்கு... எனக்கு காமெடியா இல்ல நண்பா...

அப்போதைய நிலையில் என் மனதில் குழப்பங்கள்தான் விஞ்சியது... இதனை நேரில் பார்த்திருந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள்..!

அடிக்கடி படிக்க வாங்க..!

தமிழ் சிந்தனை said...

SIR OORUKATHAI SUNNATHUKKU THANKS

VISWAM said...

ரொம்பவே நல்லா இருக்கு. ஆவலுடன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்.

மோகனன் said...

தமிழ் சிந்தனையாளருக்கு எனது நன்றிகள்...

தொடரும் உங்களது ஆதரவிற்கு எனது நன்றிகள்...

மோகனன் said...

நன்றி விஸ்வம்...

வேலைப் பளு அதிமாக இருக்கிறது..

அடுத்த பகுதி விரைவில் வெளிவரும்.. அதுவரை காத்திருக்கவும்...

தொடரும் ஆதரவிற்கு எனது நன்றிகள்..!