Wednesday, July 23, 2008

முக்கனிகள் எவை..?

நம்மிடம் முக்கனிகள் எவையென்று கேட்டால் மா, பலா, வாழை என்போம். ஆனால் சங்க காலத்தில் இதற்கு சரியான பதில் கடுக்காய், நெல்ல்லிக்காய், தான்றிக்காய் (அதாவது இதன் கனிகள்) ஆகும். எப்படி என்று வினவுபவர்கள்...மேலும் படியுங்களேன்..

"விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்பழச்சுனை
தலைத்தணீர் மலரணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலைத்தலைய வேற்கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நிலத்தலைய துப்பெலா நிறைது ளும்பும் ஊர்களே''

-(சீவகசிந்தாமணி, 75வது செய்யுள்)

இச்செய்யுளுக்கான விளக்கம்:

இந்நாட்டிலுள்ள ஊர்கள் தோறும் யாவர்க்கும் விலக்குதல் இல்லாத அன்னச் சத்திரங்கள் உள்ளன. வெம்மையில்லாத சுனையில் காலையில் எடுத்த தண்ணீரில் பூவும் சந்தனமும் இட்ட தண்ணீர்ப் பந்தல்கள் உள்ளன. வேல்போன்ற விழிபெற்ற மாதர் கூத்தாடும் இடங்கள் உள்ளன. மேலும் அங்கே ஐம்பொறிகளால் (ஐம்புலன்கள்) நுகரும் பொருள்கள் அனைத்தும் நிறைந்து ததும்பும் என்கிறார் சீவகசிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கத்தேவர் .

இச்செய்யுளில் வந்துள்ள 'முப்பழம்' (முக்கனிகள்) என்பதற்குச் சாதாரண உரையாசிரியர்கள் உரையெழுதினால், முப்பழம் - மா, பலா, வாழைக் கனிகள் ஏன்றெழுதிவிடுவர். 'காய்மாண்ட தெங்கின் பழம் வீழ......'(சீவகசிந்தாமணி - 31வது செய்யுள்) எனத் தொடங்கும் நாட்டு வளப் பாடலில் இம்முக்கனிகளைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிட்டுள்ளார்.

நச்சினார்க்கினியர் (உரையாசிரியர்), முன்பு முக்கனிகள் கூறப்பட்டதை நினைவில் கொண்டு இங்கே (சீவகசிந்தாமணி-75வது செய்யுள்) முப்பழம் - கடு(க்காய்), நெல்(ல்லிக்காய்)-, தான்றி(க்காய்) என்பனவற்றின் பழங்கள் என்று சரியாக எழுதினார்.

பண்டைத் தமிழர், நாவிற்கு நலம் தரும் மா, பலா, வாழைக் கனிகள் தரும் மரங்களை மட்டும் வளர்க்கவில்லை. உடலுக்கு நலந்தரும், பிணிகளைப் போக்கும் மருத்துவ குணம் கொண்ட மரங்களையும் வளர்த்தனர் ஏன்பதை உளங்கொண்டு கடு, நெல், தான்றி என்று முப்பழத்துக்கு விளக்கம் தந்தார்.

சரிதானே..!