Wednesday, July 30, 2008

வள்ளிக்கிழவி (சிறுகதை)

காலை வேளையில் அன்னவயல் கிராமம் வயல் வேலைகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. கதிரவனின் வசம் பார்த்து கருமமே கண்ணாக வேலை செய்ய கிளம்பியவர்களில் வள்ளிக் கிழவியும் ஒருத்தி...

வள்ளிக் கிழவி என்றால் அக்கிராமத்தில் தெரியாதவர்கள் இருக்காது. சிறு குழந்தைகளுக்கும் கூட அவளைத் தெரியும். அவளது குடும்ப பாரம்பரியம் அப்படி. காலம் செய்த கோலம்.. கணவனை இழந்து தம் இரு மகன்களுக்காக வாழ்கிறாள்...

ஐம்பதைத் தாண்டிய வயது. தனது இரு மகன்களுக்காக உழைத்து...உழைத்து சளைக்காத முகம். அவள் கைரேகையைப்போல் அவள் முகத்திலும் சுருக்க ரேகைகள் ஓடியிருந்தது. அவள் கால் வெடிப்புகள் அவள் பட்ட துன்பங்களை கதை கதையாக சொல்லும். அவளுக்கு சொந்தமாக இருந்த அரை ஏக்கர் நிலத்தில் விதைத்திருந்த நெற்பயிர்களில் இன்று களை பறித்தாக வேண்டும்.

அவளுக்கு சொந்தமான வயக்காட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் மனம் அங்கு ஒரு நிலையில் இல்லை... 'காஷ்மீர் பகுதியெங்கும் பதற்றம்' என எட்டு மணி செய்தி கேட்டதிலிருந்து மனது அடித்துக் கொண்டது. மூத்த மகன் மோகனனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. என்ன பண்ணிட்டிருக்கானோ... எப்படி இருக்கானோ... அவனிடமிருந்து ஒரு தகவலும் வரலயே... ம்ஹூம்... ' என்ற பெருமூச்சுடன் களத்துமேட்டிலிருந்து வயலுக்குள் இறங்கினாள்.

மோகனன், இந்திய ராணுவத்தின் இளஞ்சிங்கங்களில் ஒருவன். தாய்ப்பற்றை மனதிற்குள் வைத்து பூட்டிவிட்டு, தாய்நாட்டின் மீது பற்று வைத்து இராணுவத்திற்கு சென்றவன். தாய்நாட்டிற்கு உழைத்தாலும் பெற்ற தாயை மறந்து விடுவானா என்ன... மாதா மாதம் அவனிடமிருந்து பணமும், கடிதமும் வரும். அக்கடிதம்தான் அவளுக்கிருக்கும் பெரும் ஆறுதல்...

இளையவன் செல்வம். கல்லூரியில் இளங்கலை படிப்பில் இறுதியாண்டு மாணவனாக பயின்று கொண்டிருக்கிறான். இன்று ஏதோ ''என்.சி.சி ஷ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா...'' என்றுவிட்டு சீக்கிரமாகவே கல்லூரிக்கு சென்று விட்டான்.

நானெல்லாம் படிச்சிருந்தாதானே இதெல்லாம் தெரியும். நம்ம அப்பந்தான் நம்மளை வீட்டை விட்டே வெளியவே அனுப்பலியே..என சிந்தித்துக் கொண்டே களையெடுத்துக் கொண்டிருந்தவளை தபால்காரர் பரமசிவம் குரல் கேட்டு நிமிர்ந்தாள்...

''வள்ளியம்மா... உன் பெரிய மகன்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு...''
இந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் முகத்தில் இருந்த சுருக்கங்கள், சட்டென்று மறைந்து மகிழ்ச்சிக்கு வழிவிட்டது. அவள் முகம் பரவசத்தில் பிரகாசித்தது. 'ராணுவத்துக்கு போயி 5 வருசமாச்சு... மாசத்துக்கு ஒரு கடுதாசி போடுவான்... எப்பவாச்சும் கோன் பண்ணுவான்... என்ன இந்த மாசம் ரெண்டாவது கடுதாசி அனுப்பியிருக்கான்...ஊருக்கு வரேன்னு சொல்லியிருக்கானோ....' என நினைத்தபடியே களத்துமேடேறினாள்.

''தபால்காரரே அதை கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்...'' என்றாள்.

அவரும் கடிதத்தை பிரித்தார். உள்ளே மோகனனின் கையெழுத்து ஆற்றுப் பிரவாகமாக நேர்த்தியாக ஓடியிருந்தது... உடன் படிக்கலானார்...

''அன்புள்ள அம்மாவிற்கு...

தாய்நாட்டைக் காக்கும் இராணுவ வீரன் மோகனன் எழுதிக் கொள்வது... இதுவரை உன் மகன் என்றுதான் எழுதி வந்திருக்கிறேன். இன்று இப்படி எழுதுவதற்கும் அர்த்தமிருக்கிறதம்மா... என்னை, இத்தேசத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து விட்டேன். அதான் அப்படி எழுதியிருக்கிறேன்...

உன் முகம் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டது. உன்னையும் தம்பியையும் பார்க்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது அது முடியாது.
எப்படி அம்மா இருக்கிற... தம்பி எப்படி இருக்கான்... அம்மா நாங்களிருவரும் உன் முகம் மட்டுமே அறிந்தோம். அப்பா நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே இறந்து விட்டதால்... நீ எங்களை வளர்க்க, நீ பட்ட துன்பங்களை நானறிவேன்...

இதோ நாங்கள் வளர்ந்து விட்டோம். அம்மா... நீ எனக்கு நிலாச் சோறு ஊட்டிய தருணங்கள்... சிறு வயதில் நானும் தம்பியும் நமது கிராமத்தில் போட்ட ஆட்டங்கள், ஏரியில் மீன் பிடித்தது என என் நினைவுகள் என்னுள் வந்து, வந்து செல்கிறது. தீபாவளியன்று பொம்மை துப்பாக்கிக்காக நானும் தம்பியும் போட்ட சண்டையை இன்னமும் நினைத்து மகிழ்கிறேன்.

பொம்மை துப்பாக்கியை கையில் பிடித்தவன் இன்று உண்மையான துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கிறேன். இதோ எனது சரித்திரம் ஆரம்பித்து விட்டதம்மா... நான் பிறந்த பிறப்பின் பயனை இனிதான் அடையப் போகிறேன். நீ கொடுத்த தாய்ப்பாலுக்கு வேலை வந்து விட்டது. நம் தேசத்தின் நலன் காக்கும் வேளை வந்துவிட்டது.

கார்கில் போர் எனக்கு கடுகளவாக தெரிகிறது இன்று. ஏனெனில் அதைவிடப் பெரிய போருக்கு உன் மகன்... இல்லை... இந்த பாரதத்தாயின் மகன் கிளம்பப் போகிறான்.

இந்திய மண்ணையும், காற்றையும் சுவாசித்த எனக்கு, எதிரி நாட்டின் சுவாசத்தை அழிக்க ஆணை வந்துவிட்டது. இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை நோக்கி இந்த புலி பாய்ந்து செல்லப் போகிறது.

நான் பெற்ற பயிற்சியின் முழு பலமும் இங்கே பரிசோதிக்கப்படும். இதுவரை அப்பகுதிக்கு சென்ற 10 கமாண்டோ படையினரில் இருவர் மட்டுமே மீண்டிருக்கின்றனர். இதே எனது படை... இதற்கு நான்தான் தலைவன்...

தாக்குதலுக்கு வேண்டிய ஆயுதம்... தாக்க வேண்டிய இடம்... உள்பட அனைத்தும் வந்துவிட்டது. நம் நாட்டின் எதிரிகள் காலனை சந்திக்கும் நாள் மட்டும் இன்னும் குறிக்கப்படவில்லை. விரைவில் அதுவும் குறிக்கப்பட்டு விடும். தகவல் கிடைத்ததும் வில்லிலிருந்து புறப்படும் அம்பெனப் புறப்பட்டுவிடுவோம்...

கடைசியாக உன்னிடம் நான் போனில் பேசியபோது, ''எப்பய்யா... ஊருக்கு வருவ.. அம்மாவை பாக்க வரமாட்டியா... அம்மா ஞாபகம் இல்லியா..?'' என்று நீ உன் அடிவயிற்றிலிருந்து உச்சரித்த வார்த்தைகள் மட்டும் என் மனதை கீறிக் கொண்டிருக்கிறதம்மா...

எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டால், அதற்கு அடையாளமாக நட்சத்திரங்களை கொடுப்பார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால்... வீரமரணம் அடைந்தாலும் நட்சத்திரங்காளாய் ஒளிவீசுவோம் என்பதைக் காட்டத்தான் அம்மா. என்னை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தக்கூடாது. அப்படி சிந்தினால் அது சுயநலமாகி விடும்.

நான் சென்று, வெற்றியுடன் திரும்புவேன். அப்படி ஒரு வேளை திரும்பவில்லையெனில் கவலைப்படாதே... என் மனதில் நீக்கமற நிறைந்திருப்பது நீயும், எனது தேசமும்தான்...

அன்னவயலிற்கு நான் அனுப்பும் கடைசி கடிதம் இதுவாகக் கூட இருக்கலாம். கடைசி காலத்தில் பெற்ற தாய்க்கு வேண்டிய பணிகளை செய்யவேண்டியவனாயிற்றே... என கலங்காதே. அப்பணியை நம் பாரத தாய்க்கு செய்து கொண்டிருக்கிறேன்.

எதிரிகளை அழிப்பதில் எமனாக செல்கிறேன். ஒருவேளை நான் இறந்தால் என்னைப் போல் பலர் இத்தேசத்திற்காக பிறப்பார்கள்.. கவலை வேண்டாம் அம்மா..

கடைசியாக உன்னிடம் வேண்டுவது, ''தம் தேசத்திற்கு துடிப்பான இளைஞர்கள் தேவை. இக்கடிதம் கண்டவுடன் தம்பி செல்வத்தையும் இராணுவத்திற்கு அனுப்பு.. ஏனென்றால் எங்களைப் போன்ற பிள்ளைகளால்தான் நம் பாரதத்தாய் நிம்மதியாக வாழமுடியும். கண்கலங்காமல் இதை நிறைவேற்றம்மா...

சென்று, வென்று வருகிறேன். வாழ்க பாரதம்..!

இப்படிக்கு
உன் மகன்
மோகனன்''

கடிதத்தை படித்து முடித்தவுடன், பரமசிவத்தின் கண் கலங்கியிருந்தது. வள்ளிக்கிழவியின் முகத்தைப் பார்த்தார். அவள் கண்ணில் இருந்து ஆறாய் ஓடிய கண்ணீர் சட்டென்று நின்றது. அக்கண்ணில் தீர்க்க சிந்தனையின் சாயல் 'இளையவன் செல்வம் வந்ததும், அவனையும் இராணுவத்திற்கு அனுப்ப வேண்டும்'.

(09.07.2002 அன்று, எனது சொந்த ஊரான ஆத்தூரில் இருந்தபோது எழுதிய சிறுகதை)

2 comments:

NaseeMoga said...

ovoru indian kullaum ipdi oru ennam varanum. naan aanmagana iruntha kandipa raanuvathil saervane
i love india

மோகனன் said...

தோழிக்கு எனது நன்றிகள்...

பின்னூட்டத்திற்கு என் பணிவான நன்றிகள்....