Friday, August 01, 2008

கிராமத்து தாயின் தாலாட்டு...

ஒவ்வொரு பெண்ணுமே படைப்பாளிகள்தான்... அதிலும் குறிப்பாக கிராமத்தில் வாழும் பெண்கள் சிறந்த படைப்பாளிகள் எனலாம்... படைப்பாளியாவதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை... பகட்டான நகரத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை...படிக்காமல் இருந்தாலும் கிராமத்து பெண்கள் பலவிதங்களில், நகரத்து பெண்களைவிட சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள்...

ஒரு குடும்பத்தை உருவாக்குவதும், ஒரு குழந்தையை உருவாக்குவதும் பெண்ணே... ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் என்றால் அவள் ஒரு குழந்தைக்கு தாயாகும்போதுதான் என்கிறார்கள்... (இதற்கு மட்டும்தான் பெண்களா..? என்று பெண்ணியவாதிகள் கொடி தூக்க வேண்டாம்...)

ஒவ்வொரு தாயும் படைப்பாளிகளே... பாடகிகளே... அதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை.. தன் வாழ்வில் பட்ட அனுபவமே போதும். படிக்காமலிருந்தாலும் அவளும் கவிதாயினிதான், படைப்பாளிதான்... பாடகிதான்...

கிராமத்தில் வாழும் ஒரு பாமர, ஏழைத்தாய் தன் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறாள்... அவள் படிப்பின் வாசமறியாதவள்... அவள் துன்பத்தை மட்டுமே அறிந்தவள்... சமூகத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டவள்... இதே அவளது குரல்... தென்றலாக.. தேனினும் இனிய தாலாட்டாக...

''ஆராரோ... ஆரிராரோ...
ஆரிராரோ.. ஆராரோ...
உன்னை யானையில போடும்போது
எண்ணமிட்டு போட்டேனோ..?
உன்னை தூளியில போடும்போது
துயரமிட்டு போட்டேனோ..?
தூங்கமா நீ அழற
துக்கம் என்ன சொல்லு கண்ணே..!
தொட்டில் கட்டி தூங்க வைக்க
மச்சு வீடு கட்டவில்ல...
மங்கா என் மாணிக்கமே
கண் மலராம ஏன் அழற...
கட்டில் மெத்தை போட்டு வச்சு
கன்னலுனை தூங்க வைக்க
பொட்டுக்காசு நமக்கில்ல
பொழுது மறைஞ்சபின்னும்
பூவே நீ ஏன் அழற...
அம்மா மடி இருக்கு...
அரும்பே நீ ஏன் அழற
அப்பாவோட தோளிருக்கு...
அழகே நீ ஏன் அழற...
நாங்க செஞ்ச ஓவியமே
ஓயாம நீ அழற
உன் ஒளிவு மறைவு சொல்லு கண்ணே...!
உனக்கு நெய் போட்டு சோறூட்ட
நல்ல காலம் நமக்கு இல்ல..!
உனக்கு பசும்பாலில் சோறூட்ட
பணம் காசு நமக்கு இல்ல..!
பாக்கியம் வரும் வரைக்கும்
பால் நிலவைப் பார்த்துக்கடா..!
ஆராரோ... ஆரிராரோ...
ஆரிராரோ.. ஆராரோ...''


- ஜெயந்தி. கலவை கிராமம்.

இவர்களுக்கு இயற்கைதான் செல்வம். ஏழ்மைதான் உடன்பிறப்பு... ஆனாலும் அத்தாயின் நம்பிக்கை தளரவில்லை... தன் குழந்தைக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்... இதற்கு நிகரான படைப்பு உண்டா...
(இதை நகரத்தில் உள்ள, படித்த பெண்கள் செய்வார்களா..?செய்திருக்கிறார்களா..?)

No comments: