Tuesday, October 01, 2019

மகாத்மா காந்தியைப் பற்றி 150 தகவல்கள்!

1. மகாத்மா காந்தியின் தந்தையார் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. (கபா காந்தி) இவர் போர்பந்தர் சமஸ்தானத்தின் திவானாக (தலைமை அமைச்சராக) பணியாற்றியவர்.
2. இவர் இரண்டு முறை திருமணம் செய்தபோதும், குழந்தை பிறப்பின்போது இரண்டு மனைவியையும் இழந்தார்.
3. மூன்றாவதாக திருமணம் செய்த மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால், அவரின் அனுமதியோடு நான்காவது திருமணத்திற்கு தயாரானார்.
4. நான்காவதாக, 1859-ல் புத்லிபாயை திருமணம் செய்துகொண்டார்.
5. உத்தம்சந்த் காந்திக்கும், புத்லிபாய்க்கும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு.
6. 1860-ல், லட்சுமிதாஸ் காந்தி பிறந்தார். இவர் மகாத்மா காந்திக்கு மூத்த அண்ணன்.
7. 1862-ல் ராலியத் காந்தி பிறந்தார். இவர் மகாத்மா காந்திக்கு மூத்த சகோதரி.
8. 1866-ல், கர்சந்தாஸ் காந்தி பிறந்தார். இவர் மகாத்மா காந்திக்கு இளைய அண்ணன்.
9. 1869, அக்டோபர் 2-அன்று, இத்தம்பதியருக்கு கடைக்குட்டியாகப் பிறந்தார் காந்தி.
10. காந்தியின் பெற்றோரால் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.
11. காந்திக்கு, தனது சிறுவயதில், நாயின் காதை பிடித்து திருகி விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்று ஒரு பேட்டியில் அவரது சகோதரி ராலியத் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
12. அம்மாவின் செல்லப்பிள்ளையாக மட்டுமின்றி அம்மாவின் நல்ல பிள்ளையாகவும் வளர்ந்தவர் காந்தி.
13. அம்மா புத்லிபாய் வைஷ்ணவ குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால், காந்திக்கு பகவத்கீதை, பாகவதம், புராணக்கதைகளை சொல்லிக் கொடுப்பார்.
14. முஸ்லிம்களின் புனித நூலானா குரான், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளையும் சொல்லிக்கொடுத்திருக்கிறார் புத்லி பாய்.
15. தன் அன்னை மிகுந்த கடவுள் பக்தி உடையவர் என்பதால் அடிக்கடி விரதம் இருப்பார். தொடர்ந்து மூன்று வேளை சாப்பிடாமல் விரதமிருப்பார்.
16. தாயின் இந்த விரத முறைதான், காந்தியின் போராட்ட காலத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அடித்தளமாய் விளங்கியது.
17. அம்மாவிடம் கேட்ட கதைகளுள் காந்திக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய கதை எதுவெனில் அது அரிச்சந்திரன் கதைதான்.
18. உண்மை மட்டுமே பேசவேண்டும் என்ற வைராக்கியம் அரிச்சந்திரன் கதை மூலம் தான் பெற்றதாக காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.
19. காந்தி தனது 9-வது வயதில் பள்ளியில் காலடி எடுத்துவைத்தார்.
20. தொடக்கத்தில் குஜராத்தி மொழி (இது அவருடைய தாய்மொழி), கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவற்றை படித்தார்.
21. பள்ளியில் காந்திஜி சுமாராகப் படிக்கும் மாணவர். வகுப்பறையில் மிகவும் அமைதியான மாணவர்.

22. விளையாட்டு என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று. வகுப்பறை புத்தகங்களே அவரது நண்பன்.
23. கையொப்பமிடும்போது எம்.கே.காந்தி என்றே கையொப்பமிடுவார்.
24. 1883 மே மாதத்தில் காந்திக்கு கஸ்தூர்பாவைத் திருமணம் செய்துவைத்தபோது அவருக்கு வயது 13.

25. கஸ்தூர்பாவின் முழுப்பெயர் கஸ்தூர்பாய் மகன்ஜி கபாடியா. காந்தியை விட வயதில் 6 மாதம் மூத்தவர் கஸ்தூர்பா.
26. 16-வயது இருக்கும்போது, காந்தி தனது தந்தையை இழந்தார்.
27. தனது 18-வது வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார் காந்தி.
திருமணத்தினால் ஓராண்டு பள்ளிப்படிப்பு இடையில் நின்றுபோனதும் இதில் அடங்கும்.
28. 1888-ல், பவநகரில் உள்ள ஷாமல்தாஸ் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படிக்கச் சேர்ந்தார்.
29. இதே ஆண்டில் காந்தி மற்றும் கஸ்தூர்பா தம்பதியருக்கு முதல் மகனான ஹரிலால் மோகன்தாஸ் காந்தி பிறக்கவே, படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு போர்பந்தருக்கு திரும்பிவிட்டார்.
30. இந்தியாவில் படிக்க விருப்பமின்றி குடும்ப நண்பரின் அறிவுரையால், பாரிஸ்டர் படிப்பிற்காக லண்டன் செல்ல தயாரானார் காந்தி.
31. அங்கு சென்றால், மேல்நாட்டு நாகரிகத்தால் தனது மகன் கெட்டுப்போய்விடுவான் என்று, அவரின் தாய் புத்லிபாயும், மனைவி கஸ்தூர்பாவும் பயந்தனர்.
32. லண்டன் செல்லும் முன் அம்மாவிடம், மது அருந்த மாட்டேன். இறைச்சி சாப்பிடமாட்டேன், அங்குள்ள பெண்களிடம் பழகமாட்டேன் என்று சத்தியம் செய்தார்.
33. காந்தியின் அண்ணன்களில் ஒருவரான லட்சுமிதாஸ் வழக்கறிஞர் என்பதால், காந்தியின் பாரிஸ்டர் படிப்புக்கு ஆதரவு தெரிவித்து மட்டுமின்றி படிப்பிற்கு உதவியும் செய்கிறேன் என்றார்.
34. பிறந்த குழந்தை, பெற்ற அன்னை, கட்டிய மனைவி ஆகியோரை விட்டுவிட்டு 1888, செப்டம்பர் 4 அன்று லண்டனுக்குப் பயணமானார் காந்தி.
35. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மூன்றாண்டு பாரிஸ்டர் படிப்பில் சேர்ந்து படித்தார் காந்தி.
36. மூன்று ஆண்டுகள் பாரிஸ்டர் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு 1891, ஜூன் 10-ஆம் தேதி தாயகம் திரும்பினார்.
37. பம்பாயில் சில காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
38. 1892-ல், காந்தி தம்பதியருக்கு இரண்டாவது மகனான மணிலால் காந்தி பிறந்தார்.
39. தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் பணி இருப்பதாக கேள்விப்பட்டு, அப்துல்லா அண்ட் கோ எனும் நிறுவனத்தாரால் 1893- ஏப்ரலில் அந்நாட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தங்கியிருந்த இடத்தின் பெயர் டால்ஸ்டாய் பண்ணை.
40. தமிழ்நாட்டிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலில் இருந்தும் இந்தியர்களை வேலைக்காக தென்னாப்ரிக்காவிற்கு ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றிருந்தனர்.
41. நிறவெறி காரணமாக ஆங்கிலேயர்களால் தென்னாப்ரிக்க மக்களும் இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
42. அந்நாட்டில் ஆங்கிலேயாரால் நிறவெறிக்கு உட்படுத்தப்பட்டதால், சதாரண வழக்கறிஞராக இருந்த காந்தி, போராட்டக்காரராக மாறினார்.

43. டர்பன் நகரில் நீதிமன்றத்தில் வழக்காடச் சென்றபோது, காந்தியின் தலைப்பாகையை கழற்றச் சொன்னார் நீதிபதி. கழற்ற மறுத்து நீதிமன்றத்தைப் புறக்கணித்தார் காந்தி.
44. 1893 ஜூன் 6 அன்று, பிரிட்டேரியா என்ற இடத்திற்கு செல்வதற்காக ரயிலின்முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்.
45. ஆங்கிலேயராக அவர் இல்லை என்பதற்காக, வெள்ளையர் ஒருவரால் பீட்டர்மரிட்ஸ்பர்க் என்ற ரயில்நிலையத்தில் பெட்டியை விட்டு பிளாட்பாரத்தில் தள்ளிவிடப்பட்டார்.
46. இந்த சம்பவமே காந்தியை உறுதி மிக்க போராட்டக்காரராக மாறுவதற்கு அடித்தளமாக அமைந்தது.
47. ஆங்கிலேயர்கள் அங்குள்ள கறுப்பின மக்களையும், இந்தியர்களையும் கீழ்த்தரமாக நடத்தினர். இதை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார் காந்தி.
48. அதற்குள் அவருடைய ஒப்பந்த காலமும் முடிந்து போகவே தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். அச்சமயத்தில், இந்தியர்களுக்கு வாக்குரிமை அங்கே பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து போராடுங்கள் என்றார் காந்தி.
49. போராடுவோம் ஆனால் எங்களுக்கு சட்ட நுணுக்கம் தெரியாது. தாங்களும் உடன் இருந்தால் போராடுவோம் என்றனர்.
50. அவர்களுக்காகவே தென்னாப்ரிக்காவில் தங்கி போராட முடிவெடுத்தார் காந்தி
51. 1894-ல், நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி, அங்குள்ள இந்தியர்களை ஒன்றுதிரட்டி போராட ஆரம்பித்தார்.
52. இந்த போராட்டத்தின் போதுதான் தமிழர்களின் அறிமுகமும் தமிழின் அறிமுகமும் காந்திக்கு கிடைத்தது.
53. 1894-ல் பாலசுந்தரம் என்ற கூலித்தொழிலாளி, ஆங்கிலேய முதலாளியால் கடுமையாக தாக்கப்பட்டு காந்தியின் முன்பு ரத்தம் சொட்டச்சொட்ட நின்றார்.
54. அவர் பேசும் தமிழ் மொழி காந்திக்கும், காந்தி பேசும் ஆங்கில மொழி பாலசுந்தரத்துக்கும் புரியவில்லை என்பதால் காந்தியின் உதவியாளர்களாக இருந்த வின்சென்ட் லாரன்ஸ், ஜோசப் லாரன்ஸ் இருவரும் மொழிபெயர்த்தனர்.
55. தன்னுடைய வாதத்திறமையால் பாலசுந்தரத்திற்கு நீதிகிடைக்கச் செய்து அவருடைய முதலாளியிடமிருந்து விடுதலையை வாங்கித் தந்தார் காந்தி. இதனால் அங்கிருந்த தமிழ் மக்களிடம் காந்தியின் புகழ் பரவியது.
56. தென்னாப்ரிக்காவில் இருந்த தமிழர்கள் போராட்டத்தின்போது தீரத்துடன் காந்தியுடன் இணைந்து போராடினார்கள்.
57. தமிழர்களின் அன்பும், வீரமும் காந்தியை வெகுவாகக் கவர்ந்தது. தமிழர்களின் தன்னலமற்ற தியாகமும் போராட்டமும், அன்பும் காந்தியை நெகிழ்ச்சியடைய வைத்தன.
58. இதனால் அத்தமிழ் மக்களுக்கு என்ன கைம்மாறு செய்வேன் என தவித்த காந்தி, அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொண்டு அவர்களது மொழியிலாவது பேசவேண்டும் என்று முடிவெடுத்து தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் காந்தி.
59. என்னுடைய பூர்வ ஜென்ம உறவுதான் எனக்கு தமிழர்களோடு இப்போதிருக்கும் தொடர்பு என்றார் காந்தி.
60. புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயும், காந்தியும் நண்பர்கள். அடிக்கடி கடிதம் எழுதிக்கொள்வார்கள்.
61. உலகப்பொதுமறையான நமது திருக்குறளை டால்ஸ்டாய் மூலமாகத்தான் காந்தி அறிந்து கொண்டார்.
62. லியோ டால்ஸ்டாய் எழுதிய கட்டுரை ஒன்றில், திருக்குறளின் இன்னா செய்யாமை எனும் அதிகாரத்தில் உள்ள 6 குறள்களை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
63. திருக்குறள் குறித்து டால்ஸ்டாயிடம் கடிதம் மூலம் காந்தி கேட்டதற்கு, ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைத் தான் படித்தாகவும், அது உங்கள் நாட்டின் தென்பகுதியில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து உருவானது என்றும் பதில் கடிதம் தந்திருக்கிறார்.
64. அதைப் படித்த காந்திக்கு, தமிழ் மீதிருந்த பற்று முன்னைக்காட்டிலும் அதிகமானது. திருக்குறளின் மீது ஆர்வம் ஏற்படவே, ஆங்கில மொழிபெயர்ப்பில் அதை படித்திருக்கிறார்.
65. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள் அகிம்சை வழியை போதிக்க, பிற்காலத்தில் அகிம்சை வழியை காந்தி தேர்வு செய்வதற்கு திருக்குறள்தான் முதன்மையாக விளங்கியது.
66. திருக்குறளை அதன் தாய்மொழியான தமிழில் படிக்க விரும்பினார் காந்தி.
67. தனது உதவியாளர்கள் இருவருக்கும் தமிழ் மொழி தெரியுமென்பதால், அவர்கள் மூலம் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
68. தமிழில் சில வாசகங்களை எழுதி, எம்.கே.காந்தி என்று தமிழில் கையொப்பம் இடும் அளவிற்கு தமிழை அப்போது கற்றிருக்கிறார்.
69. விடுதலைப் போராட்டத்தை நோக்கி காந்தியை மடைமாற்றம் செய்தவர் ஒரு தமிழ்ப் பெண்மணி. அவர்தான் நம் தில்லையாடி வள்ளியம்மை.
70. தென்னாப்ரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான ஆங்கிலேயர்கள் தலை வரி என்றதொரு வரியை விதித்தார்கள். அதனை எதிர்த்துப் போராடி சிறைக்குச் சென்றார் தில்லையாடி வள்ளியம்மை. அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே.
71. சிறையில் இருந்து அவர் விடுவிக்கபட்டபோதும், ’தலை வரியை அரசு ரத்துசெய்யாத வரை வெளியே வரமாட்டேன்’ என்று உறுதியாக உள்ளே இருந்தார் தில்லையாடி வள்ளியம்மை.
72. ஆங்கிலேய அரசு தலை வரியை நீக்கவே, வள்ளியம்மை சிறையிலிருந்து வெளியே வந்தார்.
73. பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் அறவழியில் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என்று பாராட்டி இருக்கிறார் காந்தி.
74. தென்னாப்ரிக்க போராட்டத்திற்கு ஆதரவாக 1903-ல் இந்தியன் ஒப்பீனியன் என்ற பத்திரிகை ஆரம்பித்தார் காந்தி.
75. இந்த பத்திரிகை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் அப்போது வெளியானது.
76. 1896 முதல் 1946 வரை தமிழ்நாட்டிற்கு 20 முறை வருகை தந்திருக்கிறார் காந்தி.
77. 1896-ல் முதல் முறையாக சென்னை வந்தபோது, தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனது பயணச் செலவில் 12 ரூபாய்க்கு தமிழ் புத்தகங்களை வாங்கிச் சென்றார் காந்தி.
78. 1897-ல், காந்தி தம்பதியருக்கு மூன்றாவது மகனான பெயர் ராம்தாஸ் காந்தி பிறந்தார்.
79. 1990-ல், காந்தி தம்பதியருக்கு நான்காவது மகனான பெயர் தேவ்தாஸ் காந்தி பிறந்தார்.
80. 1905-ல், எழுதிய கடிதம் ஒன்றில், ’நான் சுறுசுறுப்பாக தமிழைக் கற்றுவருகிறேன். எல்லாம் சுமுகமாக நடைபெற்றால் தமிழ்க் கட்டுரைகளை இரண்டே மாதத்தில் என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று எழுதியிருக்கிறார்.
81. 1906-ல், ஜோஹன்னரஸ் பர்க் நகரில் முதன்முதலாக சத்யாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார்.
82. தென்னாப்ரிக்காவில் பலமுறை சிறைக்கு சென்றார், வழக்காடி வெளியில் வந்தார்.
83. இப்படி படிப்படியாகப் போராடி, இந்தியர்கள் மற்றும் கறுப்பின மக்களின் உரிமைகளை மீட்டுக்கொடுத்தார்.
84. இவரின் புகழ் இந்தியாவிலிருக்கும் கோகலேவிற்கு எட்டவே, தாயகம் திரும்பி வருமாறு கோகலே காந்திக்கு அழைப்பு விடுத்தார்.
85. கோபால கிருஷ்ண கோகலேவின் வேண்டுகோளின்படி, 1915, ஜனவரி 9-ல் தனது குடும்பத்தாரோடு தாயகம் திரும்பினார் காந்தி.
86. தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-ல் இந்தியா திரும்பிய போது காந்தியின் வயது 45.
87. மும்பை வந்து காந்தி இறங்கியபோது, கோபாலகிருஷ்ண கோகலே அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தார்.
88. காந்தி இந்தியாவிற்கு திரும்பிய ஜனவரி 9-ஆம் தேதியை ஓவ்வோராண்டும் நினைவுகூரும் விதமாக, 2003-ல் இருந்து, வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
89. 1919-ல் காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது, ராஜாஜியின் வீட்டில் தங்கியிருந்தார்.
90. ராஜாஜி வீட்டில் வைத்துதான் மகாகவி பாரதியார் காந்தியை சந்தித்தார். அன்று மாலை நடைபெறும் சுதேசியக் கூட்டத்திற்கு பாரதி அழைப்பு விடுத்தார். ஆனால் காந்தியால் அக்கூட்டத்திற்கு செல்லமுடியவில்லை.
91. வார்தாவிலுள்ள ஆசிரமத்தில் இருந்தபோது , இலங்கைத் தமிழரான வி.நாகலிங்கம் என்பவருக்கு ‘நீரில் எழுத்தாகும் யாக்கை’ என்று எழுதி மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார் காந்தி.
92. செப்டம்பர் 22, 1921 அன்று, காந்தி மதுரையில் பயணம் சென்றுகொண்டிருந்த போது, அரையாடையுடன் வேலை செய்துகொண்டிருந்த விவசாயியின் ஏழ்மை நிலையைக்கண்டார்.
93. என்று எம்மக்களின் வறுமை தீருகிறதோ, அன்றுதான் முழுமையாக ஆடை அணிவேன் என்று சபதம் எடுத்து, அன்றிலிருந்து அரையாடை உடுத்தத்தொடங்கினார் காந்தி. இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் காந்தியை அரையாடை பக்கிரி என்றார்.
94. இதே அரையாடையுடன் லண்டன் மாநாட்டிற்கு சென்றுவிட்டு வந்தவரை ஆங்கிலேய பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு ஏன் இந்த அரைகுறை ஆடை என்று கேட்க, ‘எனக்கும் சேர்த்து உங்கள் மன்னர்தான் அணிந்து கொண்டிருக்கிறாரே’ என்றார் காந்தி.

95. ஆயுதபலம் மிக்க நம்மால் ஏன் காந்தியை ஏன் அடக்கமுடியவில்லை என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட, அதற்கு வின்ஸ்டன் சர்ச்சில் அளித்த பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. “அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியை தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கியை எடுத்து போராடினால் நான் குண்டு மழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் அகிம்சை எனும் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார். அகிம்சையை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நண்பர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்” என்றார்.
96. இந்திய விடுதலை வரலாற்றில் 1920 முதல் 1947 வரை காந்தியின் சகாப்தம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
97. விடுதலை வேண்டும் என்று காங்கிரஸ் இயக்கம் முக்கிய நகரங்களில் இருந்தபடியே குரல் கொடுத்துக்கொண்டிருந்தது.
98. படித்த, மேட்டுக்குடியினரின் கட்சியாக இருந்த காங்கிரஸ் இயக்கத்தை பாமரருக்குமான இயக்கமாக மாற்றியவர் காந்தி.
99. இந்தியாவெங்கும் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றினார் காந்தி.
100. விடுதலை வேள்வி எல்லோர் மனதிலும் கொளுந்து விட்டு எரிவதற்கு காந்தியின் அறவழிப்போராட்டங்கள் கைகொடுத்தன.
101. ஒருபுறம் விடுதலைப் போராட்டம் நடைபெற்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனை கடுமையாக எதிர்த்தார் அம்பேத்கர்.
102. தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை அறிந்த காந்தி, 1933 நவம்பர் 7–ஹரிஜன் யாத்திரை மேற்கொண்டார் காந்தி.
103. வழிநெடுகிலும் ஆதிக்க சாதியினர் காந்தியை எதிர்த்தனர். அவரே கொலை செய்யும் முதல் முயற்சியும் இந்த யாத்திரையின் போதுதான் நிகழ்ந்தது.
104. தீண்டாமைக்கு முக்கிய காரணம் சாதி. அதனால் சாதியை முற்றிலும் இந்தியாவில் இருந்து ஓழிக்க வேண்டும் என்றார் காந்தி.
105. இந்த யாத்திரையின் தாக்கத்தால் மௌண்ட் பேட்டன் பிரபு, ‘ஒன் மேன் ஆர்மி’ என காந்தியை புகழ்ந்தார்.
106. உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார் காந்தி.
107. காந்தியின் போராட்டங்களை தமிழ்நாட்டில் ராஜாஜி, பெரியார், காமராஜர் போன்றோர் முன்னெடுத்தனர்.
108. என்னதான் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக காந்தி போராட்டம் நடத்தினாலும், இந்தியாவில் நிலைமை அப்படியேதான் இருந்தது.
109. இதனால் காந்தியினை எல்லோரும் போற்றினாலும் அவரது கருத்துகளை கடுமையாக இரண்டு பேர் எதிர்த்தனர். ஒருவர் தில்லியில் இருந்த அண்ணல் அம்பேத்கர். மற்றொருவர் தந்தை பெரியார்.
110. 1921-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்தார் காந்தி.

111. லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கப்பல் மூலம் லண்டனுக்குச் சென்றார் காந்தி. அவர் விமானத்தில் பயணம் செய்தது கிடையாது. 1931, செப்டம்பர் 22 அன்று காந்தி இருக்கும் இடத்திற்கே சென்று சார்லி சாப்ளின் சந்தித்தார். மனித உழைப்பை முடக்கும் இயந்திரங்கள் காலனி ஆதிக்கத்தின் அடையாளம் என்றார் காந்தி. அதைத்தான் பின்னாட்களில் தான் தயாரித்த சிட்டி லைட்ஸ் படத்தில் ‘இயந்திர வாழ்க்கை’ குறித்து நகைச்சுவையாக பதிவு செய்திருப்பார் சார்லி சாப்லின்.
112. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது, காந்தி மிகவும் வருத்தமடைந்தார். தனது ஆதரவாளரான பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தன்னுடைய தோல்வி என்றார் காந்தி.
113. இதனால் வரிசையாக காந்தியின் ஆதரவாளர்கள் இயக்கத்தின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யவே, நேதாஜி இப்பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்திய ராணுவத்தை உருவாக்கச் சென்றுவிட்டார்.
114. 1910-ல், காந்தியை முதன் முதலில் ‘மகாத்மா’ என்று அழைத்தவர் மகாகவி பாரதியார்.
115. காந்தியை தேசத்தந்தை என்று அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
116. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கணவன் மனைவியாக சிறைக்குச் சென்றனர் காந்தியும் கஸ்தூர்பாவும்.
117. இந்த போராட்டத்தின் போதுதான் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற புகழ்பெற்ற வாசகத்தை முழக்கமாக்கினார் காந்தி.
118. இப்போராட்டத்திற்காக சிறையில் இருக்கும்போதே 1944 பிப்ரவரி 2 அன்று கஸ்தூர்பா காலமானார். காந்தி கலங்கிப்போனார்.
119. தனது மூத்த மகன் ஹரிலாலையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் காந்தி.
120. தான் இன்னாரின் மகன் என்று தெரியப்படுத்தாமல் தனியாக உழைத்து பிழைக்க வேண்டும் என்று ஹரிலாலை சென்னைக்கு அனுப்பி வைத்தவர் காந்தி.
121. தந்தையின் சொல்படி ஓராண்டுகாலம் சென்னையில் தங்கி பல்வேறு வேலைகள் செய்து பிழைத்திருக்கிறார் ஹரிலால் காந்தி.
122. தன் வாழ்நாளில் இந்திய சுதந்திரத்திற்காக 139 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் காந்தி. இதில் மூன்று முறை தொடர்ந்து 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
123. ஆப்ரிக்க சிறையில் 249 நாட்களும், இந்திய சிறையில் 2089 நாட்களும் காந்தி இருந்திருக்கிறார்.
124. விடுதலை பேச்சு வரும்போது இந்தியா தனியே, பாகிஸ்தான் தனியே பிரிக்க வேண்டும் என்று ஜின்னா சொன்னபோது கடுமையாக எதிர்த்தவர் காந்தி. இந்துவும் முஸ்லிமும் உடன்பிறவா சகோதரர்கள் என்றார்.
125. மவுண்ட் பேட்டனிடம் இந்தியாவை பிரிக்கும் எண்ணத்திற்கு தடைபோட்ட காந்தி, மாற்றாக இந்திய தேசத்தின் தலைவராக முகமது அலி ஜின்னாவே இருக்கட்டும் என்றார்.
126. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்றார் காந்தி.
127. தான் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார்.
128. இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 அன்று காந்தி கொல்கத்தாவில் ஏற்பட்ட இந்து-முஸ்லிம் கலவரத்தை அமைதிப்படுத்தும் பணியில் இருந்தார்.
129. ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!

130. தனக்கோ, தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ எந்த ஒரு பதவியும், அரசு சலுகையும் இருக்காக்கூடாது என்றார் காந்தி.
131. விடுதலைக்குப் பிறகு சபர்மதி ஆசிரமத்தில்தான் தங்கி இருந்தார். கடவுள் உண்மையானவர் என்று தனது பிரார்த்தனையில் சொல்வார். விடுதலைப் போர் உச்சத்தில் இருந்தபோது ‘உண்மையே கடவுள்’ என்று உணர்ந்து சொன்னார்.
132. ஜனவரி 20, 1948-ல் காந்து செல்லும் பாதையில் வெடிகுண்டு வீசப்பட்டது. அப்போது காந்தி தப்பித்துக்கொண்டார். அடுத்த பத்தாவது நாளில் நாதுராம் கோட்சேவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 5 மாதமே ஆகியிருந்தது.
133. தில்லியிலுள்ள பிர்லா மாளிகையில் அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்குமுன்பு ஒரு மணி நேரம் வல்லபாய் படேலும், காந்தியும் நாட்டின் நிலை குறித்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்தும் கலந்துரையாடினர். காந்தியிடம் தங்களின் உயிருக்கு ஆபத்திருக்கிறது என்றும், ஆசிரமத்தை சுற்றி காவலும், உள்ளே வருபவர்களை சோதனை செய்யவும் அனுமதி கேட்டார் படேல். காந்தி அதற்கு இசையவில்லை.
134. காந்தியின் படுகொலைச் செய்தியைக் கேட்ட தந்தை பெரியார் மிகவும் உடைந்துபோனார். இந்துஸ்தானத்திற்கு பதிலாக காந்திஸ்தானம் என்றும் இந்து மதத்திற்கு பதிலாக காந்தி மதம் என்றும் பெயர் சூட்டச் சொன்னார் பெரியார்.
135. உத்தமரை இழந்தோம். உலகமெங்கும் அழுகுரல் என்று இரங்கல் தெரிவித்தார் பேரரறிஞர் அண்ணா.
136. இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா. 1961 ஜனவரி 26-ல்!
137. நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளால் அதிகமாக ஒருவருக்கு தபால்தலை வெளியிடப்பட்டதென்றால் அது மகாத்மா காந்தியின் தபால்தலை மட்டுமே. பூடான் நாடு காந்திக்கு பிளாஸ்டிக்கில் தபால் தலை வெளியிட்டது.
138. கிட்டத்தட்ட அடிமை நாடாக வைத்திருந்தபோதும், 77 ஆண்டுகள் காந்தியை பத்திரமாக பார்த்துக்கொண்டோம். சுதந்திரம் கிடைத்த ஆறு மாதத்திற்குள் படுகொலை செய்துவிட்டனர் இந்தியர் என்று இங்கிலாந்து ஆங்கில நாளேடு ஒன்று சுட்டிக்காட்டியது.
139. சர்வ மத பிரார்த்தனைக்காக எழுந்து வந்த பாதையை, அவரது காலடித்தடத்தை செயற்கையாக உருவாக்கி, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் வரை அந்த காலடித் தடத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சுட்டுக்கொள்ளப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
140. `கனவில் இருந்து நிஜத்துக்கு, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!’- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இது.
141. காந்தியத்தைப் பின்பற்றிய நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.
142. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
143. மகாத்மா காந்தியின் 125 பிறந்தநாளை முன்னிட்டு, 1995-ஆம் ஆண்டு, இந்திய அரசானது ’சர்வதேச காந்தி அமைதிப் பரிசினை’ உருவாக்கியது.
144. குஜராத்தி மொழியில், 1919-லிருந்து காந்தி நடத்திய நவஜீவன் இதழில், 1925 முதல் 1929 வரை, தனது சுயசரிதையை ‘The Story of My Experiments with Truth’ என்ற பெயரில் எழுதினார்.
145. காந்தி நடத்திய ‘யங் இந்தியா’ இதழில், மகாதேவ் தேசாய் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதுதான் தமிழில் சத்தியசோதனை என்ற பெயரில் ரா.வேங்கடராசுலுவால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
146. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆங்கிலத்தில் ஹரிஜன் என்ற பெயரிலும், குஜராத்தியில் ‘ஹரிஜன் பந்து’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஹரிஜன் சேவக்’ என்ற பெயரிலும் இந்த வார இதழை நடத்தினார்.
147. மகாத்மா காந்தி இறந்த அன்று வானொலி ஒலிபரப்பு சேவையை நிறுத்தி அஞ்சலி செலுத்திய ஒரே நாடு இலங்கை.
148. “பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்பதே இருக்கக்கூடாது. எல்லாச்சமூகத்தினரும் அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன்.” என்றார் காந்தி.

149. இந்தியாவில் பிறந்த காந்திக்கு தென்னாப்ரிக்கா, கியூபா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. உலக அளவில் இத்தகைய பெருமையைப் பெற்ற முதல் மனிதர் மகாத்மா காந்திதான்.
150. “என்னுடைய பிறந்த நாளை புனித நாளாகக் கருதி அரசு விடுமுறை அளித்திருப்பது சட்டப்படி குற்றம்" என்று தனது ஹரிஜன் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி. ஆனால் நாம்தான் கேட்பதாக இல்லை.
-மோ.கணேசன். பத்திரிகையாளர். 01.10.2019
(காந்திஜியின் 150-வது பிறந்தநாளுக்காக தொகுத்தது)
நன்றி:
சத்திய சோதனை, தமிழ் இந்து இணையதளம், விக்கிபீடியா, பல்வேறு புத்தகங்கள், இணையதளங்கள்.

Thursday, February 28, 2019

கார்கில் தாக்குதல்


"த்தட்... த்தட்.. த்தட்...” என்ற துப்பாக்கி குண்டுகளின் ஓசை கேட்டு அந்த அதிகாலை நேரத்தில் கார்கில் பகுதி அவசரமாக விழித்துக்கொண்டது.
துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டதும், அந்த கூடாரத்திலிருந்து மேஜர் மோகன் ராஜின் கை தன்னாலயே அருகிலிருந்த ஏகே 47 துப்பாக்கியை எடுத்துக்கொண்டது.
சட்டென்று கூடாரத்தை விட்டு வெளியே வந்தவரை, கார்க்கில் மலைப்பகுதியின் பனி, அவர் அணிந்திருந்த ஜெர்க்கினையும் மீறி அவரது எலும்புகளில் ஊடுருவியது.
அந்த குளிரெல்லாம் அவரின் 55 வயதுக்கு அசாதரணம் என்றாலும்... அவரது 32 ஆண்டுகால ராணுவ சர்வீஸால் உரமேறிக்கிடந்த உடம்பு விரைப்பாகவே இருந்தது.
வந்தவர் ஒரு கண்ணால் குண்டு செல்லும் திசையை கவனித்துக்கொண்டே, மறு கண்ணால் தனது வாட்சைப் பார்த்தார். அவருடைய ரேடியம் வாட்ச் அப்போது அதிகாலை மணி 3.55 என்று காட்டியது.
அந்த அதிகாலை நேரத்தில் இருள் கவ்வி இருந்தாலும், லடாக் பிரதேசம் முழுக்க வெண்பனி போர்த்தி இருந்ததால், பார்வைக்கு வெண்மேகங்கள் போல் தெரிந்தன.
கார்டு பணியில் இருந்த ராணுவ வீரனை அழைத்தார்... "நவநீதன்...”
மேஜரின் குரல் கேட்டதும், ஓடி வந்த நவநீதன்... விறைப்பாக ராணுவ சல்யூட் ஒன்றை வைத்தபடி... “நமஸ்தே ஸாப்” என்றான்.
என்ன நவநீதன்... திடீர்னு பயரிங்..?
"தீவிரவாதிங்க ஊடுருவியிருக்காங்களாம் ஸாப்... ” அந்த கடும் குளிரிலும் நவநீதனின் குரல் கணீரென்று ஒலித்தது.
அப்போது வெகு வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்த ஹவில்தாரான வினோத், விரைப்பான சல்யூட் ஒன்றை வைத்துவிட்டு "நமஸ்தே ஸாப்... நாம இருக்கிறது 10 பேர்தான்... அதுல 3 பேருக்கு இப்போ நடந்த சண்டையில குண்டடி பட்டுடிச்சி. தீவிரவாதிங்க 20 பேர் இருந்தாங்க. அவங்கள்ல 5 பேரை வீழ்த்தியாச்சு... மீதி பேர் பனி மலை பகுதிகளில் ஒளிஞ்சிகிட்டிருக்காங்க சார்... ” என்றான்.
"லெப்டினன்ட் மோகனன் எங்கே...” என்றார் மேஜர்.
"லெப்டினென்ட்தான் சார்... உங்ககிட்ட தகவல் தரச்சொன்னார். அவர் தீவிரவாதிகளோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார் சார்” என்றவன், ஸாப்... நாம இப்போ 7 பேர்தான் இருக்கிறோம். தாழ்வான இடத்தில் இருக்கிறோம். நம்மாள அவங்களுக்கு தெரியாம மேலே ஏற முடியாது. மீறினா பிணமாகத்தான் விழுவோம். நாங்க எடுத்துகிட்டு போன புல்லட்களும் தீர்ந்துவிட்டது. உடனே உங்களிடம் தகவல் தரச்சொல்லி அனுப்பினார் ஸாப்” என்று கடகடவென்று 20 நொடிகளில் செய்தியைச் சொல்லிவிட்டான் வினோத்.
அடுத்து ஒரு வினாடி கூட தாமதிக்கவில்லை மேஜர். அவர் வாயிலிருந்து கடகடவென்று உத்தரவுகள் பறக்க ஆரம்பித்தன.
கிளம்புங்க போகலாம்... நவநீதன் டென்டுக்குள் இருக்கும் எஸ்.எல்.ஆர். கன் இரண்டையும், உன்னால எவ்வளவு மேகஸின்களை எடுத்துக்கொள்ள முடியுமோ எடுத்துகிட்டு கிளம்பு. வினோத்... நீயும் மேகஸின்களையும், ஸ்னைப்பர் கன்னையும் எடுத்துக்கொள்... அவரது வாய் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருக்கும்போதே... அவரது கைகள் புல்லட் மேகஸின்களையும், ஸ்னைப்பர் கன்னையும் வாரி எடுத்துக் கொண்டன.
அடுத்த சில நொடிகளுக்குள் மூன்று பேரின் கைகளிலும் துப்பாக்கிகளும், மேகஸின்களும் தூக்கக்கூடிய அளவை விட அதிகமாக இருந்தாலும்... தூக்கிக்கொண்டு வீரர்கள் இருக்கும் திசையை நோக்கி ஓடினர்.
ஓடிக்கொண்டிருக்கும்போதே... நவநீதன் இருக்கிற மேகஸின்களை நமது வீரர்களிடம் கொண்டு சென்று சேர்த்துவிடு. வினோத் உனக்கும் அதே ஆர்டர்தான்... மேகஸின்களைக் கொடுத்ததும் ஸ்னைப்பர் கன்னை எடுத்துக்கொள்.
அதற்குள் இந்திய வீரர்கள் தாக்குதல் நடக்கும் பகுதி கண்ணுக்கு புலப்பட்டது.
லெப்டினென்ட் மோகனன் தலைமையில் ஏரோ வடிவ வியுகத்தில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
அந்த உறை பனியிலும் வீரர்களின் உடல்கள் பனியோடு பனியாக படர்ந்திருந்தது. நான்கு பேர் அங்கே போராடிக்கொண்டிருந்தனர்.
இந்திய வீரர்கள் இருந்த இடத்தை அடைய இன்னும் 100 அடி தூரமிருக்கும்போதே.... அவர்களது கால்களுக்கு அருகே... தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து சென்றன.
சட்டென்று மூவரும் பனியோடு பனியாக உருண்டனர். உருண்டபடியே... நான்கு பேருக்கும் மேகஸின்களை தூக்கி போட்டனர்.
மைனஸ் 20 டிகிரி பனி, அந்த மூவரின் உடம்பையும் உரசியபடி ஊடுருவியது. அதை சட்டை செய்யாமல் முன்னேற ஆரம்பித்தனர்.
சைகையால் இருவரையும் பிரிந்து சென்று தாக்குதல் நடத்த கட்டளையிட்ட மேஜர், அங்கேயே தனது ஸ்னைப்பர் கன்னோடு பதுங்கினார்.
மலை முகட்டிலிருந்து வெளிச்சம் வரும் பகுதியில் துல்லியமாக கணித்தவர், ஸ்னைப்பர் கன்னால்... தீவிரவாதிகளை துவம்சம் செய்ய ஆரம்பித்தார்.
அவரின் இருபுறமும் பிரிந்து சென்ற நவநீதனும், வினோத்தும் தாக்குதல் தொடுக்க, ரவுண்டிற்கு இரண்டு பேர் வீதம் மலையிலிருந்து விழுந்து கொண்டிருந்தார்கள். நான்கு பேரை கபர்ஸ்தானிற்கு அனுப்பினார்கள்.
மேகஸின்கள் கிடைத்ததாலும், பின்புறம் மேஜர் தாக்குதல் நடத்த ஆரம்பித்துவிட்டதாலும் உற்சாகமான இந்திய வீரர்கள் மெல்ல முன்னேற ஆரம்பித்தார்கள்.
"டோண்ட் மூவ். இருக்கிற இடத்திலேயே இருங்க... மோகனன் நிலமை எப்படி இருக்கு...” பின்னாலிருந்து மேஜரின் குரல் கேட்டதும், மோகனன் குரல் பிசிறடித்தப்படி வந்தது.
எங்க நாலு பேருக்குமே குண்டடி பட்டுடிச்சி சார்... ஆனாலும் யாரையும் முன்னேற விடல. நீங்க வரதுக்குள்ளள 3 பேரை காலி பண்ணிட்டோம். நீங்க வந்ததும் 4 பேரை காலி பண்ணியாச்சு. இன்னும் 8 பேர்தான் சார். முடிச்சிடலாம் ஸார்” என்றான்.
மேலே போகாதீங்க யாரும். காயத்துல பனிக்கட்டியை அள்ளி வச்சுக்கங்க. தலையை தூக்காம அடிச்சு துவம்சம் பண்ணுங்க... என்றார் மேஜர். விடியல் வந்துடுச்சின்னா... நாம இருக்கிறது எதிரிகளுக்கு நம்ம உடல் கண்ணுக்கு தெளிவா தெரிஞ்சிடும். எந்த இருட்டை அவங்களுக்கு சாதகமா இருக்கும்னு நினைச்சி, நம்ம தேசத்துக்குள்ள உள்ளே வந்தானுங்களோ... அந்த இருட்டுலயே பரலோகத்திற்கு அனுப்பிடணும். கமான் க்விக்... என்றார் மோகன் ராஜ்.
மோகனன், மோகன் ராஜ், வினோத்திடம் இருந்த ஸ்னைப்பர் கன்கள் கை கொடுக்க, நவநீதனின் அதி வேக செயல்பாடுகள் கைகொடுக்க, அடுத்த அரை மணி நேரத்திற்குள் தீவிரவாதிகளை சாய்த்து முடித்திருந்தார்கள். நம்மில் மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்திருந்தனர்.
வெள்ளிப்பனியை விலக்கிக்கொண்டு சூரியன் செங்கலரில் சோம்பல் முறித்து விழித்துப்பார்க்க, நம் இந்திய வீரர்கள் குண்டடிபட்ட வலியிலும், அந்த மூவரையும் தூக்கிக்கொண்டு, திரும்பிக்கொண்டிருந்தனர். மூன்று பேரை இழந்த சோகம் அவர்கள் கண்களில் இழையோடியது.
மேஜர் மோகன் ராஜ், இந்திய ராணுவ தலைமையகத்துக்கு... வயர்லெஸில் தகவலை சொல்ல ஆரம்பித்தார். "தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடித்தோம். மூன்று மாவீரர்களை இழந்துவிட்டோம். மற்ற அனைவருக்கும் குண்டடி பட்டிருக்கிறது. அடுத்த குழுவை அனுப்பி வைக்கவும். ஓவர்...”
**********************
கார்கில் போரின் போது நான் எழுதிய கதை இது... இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. இப்படித்தான் நமது ராணுவம் அங்கே போராடிக்கொண்டிருக்கிறது. எல்லையைக்காக்கும் நமது மனித குல சாமிகளுக்கு வீர வணக்கம்
மோ.கணேசன். பத்திரிகையாளன்

Wednesday, December 05, 2018

குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி?

முக்கியமாக இது பெண்களுக்கானது... இன்று காலை ஒரு செய்தியை படித்தேன். தனியார் மகளிர் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்களை வைத்து, அப்பாவிப் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது என சகலத்தையும் படம்பிடித்த... பேடி ஒருவனை ஆதம்பாக்கத்தில் கைது செய்திருக்கிறது காவல் துறை. இதில் பல பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அத்தனையும் காவல் துறை கைப்பற்றி இருக்கிறது என்கிறார்கள். வெளியூரில் இருந்து வேலை தேடி வரும் பெண்கள், சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய, தனியார் விடுதி நடத்துனரே இப்படி இருப்பது கொடுமையான, கொடூரமான, தண்டிக்க வேண்டிய செயல். என்ன சொன்னாலும் பாதிப்பிற்கு ஆளாவது பெண்கள் என்பதால், அவர்களைப் அவர்களே பாதுகாத்துக் கொள்வது முதலாவதாகும் அதன் பிறகே மற்றவரின் உதவியை நாடலாம். இந்த செய்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டுபிடிக்கும் ஆப் மூலம் மேலும் பல ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது. தனியார் விடுதிகளில் தங்குவோர், பொது வெளியில் உள்ள பாத்ரூம்ங்களை பயன்படுத்துவோர், ஷாப்பிங் மால், மாபெரும் துணிக்கடைகளில் உள்ள பாத்ரூம்கள், துணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகள், சுற்றுலா செல்லும் இடங்களில் தனியார் ஹோட்டல் அறைகள் போன்றவற்றில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, உங்களது அந்தரங்க நடவடிக்கைகளை சமுதாய விரோதிகள், காம வெறியர்கள் படம் பிடிக்கும் ஆபத்து உள்ளது. இதனை எப்படி கண்டு பிடிப்பது? இதற்கென்று ஆப்ஸ்கள் உள்ளன. அதில் ஒரு ஆப் பற்றி இங்கே விரிவாகச் சொல்கிறேன். இதை பெண்கள் தங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது. கூகுள் ஆப் ஸ்டோரில் - Detect Hidden Cameras and Microphones - என்று டைப் செய்தால், Techno95 என்ற நிறுவனத்தின் ஆப் உங்களுக்கு கிடைக்கும். இதில் விளம்பர தொல்லைகள் இருந்தாலும், ஆப் லைன் மூலம் இதை விளம்பரத் தொல்லை இல்லாமல், பயன்படுத்த முடியும்.
இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்ததும், நான்கு ஆப்ஷன்கள் மெனுவாக கிடைக்கும்.

1.Detect by Radiotion Meter 2.Detect Infrared Camera 3.How to Use 4.Manual Camera Detection
இதில் Detect by Radiotion Meter- எனும் முதல் ஆப்ஷனை தேர்வு செய்தால், ஓர் அறையில்...
37 என்ற அளவில் ரேடியோ அலைகள் உள்ளது என்று காட்டும். அதில் X, Y, Z என்று ஒவ்வொரு கதிருக்கும் எவ்வளவு அலைநீளம் இருக்கிறது என்று காட்டும். இப்படி இருப்பது இயல்பானதாகும்.

தனியார் விடுதியோ, ஹோட்டல் அறையோ நீங்கள் செல்கிறீர்கள் எனில், அங்குள்ள குளியல் அறை, உடை மாற்றும் அறையோ இருக்கிறது எனில், அங்கே சென்று உள்ளே இருக்கும் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களில் ஸ்விட்ச்களை அணைத்துவிட வேண்டும். லைட், (எக்சாஸ்ட்) பேன், வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை அணைத்துவிட்டு, இந்த ஆப்ஸில் உள்ள, முதல் ஆப்ஷனை தேர்வு செய்து, நீங்கள் சந்தேகிக்கும் இடங்களில் மொபைலை காட்டினால், அங்கே ரகசியமாக கேமரா பொருத்தி வைக்கப்பட்டிருந்தால், ரேடியோ அலைகளின் எண்ணிக்கை 80 மேல் காட்டுவது மட்டுமின்றி, பீப்...பீப்...பீப்... என்று அலாரத்தையும் கொடுக்கும். அப்போது எச்சரிக்கை அடைந்து, அங்கிருந்து வெளியே வந்துவிடுங்கள். (ஆட்களின் உதவியோடு அதனை தட்டிக்கேட்கலாம்)

Detect Infrared Camera எனும் இரண்டாவது ஆப்ஷன்
அதாவது, இருட்டில் இயங்கும் கேமராதான் இன்ப்ரா ரெட் கேமரா. அதையும் இந்த ஆப்ஸின் மூலம் கண்டுபிடிக்க முடியும். மூன்றாவது ஆப்ஷன் - இந்த ஆப்ஸை எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான்காவது ஆப்ஷன் என்னவென்றால் Manual Camera Detection என்பதாகும்.

அதாவது எங்கெங்கல்லாம் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குளியல் அறை, படுக்கை அறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றில் எங்கெங்கெல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைத் தாண்டியும் சில இடங்களில் பொருத்தப்பட வாய்ப்புகள் உண்டு. மேற்குறிப்பிட்ட அறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அந்த கண்ணாடியை உங்கள் விரலை கொண்டு தொட்டுப்பாருங்கள். உங்கள் விரலுக்கும் அதன் கண்ணாடி பிம்பத்திற்கும் இடைவெளி இருப்பின் அந்த கண்ணாடியில் ஆபத்து இருக்கிறது. மறுபுறம் இருந்து உங்களை கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். விரல்கள் ஒட்டிக்கொண்டு இருப்பது போல் தெரிந்தால் அது ஆபத்தானது இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்ஸை பெற: http://bit.ly/2BSyM8L -மோ.கணேசன், பத்திரிகையாளர்.

Wednesday, October 31, 2018

மோ.கணேசனின் நேர்க்காணல்

நான் பலரை நேர்க்காணல் செய்திருக்கிறேன். அறம் செய்ய விரும்புவோம் நாடக நூலை எழுதிய பிறகு, எழுத்தாளன் என்ற முறையில் என்னை காவேரி தொலைக்காட்சிக்காக நேர்காணல் செய்தார் அருள் வளன் அரசு...
அதனை அவர் எழுதிய ‘என் பெயர் கதைசொல்லி’ - பாகம் 2 புத்தகத்திலும் அப்படியே வெளியிட்டிருந்தார்.
அதை அப்படியே இங்கே தருகிறேன்
பின்குறிப்பு: 

இந்த புத்தகத்தில் எஸ்.ரா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஜாம்பவான்களின் நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த புத்தகம் வேண்டுவோர்
வசந்தா பதிப்பகம்
26. குறுக்குத் தெரு, ஜோசப் காலனி,
ஆதம்பாக்கம், சென்னை - 88
044 - 22530954, 22533667
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். 80 பக்கம். விலை 120 ரூபாய் என நிர்ணயித்திருக்கிறார்கள்





Saturday, May 26, 2018

செம - திரைப்பட விமர்சனம்


இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில் நேற்றைய தினம், உலகமெங்கும் வெளியாகி இருக்கும் படம் ‘செம’.
திருச்சியில் வசிக்கும் ஆரவள்ளியின் (சுஜாதா சிவக்குமாரின்) ஒரே மகன் குழந்தைவேலு (ஜி.வி.பிரகாஷ்). குழந்தைவேலின் நண்பனாக கோதண்டம் (யோகிபாபு).
தெருத்தெருவாக குட்டியானையில் சென்று காய்கறி, பழம், மீன், கருவாடு என்று சீஸனுக்கு ஏற்றாற் போல் வியாபாரம் செய்துவரும் குழந்தைவேலுக்கு, மூன்று மாதத்திற்குள் கல்யாணம் செய்யணும். இல்லையெனில் 6 ஆண்டுகளுக்கு கல்யாணமே நடக்காது என்று ஜோஸியர் சொல்ல, ஆரவள்ளி உள்ளூரில் பெண் தேடுகிறார். மூன்று ஆண்டுகளாக ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் குழந்தைவேலை அசிங்கப்படுத்த, பெண் பார்க்க செல்லும் இடங்களிலும் நிறைய பெண்கள் குழந்தைவேலை வேண்டாமென்று சொல்ல, விரக்திக்கு செல்லும் ஆரவள்ளி தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார்.
உள்ளூரில்தான் பொண்ணு கிடைக்கவில்லையே என்று, அருகிலிருக்கும் தஞ்சாவூருக்கு சென்று பெண் தேட, சமையல் காண்ட்ராக்ட் வேலைசெய்யும் அட்டாக் பாலு (மன்சூர் அலிகான்), மந்தாரை (கோவை சரளா) தம்பதியினரின் மகளான மகிழினியை (அர்த்தனா பானு) பெண்பார்க்கிறார்கள். இரு குடும்பத்தாருக்கும் பிடித்துப்போக நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கிறார்கள்.
அட்டாக் பாலு ஊரைச்சுற்றி கடன் வாங்கி வைத்திருக்கும் ஊதாரி அப்பன். பெரிய சமையல் ஆர்டராக பிடித்து கடன் அடைக்கலாம் எனும் கனவில் இருப்பவரை, கடன்காரர்கள் தொல்லை செய்ய, மகிழினியை ஒருதலையாக விரும்பும் எம்எல்ஏ மகன் ஜனா (புதுமுகவில்லன்), கடனை அடைக்க உதவுவதாச் சொல்லி பாலுவின் மனதை மாற்றுகிறார். நிச்சயதார்தத்திற்கு வரும் குழந்தைவேலு குடும்பத்தை பாதி வழியிலேயே திரும்பிப் போகச் சொல்ல, விரக்தியின் விளிம்பிற்கு செல்லும் ஆரவள்ளி, கிணற்றில் குதித்துவிடுகிறார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அட்டாக் பாலுவிற்கு குழந்தைவேலு, உன் பொண்ணையே கல்யாணம் செய்து, உன்னையே அதை பாராட்ட வைக்கிறேன் என்பது போல் சவால் விடுகிறார். அங்கு வருகிறது இடைவேளை.
எம்எல்ஏ மகனின் ஆசை வென்றதா? அட்டாக் பாலு சவாலில் ஜெயித்தாரா? குழந்தை வேலு சவாலில் ஜெயித்தாரா? என்றெல்லாம் சொல்ல விரும்பல. குழந்தைவேலுதான் சவாலில் வெல்கிறார். ஆனால் அது எப்படி என்பதை, தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் கலகலப்பாக கொண்டு சென்று, எதிர்பாராத குட்டி குட்டி சுவாரஸ்ய முடிச்சுகளைப் போட்டு சுபத்தில் முடித்திருக்கிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.
குடும்பத்தோடு சென்று படம் பார்த்து எத்தன வருஷமாச்சு என்று ஏங்குவோருக்கு நிச்சயம் இந்த படம் ஒரு கலர்புல், காமெடி கலந்த பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் ட்ரீட் என்றே சொல்லலாம்.
இதுவரை சிட்டி பாய் கேரக்டராக இருந்த ஜி.வி.பிரகாஷ், இந்தப்படத்தில் கிராமத்து பையனாக, சிறுநகரத்துப் பையனாக நடித்திருக்கிறார். அவரின் குழந்தை முகத்திற்கு, குழந்தை வேல் கேரக்டர் மிகவும் பொருந்திப்போயிருக்கிறது. அம்மா… அடிக்கடி இந்த மாதிரி தூக்கு போட்டுக்க போகாதம்மா… இதோட 93-ஆவது தடவை என்று சொல்லும்போது, தியேட்டரில் சிரிப்பு சத்தத்தில் காது கலகலக்கிறது. மன்சூர் அலிகானிடம் சவால் விடும்போதும், அவரிடம் போனில் பேச நடுங்கும் போதும் மனிதர் நன்றாகவே நடித்திருக்கிறார்.
கோதண்டமாக வரும் யோகி பாபு, படத்தின் காமெடி ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். டேய் பன்னி மூஞ்சி வாயா… என்று ஜி.வி.பிரகாஷ் வேறொருவரைச் சொல்ல, யப்பா… என்னை வச்சிகிட்டு இப்படி எல்லாம் சொல்லாதப்பா… என்று அப்பாவியாய் கேட்கையில், தியேட்டரில் சிரிப்பு வெடி.
ஆரவள்ளியாக வரும் சுஜாதா, அம்மாவின் கேரக்டரில் பொருந்திப்போகிறார். மகனுக்கு இப்படி ஆகிருச்சே… ஊர் முகத்துல எப்படி முழிப்பேன் எனும்போதும், உங்க ரெண்டு பேருக்கும் பிரைவஸி வேணுமில்ல… அதாம்மா சண்டை போடறமாதிரி போட்டு, ஊருக்கு போயிட்டேன் அம்மா இடத்தில் ஸ்கோர் பண்ணுகிறார்.
மகிழினியாக வரும் அர்த்தனா பானு தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அழகுப் பதுமை. குறும்புப் பார்வை, குழந்தை முகம் என பாத்திரத்திற்கு ஏற்ற பதமான தேர்வு. வில்லனிடம் சீறும்போதும், அப்பாவிற்காக ஏங்குகிற போதும், கணவனிடம் கொஞ்சுகிற போதும்… அட நம்மவீட்டு பொண்ணு போலவே இருக்கிறாளேப்பா… என்று சொல்ல வைக்கிறார்.
அட்டாக் பாலுவாக வரும் மன்சூர் அலிகானை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடன்காரன்களைக் கண்டால் பம்முவதும், போனைக் கண்டால் ஒளிவதும், மனைவியிடம் மாட்டிக்கொண்டு திணறுவதும், மகளை தவறாகப் பேசியவனின் கையை வெட்டுவதும் என அசல் சமையல்கார்ராக மனிதர் அசத்தி இருக்கிறார். மனைவி, மகளை நம்பும் வெகுளித்தனமான தந்தையின் முகபாவத்தை மனிதர் கொண்டுவந்து நிறுத்தியதற்காக நிச்சயம் அவருக்கு சபாஷ் போடலாம்.
மந்தாரையாக வரும் கோவை சரளா. நீண்ட நாட்களுக்குப்பிறகு திரையில் மனுஷி வெளுத்துக் கட்டி இருக்கிறார். கணவருக்கு பயப்படுவதும், பெண்ணுக்காக மனுஷி பாடாய்ப்படுவதும்… சென்னையை மன்சூரலிகானுக்கு நாள் முழுக்க ஆட்டோவை சுற்றிக்காட்டுவதாகட்டும்… கலகல ரகம்.
புதுமுக வில்லன் ஜனா எம்எல்ஏ மகனாக பைக்கில் பந்தாவாக வருகிறார். இரண்டு மூன்று காட்சிகளில் வசனம் பேசகிறார். இறுதியில் மிரட்ட வருகிறார்.
சண்டாளி பாடல் இதுவரை யூ டியூபில் 8 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். யுகபாரதியின் வரிகளால், ஜி.வி.பிரகாஷின் மெல்லிசையும் சேர்ந்துகொள்ள, பாடல் மெலடியில் மெட்டு கட்டி, செவிகளை வருடிவிட்டு, மனதிற்குள் தங்கிவிடுகிறது. இப்பாடலில் ஒளிப்பதிவு மிக அற்புதம். நீர்த்துளிகளை வைரத்துளிகளாய் பிரித்துக் கோர்த்திருக்கிறது. இரவு நேரத்து கோரைப்புற்கள் முன்பு இருந்த காட்சிகள்... விவேக் ஆனந்தின் ஒளி ஓவியத்தில் கண்களுக்கு விருந்து படைக்கிறது. உருட்டு கண்ணால பாடல் துள்ளலிசை ரகம். குத்தாட்டமும் போட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
வசனம் தனது குருநாதர் பாண்டிராஜை எழுத வைத்திருக்கிறார் வள்ளி காந்த்.
’உங்கை பையனுக்கு கிருஷ்ணர் ஜாதகம்… பொண்ணுங்க இருக்கிற இடத்துலதான் அவன் இருப்பான்…’
‘அட போங்க சாமி… அவன் இருக்கிற இடத்துலதான் பொண்ணுங்க இருக்குது.’
’ட்வென்டி ட்வென்டி மீட்டிங் வச்சுக்கலாம். உனக்காக நான் 20 கி.மீ. வரேன். எனக்காக நீ 20 கி.மீ. வா… ’
’ஓரமா நிக்கறவங்க… ஒளிஞ்சிகிட்டிருக்கவங்க… வேடிக்கை பாக்கறவங்க எல்லாம் சீக்கிரம் வந்து அட்சதையப் போடுங்கோ…’
இப்படி படம் முழுக்க… காட்சிக்கோர்ப்பிற்கு வசனங்கள் கரம் கோர்த்து கலகலக்க வைக்கின்றன.
பாண்டிராஜின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் வள்ளிகாந்த், இந்த படத்தில் தனது தனித்தன்மையை காட்டி இருக்கிறார்.
பாண்டிராஜின் தாக்கம் இல்லை. பிரச்சினையை முன்னே சொல்லி, தீர்வை பின்னே சொல்லும் பாணி செம. தனக்கு ஒரு தேவதை மனைவியாக வரப்போகிறாள். அதற்காக தன்னை வேண்டாம் என்று சொன்ன பெண்களின் வீட்டிற்கு சென்று நன்றி சொல்லும் வித்தியாச ரகம் செம.
திருமணத்திற்கு ஆட்களை வரச்சொல்லி, போகிற போக்கில் கூட்டத்தைக் கூட்டுவது செம செம.
படம் 2 மணி நேரத்தில் முடிந்துவிட்டதே என்ற சிறுகுறையைத் தவிர, ஆபாச காட்கள் இன்றி, அடிதடி சண்டைகள் இன்றி, குடும்பத்தோடு அமர்ந்து படத்தைப் பார்க்க வைத்தது மட்டுமின்றி, வாய்விட்டு சிரிக்க வைத்த இயக்குநர் வள்ளிகாந்திற்கு செம செம செமையான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
2018-ஆம் ஆண்டின் சிறந்த குடும்பத்திரைப்படம் என்ற விருது நிச்சயம் இந்தப்படத்திற்கு உண்டு.

Thursday, May 24, 2018

விடமாட்டேன் உன்னை தொடர்கதை இப்போது புத்தகமாக வெளிவருகிறது!

அன்பு வலைப்பூ நண்பர்களே...

இந்த வலைப்பூவில்... விடமாட்டேன் உன்னை என்ற தொடர்கதையைப் படித்திருப்பீர்கள். அதற்கு நீங்கள் தந்த ஆதரவைக் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.

பலரின் வேண்டுகோளுக்கிணங்க... இதை புத்தகமாக வெளியிடுகிறேன். இந்த புத்தகத்திற்கு, கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் அணிந்துரை எழுதித் தந்திருக்கிறார்.

பாரதி புத்தகாலயம் இந்த புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுகிறது. 96 பக்கங்கள். விலை 80 ரூபாய்.

புத்தக வடிவிலான படைப்பிற்கும் உங்களின் ஆதரவு தேவை...


என்றென்றும் அன்புடன்

மோ.கணேசன்

Thursday, September 21, 2017

அறம் செய்ய விரும்புவோம்! - நாடக வடிவில் ஆத்திசூடி கதைகள்!

வணக்கம் வலையுலக நண்பர்களே...


ஆத்திசூடியை நாடக வடிவில் கதையாக எழுதி இருக்கிறேன். இதை புத்தகமாக வெளியிடுகிறது பாரதி புத்தகாலயம். விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது இப்புத்தகம்... உங்களின் அன்பும் ஆதரவும் இப்புத்தகத்திற்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

பள்ளி செல்லும் சிறுவர்களுக்காகவும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குடும்பங்களின் குழந்தைகளுக்காகவும் இந்த நாடக நூல் பயன்படும்....


Thursday, September 07, 2017

நீட் தேர்வு – நம்பிக்கை துரோகிகள் யார்?


நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பை இழந்த அனிதாவின் மரணத்திற்குப் பிறகு, இதுகுறித்து பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன.
என் சிந்தனையில் உதித்த கேள்விகளையும், விமர்சனத்தையும் இங்கே முன்வைக்கிறேன்… பதில்கள் அரசிடமிருந்து கிடைக்காது… மக்களிடமிருந்து கிடைக்கவேண்டும். இதற்கு சில பிளாஷ்பேக்குகள் அவசியமாக இருக்கின்றன.
ஜெயலலிதாவின் ஆளுமையும் வீழ்ச்சியும்
ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றவாளி என்பதை மறுப்பதற்கில்லை. அவர் குற்றவாளிதான். ஆனால் அவர் ஆட்சியில் இருந்தவரை, நீட் தேர்வையும் சரி, மீத்தேன் திட்டம் என எதையும் இங்கே அனுமதிக்கவில்லை. காரணம் நாடாளுமன்றத்தில் இவருடைய கட்சிக்கு இருந்த வாக்குத்தலைகளின் எண்ணிக்கை. (அமைச்சர்கள் என்றெல்லாம் சொல்லி அந்த வார்த்தையை அசிங்கப்படுத்த முடியவில்லை) அவரின் ஆளுமையின் காரணமாகவே அனைத்தையும் தடுத்துவந்தார்.
வளரும் நாடுகளில் தனது அதிகாரத்தை ஏற்காத தலைவர் யாரேனும் இருந்தால், அமெரிக்காவின் சிஏ அமைப்பின் மூலம் படுகொலைகளை நிகழ்த்தும் அல்லது கலகத்தை ஏற்படுத்தி பொம்மை ஆட்சியை நிறுவும்.
அதுபோல, மத்திய அரசின் திட்டங்களை ஆரம்பம் முதல் எதிர்த்துவந்த ஜெயலலிதாவினை சாய்க்க, அவரின் உடல்நலக்குறைவை பயன்படுத்தி, இங்குள்ளோரின் பதவி ஆசைகளை தூண்டிவிட்டு, ஜெ.யினை மண்ணுக்கு அனுப்பினர் என்று எண்ணத்தோன்றுகிறது. யார் நம்பிக்கையாக இருப்பார்கள் என்று ஜெயலலிதா நினைத்தாரோ, அவரே அவரது ஜீவனை அழிப்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார். அவரது ஆன்மா இவற்றை எல்லாம் பார்த்து கண்ணீர் உகுத்திருக்கும்.
பின்னணியில் யார்..?
பா.ஜ.க. இதன் பின்னணியில் இருந்தது என்று நான் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஜெ.வின் இறுதிச் சடங்கின்போது, காலை முதல் இறுதிவரை பா.ஜ.க.வின் வெங்கையா நாயுடு கூடவே இருந்தார். அப்படி இருந்ததற்கான காரணத்தை பாமரன் யோசித்தாலும் புரிந்துவிடும்.
ஜெ.வின் மரணம் குறித்து, சிபிஐ விசாரணை வைத்தாலும் கூட, மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அது சொல்படி ஆடும் பம்பரங்களாகத்தான் சிபிஐ இருக்கும் என்றும் கடந்தகால வரலாறுகள் சொல்லும் பாடம். அதனால், இவற்றால் எல்லாம் உண்மைகள் வெளிவராது.
ஆட்சியில் இருக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, நாற்காலி ஆட்டம் காணுகிற நிலை வந்ததும், ஜெ.வின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடியார் அறிவித்திருப்பது, அவரின் பதவிமீதுள்ள ஆசையைத்தான் காட்டுகிறது. இதுவும் வெறும் கண் துடைப்புதான்.
சசிகலாவின் ஆசையும் நிராசையும்
ஜெயலலிதா இருந்தவரை, அம்மாவின் உண்மையான விசுவாசி என்று நெஞ்சைக் கிழித்துக்கொள்ளாத குறையாக இருந்த அத்தனை துதிபாடிகளும், அவர் மறைவிற்குப் பின், சசிகலாவிற்கு துதிபாடியதை யாரும் மறந்திருக்க முடியாது. பா.வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் செய்த சாகஸங்களை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இடைக்கால முதல்வராக ஓபிஎஸ் வந்தார். அவர் தங்களின் அதிகாரத்திற்கு கட்டுப்படவில்லை என்பதால், அவரை தூக்கினார்கள். சசிகலா தரப்பினர் கூவத்தூரில் எம்எல்ஏக்களை கூண்டோடு அழைத்துச்சென்று, புட்டி, பெட்டி என்று சகலவசதிகளுடன் குஷிப்படுத்தினார்கள். தொகுதிக்கு நல்லது செய்வார் என்று எம்எல்ஏக்களை தேர்வு செய்தால், எம்எல்ஏக்களோ… சசிகலாவின் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய அங்கே கூடியிருந்தார்கள். கேட்டால், ஆட்சியைக் காப்பாற்றவே கூடினோம் என்று பசப்பினார்கள்.
ஜெ.வின் ஆட்சி காலத்தில் பின்வரிசையில் இருந்து எடப்பாடியார் முதல்வராக்கப்பட்டார். சசிகலா சொத்துசேர்த்த வழக்கில், நீதிபதிகளுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றது, இரட்டை இலையை கைப்பற்ற லஞ்சம் கொடுக்க முயன்றது என பல்வேறு தகிடுதத்தங்கள் நடைபெற முயன்றன.
அதிகார மையமாக மாறிடலாம் என ஆசைப்பட்ட சசிகலா, சிறைக்கம்பிக்குள் சென்றார். ஆனால் சசிகலாவின் ஆசை நிராசையாகிப்போனது. அங்கும் அவரின் ஆட்டம் அடங்கவில்லை. சிறைக்குள் இருந்தபடி, இங்கே பலரை ஆட்டிவைக்க முயற்சித்தார். சிறையிலும் பல ஆட்டம் ஆடினார் என்பதை சிறைத்துறை டிஐஜி ரூபா நிரூபித்தார். இவை எல்லாம் நமக்கு தெரிந்திருந்தும் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், நீதித்துறை நாயகமாய் இருக்கிறதே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. இதனிடையே ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் இடையூறு வேறு தமிழக மக்களை குழப்பியது.
மத்திய அரசின் பொம்மலாட்டம்
எடப்பாடியார் ஒருபுறம், ஓபிஎஸ் ஒருபுறம் என அதிமுக பிளவுபட, தினகரன் கோஷ்டி ஒரு புறம் இழுத்துக்கொண்டு ஓட, எம்ஜிஆர் எனும் சக்தி உருவாக்கிய இரட்டை இலையான அதிமுக, இலைகள் இரண்டு, காம்போடு மூன்று என்பதுபோல், மூன்றாய் சிதறியது. நிலையற்ற ஆட்சியை மிரட்டி, தங்களுக்கு வேண்டிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டது.
நீட் பிரச்சினை தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடிக்கத் துவங்க, கண்துடைப்பிற்காக அவசரச்சட்டத்தை இயற்றியது தமிழக அரசு. மத்திய அரசும் பரிசீலிக்கிறோம் என்று பம்மாத்துகாட்டியது.
நளினி சிதம்பரம் எனும் சீமாட்டி
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இருந்த நளினி சிதம்பரம், இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாக வாதிட்டார் இந்த சீமாட்டி.
தமிழகத்தின் நலனே எனது குறிக்கோள் என்று கூறிவந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி இவர். சிபிஎஸ்இ மாணவர்கள் இந்திய அளவில் உள்ள இடங்களில் போட்டியிடலாம் என்று தெரிந்தும் ஊமையாகவே இருந்தார் ப.சிதம்பரம். இவரும் தமிழர்தான்.
இந்திய அளவில் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்கள் படித்திருந்தார்கள் எனில், நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்த்திருக்க மாட்டார்கள். தாய்மொழிக் கல்வியில் பயின்ற மாணவர்களை, இந்திய அளவிலான போட்டிக்கு அழைத்து வீழ்த்தும் கோழைத்தனமான செயலில் மத்திய அரசு இறங்கியது. உச்சநீதிமன்றத்தில் தமிழக மாணவர்களுக்கு எதிராக கையை விரித்தது. தீர்ப்பால் ஏழை தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவில் இடி விழுந்தது.
மத்திய அமைச்சராக இருந்த காரணத்தால் சிதம்பரத்தின் மகன்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்திருப்பார்கள். பணக்காரர்களின் பிள்ளைகள் ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு செய்து சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைப்பார்கள். ஏழை மக்களால் இது முடியுமா? அவர்களுக்கு அடைக்கலம் தருவதே அரசுப்பள்ளிகள்தான்.
நூதனத் தீண்டாமை
ஆக, அதிக பணம் வைத்திருப்பவன் பிள்ளைகள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும். மற்றவர் அனைவரும் அதன் கீழுள்ளவற்றை மட்டுமே படிக்கவேண்டும் என்ற நூதனத் தீண்டாமை முறைக்கு, மத்திய அரசு நம்மை ஆளாக்கியது. இதன் விளைவு, அனிதா எனும் மலர் தூக்கிட்டுக்கொண்டது.
அவாளும் இவாளும்
இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் மலைவாசி மக்கள்தான். நீட்டிற்கு ஆதரவு தருகிறேன் பேர்வழி என்ற பெயரில் பிராமணியத்தை உயர்த்திப் பிடிக்கும் எஸ்.வி.சேகர் போன்றோர் பிராமணர்கள் அனைவரும் இந்நாட்டிற்கு வந்தேறிகள் என்பதை மறந்துவிடுகின்றனர். நீட் தேர்வு எழுத விருப்பமெனில் அகில இந்திய அளவில் போய் எழுதுங்களேன். யார் வேண்டாமென்றது. தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைக்க என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது.
ஏன் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள் மருத்துவர்கள் ஆனதே இல்லையா. அந்த ஒதுக்கீட்டுக்கான இடங்களை வேறு யார் ஆக்ரமிக்கிறார்கள். ஆக, உங்கள் இனம் மட்டும் மருத்துவர் ஆக வேண்டும். தமிழினம் வீழ்ந்து மாயவேண்டும்.
இதை சாதியம் கொண்டு பார்க்கவேண்டாம் அவாள்களே… இவாள்களே இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். தமிழ்நாட்டில் பிறந்து, தமிழன் என்று சொல்லிக்கொண்டு, தமிழனையே ஏசும் உங்களையும் இங்கே வைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன் தெரியுமா? வந்தாரை வாழ வைத்துத்தான் தமிழகத்திற்கு வழக்கம்.
யாருக்கு ஆதாயம்?
நீட் முறையால் தமிழ்நாட்டில் வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பேர் இடம்பிடித்திருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக மருத்துவம் படித்துவிட்டு, படிப்புக்காலம் முடிந்ததும் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள். தமிழ்நாட்டில் தமிழர்கள் மருத்துவர்களாக அன்றி நோயாளிகளாகத்தான் இருப்பார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
நீட் வேண்டாம் நமக்கு. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியிலுக்கு மாற்றுங்கள். இதன்மூலம் அவரவர் மாநிலத்திற்கு தேவையான படிப்பாளிகளை அவர்களது தாய்மொழியிலேயே உருவாக்கிக்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள இடங்களை தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள்தான் படிக்க வேண்டும். அப்படி ஒரு தேர்வை வைக்க விரும்பினால், இங்குள்ள பாடத்திட்டத்தின்படி, என் தாய்மொழியில் தேர்வை நடத்துங்கள். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என்று அனைத்து படிப்பிலும் 50 இடங்களை ஒதுக்கீடு செய்யுங்கள். அப்போதுதான் நாமக்கல் பிராய்லர் தனியார் பள்ளிகளின் ஆதிக்கமும், சிபிஎஸ்இ பள்ளிகளின் ஆதிக்கமும் மறையும்.
தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களை உங்கள் இஷ்டம் போல் தேர்வு வைத்துக்கொண்டு, யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள். எங்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுக்கல்லூரிகளை, நயவஞ்சகமாய் அபகரிக்க வேண்டாம்.
நம்பிக்கை துரோகிகள் யார்?
நமக்கு நல்லது செய்வார்கள் என்று நாம் தேர்வு செய்த எம்.எல்.ஏ., எம்பிக்கள் நம்பிக்கை துரோகிகள். பதவிக்கும், பணத்திற்கும் ஆமாம் சாமி போடும் அரசு அதிகாரிகள் நம்பிக்கை துரோகிகள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராகவே காய் நகர்த்தும் அத்துனை அரசியல் நாய்களும் நம்பிக்கை துரோகிகள். காசுக்கு ஓட்டு போட்டு, அத்தனை நம்பிக்கை துரோகிகளையும் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பிவைத்த நாமும், நமது வருங்கால சந்ததிக்கு நம்பிக்கை துரோகிகள்தான்.
எனது வாதம்… பிடிவாதம்
@ போதும்… கட்சிகளுக்கு வாக்களித்தது…
@ நாமே இனி களத்தில் இறங்குவோம். அரசியலில் இறங்குவோம். தலைமை கொள்வோம்.
@ வாக்களித்து தேர்வு செய்தவர்களை, ஆட்சிமுறையில் திருப்தி இல்லையெனில் எம்எல்ஏக்களை திரும்பப்பெறும் முறையை சட்டமாக்குவோம்.
@ நேர்மையாளர் சகாயத்தை தலைமை முதன்மை செயலராக நியமனம் செய்வோம்.
@ உதயச்சந்திரன் போன்ற நல்லோரை, தேர்வு செய்து எல்லா துறையிலும் நியமிப்போம்.
@ தமிழக நதிகளை மக்களின் உழைப்பு கொண்டு இணைப்போம். விவசாயம் பெருக்குவோம்.
@ தமிழகத்திற்கு தேவையான பொருட்களை தமிழர்களைக் கொண்டே உற்பத்தி செய்து, விநியோகிப்போம்.
@ தமிழர்களை தலைநிமிர வைப்போம்.
-மோ.கணேசன். இதழியலாளன், தமிழ்நாட்டின் வாக்காளன், வரி செலுத்தும் இந்தியன்.