Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, March 07, 2016

உலகின் தற்போதைய பெண் தலைவர்கள்! - மகளிர் தின சிறப்புப் பதிவு!



 
உலகில் மொத்தம் 205-க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இத்தனை நாடுகளில் எத்தனை பெண்கள் அதிபராகவோ, பிரதமராகவோ இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால் 16 பேர் காணக்கிடைத்தார்கள். உலகில் சரிபாதி பெண்கள்தான். 205 நாடுகளில் 16 நாடுகளில் மட்டுமே பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதாவது, உலகிலுள்ள நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் எண்ணைக்கையை கணக்கிட்டால் ஆறரை சதவீதம் மட்டுமே பெண்கள் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார்கள். மீதம் 93 சதவீதம் பேர் ஆண்களாகவே இருக்கிறார்கள்… இனி அந்த பதினாறு பெண் தலைவர்களைப் பார்க்கலாம்…

ஏஞ்சலா மெர்கல் (Anjelo merkel) அதிபர், ஜெர்மனி
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் அதிபராக பதவி வகித்து வருபவர் ஏஞ்சலா மெர்கல். இவர், இந்நாட்டின் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், முன்னதாக, 2005, 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். 2013-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர் இவர். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்படவர்.

எல்லன் ஜான் ஸன் சர்லீப், (Ellen Johnson Sirleaf) அதிபர், லைபீரியா
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முதல் பெண் அதிபராக 2005-இல் தேர்ந் தெடுக்கப்பட்டவர் எல்லன் ஜான் ஸன் சர்லீப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். 2011-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டவர். 2012-ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதிப் பரிசினை வென்றவர். இந்நாட்டின் 42-வது அதிபராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

டாலியா கிரிபவுஸ்கைடே, (Dalia Grybauskaitė) அதிபர், லித்துவேனியா
வட ஐரோப்பா பகுதியில் உள்ள நாடு லித்துவேனியா. இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை அதிபராக இருக்கும் இவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்நாட்டினரால் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் இவர் கராத்தேவில் ‘கறுப்பு பட்டை’ பெற்றவர்

தில்மா ரூசெப், (Dilma Rousseff) அதிபர், பிரேசில்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் 36-வது அதிபராக பதவி வகித்து வருகிறார் தில்மா ரூசெப். இந்நாட்டின் முதல் பெண் அதிபரும் இவர்தான். 2011-ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வரும் இவர், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மாகணத்தின் தலைவராக பதவி வகித்திருக்கிறார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டாம் முறையாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.

அடிபெடே ஜஜாகா, (Atifete Jahjaga) அதிபர், கொசோவோ
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசோவோ நாட்டின் நான்காவது அதிபரும், அந்நாட்டின் முதல் பெண் அதிபருமான அடிபெடே ஜஜாகா,  முன்னதாக அந்நாட்டு காவல் துறையில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். அமெரிக்காவின் எப்பிஐ அகாதெமியில் படித்து பயிற்சி பெற்றவர் இவர்.

பார்க் ஷியுன் ஹை, (Park Geun-hye) அதிபர், தென் கொரியா
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் பெண் அதிபராக பதவி வகித்து வரும் பார்க் ஷியுன் ஹை, கிராண்ட் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டின் அதிபரான முதல் நபரும் இவரே. எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் இவர். கிழக்காசிய நாடுகளில் வலிமைமிக்க பெண்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.

மிச்செல் பேச்லெட், (Michelle Bachelet) அதிபர், சிலி
இலத்தீன் அமெரிக்க நாடான சிலி நாட்டின் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக 2006-லிருந்து 2010 வரை பதவியிலிருந்தவர். பின்னர், .நா. பெண்கள் அமைப்பின் தலைவராக இருந்த அவர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தப் பதவியை ராஜிநாமா செய்து விட்டு மீண்டும், அரசியலுக்கு வந்தார். 2014 முதல் மீண்டும் இந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார்.

கொலிண்டா கிராபர் கிட்ரோவிக் (Kolinda Grabar-Kitarović), அதிபர், குரோஷியா

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் ஒன்று குரோஷியா. இந்நாட்டின் முதல் பெண் அதிபராக சென்ற ஆண்டு பிப்ரவரியில் பதவி ஏற்றுக் கொண்டவர். குரோஷியக் குடியரசின் நான்காவது அதிபர், மிக இளம் வயதிலேயே அதிபர் ஆனவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. கன்சர்வேட்டிவ் குரோஷியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சியைச் சேர்ந்தவர் இவர்.

அமீனா குயூரிப், (Ameenah Gurib) அதிபர், மொரீஷியஸ்
இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். பணக்கார நாடான இங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் சென்ற ஆண்டு பதவி ஏற்றார். சுற்றுச்சூழலியல் விஞ்ஞானியான இவர், மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

பிந்த்யா தேவி பண்டாரி, (Bidhya Devi Bhandari) அதிபர், நேபாளம்
உலகின் மிக உயரமான சிகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் நேபாளம். இந்நாட்டின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் வித்யா தேவி பண்டாரி, கடந்த ஆண்டு அக்டோபரில் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
அதிபர் வித்யா தேவி பண்டாரி நேபாளத்தின் மன்னர் ஞானேந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவந்தார். அவரது பெருமுயற்சியால் மன்னரின் சர்வாதிகார ஆட்சி 2008ல் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்தது. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசானபிறகு வித்யா தேவி நேபாளத்தின் இரண்டாவது அதிபராக ஆகியுள்ளார்.

ஹில்டா ஹெயினே, (Hilda Heine) அதிபர், மார்ஷல் தீவுகள்
 பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மைக்ரோனேசியா தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதி மார்ஷல் தீவுகள். 72,000 பேர் வசிக்கும் இத்தீவின் தலைநகரம் மஜுரோ. 29 பவளத் தீவுகளை உள்ளடக்கியது இந்த மார்ஷல் தீவுகள். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக, இரு வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றிருக்கிறார் ஹில்டா ஹெயினே. அமெரிக்காவில் உள்ள சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். ஆரம்ப காலங்களில் இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்.


ஷேக் ஹசீனா, பிரதமர், வங்கதேசம்
நமக்கு அண்டை நாடாக இருக்கும் வங்கதேசத்தின் தற்போதைய பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. இந்நாட்டின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரகுமானின் முதல் மகள் இவர். 1981-லிருந்து வங்கதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவரும் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராக, 1996-ல் பதவியேற்றார். மீண்டும் 2009-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், இன்று வரை பொறுப்பில் இருக்கிறார். இந்நாட்டின் முதல் பெண் பிரதமராக இருந்தவர் காலிதா ஜியா.

போர்டியோ சிம்ப்ஸன் மில்லர் (Portia Simpson-Miller), பிரதமர், ஜமைக்கா

கரீபியின் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவின் முதல் பெண் பிரதமராக இருப்பவர் போர்டியோ சிம்ப்ஸன் மில்லெர். ஜமைக்காவின் மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த இவர், முதன்முதலாக 2006-ல் பிரதமராக பதவியேற்றார். ஓராண்டுக்குள் தேர்தல் வந்துவிடவே இவரது பதவிக்காலம் முடிந்து போனது. மீண்டும் 2012-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், தற்போது வரை பொறுப்பில் இருக்கிறார்.

பீட்டா ஸசிட்லோ, (Beata Szydło) பிரதமர், போலந்து

மத்திய ஐரோப்பிய நாடான போலந்தில் சட்டம் மற்றும் நீதிக்கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகித்து வருகிறார் பீட்டா ஸசிட்லோ. இந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் இவர். இவருக்கு முன்னதாக, ஹான்னா சுச்சோக்கா, ஈவா கொப்பாக்ஸ் ஆகியோர் பெண் பிரதமர்களாக இருந்துள்ளனர். பீட்டா ஸசிட்லோவுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமராக இருந்தவர் ஈவா கொப்பாக்ஸ்.

சாரா கூகொங்கெல்வா, (Saara Kuugongelwa) பிரதமர், நமீபியா 

தென்மேற்கு ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடு நமீபியா. தென்னாப்ரிக்க நாட்டிடமிருந்து அதிகார பூர்வமாக 21 மார்ச் 1990-ல் இந்த நாடு குடியரசானது. அந்நாட்டில், முதல் பெண் பிரதமராக, தற்போது பதவி வகித்து வருகிறார் சாரா கூகொங்கெல்வா. இந்நாட்டின் நான்காவது பிரதமர் இவர். பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், அந்நாட்டின் திட்ட கமிஷன் துறையின் டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்திருக்கிறார். 2003-ல் நிதியமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். இவர் ஸ்வபோ பார்ட்டி என்று அழைக்கப்படும் தென்மேற்கு ஆப்ரிக்க மக்களின் கூட்டமைப்புக் கட்சியின் சார்பில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

எர்னா சோல்பெர்க், (Erno Solberg), பிரதமர், நார்வே

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயின் பிரதமராக இருக்கிறார் எர்னா சோல்பெர்க். இந்நாட்டின் 28-வது பிரதமர் மற்றும் இந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் இவர். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் இருந்து வரும் இவர், புள்ளியியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்கிறார். உள்ளாட்சி அதிகாரம் மற்றும் மண்டல வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார் எர்னா. 

(படம் உதவி: புதிய தலைமுறை கல்வி வார இதழ்)

Monday, April 28, 2014

கன்னிப்பேச்சு! - ஆனந்த விகடனில் வெளியான எனது குட்டிக்கதை


மைச்சர் பொன்னுரங்கம் இன்று சட்டசபையில் பேசியது எல்லோரையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.

சட்டசபைக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் என்றுமே வாய்திறக்காத அவர், இன்றுதான் வாய் திறந்திருக்கிறார். மற்றவர்களை வாய் பிளக்கவும் வைத்து விட்டார்!

"இன்று நாட்டில் எங்கே பார்த்தாலும் சாதிப்பிரச்னைகள், சாதிச் சண்டைகள்தான். பள்ளியில் சேரப்போனாலும் சரி, வேலைக்கு விண்ணப்பித்தாலும் சரி... சாதிதான் பூதம் போல் குறுக்கே நின்று பயமுறுத்துகிறது. இதை மாற்ற வேண்டும். அனைத்துச் சாதிகளையும் ஒழித்து விட்டு, இந்தியன் என்கிற பொதுவான ஓர் இனத்தை நாம் உருவாக்க வேண்டும். பள்ளிகளில் என்ன சாதி என்று கேட்பதைச் சட்டபூர்வமாக தடை செய்ய வேண்டும். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்..!'' இதுதான் சட்டசபையில் அவர் ஆவேசமாய் பேசியது.

சட்டசபையை விட்டு வெளியே வந்தபோது, முதல்வரே அழைத்துப் பாராட்டியது அமைச்சர் பொன்னுரங்கத்தைக் குஷிப்படுத்தியது.

''இலவச வீடுகள் வழங்குறதுல அந்தச் சாதிக்காரனுக்கு, இந்தச் சாதிக்காரனுக்குன்னு ஆயிரம் சிக்கல் இருக்கு. அதை இனிமே நீங்கதான் கவனிக்க போறீங்க...'' என்று முதல்வர் சொல்லவும், அவரது காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தார் பொன்னுரங்கம். 

தனது அலுவலகத்தில் பி.ஏ.வுக்கு சரமாரியாக உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார் அமைச்சர் பொன்னுரங்கம். 

''எலேய்... இலவச வூடு தர்றமுல்ல... முதல்ல நம்ம சாதிக்காரனுக்கு முன்னுரிமை குடுத்துடு. அப்புறமா மத்த சாதிக்காரனுக்குப் பார்த்துக்கலாம்!''

''என்ன தலைவா... சட்டசபையில சாதிக்கு எதிரா அவ்வளவு காட்டமா பேசினீங்களே..?''

''அட, யார்ரா இவன் புரியாதவன். அப்படி பேசினதாலதானே வீட்டு மனைகள் ஒதுக்குற அதிகாரமே என்கிட்ட வந்துச்சு. இதுக்குப் பேருதாண்டா அரசியல்! சரி சரி... வேலையைப் பாரு!''

பி.ஏ.வுக்கு தலை சுற்றியது.

****************************

(ஆனந்த விகடன் குழுமத்தில் மாணவ பத்திரிகையாளராக இருந்த போது, நானெழுதிய ஒரு பக்க கதை, 30.09.2001 தேதியிட்ட ஆனந்த விகடனில், 105-ஆம் பக்கத்தில் வெளியானது. இந்த கதை எழுதி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலை இப்போதுள்ள அரசியல் சூழலுக்கும் பொருந்துகிறது என்பதால், இங்கே பதிவிலிடுகிறேன்.

நன்றி: ஆனந்த விகடன்)

Friday, July 26, 2013

சாதி இல்லை - நெஞ்சை நெகிழச் செய்த வாசகர் கடிதம்

பத்திரிகை துறையில் நான் காலடி எடுத்து வைத்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஆனந்த விகடன், தினமணி, மாலை மலர் என பிரபலமான பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறேன். பல செய்திகளை எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏற்படாத மன நெகிழ்ச்சி, இப்போது ஏற்பட்டிருக்கிறது. தற்போது நான் புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி வார இதழ்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த நெகிழ்ச்சி ஏற்பட, புதிய தலைமுறை வார இதழ் காரணமாயிருந்திருக்கிறது. இதற்கு எங்கள் ஆசிரியரான உயர்திரு. மாலன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

புதிய தலைமுறை வார இதழ்  ஜூலை 11- தேதியிட்ட இதழில் 'பள்ளிகளில் இனி சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை' என்ற செய்திக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதுகுறித்த தகவலை இதற்கு முந்தைய பதிவில் -

பள்ளிகளில் இனி சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை! - அரசாணை குறித்த முழு தகவல்கள் என்று தலைப்பிட்டு கொடுத்திருக்கிறேன்.


அவ்வார இதழில், போதிய தபால் தலை ஒட்டப்பட்டு, சுயமுகவரியிட்ட அஞ்சல் கவரை அனுப்பி வைத்தால், சாதியை குறிப்பிட வேண்டாம் என்ற அரசின் ஆணை, தொடக்கக் கல்வி இயக்குனரின் கடிதநகல் ஆகியவற்றை அனுப்பி வைக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இன்று வரை, அந்த ஆணைகளைக் கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கடிதங்களை எழுதி, பெற்றுக் கொண்டுவிட்டனர். 

இதில் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு தகவலை எங்களுக்கு சொன்னது. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு வாசகர் தனது மகனை பள்ளியில் சேர்க்க சாதியை குறிப்பிட விரும்பவில்லை. ஆதலால், ஆணையை அனுப்பி வையுங்கள் என்றார். புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு வாசகரோ, எனது சகோதரி மகனை பள்ளியில் சேர்க்க உதவும் என்றார். இதுபோல நிறைய வாசகர்கள் மட்டுமின்றி, கிருஷ்ணகிரியில் உள்ள மாநில நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம், சென்னை, அடையாறில் உள்ள 'அகில பாரதீய ஆதிவாசி விகாஸ் பரிஷத் அமைப்புகளிடம் இருந்தும் ஓய்வு பெற்ற உதவிக்கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்களிடம் இருந்தும் கடிதங்கள் வந்திருந்தன.

இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் சேலத்தில் ஆதரவற்றோருக்காக இயங்கிவரும்  'நேசங்கரங்கள்' அமைப்பு எழுதிய கடிதம் எனை மிகவும் நெகிழச் செய்து விட்டது. எனது எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம், மரியாதை, அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அக்கடிதத்தின் சுருக்கம் இங்கே... 

'நேசங்கரங்கள் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் வளர்கிறார்கள். அவர்களை பள்ளிக்கு அனுப்பும்போது, என்ன சாதி என்று கேட்கிறார்கள். அங்கே நாங்கள் எதைச் சொல்வது? இனி நாங்கள் தைரியாமக சொல்வோம். சாதி இல்லை என்று... அதற்கு உங்களது கட்டுரை வழிகாட்டியிருக்கிறது. எங்களுக்கு அரசின் ஆணைகளை அனுப்பி வையுங்கள்'

என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முழுக் கடிதமும் கீழே இணைத்திருக்கிறேன். விருப்பமிருப்பின் நீங்களே அதை உயிர்ப்பித்து படித்துக் கொள்ளுங்கள்.




இத்தகைய உயரிய சேவையைச் செய்து வரும் 'நேசக்கரங்கள்' அமைப்பிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியை இங்கே உங்கள் முன் உரித்தாக்குகிறேன். அவர்கள் பணி வாழ்க. நல்ல உள்ளங்கள் வாழ்க... வாழ்க..!

இந்த கடிதத்தைப் படித்ததும் மனது பெருமிதப்பட்டது. எனது எழுத்து, ஆதரவற்ற குழந்தைகளை பள்ளிகளில், சாதியைக் குறிப்பிடாமலேயே சேரப்போகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி கொண்டது. இத்தனை ஆண்டுகளில் பல கட்டுரைகள், செய்திகள், தலையங்கங்கள், துணுக்குகள், ஜோக்ஸ்கள், கதைகள், தொடர்கதை, கவிதைகள், சினிமா பாடல்கள், வரலாற்று நூல் என இன்னும் என்னென்னவோ எழுதியிருக்கிறேன். இவைகளில் கிடைக்காத மகிழ்ச்சி, இந்த ஒரு கட்டுரையால் எனக்கு கிடைத்தது. 

சமூக மாற்றத்திற்கான சிறு துரும்பாக இது இருக்கும். 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பதால், இது நாளை பெரிய சமூக மாற்றம் வரும் என நம்புகிறேன். தோழர் மு. கார்க்கியின் ஆலோசனைப்படி, சாதியைக் குறிப்பிடத் தேவை இல்லை என்ற அரசின் ஆணைகளை ஒவ்வொரு பள்ளிகளின் முன்பும் 'பிளெக்ஸ் போர்டு'  மூலம் வைக்க வேண்டும். அப்போது பெருத்த மாற்றம் ஏற்படும் என்றார்.

இதனால் ஏற்படும் சமூக மாற்றமே... நாளைய சமத்துவ இந்தியாவை கட்டியெழுப்பும்.

(நன்றி: புதிய தலைமுறை வார இதழ் மற்றும் அதன் இணையதளம்)

Wednesday, July 17, 2013

பள்ளிகளில் இனி சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை! - அரசாணை குறித்த முழு தகவல்கள்

நீங்கள் ஜாதி, மதங்களில் நம்பிக்கை இல்லாதவர். உங்கள் குழந்தை ஒரு ஜாதிக்காரனாக வளர்வதைவிட சரியான மனிதனாக வளர்ந்தால் போதும் என்று நினைப்பவர். ஆனால், பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்கும்போதும் மாற்றுச் சான்றிதழ் பெறும்போதும் ஜாதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தில் அந்தக் கேள்விக்கான பதிலாக ஜாதி இல்லை என்று பதிலளிக்கவோ, அந்த இடத்தை பதிலேதும் எழுதாமல் காலியாக விடவோ கூடாது என்று பள்ளி நிர்வாகிகள் சொல்வது உண்டு. அதைக் கேட்கும் போது எரிச்சலாக இருக்கும். சில பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க மறுத்த சம்பவங்களும் உண்டு.

இனி அந்த தொல்லை உங்களுக்கு இல்லை. இனி ஜாதிப் பெயரை நீங்கள் குறிப்பிட விரும்பவில்லையெனில், அதைப் பள்ளிகளில் தைரியமாகச் சொல்லலாம். இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விவரங்கள் இங்கே:

பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது, பெற்றோர் ஜாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. ஆம்ஜூலை 2, 1973இல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நிலை எண்: 1210 இந்த விவகாரத்தைத்தான் தெளிவாகக் கூறியிருக்கிறது. இப்படி ஓர் அரசாணை வெளியிட்ட பின்னும் பள்ளிகளில் 'ஜாதியைக் கேட்பது' நின்றபாடில்லை

எனவே  இது குறித்து கடந்த 31.07.2000இல் தமிழக அரசு மீண்டும் ஓர் அரசாணை வெளியிட்டது.

அந்த அரசாணை (நிலை) 205-இல், 'பார்வையில் காணும் (அரசாணை 1210, நாள். 02.07.1973) அரசாணையின்படி  இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஜாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ எவரேனும் விரும்பினால், அவ்வாறே செய்யும் உரிமையை அவருக்கு அளிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது

ஆனால், இம்முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்று அறியப்படுவதால், அரசாணையில் தெரிவித்துள்ளதை இனிவரும் காலங்களிலும் கடைபிடிக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேலும் பள்ளியில் சேரும்போதும் மற்ற சமயங்களிலும் பெற்றோர் விருப்பப்படாவிட்டாலும் தெரிவிக்க இயலாவிட்டாலும் ஜாதி, சமயக் குறிப்பு தேவையில்லை எனவும் ஆணையிடப்படுகிறது' என்று தெரிவித்தது.

ஆனாலும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டவை இன்றுவரை 
கடைபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சேர்க்கையின்போது என்ன ஜாதி என்று கேட்கத்தான் செய்கிறார்கள் என்பதால், கோவையிலுள்ள மு.கார்க்கி என்ற வழக்கறிஞர், அண்மையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, 'இந்த அரசாணையைக் கருத்தில் கொண்டு செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய வழியாக அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ..எண்13023/ஜே2/2012 நாள் 06.06.13). அந்த உத்தரவில், 'பார்வையில் கண்ட அரசாணையின்படி மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் ஜாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ எவரும் விரும்பினால் சம்பந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம் என அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

இந்த அரசாணையைக் கருத்தில் கொண்டு செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய வழியாக அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றும் இருக்கிறது. ஜாதியைக் குறிப்பிடாதவர்களின் குழந்தைகள், பொதுப்பிரிவில் உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.இடஒதுக்கீடு போன்ற சில சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்காது என்பதே அது.

இதுகுறித்து  'புதிய தலைமுறை' வார இதழில் நானெழுதிய கட்டுரை...



(நன்றி: ‘புதிய தலைமுறை’ வார இதழ் மற்றும் தோழர் மு. கார்க்கி, வழக்கறிஞர்.)

இதுகுறித்த அரசாணை மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரின் கடிதங்கள் இங்கே தருகிறேன். விருப்பமுடையோர் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

(31.07.2000 -அன்று வெளியிடப்பட்ட அரசாணை)

(15.06.2013 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் பிறப்பித்த உத்தரவு)