Monday, July 18, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 (உண்மைச் சம்பவம்)

வநீதன் பாய் வீட்டின் அருகே இருந்த சந்து வழியாக கடையை நோக்கி நடந்தான்.

அவன் மனதை அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள் துளைத்துக் கொண்டே இருந்தது. ‘பேயே இல்லங்கறவனாச்சே நான்... என்னை அது என்ன பண்ண முடியும். இதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல... ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கண்ணாலயே பார்த்தேனே..? இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கூட வந்த தடியனுங்க ஏன் கடைக்கு வர்றதுக்கு கூட பயப்படறானுங்க..? பேய் பிடிச்சிடும்னா பயப்படறானுங்களா?. ஆளுதான் வளர்ந்திருக்கானுங்களே தவிர அறிவு வளரலயே...’ என குழப்பமாய் யோசித்துக் கொண்டே வந்தான்.

அதற்குள் கடை வந்து விடவே, நூறு ரூபாயை நீட்டி “ஒரு பெப்ஸி, நாலு முறுக்கு கொடுங்க...” என்றான்.

“சில்லறை இல்ல தம்பி... வேணும்னா ஒரு பாக்கெட் முறுக்கும் பெப்ஸியும் வாங்கிக்கோங்க… சில்லறை தரேன்” என்றார் கடைக்காரர்.

“சரி... அப்படித்தான் கொடுங்க...” என்றவன், கடைக்காரரைப் பார்த்து “ஏங்க... இந்த பஷீர் பாய் எப்படிப்பட்ட ஆளுங்க... பேய் ஓட்டுவாரா..? இல்ல எல்லாம் சும்மா ஏமாத்து வேலையா..?”

“எனக்கு தெரியாது தம்பி, என்னோட அண்ணனோட கடை இது. அவர்தான் தினமும் இந்த கடையில இருப்பார். நான் இன்னிக்குத்தான் இந்த கடைப்பக்கமே வரேன்…” என்றார்.

கேட்ட தகவல் கிடக்காமல் போனதில் மனதிற்குள் சற்று வருத்தப்பட்டாலும், கடைக்காரர் கொடுத்த பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும், மீதி சில்லறையும் வாங்கிக் கொண்டு, அந்த இருண்ட சந்தினுள் நவநீதன் திரும்பி வந்தான்.

நவநீதன் வரும் வரை அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆவி, நவநீதன் கையில் தான் கேட்ட பொருள்கள் இருப்பதை பார்த்து, முகத்தைப் பிரகாசப் படுத்திக் கொண்டது.

அதே சமயத்தில் “டேய்... கடைக்கு போனவன்... முழுசா திரும்பிட்டான்டா” என்று அருகிலிருந்த நண்பனின் காதில் கிசுகிசுத்தான் வெள்ளியங்கிரி. அந்த கிசுகிசுப்பு ஆவியின் காதில் விழவே... சடாரென தன் தலையைத் திருப்பி வெள்ளியங்கிரியை முறைக்கவே... வெலவெலத்துப்போனான் வெள்ளியங்கிரி. குப்பென வியர்த்து வழியத்தொடங்கியது அவன் முகம்.

நவநீதன் தன்னிடமிருந்த பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும் பாயிடம் கொடுத்து விட்டு, எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தானோ, அந்த இடத்தில் போய் நின்று கொண்டான்.

நவநீதன் கொடுத்த பொருட்களை வாங்கிய பஷீர் பாய், ஆவியிடம் கொடுக்காமல் தன் கையில் வைத்துக் கொண்டார்.

தன்னிடம் உடனே கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ஆவி, பாயின் இந்த செய்கையால் ஏமாற்றமடைந்ததால், பஷீரை ஏக்கத்துடன் பார்த்தது.

“என்ன பாக்கற... இதெல்லாம் உனக்கு தரலன்னா..?”

‘உம்’ என்பது போல் தலையை ஆட்டியது ஆவி.

“தரேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு... இதெல்லாம் வாங்கி சாப்பிட்டதும், இந்த பையனை விட்டு விட்டு போயிடறேன்னு சத்தியம் பண்ணி கொடுக்கணும். இந்த பையன் உடம்பை விட்டு போயிடணும்... இதெல்லாம் செய்யறேன்னு சொல்லு தரேன்...” என்றார்.

“ம்ம்... நீங்க சொன்ன படி சத்தியம் செய்யறேன்...” என்றது ஆவி.

“உன்னை நம்பறேன்... ஏமாத்து வேலை ஏதாச்சும் பண்ணினா, உன்னை எங்கயும் போக முடியாதபடி பண்ணிடுவேன்... ஜாக்கிரதை...” என்ற படியே பஷீர் முறுக்கு பாக்கெட்டையும், பெப்ஸியையும் ஆவியிடம் கொடுத்தார்.

“ம்ம்... இந்தா தின்னுட்டு.... சத்தியம் பண்ணிட்டு ஓடிப்போ...” என்றார் பஷீர்.

முறுக்கு பாக்கெட்டை ஆவலாக வாங்கிய ஆவி, அடுத்த சில நிமிடத்திற்குள் அனைத்தையும் காலி செய்தது. முறுக்கு சாப்பிடும் போது எழுந்த  “நறுக்... முறுக்...” சப்தம், அங்கிருந்தவர்களின் காதுகளில் மிகத் துல்லியமாக விழுந்தது. அடுத்ததாக பெப்ஸியை எடுத்த ஆவி, ஒரே மூச்சில் கடக்... முடக் என குடித்து விட்டு வெறும் பாட்டிலை கீழே வைத்தது.

இத்தனையும் 5 நிமிடத்தில் ஆவி சாப்பிட்டதைப் பார்த்த நவநீதனுக்கு, ஏதோ ஐந்து நாள் பட்டினி கிடந்தவன் அரக்க பரக்க சாப்பிட்டதைப் போல் தெரிந்தது.

‘ம்... சாப்பிட்டு விட்டேன். இப்போ நான் என்ன செய்யணும் சொல்லு’ என்று கேட்பது போல் பஷீரின் முகத்தை ஆவி பார்த்தது.

“என்ன பாக்கற.. நான் சொல்ற மாதிரி, சொல்லி சத்தியம் பண்ணிட்டு ஓடிப் போயிடணும்... செய்வியா..?” என்றார்.

“நான் என்னான்னு சொல்லணும்... சொல்லுங்க..?”என்றது ஆவி.

“பஷீர் பாய் மீது சத்தியமா, நாகூர் ஆண்டவர் மீது சத்தியமா, இன்ஷா அல்லா மீது சத்தியமா இந்த பையன விட்டு ஒடிப் போயிடறேன். இனி இந்தப் பையன மட்டுமில்ல, யாரையுமே பிடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்” என்றார் பஷீர்.

நம்மை போகச் சொல்றாங்களே என்பது போல் ஒரு பரிதாபமான பார்வையை ஆவி பார்த்தது.

“டேய்... நீ கேட்டத வாங்கிக் கொடுத்தாச்சு... தின்னதும் பையனை விட்டுட்டு போயிடறேன்னு சொல்லியிருக்க.. இப்ப நீ சத்தியம் பண்ணறியா... இல்ல என் வேலையை காட்டட்டுமா?” என்றபடி, கட்டில் மேல் வைத்திருந்த எருக்கங்குச்சியை கையிலெடுத்தார் பஷீர்.

எருக்கங் குச்சியைப் பார்த்த ஆவி... “இல்ல வேணாம். நான் சத்தியம் பண்ணிடறேன்” என்றபடி, பஷீர் சொன்னது போல் சொல்லி, தரையில் மூன்று தரம் கையால் அடித்து சத்தியம் செய்தது.

அடுத்த சில வினாடிகளில் சங்கரின் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் அப்படியே விலக ஆரம்பித்தது. திடீரென்று சங்கர் பேச ஆரம்பித்தான் “தோ போவுது... அங்கே போவுது...” என்றான்.

பஷீர் பாய் சங்கரிடம் கேட்டார் “யாருப்பா போறது.. சொல்லு”

“வெள்ளையா ஒரு உருவங்க.. அது என்ன பாத்துகிட்டே போகுது. ரோட்டோரமா இருகிற புளியமரத்தை நோக்கி போகுது…” என்றான் சங்கர்.

சங்கர் தெளிவாகப் பேசியதைக் கேட்ட உடனே வேதாசலத்தின் முகத்திலும், கமலம்மாளின் முகத்திலும் சந்தோஷப் புன்னகை பூத்தது.

அதற்குள் பஷீர் பாய் சொம்பிலிருந்த நீரை எடுத்தார். தன் வாய்க்குள் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தபடி, அந்த தண்ணீரை சங்கரின் மீது தெளித்தார்.

தண்ணீர் உடல் மேல் பட்டதும்.. “ம்ம்.. ப்ச்...” என்றபடியே ஒரு விதமாக உடலை சிலிர்த்துக் கொண்டான் சங்கர்.

அதுவரை அமைதியாக இருந்த வேதாசலம் மெல்ல சங்கரை அழைத்தார். “சங்கரு... யப்பா சங்கரு...”

சங்கரிடமிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

இதைக் கண்ட பஷீர் பாய், மறுபடியும் தண்ணீரை எடுத்து மந்திரமொன்றை முணுமுணுத்தபடியே சங்கரின் முகத்தில் தெளித்தார்.

“ம்ம்...ப்ச்சே...” என்றான் சங்கர்.

“தம்பி… தம்பி... ஏன் பேச மாட்டேங்கற…” என்று சங்கரைப் பார்த்து பஷீர் பாய் கேட்டார்.


“அந்த வெள்ளை உருவம், புளிய மரத்து மேல உக்காந்துகிட்டு என்னையே பார்த்து சிரிக்குது…” என்றான் சங்கர்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நவநீதன், சங்கர் காட்டிய திசையில் தன் பார்வையை தீர்க்கமாக ஓடவிட்டான். அவன் சொன்னது போல் எந்த ஒரு உருவத்தையும் காணோம். தூரத்தில் புளியமரம் தேமே என்று நிற்பதும், அதன் ஊடே கருமை நிறம் இருப்பதும்தான் அவனுக்குத் தெரிந்த்து. ‘எதைப் பார்த்து விட்டு, இவன் உருவங்கறான்..’ என்று யோசித்தான்.

அவனது யோசனையை பஷீரின் குரல் கலைத்தது.

“அத விடு தம்பி... நான் பாத்துக்கறேன்...” என்றவர், அருகிலிருந்த வேதாசலத்தைக் காண்பித்து “யாரு இவரு..?” என்று பாய் கேட்டார்

அதுவரை பஷீரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சங்கர் , முதல் முறையாக வேதாசலத்தை திரும்பிப் பார்த்து “எங்கப்பா” என்றான்.

அருகிலிருந்த கமலம்மாளை காண்பிக்கவும் “எங்கம்மா” என்றான்.

வேதாசலம் முகத்தில் சந்தோஷம் இன்னும் அதிகமாக வந்து ஒட்டிக்கொண்டது. பஷீர் பாயை நோக்கி “நீங்கதான் பாய்… எம் பையன காப்பாத்திய தெய்வம்…” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்

அதற்கு பஷீர் பாயிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

அப்போது நவநீதன், “டேய் சங்கர்…” என்றான்

நவநீதன் பக்கம் திரும்பிய சங்கர் “என்னடா நவநீ” என்று பதிலளிக்கவும், நவநீதன் மனதில் ஆயிரம் டன் ஆச்சர்யம் கிளம்பியது. ‘அட பரவால்லயே தெளிவா பேசறான்’ என நவநீதன் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சங்கரின் சித்தி இடைமறித்து கேட்டாள் “சங்கரு.. எப்படிப்பா இருக்க..?”

அவள் பக்கம் திரும்பிய சங்கர் “நல்லா இருக்கேன் சித்தி…” என்றான்.

நவநீதன் சங்கரை உற்றுப் பார்த்தான். சங்கருடைய முகம் இப்போது மிகவும் தெளிவாக இருந்தது. பஷீர் பாய் அதற்குள் பெட்டியில் வைத்திருந்த, தாயத்து ஒன்றை கையிலெடுத்து, கண்ணை மூடியபடி சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் சங்கரை நோக்கி தம்பி உன் சோத்தாங்கைய நீட்டு என்றார்.

அதுவரை அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்த சங்கரின் முகம் அஷ்ட கோணலாகியது. கையை நீட்டாமல் தலையை ஒரு பக்கமாக சாய்த்தபடி பஷீரைப் பார்த்தான்.



"அடி செருப்பால.. சைத்தான் கி பச்சா... யாருகிட்ட விளையாடுற... பஷீர்கிட்டயே விளையாடுறியா... இந்த பையன விட்டுட்டு போறேன்னு சொல்லி சத்தியம் செஞ்சிட்டு, மறுபடியும் இவன் மேலேயே வந்து உக்காந்துகிட்டியா..? விடமாட்டேன் உன்னை..." என்று கோபாவேசமாக கத்தினார் பஷீர் பாய்.

அதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியின் உறைந்து நின்றார்கள்.

Monday, June 27, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 (உண்மைச் சம்பவம்)

ந்த பஷீர்கிட்டயே விளையாடறியா..?” என்று சத்தமிட்டவர் தனது மனதிற்குள் மேலும் சில மந்திரங்களை உதிர்த்தபடி மற்றொரு ஊதுபத்திக் கத்தையை எடுத்து பற்ற வைத்தார். உடலை எரித்துக்கொண்டு தனது ஆவியை புகையாய் அது வெளியிட ஆரம்பித்தது ஊதுவத்திக் கத்தை. அதன் நறுமணம் கொஞ்சம் கூட வெளியே வரவில்லை.

சங்கரின் பின்புறம் உட்கார்ந்திருந்த வேதாசலமும் அவரது மனைவி கமலம்மாளும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்கள். நவநீதன் இடது பக்கம் சற்று தள்ளி அமர்ந்திருந்தான். சங்கரின் வலதுபுறம் அவனுடைய சித்தி சிவகாமி நின்று கொண்டிருந்தார்.



சங்கரின் மாமாவான ராமுவும், ராமுவின் நண்பன் வெள்ளியங்கிரியும் சற்று தூரமாக நின்றபடி, நடப்பதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பக்கத்தில் ஆட்டோ டிரைவர் கிலியுடன் நின்று கொண்டிருந்தார்.

சங்கர் இருந்த இடத்தைச் சுற்றி அந்த எருக்கங்குச்சியால் வட்டம் போட்டார். “யேய்.. உன்னை என் வட்டத்துக்குள்ள கொண்டு வந்துட்டேன். உன்னை இப்ப என்ன பண்ணறேன் பார்…” என்றார் பஷீர்.

பஷீர் பாய் மிகவும் கோபத்தில் இருந்த்து அப்பட்டமாய் தெரிந்தது. உருது மொழியில் மந்திரங்களை ஜபித்துக் கொண்டே அந்த ஊதுவத்தி கத்தையின் புகையை சங்கரின் முகத்தில் காட்டினார். அந்த புகை அவன் முகத்தில் பட்டு, இரு புறமும் பிரிந்து மேலே போயிற்று.

நேரம் செல்லச் செல்ல.. அசைவற்று கிடந்த சங்கர், மெல்ல மெல்ல நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தான். சற்று நேரத்திற்கெல்லாம் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து விட்டான். அவன் கண்கள் பஷீர் பாயை நேருக்கு நேர் பார்க்க ஆரம்பித்தன.

“யேய்.. யேய்.. யாரு நீ..? சொல்லு?” என்றார் பஷீர்.

“ம்... ம்...” என்ற சங்கரின் குரலிலும் கோபம் தெரிந்தது.

“ம்.. சொல்லு.. நீ யார்..?” என்றபடியே இடது கையால் இருந்த எருக்கங் குச்சியால் சங்கரின் தலையில் தட்டினார் பஷீர்

“அடிக்காத சொல்றேன்..!” என்று பதில் தந்த சங்கரை, நவநீதன் உற்றுப் பார்த்தான்.
சங்கரின் முகம் இப்போது தெளிவாக இருப்பது போல் தோன்றியது. அறுபது வாட்ஸ் பல்பு வெளிச்சம் அவன் முகத்தில் தெரிந்தது.

‘அதெப்படி இங்கே வர வரைக்கும், கடந்த இரண்டு நாளா சங்கருடைய முகம் இருட்டடைஞ்சி போய் இருந்திச்சி... இப்ப மட்டும் பிரகாசமாயிடுச்சே..!’ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நவநீதனை, பஷீர் பாயின் குரல் கலைத்தது.

“யேய்... நீ யாரு..? சொல்லுங்கறேன்ல...” சத்தமாகக் கேட்டபடியே சங்கரின் தலையில் இம்முறை ஓங்கி அடித்தார்

“அடிக்காதீங்க சொல்லிடறேன்...” என்றவன், சற்று அமைதி காத்து “நான் யாருன்னு சொல்லணுமா..?” என்று கேட்ட சங்கர், பஷீரை ஒரு மாதிரியாகப் பார்த்து சிரித்தான்.

“டேய்... பஷீர் பாய் முன்னாடி உக்காந்திருக்க... பதில் சொல்லலன்னா விடமாட்டேன் உன்னை...” என்று விட்டு, மனதிற்குள் ஏதோ முணுமுணுத்தவர், பத்தியின் புகையை சங்கரின் முகத்தில் நன்கு படும்படி காட்டினார்.

புகையை விரும்பாத சங்கர்... தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறே... “வேண்டாம்.. வேண்டாம்.. நான் யாருன்னு சொல்லிடறேன்” என்றான்.

“இப்ப தெரியுதா.. பஷீர் பாய் யாருன்னு..? ம்ம்.. சொல்லு நீ யாரு..?” என்று சொன்ன பஷீர் பாயைப் பார்த்து மலங்க மலங்க விழித்தது ஆவி. (இனி ஆவி என்றே  அழைப்போம்)


பஷீர் பாய் மறுபடியும் ஒரு மந்திரத்தை முணுமுணுத்து, சங்கரின் தலையில் தட்டவும், அது பேச ஆரம்பித்தது.

“என் பேரு கண்ணன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி காது குத்துக்காக மங்களபுரம் போயிட்டு வந்தேன். அப்போ வர்ற வழியில லாரி எம்மேல ஏறிடிச்சு... நான் இப்படி ஆயிட்டேன்” என்றது

“சரி இந்தப் பையன எப்ப பிடிச்ச..?”

“தினமும் இரவு 11 மணிக்கு எந்திரிப்பேன். அப்படியே என் வீட்டுக்கு போய் என் பொண்டாட்டி, புள்ளைங்கள பார்த்துட்டு வருவேன். அன்னிக்கு இந்த பையனும் இன்னொரு ஆளும், நான் எழுந்திரிக்கறப்ப டிவிஎஸ்ல வந்து கிட்டிருந்தாங்க. உடனே டிவிஎஸ்ஸை ஆப் பண்ணிட்டேன். பத்தடி தூரம் வண்டியை தள்ளிகிட்டு போய் ஸ்டார்ட் பண்ணினாங்க. உடனே நான் இந்த பையன புடிச்சிகிட்டேன்..” என்றது

“இன்னோரு ஆளு இருந்தாருன்னு சொல்ற... அவரை புடிக்கமா இவனை ஏன் பிடிச்ச..?” என்றார் பஷீர் பாய்.

இதைக் காதில் கேட்ட ராமுவுக்கு  தூக்கி வாரிப் போட்டது. ‘யோவ் பாயி... அதுகிட்ட போட்டுக் கொடுத்து என்னை காலி பண்ண பாக்கறியா..?’ என்று பஷீரின் சட்டையைப் பிடித்து கேட்க நினைத்தான். ஆனால் ஆவி மேல் உள்ள பயத்தாலும், அதை பேசவைக்கின்ற பஷீர் மேல் உள்ள பயத்தாலும் கிலிபிடித்தவன் போல் அங்கேயே நின்றான்.

“இந்த பையன் எனக்கு தெரிஞ்சவன்தான். என்னோட அக்கா சிவகாமியோட ஒண்ணு விட்ட மாமா பையன்” என்று அது சொல்லவும், சங்கரின் வலது புறம் நின்று கொண்டிருந்த சங்கரின் சித்தி திடீரென்று அழ ஆரம்பித்தார்.

‘அவர் ஏன் திடீரென்று அழுகிறார்..?’ என்று நவநீதன் குழப்பமாய் பார்க்க, அவன் குழப்பைத்தை அதிகப்படுத்துவது போல் ஆவியும், அலமேலுவைப் பார்த்தபடியே அழ ஆரம்பித்தது.

ஆவி அழுவதைக் கண்ட பஷீர் முதற்கொண்டு அங்கிருந்தோர் அனைவரும் குழப்பத்திற்கு ஆளானார்கள்.

“ஏய்... அந்தம்மாவைப் பார்த்து நீ ஏன் அழற...” என்றார் பஷீர்.

“ம்ம்ம்.. ம்ம்ம்.... அவங்கதான் என்னோட சிவகாமி அக்கா...” என்று சங்கரின் சித்தியைப் பார்த்த ஆவி, ஏக்கமாய் அழுதபடியே சொன்னது.

“அடப்பாவி... நாசமாப் போனவனே... உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டியே... உசுரோட இருந்தப்பதான் குடிச்சிட்டு தொல்ல கொடுத்த.. செத்துமாடா தொல்ல தர பாவி... வேதாசலம் மாமாவோட காசை எவ்ளோ தின்ன... அந்த நன்றி விசுவாசம் கொஞ்சம் கூட இல்லையா... கண்ணா... கண்ணான்னு எம் மாமா உன் மேல பாசமா இருந்தார். இப்ப அவரு கண்ணையே குத்த வந்திருக்கியே..!” என்று சிவகாமி தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். வேதாசலம் பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தார்.

“அக்கா... அக்கா...” என்றபடியே ஆவியும் அதிகமாய் அழ ஆரம்பித்தது.

சற்று நேரம் அமைதி காத்திருந்த பஷீர் பாய் சிவகாமியைப் பார்த்து “அழறத நிறுத்தும்மா..” என்றார்.

சிவகாமி அழுவதை நிறுத்த முடியாமல் சேலைத்தலைப்பால் தன் வாயைப் பொத்திக் கொண்டார். ஆனால் விசும்பல் வந்து கொண்டே இருந்தது.

சிவகாமியிடம் இருந்து சத்தம் வராமல் போகவே, சங்கரின் பக்கம் திரும்பிய பஷீர் “டேய்… போதும் அழறதை நிறுத்து...” என்றார்
சங்கரும் அழுவதை நிறுத்திக் கொண்டான்.

இதைகண்ட நவநீதன் கண்களுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை.. ‘இது எப்படி சாத்தியமாகும்?’ என்று அவன் மனதில் அடுக்கடுக்காய் எழுந்த கேள்விகளை பஷீரின் கணீர்க் குரல் கலைத்தது.

“சரிடா.. நீ வண்டியை பார்த்து ஓட்டி வந்திருக்கலாம்ல.. வண்டி ஓட்டும் போது என்ன தப்பு செஞ்ச..?” என்றார் பஷீர்.

“காது குத்து முடிஞ்சதும், என் கூட்டாளிங்களோட கொஞ்சம் தண்ணியடிச்சுட்டேன். ஆனா... நிதானமாத்தான் வண்டியை ஓட்டிகிட்டு வந்தேன். சிங்கபுரம் பாலத்தை தாண்டி வர்றப்ப, எதுக்கால வந்த லாரியின் லைட் வெளிச்சம் என்னை தடுமாற வைக்க, போதையும் கிறுகிறுக்க, லாரியில மோதிட்டேன். லாரி என் மேல ஏறிடிச்சி” என்றது அந்த ஆவி.

“தெரிஞ்ச  பையன்னு பிடிச்சிட்ட.. பரவாயில்ல... இத்தனை நாளா இந்த பையனோட இருந்தது போதும்... அவனவிட்டு ஓடிப் போயிடணும். போறியா..?” என்று அதிகாரமாக கேட்டார் பஷீர்.

“போகமாட்டேன்..!” என்று ஆவி சொன்னதுதான் தாமதம், அவனுடைய அக்காவான (சங்கரின் சித்தி) சிவகாமி அடிக்க ஓடி வந்தார்.

“டேய்.. கொள்ளையில போனவனே... ஒழுங்கா ஓடிப் போயிடு.. போய்த் தொலைடா.. ஏண்டா எங்களை இப்படி சித்திரவதை பண்ற…” என்று அடிக்க வந்தவரை, மிகவும் பாவமான முகத்தை வைத்துக் கொண்டு “அக்கா...” என்றது ஆவி.

சிவகாமியை பஷீர் தன் சைகையால் தடுத்து நிறுத்தினார்.

வேதாசலமும், கமலம்மாளும் நடந்ததைப் பார்த்துக் கொண்டு சிலையாக அமர்ந்திருந்தனர்.

பஷீர், சங்கரைப் பார்த்து “டேய்.. அதவிடு... பிரியாணி வேணுமா? சாப்பாடு வேணுமா..? கோழி முட்டை வேணுமா..? தோசை வேணுமா..? எது வேணுமோ அதை கேட்டு வாங்கி சாப்பிடுட்டு, பையன விட்டு ஓடிப் போயிடணும்... போறியா..? அப்படி போகலேன்னா எருக்கங் குச்சியாலே அடிச்சே உன்ன கொன்னுடுவேன். என்ன சொல்ற..?” என்றார்.

“எருக்கங் குச்சியா... வேணாம்.... நான் போயிடறேன்… ம்ம்” என்றது ஆவி.

“என்ன வேணும் கேளு..?” - இது பஷீர்

“கோழிமுட்டையும்... பிரியாணியும்..!” என ஆவலாய்க் கேட்டது ஆவி.

“அடி செருப்பால.. மணி இப்ப ராத்திரி 10. 45 ஆயிடிச்சு.. எந்தக் கடையும் இருக்காது... வேற ஏதாவது கேளு... சோடா... கலர் ஏதாவது வேணும்னா கேளு..?” என்றார் பஷீர்.

கேட்டது கிடைக்கலயே என்ற ஆதங்கத்தோடு பாயை ஒரு மாதிரியாக ஆவி பார்த்தது.

“என்னடா பாக்கற... இந்த பாயை என்ன பண்ணலாம்னா.. உன்னைதாண்டா ஒரு வழி பண்ணப் போறேன்… என்ன வேணும் கேளு…” என்று சங்கரின் தலையில் பட்டென்று ஒரு அடி அடித்தார்.



“அடிக்காதீங்க... பெப்ஸியும் முறுக்கும் வேணும்…” என்றது ஆவி.

பஷீர், வேதாசலம் பக்கம் திரும்பி “ரோட்டுப்பக்கம் ஒரு பெட்டிக் கடை இருக்குல்ல.. அங்க போய் பெப்ஸியும் முறுக்கும் வாங்கிட்டு வாங்க...” என்றார்.

வேதாசலம் ராமுவைப் பார்த்தார். அவன் முகத்திலிருந்த கிலியைப் பார்த்ததும், ‘இவன் போகமாட்டான்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவர், அவனருகில் யானை போல் நின்ற வெள்ளியங்கிரியைப் பார்த்தார்.

“டேய் வெள்ளியங்கிரி... ஓடிப் போய் பெப்ஸியும்.. முறுக்கும் வாங்கிட்டு வா..” என்றார்.

வேதாசலம் பார்வை தன் மீது பட்டபோதே படபடப்பிற்குள்ளான வெள்ளியங்கிரி, அவர் இப்படிச் சொன்னதும் “ஐயோ மாமா... நான் போக மாட்டேன்.. எனக்கு பயமா இருக்கு... நான் போகல...” என்றான். அவன் பதிலில் பீதி கலந்திருந்தது.

வேதாசலம் முகம் சுருங்கிப் போய்விட்டது. தன் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாயை எடுத்தவர், ‘பெரிய ஆளா இருக்கானுங்க.. இவனுங்களே இப்படி பயப்படறானுங்களே... இவனுங்களைப் போய் துணைக்கு கூட்டி வந்தோமே’ என தன்னைத் தானே நொந்து கொண்டார்.

அப்போது நவநீதனின் குரல் வேதாசலத்தை நிமிரவைத்தது. “காசை கொடுங்க! நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று சொன்னபடியே நவநீதன் அவர் முன்பு வந்து நின்றான்.

நூறு ரூபாயை அவனிடம் கொடுத்து “போய் வாங்கிட்டு வாப்பா...” என்றார்.

பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ஒற்றை சந்தில் கடையை நோக்கிப் போன நவநீதனை ராமுவும், வெள்ளியங்கிரியும் கிலியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதே நேரம், சந்திற்குள் போன நவநீதனை ஆவியும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.


Monday, June 13, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 5 (உண்மைச் சம்பவம்)

ப்போது.... வேகமாய் போய்க்கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு ஊமையானது.

விகாரமாய் சிரிக்கத் தொடங்கிய வேதாசலம், திடீரென்று கர்ண கடுரமாய் கத்த ஆரம்பித்தார்.

“டேய்... எம்புள்ளைய காப்பாத்த கருப்பசாமி இருக்கான்டா... எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான்...” என்றபடியே பல்லை நற நறவென்று கடித்தார்.

ஆட்டோ திடீரென்று நின்றதால் கூட அரண்டு போகாத ஆட்டோ டிரைவர், வேதாசலத்தின் திடீர் குரலால் சற்று அரண்டு போனான். ஆட்டோவின் இயக்கம் நின்றுபோனதால் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான்.

‘போன சவாரிக்கு முன்புதானே டீசல் டேங்க் புல் பண்ணினேன்? புது ஆட்டோ இது... ஏன் நின்னு போச்சு?’ என மனதிற்குள் தீவிரமாய் யோசித்தபடியே ஆட்டோவின் கிக்கரை, தடக் தடக்கென்று கையால் தூக்கி அடித்தான். ஆட்டோவிற்கு உயிர் வருவதாய்த் தெரியவில்லை.

இதனிடையே குரூரமாக சிரித்துக் கொண்டிருந்த வேதாசலம் திடீரென அழ ஆரம்பித்தார். “ஏய்... எம் பையன விட்டுடு... எதுக்கு எங்க பின்னாடியே வர... வெள்ளை உருவமா வந்து தொலையறியே...” என ஆட்டோவின் பின்புறமாய் பார்த்து கத்தியவர், “எப்பா ஆட்டோ டிரைவர் அது ஆட்டோ பின்னாடியே வருதுப்பா... சீக்கிரம் எடு, இல்லன்னா அது ஆட்டோவை பிடிச்சிடும் போல இருக்கு... சீக்கிரம்… சீக்கிரமா ஆட்டோவை எடு...” என்று அவசரப்படுத்தினார்.




இவரது திடீர் எச்சரிக்கையால் ஆட்டோவில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். ஆட்டோ டிரைவரின் முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது போல் இருந்தது.

‘என்னடா இது? போயும் போயும் பேய் சவாரிகிட்ட போய் மாட்டிகிட்டோமே... புது ஆட்டோ திடீர்னு நின்னதுக்கு இதுதான் காரணமா இருக்குமா..?’ என்ற உதறல் அவனுக்குள் எழும்ப, வண்டியின் கிக்கரை வேகமாக இழுத்து அடித்தான். அடித்த அடி தாங்காமல் “வ்ர்ர்ரூம்...” என்ற படியே ஸ்டார்ட் ஆனது.

ஸ்டார்ட் ஆனதுதான் தாமதம், ஆட்டோவை புயல் வேகத்தில் கிளப்பினான். அந்த தேசிய நெடுஞ்சாலையில் பலமுறை சவாரி செய்திருந்தாலும், இந்த வேகத்தில் இதுவரை போயிருக்கமாட்டோம் என்று அவனுக்கே தோன்றும் அளவுக்கு ஆட்டோவை விரட்டினான்.

நவநீதன் ஆட்டோவின் பின்புறம் திரும்பித் திரும்பி பார்த்தான். வேதாசலம் சொன்னது போல ஒரு உருவமும் தென்படவில்லை. எங்கும் இருளாகத்தான் இருந்தது. நவநீதனிற்கு ஒரே குழப்ப மயம். ‘இந்த சாமி, கீமி..., பேய், பிசாசு எதுவுமே இல்லன்னு சொல்ற ஆள் நான். நம்ம கண் முன்னாடியே இவர் வெள்ளையா உருவம் வருதுங்கறாரே’ என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

அந்த சிந்தனையை கலைப்பது போல் மீண்டும் வேதாசலம் தன் பற்களை கடிக்க ஆரம்பித்தார். “ஏய்... வண்டி பின்னாடியே வரியா... நான் கூட இருக்கிறேங்கிற பயம் கொஞ்சம் கூட இல்லையா உனக்கு... வாடா... வா... கருப்பசாமியா... நீயான்னு ஒரு கை பாத்துடறேன்...” என்று இருட்டைப் பார்த்து கத்தினார்.

இதைக் கேட்ட கமலம்மாள் டிரைவரைப் பார்த்து, பதற்றமான குரலில் “இந்தாப்பா... ஆட்டோ டிரைவர், என்ன நடந்தாலும் சரி. ஆட்டோவை மட்டும் எங்கயும் நிறுத்தாத. பாய் வீட்டுக்கு முன்னாடிதான் வண்டிய போய் நிறுத்தணும்” என்றார். அவர் குரலில் நடுக்கம் இருந்தது.

இவர்களிருவரும் பேசுவதைக் கேட்ட ஆட்டோ டிரைவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. அவன் தன் மனதிற்குள் அவன் இஷ்ட தேவதைகளை வேண்டிக் கொண்டான் போல, அவன் முணுமுணுத்தது, நவநீதன் காதில் துல்லியமாய் கேட்டது. ‘இன்னும் நாலே கிலோ மீட்டர்தான். தேவியாக்குறிச்சிக்கு போயிடலாம்’ என்று எண்ணியபடியே, அந்த பயத்திலும் ஆட்டோவை வேகமாக விரட்டினான்.

வேதாசலம் மீண்டும் ஒரு முறை திடீரென்று அழ ஆரம்பித்தவர். “டேய் சங்கரு... நம்ம குலதெய்வம் கருப்பசாமி உன்னை காப்பாத்துவான்டா... வெள்ளை உருவம் உன் பின்னாடியே வருதுன்னு கவலப்படாத... கருப்பசாமி இருக்கான்டா” என்றார். சங்கர் எந்த சலனமுமில்லாமில் தூங்கிக் கொண்டிருந்தான்.

நவநீதன் முகத்தில் குழப்பரேகைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆட்டோவின் பின்புறம் பலமுறை திரும்பிப் பார்த்தான். உருவம் ஏதும் தென்படவில்லை. அதற்கு மாறாக ஆட்டோவின் பின்புறம், சுமார் 10 மீட்டர் இடைவெளியில் ராமுவும் அவனது நண்பன் வெள்ளியங்கிரியும் டிவிஎஸ்ஸில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்ததுதான் தெரிந்தது.

வெள்ளியங்கிரி பார்வைக்கு திடகாத்திரமாகத் தெரிந்தான். வயது 28 இருக்கலாம். 90 கிலோ எடை உள்ள உருட்டுக்கட்டை உடம்பு. அவனை வைத்துக் கொண்டு டிவிஎஸ்ஸை ஓட்டி வருவதற்கு ராமு சிரமப்பட வேண்டியிருந்ததை நவநீதன் கவனிக்கத் தவறவில்லை.

திடீரென்று வேதாசலத்திடமிருந்து எழுந்த கைத்தட்டல் சத்தம், நவநீதனின் பார்வையை ஆட்டோவிற்குள் மீண்டும் திரும்ப வைத்தது. “வா... வா... ஆட்டோ பின்னாலயே வரியா..? வா உன்னை நான் பாத்துக்கறேன்” என்றபடியே ஆட்டோவிற்குள் திமிறிக் கொண்டிருந்தவேதாசலத்தின் நெற்றியில், கமலம்மாள் தான் கையோடு கொண்டு வந்திருந்த திருநீறை அள்ளி பூசினார். அதன் பிறகுதான் வேதாசலம் தன் இயல்பு நிலைக்கு வந்தார். மீதமிருந்த திருநீறை அள்ளி சங்கரின் நெற்றியில் பல்வேறு கடவுள்களின் பெயரைச் சொல்லி பட்டையாக இழுத்துவிட்டார்.

தன் கண் முன்னே நடந்தவற்றையெல்லாம் பார்த்த பிறகும் இதையெல்லாம் நம்புவதா? வேண்டாமா? என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் நவநீதன். தேவியாக்குறிச்சியில் பாய் வீட்டிற்கு முன்பு, ஆட்டோ வந்து நிற்கும் வரை அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ஆனாலும் அவனால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

ஆட்டோ வந்து நின்ற இரண்டு நிமிடங்களில் ராமுவும், வெள்ளியங்கிரியும் வந்து சேர்ந்தார்கள். அதற்குள் நவநீதன் உள்பட ஆட்டோவிலிருந்த அனைவரும் இறங்கியிருந்தார்கள். சங்கரை கைத்தாங்கலாக கீழே இறக்கினார்கள்.

பெரிய கான்கிரீட் வீடு கண்ணுக் தெரிந்தது. அதன் மேற்புறத்தில் ‘பஷீர் மன்ஜில்’ என்று எழுதியிருந்தது. அந்த வீட்டின் வலதுபுறத்தை ஒட்டி, ஒரே ஒரு ஆள் மட்டும் உள்ளே போய் வரும்படியான அளவிற்கு குட்டிச் சந்து ஒன்று இருந்தது. அந்த குட்டிச்சந்தை ஒட்டியபடி ஒரு பெட்டிக் கடை இருக்கவே, அந்த கடைக்காரரைப் பார்த்து வேதாசலம் கேட்டார் “ஏம்பா... பஷீர் பாய் இருக்கிறாரா..?”

“ம்ம்... வீட்டிலதான் இருக்கிறாரு... இந்தா... இந்த சந்து வழியா உள்ளே போய், சோத்தாங்கை பக்கமா திரும்புங்க, பஷீர் பாய் வீட்டின் பின்புறம் வரும். அங்க போய் பாருங்க இருப்பாரு...” என்று வழியையும் காட்டிவிட்டார்

அந்த சந்திற்குள் முதல் ஆளாய் வேதாசலம் நுழைந்தார். அவர் பின்னாடியே நடையைக் கட்டிய ஆட்டோ டிரைவர் “ச்சே... இந்த இருட்டுல எப்படி போறது, ஒரு லைட்டை கூட போடமுடியாதா..?” என்று முணுமுணுத்தபடியே சென்றான்.

அவன் பின்னாடி கமலம்மாளும், அவனது சித்தி சிவகாமியும் சங்கரை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு அடுத்து, நவநீதன், ராமு, வெள்ளியங்கரி என வரிசையாக வந்தனர்.

முப்பதடி தூரம் சென்றதும், பெட்டி கடைக்காரர் சொன்னது போல் வலது புறம் திரும்பி, பாய் வீட்டின் பின்புறத்தை அடைந்தனர். அங்கே ஒரு வயதான அம்மா தலையில் முக்காடு போட்டு உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் “ஏம்மா... பாய் இருக்கிறாரா..?” என்று வேதாசலம் கேட்டார்.

“இருக்கிறார்... உட்காருங்க கூப்பிடறேன்…” என்றபடியே அந்த அம்மா, வீட்டின் பின்புற வாசல் வழியே உள்ளே போனார்.

நவநீதன் அந்த இடத்தை ஆராய்ந்தான். அந்த வீட்டின் பின்புறம் வெட்டவெளியாக இருந்தது. இங்கிருந்து பார்த்தால் தேசிய நெடுஞ்சாலையும், அதன் இருபுறமும் காவலுக்கு நின்றிருப்பது போல் இருக்கும் புளியமரங்களும் கண்ணுக்கு தெரிந்தன.

வீட்டின் பின்புற வாசலில், 20 அடிக்கு 20 அடி திறந்தவெளி இடம் இருந்த்து. அதன் மத்தியில் ஒரு கட்டில் போடப்பட்டிருந்தது.

சற்று நேரத்தில் முண்டா பனியன், லுங்கி சகிதம் ஒருவர் வந்து கட்டிலில் அமர்ந்தார். தலையில் குல்லாவும், தாடையில் வைத்திருந்த நீள தாடியுமே சொல்லியது அவர்தான் வேதாசலம் தேடிவந்த பாய் என்று.

அதை அவரே ஒத்துக் கொள்வது போல் பேச ஆரம்பித்தார். “நான்தான் நீங்க தேடி வந்த பஷீர் பாய்.. என்ன விஷயம் சொல்லுங்க..?” என்றார்.

நடந்த விஷயத்தை விலாவரியாக சொல்லி முடித்தார் வேதாசலம். அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்த பஷீர் பாய், "சரி பையனை என் முன்னாடி உட்கார வையுங்க" என்றார்.

அதன்படி பாயின் முன்புறமாக, அவரைப் பார்த்தபடி சங்கரை உட்கார வைத்தனர். அவன் தலை தொங்கிப்போயிருந்த்தது. வாயில் எச்சில் ஒழுகியபடி, தூக்கத்தில் இருந்தான். சங்கர் உட்கார வைக்கப்பட்டதும், தனது வீட்டுப்பக்கம் திரும்பிய பஷீர் “ஒரு சொம்பு தண்ணியும், ஊதுபத்தியையும் எடுத்துட்டு வாம்மா…” என்று குரல் கொடுத்தார்.

“இதோ...எடுத்துட்டு வரேங்க…” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

சங்கரைப் பார்த்தார் பஷீர். அவன் முகம் சுருங்கிப் போய், இருளடைந்து போயிருந்தது. வாயில் இருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருந்தது. முதுகெலும்பு இல்லாதவன் போல முன்புறம் வளைந்து கிடந்தான். கண்கள் உள்ளே சொருகியிருந்தன.

பஷீர் அவனை விடுத்து மற்றவர்களை பார்த்தார். கழுகு சிறகை விரித்திருப்பது போல் அவரை சுற்றி அனைவரும்  அரை வட்ட வடிவில் நின்றிருந்தனர்.

சில நிமிடங்களில் அவர் கேட்ட பொருள்களை முக்காடு போட்டிருந்த அம்மா, எடுத்து வந்து அவரிடம் கொடுத்து விட்டுப் போனார்.

சங்கர் எவ்வித அசைவுமின்றி உட்கார்ந்திருந்தான். அவன் நினைவு இல்லாதவன் போல் காணப்பட்டான்.

“பையோனாட பேரு என்ன?” என்று வேதாசலத்திடம் கேட்டார்

“சங்கருங்க... என் வீட்டுக்கு மூத்த பையன்ங்க... நீங்கதான் எப்படியாச்சும் காப்பாத்தணும்..” என்று உடைந்த குரலில் சொன்னார் வேதாசலம்.

“சரி பண்ணிடுவோம்... எல்லாம் அல்லா விட்ட வழி” என்று வானத்தைப் பார்த்தபடி சொன்னார்.

சங்கரின் முன்பு ஒரு சொம்பு தண்ணீரை வைத்தார். பத்திகுச்சி பாக்கெட்டை பிரித்தவர் அதில் ஒரு கத்தையை உருவி எடுத்தார். “அல்லாஹ்...” என்று சொன்னது மட்டும் காதில் கேட்டது. மற்றவை எல்லாம் அவர் உதிர்த்த வார்த்தைகள் அனைத்து உருதில் இருந்தபடியால் யாருக்கும் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.

ஊதுபத்தி கற்றையாக எடுத்துக் கொளுத்தினார். எரிந்து முடித்த ஊதுபத்திகள் அனைத்தும் தங்கள் சிவப்புகண்ணை காட்டினது மட்டுமின்றி, கண்களின் வழியே புகையை வானத்தை நோக்கி கசிய விட்டன.

சங்கரின் முகத்திற்கு நேரே அந்த புகையை காட்டியபடி, பஷீர் உருதில் மந்திரங்களை உதிர்க்க ஆரம்பித்தார். ஐந்து நிமிடங்கள் கழிந்தும் சங்கரிடமிருந்து எந்த அசைவுமில்லை. சங்கரை சுற்றி நின்றிருந்த அனைவரின் கண்களும் சங்கரையே மொய்த்திருந்தன.

அவர் கொளுத்திய ஊதுவத்திகள் அனைத்தும் சாம்பலாகி உதிர்ந்தது. மிச்சமிருந்த சாம்பலனைத்தையும் சொம்பிற்குள் தட்டியவர், இன்னொரு ஊதுவத்தி கற்றையை எடுத்து பற்ற வைத்தார்.

ஊதுவத்தி புகையை சங்கரின் முகத்தில் பரவ விட்டபடி உருதில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

அதுவரை வேறு உலகத்தில் இருப்பது போல் அசைவற்று இருந்த சங்கர் மெல்ல தன் உடலை அசைக்க ஆரம்பித்தான்.

திடீரென்று “பச்… ப்ச்… ப்ச்…” என்று ஏதே சலிப்பு வந்தவன் சத்தமிடுவது போல் சத்தமிட்டான்.

பாய் சற்று தெம்பானவர் போல் தனது மந்திரங்களை வேகமாக முணுமுணுக்க ஆரம்பித்தார்.

புகையை நன்கு அவனது முகத்தில் காட்டியபடி சங்கரை எழுப்ப முயன்றார்... "தம்பி... தம்பி.. சங்கர் ... எழுந்திரு... சங்கர்...”



சங்கர்... "ஹூம்... ஹீம்..." என வித்தியாசமாக குரல் கொடுக்க ஆரம்பித்தான்.

அவன் வித்தியாசமாய் குரல் கொடுத்த்தும், அதுவரை புகையை கசிய விட்டுக் கொண்டிருந்த ஊதுபத்திக் கத்தை, திடீரென்று முழுதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

தீயைக் கண்ட பாய் சட்டென்று சொம்பிற்குள் நனைத்தவர்... “டேய்.. இந்த பஷீர்கிட்டயே விளையாடறியா...?” என்று ஒங்கிய குரலில் கத்தவே... அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் திடுக்கிட்டு, திகிலில் உறைந்தார்கள்.

Monday, June 06, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 4 (உண்மைச் சம்பவம்)

நாயின் ஊளை சத்தத்தைக் கேட்ட மறு வினாடி சங்கரும் மெலிதாக ஊளையிட ஆரம்பித்தான்.

அதைக் பார்த்த வேதாசலம் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய், சிலை போல் ஸ்தம்பித்து நின்றார்கள்.

ஊளைச் சத்தம் மெல்ல அடங்கியது. ராமனாதன் போட்ட ஊசியும், மருந்தும் வேலை செய்யவே சற்று நேரத்திற்கெல்லாம் அப்படியே தூங்கிப்போனான் சங்கர்.

அதிர்ச்சியில் இருந்தவர்களின் ஒவ்வொருவர் முகத்திலும் கவலை அப்பிக் கொண்டது. அவர்களை வேதாசலத்தின் குரல் நிமிர வைத்தது “போங்க... எல்லோரும் போய் படுங்க... மணி இப்பவே மூணாகுது... எல்லாம் காலைல பேசிக்கலாம்... நம்ம சங்கருக்கு ஒண்ணும் ஆகாது” என்றார்.


“நான் பையன் பக்கத்திலயே இருக்கேன். நீங்க போய் படுங்க…” என்று கமலம்மாள் சொல்லவும், வேதாசலமும் அவரது இரண்டாவது மகன் சந்திரனும் உள்ளே சென்று படுத்துக் கொண்டனர்.

கடைக்குட்டி செல்வி மட்டும் கமலம்மாள் அருகிலேயே படுத்துக் கொண்டாள். சங்கரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கமலம்மாளும் அப்படியே தூங்கிப் போனார்.

*****

காலைக் கதிரவன் தன் சிவப்பு நிறத்தை தொலைத்து விட்டு, மெல்ல மெல்ல வெள்ளை நிறத்திற்கு மாறிக்கொண்டிருந்தான். காகங்கள் கரைந்து கொண்டிருக்க, சேவல் ஒன்று காகங்களின் சத்தங்களுக்கு இணையாக கொக்கரித்துக் காட்டியது.

சேவலின் குரல் கேட்டு எழுந்த கமலம்மாள் சங்கரின் முகத்தைப் பார்த்தார். அவனது முகம், நேற்று இரவு பார்த்ததை விட மிகவும் மோசமான அளவில் சூம்பிப் போயிருந்தது. கண்கள் உள்ளே போயிருந்தன. இன்னமும் அவன் தூங்கிக் கொண்டே இருந்தான்.
அவனை நெருங்கி, அவன் நெற்றியில் கைவைக்கப் போன கமலம்மாளை, காலிங் பெல் சிணுங்கி அழைத்தது.

சங்கரைத் தொடாமல், வாசலை நோக்கி நடந்து கொண்டே “யாரது..?” என்று குரல் கொடுத்தார். மீண்டும் அழைப்புமணி சிணுங்கவே,  கமலம்மாள் கதவைத் திறக்க வெளியே கமலம்மாளின் அம்மாவான பாவாயி நின்றிருந்தார். 60 வயது தேகத்தில் அனைத்தும் நரைத்துப் போயிருந்தன. முகத்தில் தனது மகளை பார்த்து விட்ட மகிழ்ச்சி, அவரின் புன்னகையில் தெரிந்தது.

பாவாயியைப் பார்த்ததும் “வாம்மா..” என்றார் கமலம்மாள். அவர் குரலில் தன் அம்மா வந்திருக்கிறாரே என்ற மகிழ்ச்சி துளியுமில்லை.

“எப்படிம்மா இருக்க... என் பேரபிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா..?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த பாவாயியின் கண்களில் சங்கர் தென்பட்டான்.

அவனிருந்த நிலையைக் கண்டதும் பதறியபடி “யெய்யா சங்கரு... சங்கரு...” அந்த தள்ளாத வயதிலும் ஓடிச் சென்று தன் பேரனை மடியில் கிடத்திக் கொண்டார்.

“அடியே… என்னடி ஆச்சு எம்பேரனுக்கு.. என்னடி ஆச்சு... ஏண்டி எம்பேரன் இப்படி கிடக்கிறான்...” என்று அழுதபடியே கேட்டார் பாவாயி.

கமலம்மாளும் அழுதபடியே, ஆரம்பம் முதல் இறுதி வரை சொல்லி முடிக்கவும், வேதாசலம் உள் அறையிலிருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

வெளியே வந்தவர் பவாயியைப் பார்த்ததும் “வாங்க அத்தை…” என்றார். அவர் குரலிலும் மகிழ்ச்சி இல்லை.

பாவாயி தன் சேலை தலைப்பால் கண்ணீரை துடைத்தபடியே “வரேன் சாமி... புள்ளையை இப்படி ஆகறதுக்கு வுட்டுட்டீங்களே…” என்றார்.

“நான் என்ன அத்தை செய்யட்டும். வசூலுக்கு நீ போகதடா... ராமு மட்டும் போயிட்டு வரட்டும்னேன். அத கேக்காமா போனான். இப்படி நிலவரம் தெரியாம திரும்பி வந்தான். இதுவரைக்கும் இவனுக்கு என்ன ஆச்சின்னே தெரியல… நேத்து ராத்திரி ராமனாதன் வந்து பார்த்துவிட்டு போனான். ஏதோ புதுகாய்ச்சலுங்கறான்” என்றார் வேதாசலம்

“பார்த்தா காய்ச்சல் மாதிரி தெரியலயே சாமி..? பையன் வாயில எச்சி ஒழுதுகிட்டே இருக்கு. முகமும் ரொம்ப இருட்டடைஞ்சு போய் கிடக்கே..?” என்றார் பாவாயி.

“ஒண்ணும் ஆகாது அத்தே... இன்னிக்கு சாயந்திரம் ராமனாதன் வரேன்னிருக்கான். அவன்கிட்ட விசாரிப்போம்…” என்றவாறே, அங்கே நிற்க மனமில்லாமல் வெளியில் கிளம்பிப் போனார் வேதாசலம்.

“சரிம்மா... நீ உன் பேரனை பாத்துக்கிட்டிரு... உனக்கு நான், காபி போட்டு எடுத்துகிட்டு வரேன்…”என்றபடி புடவைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சமையலறை பக்கம் போனார்.

பாவாயியின் குரல் கேட்டு எழுந்த செல்வி பாவாயியைக் கண்டதும் “பாட்டி…” என்றாள்.

“வா சாமி...” என்ற பாவாயி தனக்கு பிடித்த தெய்வங்களின் பெயரையெல்லாம் அழைத்தவர், “என் பேரனை நீங்கதான் காப்பாத்தணும் சாமிகளா…” என்றபடி கையோடு கொண்டு வந்திருந்த திருநீரை சங்கரின் நெற்றியில் பட்டையாக இழுத்து விட்டார். அப்படியே செலவிக்கும் வைத்து விட்டார்.

சங்கருக்கு இப்படி ஆகிவிட்டது என்று தெரிந்ததும் அவனது சக நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் வந்து விசாரித்து விட்டுப் போயினர்.



*******

கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான் நவநீதன். குன்றத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., படித்துக் கொண்டிருக்கிறான்.

சங்கரின் நண்பனாக சிறுவயது முதல் இருப்பவன்தான் இந்த நவநீதன். இருவருக்கும் ஒரே வயதுதான்.

அடுத்தடுத்த தெருவில் இருவரும் வசித்துக் கொண்டிருந்தாலும் இரு குடும்பத்திற்குமிடையே ஏற்பட்ட குழாயடிச் சண்டையால், இவர்களின் நட்பு தெரு அளவில் முறிந்து போய் விட்டது. இருப்பினும் கிரிக்கெட் விளையாடும் இடங்களில் இவர்களது நட்பு தெடர்ந்து கொண்டுதான் இருந்தது.

நவநீதன் வீட்டிற்கு வந்த போது மாலை 5 மணி. வீட்டிற்கு வந்தவன் சில புத்தகங்களை எடுத்து சைக்கிளில் வைத்துக் கொண்டு நூலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

இரண்டு மணி நேரம் கழித்து நூலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் அவனது நண்பன் சீனியைப் பார்த்தான்.
பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி விட்டு “டேய் மாப்ள... என்னடா ஆச்சி உனக்கு..? ஏண்டா என்ன பார்க்க வரல..?”

“ஸாரி மச்சி... ரொம்ப வேலை அதான் உன்ன பாக்க வர முடியல”

“சரி பரவால்ல விடு... ஆமா, ஞாயித்துக் கிழமை ஆனாலே கிரிக்கெட் விளையாடறதுக்கு கிரவுண்டுக்கு வந்துடுவ? ஏண்டா இப்பல்லாம் வரமாட்டேங்கற..? நீ நல்ல பௌலர் ஆச்சேடா..? நீ இல்லாம டீமே ஒரு மாதிரியா இருக்கு தெரியுமா..?”

“அடப்போ மச்சி... அந்த சங்கர் பய எப்போ என் பௌலிங்கை அடிச்சி கிழிச்சானோ, அதிலிருந்து கிரிக்கெட் மேலேயே வெறுப்பு வந்திடிச்சு... அத விடு... நம்ம பசங்க எல்லாம் எப்படிடா இருக்காணுங்க..?”

“எல்லாம் நல்லா இருக்காணுங்கடா. இப்பெல்லாம் தினமும் காலைல ஆறுமணிக்கே கிரவுண்டுக்கு வந்துடறானுங்க... நீ மட்டும்தான் மிஸ்ஸாகுற...”

“கோச்சுக்காதடா... வேலை அதிகமாயிடிச்சி... ஆமா அந்த சங்கர் தடியன் எப்படி இருக்கான்..?”

“தெரியலடா.. ரெண்டு நாளா கிரவுண்டுக்கே வரல... ஆளயே பார்க்க முடியல… அவன் இல்லாதது எதிர் டீம்ல ஒரு குறையாவே இருக்கு”

“அதானே... ஆப்போசிட் டீம் கேப்டனாச்சே நீ... உனக்கு விளையாட சரியான எதிர் டீம் ஆட்கள் வேணுமே... சரிடா மச்சி.. எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன். முடிஞ்சா இந்த ஞாயித்துக் கிழமை விளையாடறதுக்கு வர பாக்கறேன்...” என விடைபெற்றுக் கொண்டான் சீனி.

“சரி மாப்ள… அப்ப நானும் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றபடியே நவநீதன் தனது சைக்கிளை கிளப்பினான். வழியில் அங்கே, இங்கே என சுற்றி விட்டு, வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு எட்டு முப்பது ஆகி இருந்தது.

வந்ததும் கைகால்களை கழுவிக் கொண்டு உட்கார்ந்தான். சன் டிவியில் பெப்ஸி உமா போலியான புன்னகையோடு யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

கண்கள் டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க, நவநீதனின் அம்மா தட்டில் சாதம் வைத்துக் கொடுத்தார்.

டிவி பார்த்தபடியே சாதத்தை நவநீதன் சாப்பிட்டு முடிக்கவும், மணி ஒன்பது என்று அவன் வீட்டு கடிகாரம் மணியடிப்பதற்கும் சரியாக இருந்தது.

காற்று வாங்குவதற்காக வெளியில் வந்த நவநீதனை, பக்கத்து தெருவிலிருந்து வந்த அழுகுரல்கள் கவனத்தை ஈர்த்தது.
'யாரு இந்த நேரத்துல அழுதுகிட்டு இருக்கிறது?' என்று யோசித்தபடியே அங்கே போனான்.

“ஐயோ... என் பேரனை பேய் பிடிச்சிருச்சி போலருக்கே... அடி மகமாயி உனக்கு கண்ணில்லையா...” என்று அழுதபடியே தெய்வங்களை வசைபாடிக் கொண்டிருந்தார் பாவாயி.

கிரிக்கெட் விளையாடும் பையன்கள் அனைவரும் சங்கரின் வீட்டு முன்பு நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்த நவநீதன் “என்னடா எல்லாரும் சங்கர் வீட்டு முன்னாடி நிக்கறீங்க..?’’ என்று கேட்டான்

அங்கே நின்றுருந்தவர்களில் ஒருவனான கார்த்திக், சங்கருக்கு நடந்தவற்றை சுருக்கமாக சொல்லவும், நவநீதன் அதை நம்பவில்லை.

“போடாங்... எதாச்சும் அசிங்கமா சொல்லிடப் போறேன். பேய் பிடிச்சுடுச்சு, பிசாசு அடிச்சிடுச்சின்னு... ஏமாந்தவன்கிட்ட போய் இந்த கதையெல்லாம் சொல்லு…” என்றான் நவநீதன்.

அப்போது சங்கரின் வீட்டு முன்பு, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அவசரமாய் பிரேக் போட்டு நின்றது.

அடுத்த நிமிடமே வீட்டின் உள்ளேயிருந்து சங்கரை வேதாசலமும், அவனுடைய மாமா ராமுவும் கைதாங்கலாக ஆட்டோவிற்கு அழைத்து வந்தார்கள்.

சங்கரைப் பார்த்த நவநீதன் முகத்தில் ஆயிரம் அதிர்ச்சி ரேகைகள் ஓடின. கிரிக்கெட்டில் இவன் பேட் செய்ய வந்தால் ஒரு மாமிச மலை பேட் செய்வது போல் வருவான். இரும்பு போல இருக்கும் கார்க் பந்தை அனாசயமாக சிக்ஸருக்கு விரட்டி அடிப்பான். இவன் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சிரமம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் போன்று இருந்தவன், இப்போது பார்பதற்கு ஓமக்குச்சி நரசிம்மன் போல ஒட்டிப் போய் தெரிந்தான்.

அவனைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நவநீதன், அருகிலிருந்த கார்த்திக்கிடம் “இவனுக்கு என்னாச்சிடா... பாடிபில்டர் மாதிரி இருந்த இவன் உடம்பு, ரெண்டே நாள்ல இப்படி பல்லி மாதிரி ஒடுங்கிப் போச்சு?”


கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான் நவநீதன். குன்றத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., படித்துக் கொண்டிருக்கிறான்.

சங்கரின் நண்பனாக சிறுவயது முதல் இருப்பவன்தான் இந்த நவநீதன். இருவருக்கும் ஒரே வயதுதான்.

அடுத்தடுத்த தெருவில் இருவரும் வசித்துக் கொண்டிருந்தாலும் இரு குடும்பத்திற்குமிடையே ஏற்பட்ட குழாயடிச் சண்டையால், இவர்களின் நட்பு தெரு அளவில் முறிந்து போய் விட்டது. இருப்பினும் கிரிக்கெட் விளையாடும் இடங்களில் இவர்களது நட்பு தெடர்ந்து கொண்டுதான் இருந்தது.

நவநீதன் வீட்டிற்கு வந்த போது மாலை 5 மணி. வீட்டிற்கு வந்தவன் சில புத்தகங்களை எடுத்து சைக்கிளில் வைத்துக் கொண்டு நூலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

இரண்டு மணி நேரம் கழித்து நூலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் அவனது நண்பன் சீனியைப் பார்த்தான்.
பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி விட்டு “டேய் மாப்ள... என்னடா ஆச்சி உனக்கு..? ஏண்டா என்ன பார்க்க வரல..?”

“ஸாரி மச்சி... ரொம்ப வேலை அதான் உன்ன பாக்க வர முடியல”

“சரி பரவால்ல விடு... ஆமா, ஞாயித்துக் கிழமை ஆனாலே கிரிக்கெட் விளையாடறதுக்கு கிரவுண்டுக்கு வந்துடுவ? ஏண்டா இப்பல்லாம் வரமாட்டேங்கற..? நீ நல்ல பௌலர் ஆச்சேடா..? நீ இல்லாம டீமே ஒரு மாதிரியா இருக்கு தெரியுமா..?”

“அடப்போ மச்சி... அந்த சங்கர் பய எப்போ என் பௌலிங்கை அடிச்சி கிழிச்சானோ, அதிலிருந்து கிரிக்கெட் மேலேயே வெறுப்பு வந்திடிச்சு... அத விடு... நம்ம பசங்க எல்லாம் எப்படிடா இருக்காணுங்க..?”

“எல்லாம் நல்லா இருக்காணுங்கடா. இப்பெல்லாம் தினமும் காலைல ஆறுமணிக்கே கிரவுண்டுக்கு வந்துடறானுங்க... நீ மட்டும்தான் மிஸ்ஸாகுற...”

“கோச்சுக்காதடா... வேலை அதிகமாயிடிச்சி... ஆமா அந்த சங்கர் தடியன் எப்படி இருக்கான்..?”

“தெரியலடா.. ரெண்டு நாளா கிரவுண்டுக்கே வரல... ஆளயே பார்க்க முடியல… அவன் இல்லாதது எதிர் டீம்ல ஒரு குறையாவே இருக்கு”

“அதானே... ஆப்போசிட் டீம் கேப்டனாச்சே நீ... உனக்கு விளையாட சரியான எதிர் டீம் ஆட்கள் வேணுமே... சரிடா மச்சி.. எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன். முடிஞ்சா இந்த ஞாயித்துக் கிழமை விளையாடறதுக்கு வர பாக்கறேன்...” என விடைபெற்றுக் கொண்டான் சீனி.

“சரி மாப்ள… அப்ப நானும் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றபடியே நவநீதன் தனது சைக்கிளை கிளப்பினான். வழியில் அங்கே, இங்கே என சுற்றி விட்டு, வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு எட்டு முப்பது ஆகி இருந்தது.

வந்ததும் கைகால்களை கழுவிக் கொண்டு உட்கார்ந்தான். சன் டிவியில் பெப்ஸி உமா போலியான புன்னகையோடு யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

கண்கள் டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க, நவநீதனின் அம்மா தட்டில் சாதம் வைத்துக் கொடுத்தார்.

டிவி பார்த்தபடியே சாதத்தை நவநீதன் சாப்பிட்டு முடிக்கவும், மணி ஒன்பது என்று அவன் வீட்டு கடிகாரம் மணியடிப்பதற்கும் சரியாக இருந்தது.

காற்று வாங்குவதற்காக வெளியில் வந்த நவநீதனை, பக்கத்து தெருவிலிருந்து வந்த அழுகுரல்கள் கவனத்தை ஈர்த்தது.
'யாரு இந்த நேரத்துல அழுதுகிட்டு இருக்கிறது?' என்று யோசித்தபடியே அங்கே போனான்.

“ஐயோ... என் பேரனை பேய் பிடிச்சிருச்சி போலருக்கே... அடி மகமாயி உனக்கு கண்ணில்லையா...” என்று அழுதபடியே தெய்வங்களை வசைபாடிக் கொண்டிருந்தார் பாவாயி.

கிரிக்கெட் விளையாடும் பையன்கள் அனைவரும் சங்கரின் வீட்டு முன்பு நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்த நவநீதன் “என்னடா எல்லாரும் சங்கர் வீட்டு முன்னாடி நிக்கறீங்க..?’’ என்று கேட்டான்

அங்கே நின்றுருந்தவர்களில் ஒருவனான கார்த்திக், சங்கருக்கு நடந்தவற்றை சுருக்கமாக சொல்லவும், நவநீதன் அதை நம்பவில்லை.

“போடாங்... எதாச்சும் அசிங்கமா சொல்லிடப் போறேன். பேய் பிடிச்சுடுச்சு, பிசாசு அடிச்சிடுச்சின்னு... ஏமாந்தவன்கிட்ட போய் இந்த கதையெல்லாம் சொல்லு…” என்றான் நவநீதன்.

அப்போது சங்கரின் வீட்டு முன்பு, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அவசரமாய் பிரேக் போட்டு நின்றது.

அடுத்த நிமிடமே வீட்டின் உள்ளேயிருந்து சங்கரை வேதாசலமும், அவனுடைய மாமா ராமுவும் கைதாங்கலாக ஆட்டோவிற்கு அழைத்து வந்தார்கள்.

சங்கரைப் பார்த்த நவநீதன் முகத்தில் ஆயிரம் அதிர்ச்சி ரேகைகள் ஓடின. கிரிக்கெட்டில் இவன் பேட் செய்ய வந்தால் ஒரு மாமிச மலை பேட் செய்வது போல் வருவான். இரும்பு போல இருக்கும் கார்க் பந்தை அனாசயமாக சிக்ஸருக்கு விரட்டி அடிப்பான். இவன் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சிரமம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் போன்று இருந்தவன், இப்போது பார்பதற்கு ஓமக்குச்சி நரசிம்மன் போல ஒட்டிப் போய் தெரிந்தான்.

அவனைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நவநீதன், அருகிலிருந்த கார்த்திக்கிடம் “இவனுக்கு என்னாச்சிடா... பாடிபில்டர் மாதிரி இருந்த இவன் உடம்பு, ரெண்டே நாள்ல இப்படி பல்லி மாதிரி ஒடுங்கிப் போச்சு?”


 “அதான் சொன்னேன்ல அண்ணா... எல்லாம் பேய் பண்ணற வேலைண்ணா…” என்று திகில் கலந்த குரலில் பதில் அளித்தான் கார்த்திக்.

“நான் இதை நம்பமாட்டேன். சங்கரை இப்போ எங்கடா கூட்டிகிட்டு போறாங்க?”

“தேவியாக்குறிச்சியில ஒரு பாய் இருக்குறாராம். அவர் இந்த மாதிரி பேய்களை ஓட்டுறதுல கில்லாடியாம். அவர்கிட்ட போனா சரியாயிடும்னு அங்கே போகப் போறாங்கண்ணா…” என்றான் கார்த்திக்.

“அப்ப ராமனாதன்கிட்ட காண்பிச்சது என்னாச்சு..?”

“அட… அவன் டாக்டரா இருந்தாதானே .. அவனே கம்பௌண்டரா இருந்தவன்... அவன் கொடுத்த ஊசி மருந்து எதும் வேலைக்காகலையாம்..?” என்றான் கார்த்திகிற்க்கு அருகிலிருந்த பெரியசாமி.

“அவனுக்கு பேய் பிடிச்சிருக்கா இல்லையான்னு நான் நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கணும். அதனால நானும் இவங்க கூட போறேன். என் அம்மாகிட்ட எவனும் சொல்லிடாதிங்கடா...” என்றபடி நவநீதனும் ஆட்டோவிற்குள் ஏறப் போனான்.

ஆட்டோவிற்குள் சங்கரின் அம்மா, சங்கர், சங்கரின் சித்தி சிவகாமி, ஆகியோர் அமர்ந்திருக்க, “நானும் துணைக்கு வரேன்…” என்றபடி அவர்களுடன் புற ஓரத்தில் நவநீதன் உட்கார்ந்து கொண்டான்.
ஆட்டோவின் சீட் பகுதி முழுதும் இவர்களனைவரும் உட்காருவதற்கே சரியாக இருந்தது. இதனால் வேதாசலத்திற்கு உட்கார இடமில்லாமல் போனதால், கால் வைக்கும் இடத்தில் வேதாசலம் அமர்ந்து கொண்டார்.

கீழே உட்கார்ந்தவர் சங்கரின் கைகளைப் பிடித்த படி, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, ஆட்டோ விர்ரென்று கிளம்பியது.

டிவிஎஸ்ஸில் ராமுவும், அவனுடைய நண்பன் வெள்ளியங்கிரியும் ஆட்டோவை பின் தொடர்ந்து வந்தார்கள்.

சேலம் டூ கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் திரும்பிய ஆட்டோ, கள்ளக்குறிச்சி இருக்கும் திசையில் ஓட ஆரம்பித்தது. தேவியா குறிச்சிக்கு குன்றத்தூரிலிருந்து சரியாய் 17 கிலோ மீட்டர் தூரம். ஆட்டோவில் போனால் 25 நிமிடத்தில் அந்த ஊரை தொட்டு விடலாம்.

தேவியாக்குறிச்சியை நோக்கி ஆட்டோ அந்த இரவு நேரத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்க, டிவிஎஸ்ஸும் விடாமல் ஆட்டோவை பின் தொடர்ந்தது.

சங்கரின் நிலையைக் கண்டு வேதாசலம் அழ ஆரம்பித்தார். அதைக் கண்டு கமலம்மாளும் அழ, சங்கரின் சித்தி “என்ன மாமா நீங்களே இப்படி அழுவலாமா... பாருங்க அக்காவும் அழுவுது.. எல்லாம் சரியா போயிடும் அழாதீங்க...’’ என்று தேற்றினாள்.

சிவகாமியின் ஆறுதலால் சற்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டார் வேதாசலம். ஆனால் அவரது கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.

இரண்டு கிலோ மீட்டர் தூரம் கூட ஆட்டோ போயிருக்காது வேதாசலம் திடீரென்று விகாரமாக சிரிக்க ஆரம்பித்தார். அவர் கண்ணீல் குரூரம் கொப்பளித்தது. அவர் தன் பல்லை நறநறவென்று கடிக்க ஆரம்பித்தார்.

நவநீதன் முதற்கொண்டு அனைவரும் திகிலில் உறைந்தனர்.

அப்போது..?

Monday, May 30, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 3 (உண்மைச் சம்பவம்)

ந்த இடத்துல...” என்று சொல்லத் துவங்கிய வேதாசலத்தின் நினைவுகள் பின்னோக்கிப் பயணித்தன.

வேதாசலத்தின் மாமன் மகன் கண்ணன். அவனுக்கு முப்பதைத் தாண்டிய வயது. திடகாத்திரமான ஆள். வேதாசலத்தின் வலது கரம் என்று சொல்லாம்.

அன்று ஒருநாள், அவனது நண்பனின் பிள்ளைகளுக்கு காதணி விழா மங்களபுரத்தில் நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அவனது மற்றொரு நண்பனுடன் அந்த ஊருக்கு சென்றான்.

நண்பன் வீட்டு விழா என்பதால், அங்கு வந்த அவனது நண்பர்களுடன் கண்ணனுக்கு தண்ணியடிக்க வசதியாகப் போய்விட்டது. நண்பனின் தயவால் குடித்தவன், போதை சற்று தலைக்கு ஏறவும் நிறுத்திக் கொண்டான்.

“ஏன்டா மாப்ள அதுக்குள்ள நிறுத்திட்ட..?” என்று கூட வந்த நண்பன் அக்கறையோடு கேட்க, “போதும்டா... இதுக்கு மேல தண்ணி அடிச்சா வூடு போய் சேழமாட்டேன்... சீக்கிரமா போகழன்னா... எம் பொண்டாட்டி திழ்ட்டுவா... நான் கிழம்பறேண்டா...” என்று உளறிக்கொண்டே எழுந்தான். விட்டால் அவர்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தை அளந்து விடுவது போல் தள்ளாடிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

அப்போதே, மணி இரவு பதினொன்றை தாண்டிவிட்டிருந்தது. கண்ணனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் போதையில் மயங்கி படுத்து விட்டனர். கண்ணனுடன் வந்த நண்பனும் மட்டையாகி விட்டிருந்தான்.

தள்ளாடியபடியே நடந்தவன், தட்டுத் தடுமாறியபடியே “போய்ழ்ட்டு வரேண்டா...” என திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு அவனுடைய யமஹா வண்டியை நெருங்கினான்.

வண்டியை நெருங்கியதும் சாவியை சட்டை பாக்கெட்டிலிருந்து துழாவி எடுத்து யமாஹாவிற்குள் பொருத்தினான். கிக்கரை மூன்று முறை காலால் தடவித் தடவிப் பார்த்தான். ஒரு வழியாக கிக்கரைக் கண்டுபிடித்தவன் ஓங்கி ஒரு உதை விட்டான்.

வாங்கிய உதையை தாளாத யமஹா ‘இதோ கிளம்பிட்டேன் எசமான்’ என்பது போல உறுமியது. வண்டியில் உட்கார்ந்தவன், அந்த போதையிலும் வண்டியை தெளிவாக சாலையில் விரட்டினான். அந்த கிராமத்து சாலையில் இருட்டை கிழித்தபடி அவனது யமஹா சென்றது.

மங்களபுரத்திலிருந்து குன்றத்தூருக்கு வர பதினைந்து கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். நேரம் இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த கிராமத்து சாலையில் வாகனங்கள் ஏதுமில்லை.

அந்த சாலையிலிருந்து பிரிந்து சேலம் டூ கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டி திரும்பியது. சாலையின் ஓரத்தில் இருந்த வழிகாட்டிப் பலகை குன்றத்தூருக்கு இன்னும் 14 கிலோ மீட்டர் என காட்டியது.

அந்த தேசிய நெடுஞ்சாலையிலும் அவ்வளவாக வாகனங்கள் வரவில்லை. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து போய்க்கொண்டிருந்தன.
கண்ணன் சற்றே போதையில் இருந்ததால் யமஹாவை தடுமாறியபடியே ஓட்டிக் கொண்டிருந்தான்.

அந்த போதையிலும் அவன் மனைவி காலையில் சொன்னது நினைவிற்கு வந்தது ‘காது குத்துக்கு நானும் வரமாட்டேன், எம்புள்ளைங்களையும் அனுப்ப மாட்டேன். என் தம்பி வீட்டு விஷேசத்துக்கு நீங்க வரமாட்டீங்க... ஆனா உங்க பிரெண்டு வீட்டு விஷேசத்துக்கு மட்டும் நாங்க வரணுமாக்கும். உங்களுக்கு வேணும்னா நீங்க மட்டும் போங்க... ஆனா ராத்திரி ஒழுங்கா வீடு வந்து சேரல..? அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..!’

திடீரென்று வீசிய காற்றில், தன் தலையை சிலுப்பியபடி நினைவிலிருந்து மீண்டவன், ‘சீக்கிரம் வீட்டிற்கு போகணுமே’ என்று நினைத்தவாறு அந்த போதையிலும் யமாஹாவை வேகமாக விரட்டினான்.

‘சிங்கபுரம் ஊராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்று ஊர் எல்லையில் உள்ள மஞ்சள் வரவேற்பு பலகை அவனை வரவேற்றது. சிங்கபுரத்தை தாண்டியதும் பெரிய பாலம் கண்ணுக்கு தென்பட்டது.

பாலத்தை நெருங்கிய பின்னும் வேகத்தை குறைக்காமல் பாலத்தின் இடது வளைவில் சென்றான். அப்போது எதிரே வந்த டேங்கர் லாரியின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணனின் கண்ணை சில நொடிகள் ப்யூஸ் ஆக்கியது.

போதையோடு சேர்ந்து, லாரியின் வெளிச்சமும் கண்ணனை தடுமாற வைத்தது. அந்த தடுமாற்றத்தில் யமஹாவை இடது புறம் வளைத்து ரோட்டை விட்டு கீழே இறக்கினான்.

லாரி டிரைவரும் எதிர்பாராத திடீர் நிகழ்வால் லாரியை இடது பக்கம் திருப்ப, லாரியும் ரோட்டை விட்டு இடது புறமாக யமாஹாவை நோக்கி இறங்கியது.

எல்லாம் கண நேரத்தில் நிகழ்ந்து விட, டேங்கர் லாரியின் டயரில் தவளை சிக்கிக் கொண்டது போல யமஹா சிக்கிக் கொண்டது. அடியில் சிக்கிய யமஹாவை தேய்த்த படியே இடது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் அந்த டேங்கர் லாரி இறங்கியது.



லாரிக்கு அடியில் மாட்டிய கண்ணனின் உயிர், கண்மூடித் திறப்பதற்குள் காற்றில் கலந்து போனது. அவனது ப்ளூ கலர் யமஹா, அவனது ரத்தச் சிதறலால் சிவப்பு மயமாய் மாறிப்போனது.

எல்லாம் முடிந்து போகவே லாரியிலிருந்த கிளீனர் கீழே குதித்துப் பார்த்தான். பார்த்தவன் “அண்ணே... ஆள் பூட்டான்ணே... வண்டியை எடுங்கன்ணே கிளம்பிடலாம்” என்று அவன் சொன்னதுதான் தாமதம், உடனே டேங்கர் லாரியை ரிவர்ஸ் எடுத்து, ரோட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தினான் லாரி டிரைவர்.

அதற்குள் லாரிக்குள் குரங்கைப் போல் தாவி ஏறிய கிளீனர் “ அண்ணே விடுன்னே போலாம்…” என பரபரத்தான். அடுத்த சில வினாடிகளில் அந்த டேங்கர் லாரி அந்த இடத்தை விட்டு சிட்டாய் பறந்து போனது.

கண்ணன் மட்டும் அந்த இடத்தில் உயிரற்றுக் கிடந்தான். ஆல்கஹால் கலந்த ரத்தம் அவன் மேலுள்ள விசுவாசத்தால் அவனை சுற்றி பாதுகாப்பது போல் குளமாகி நின்றது.

“மாமா.. மாமா...” என வேதாசலத்தை ராமு பிடித்து உலுக்கவும், அவர் சுயநினைவிற்கு வந்தார்.

“மாப்ள... அந்த இடத்துலதான், ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் மச்சான் கண்ணன் ஆக்ஸிடெண்டாகி செத்துப் போயிட்டான். அவனுடைய ஆவிதான்....”

வேதாசலம் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த ராமு “அட ஏன் மாமா.. நாம ரெண்டாயிரத்தி ஒண்ணுல இருக்கோம். இன்னும் ஆவி, பேயி, பிசாசுன்னு பேசிகிட்டு... இவன் வேற எதையோ நினைச்சி பார்த்து பயந்திருக்கான். அந்த பயத்துலதான் இவனுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கும் மாமா..” என்று ராமு பேசிக்கொண்டிருக்கும் போதே...

“அய்யோ… உங்க பேச்சை அப்புறமா வச்சிக்கங்க… என் புள்ளைய என்னால பாக்க முடியல... என்னங்க நம்ம ராமநாதனை வரச்சொல்லுங்க…” என்று அழுதபடியே கத்தினார் கமலம்மாள்.

அதுதான் சரியென்று நினைத்த வேதாசலம், ராமுவிடம் “மாப்ள... நம்ம சிகாமணி டாக்டரோட ஆஸ்பத்திரி தெரியும்ல…”

“தெரியும் மாமா...”

“அவர்கிட்ட கம்பௌண்டரா வேலை பார்த்திகிட்டிருக்க ராமநாதன், நம்ம பையன்தான். அவன் இப்போ சின்னதா ஒரு ஆஸ்பத்திரி வச்சிருக்கான். அவனை போய் கூட்டி வா...”

“சரி மாமா...” என்ற ராமு அடுத்த நிமிடம் டிவிஎஸ்ஸோடு கிளம்பிப் போனான்.

பெட்டில் படுத்துக் கிடந்த சங்கரைப் பார்த்தார் வேதாசலம். அவனது இடது கடவாயின் ஓரம் எச்சில் வழிந்து கொண்டே இருந்தது. அவனது கன்னத்தை தட்டி தட்டி கூப்பிட்டார்.

“சங்கர்... யப்பா சங்கர்... அப்பாவை பாருடா... என்னடா ஆச்சி உனக்கு...” என்றார்

அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.

“அடியேய்... போய் தண்ணி கொண்டுட்டு வா...” என வேதாசலம் சொல்ல, கமலம்மாள் சமயலறைக்குள் ஓடிச் சென்று ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து வந்தார்.

அதற்குள் தனது மடியில் சங்கரை எடுத்து கிடத்திக் கொண்ட வேதாசலம், கமலம்மாளிடம் இருந்து டம்ளரை வாங்கினார்.

வாங்கிய தண்ணீரை சங்கரின் வாயில் புகட்ட, தண்ணீரை அவனது வாய் ஏற்றுக் கொள்ளாமல் அப்படியே வெளியில் துப்பியது. சில்லிட்டுக் கிடந்த உடல் இப்போது நெருப்பாய் கொதிக்க ஆரம்பித்தது.

அவனது முகத்தில் தண்ணீரை தெளித்துப் பார்த்தார். தண்ணீர் அவன் முகத்தில் பட்டதுதான் தாமதம்... அதை ஏற்றுக் கொள்ளாதவன் போல “ம்ஹீம்... ம்ஹீம்... ம்ஹீம்...” என அரற்றினான்.

அதைப் பார்த்த கமலம்மாள் மறுபடியும் அழ ஆரம்பித்தார் “ஐயோ எம்புள்ளைக்கு என்னாச்சின்னே தெரியலயே... மாரியாத்தா... காளியாத்தா...” என பெருங்குரலெடுத்து அழவும், அந்த அழுகுரல் கேட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்த வேதாசலத்தின் இரண்டாவது மகன் சந்திரனும், கடைசி மகளான செல்வியும் திடுக்கிட்டு எழுந்தனர்.

எழுந்தவர்கள் கமலம்மாளிடம் வந்து... கண்ணைக் கசக்கியபடியே “ஏம்மா அழுவுற...” என்று ஒரு சேரக் கேட்டார்கள்.

கேட்டபடியே தலையை திருப்பிய சந்திரன் வேதாசலத்தின் மடியில் இருந்த சங்கரைப் பார்த்தும் பயந்து போனான்.

“அப்பா... அண்ணனுக்கு என்னப்பா ஆச்சி... ஏன்பா அண்ணன் இப்படி இருக்கான்…” என சந்திரன் கேட்பதற்கும், கம்பௌண்டர் ராமநாதன் கேட்டைத் திறந்து உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அவன் பின்னாடியே ராமுவும் வந்தான்

“ராமனாதா என் பையனுக்கு...” என வேதாசலம் உடைந்து போன நிலையில் குரல் கொடுக்க...

“அட என்னண்ணே… குடும்பத்துக்கே பெரியாளு நீங்க... நீங்களே இப்படி மனசு தளரலாமா..? ராமு எல்லாத்தையும் வண்டியில வரும்போது சொல்லிட்டாப்ள... அதான் நான் வந்துட்டேன்ல. இனிமே நான் பாத்துக்கறேன். நீங்க தைரியமா இருங்க...” என்று பதில் சொன்னபடியே சங்கரை நெருங்கினான் ராமநாதன்.
 
சங்கரின் கண்ணை டார்ச் லைட் அடித்து பரிசோதித்தான். நாடி பிடித்துப் பார்த்தான். மேலும் சில வழக்கமான பரிசோதனைகளை செய்தவன் “ஒண்ணுமில்ல இது ஏதோ புதுக்காய்ச்சல் போல இருக்கு... இப்போதைக்கு ஊசி போடறேன். மருந்து எழுதி தரேன். ஒரு மாத்திரைய மட்டும் சாப்பாட்டுக்கு முந்தி கொடுங்க. நாளைக்கு நைட்டு வந்து பாக்கறேன்... பயப்படாதீங்க காய்ச்சல்தான்” என்ற ராமநாதன், தான் கொண்டு வந்திருந்த மருந்துகளில் காய்ச்சல் குறைவதற்கு ஒரு ஊசியும், தூங்குவதற்கு ஒரு ஊசியையும் போட்டுவிட்டு மருந்தை எழுதிக் கொடுத்தான்.

“சரி மாமா… நான் போய் இவரை விட்டுட்டு வாரேன் என்று ராமு…” கிளம்ப ஆயத்தமானான்.

“சரிப்பா…” என்ற வேதாசலம் நூறு ரூபாய் நோட்டை ராமநாதனிடம் கொடுக்க, அதை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ராமுவுடன் கிளம்பிப் போனான் ராமநாதன்.



அவன் கிளம்பிப் போன அடுத்த சில நிமிடங்களில் தெருவில் படுத்துக் கிடந்த ஒரு நாய் “ஊ......ஊ.....ஊ...” என பெரிதாக ஊளையிட ஆரம்பித்தது.

அந்த சத்தத்தைக் கேட்ட மறு வினாடியே..!

Monday, May 23, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2 (உண்மைச் சம்பவம்)

குன்றத்தூரின் கடைசிப் பகுதியில் இருந்தது கணேஷ் நகர். இதன் கடைசித் தெருவில், கடைசி வீடாக இருக்கும் மாடி வீடுதான் வேதாசலத்தில் வீடு.

அந்த அர்த்த ராத்திரியிலும் உள்ளே லைட் எரிந்து கொண்டிருக்க, பேச்சுக் குரல் கேட்டது.

"ஏங்க... உங்ககிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன். நேரங்கெட்ட நேரத்தில பையனை வசூலுக்கு அனுப்பாதீங்கன்னு... இப்ப பார்த்தீங்களா மணி 12.40 ஆகுது. என் பையன இன்னும் காணோம்" என்ற கமலம்மாளுக்கு வயது 42 இருக்கும். கனத்த உடம்பு. பார்ப்பதற்கு நடிகை காந்திமதியை போல இருப்பார். ஆனால் உயரம் குறைவு.

"ஏண்டி சும்மா கெடந்து புலம்பற... அவன் என்ன சின்ன பையனா... வழி தெரியாம போறதுக்கு... கூட நம்ப மாப்பிள்ளையும் போயிருக்காருல்ல... வந்துருவான்..." என்று கமலம்மாளை அதட்டிய வேதாசலத்திற்கு வயது 48 இருக்கும். காதருகே நரைத்த முடிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருந்தன. கடா மீசை வைத்து, இறுகிய முகமாகத் தெரிந்தார்.

"உங்களுக்கென்ன வாயில வந்ததை சொல்லிட்டீங்க... பெத்தவளுக்குதானே தெரியும். இன்னிக்கு நிறைஞ்ச அமாவாசை வேற..."

"சரி... சரி... கிடந்து புலம்பாத, நான் ரோடு வரைக்கும் போய் பார்த்துட்டு வரேன்..." என்றபடி வீட்டை விட்டு கிளம்பினார் வேதாசலம்.

அந்த ஏரியாவே தூங்கிக் வழிந்து கொண்டிருக்க, வாயில் ஒரு சுருட்டைப் பற்ற வைத்தபடி அந்த நள்ளிரவில் ரோட்டை நோக்கி நடந்தார்.

அவர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் குடைந்து கொண்டிருந்தது. 'சாயந்திரமே அவனுங்களை வசூலுக்கு அனுப்பிட்டேன். அப்படியே நேரமானாக் கூட பத்து மணிக்கெல்லாம் வந்திருக்கலாமே. ஏன் இன்னும் வரல..? ஏதாவது ஏடாகூடமா நடந்திருக்குமோ?' என்ற எண்ணம் வந்து வந்து மறைந்தது.

யோசித்துக் கொண்டே ரோட்டிற்கு வந்த வேதாசலம் எதிரே வந்த சைக்கிளுக்கு வழிவிட்டு விட்டு, சைக்கிள் வந்த திசையில் தன் பார்வையை ஓட விட்டார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை.

சற்று நேரம் அந்த திசையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த வேதாசலத்தின் புருவங்கள் திடீரென்று உயர்ந்தன. தூரத்தில் தெரிந்த ஒரு வெளிச்சப்புள்ளி மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்த வெளிச்சப்புள்ளி ஒரு டிவிஎஸ்ஸில் இருந்து வந்து கொண்டிருந்தது.

'அப்பாடா... வர்றது நம்ம பசங்க மாதிரிதான் இருக்கு...' என்று தன் மனதுக்குள் நினைத்தவாறு, வாகனத்தை எதிர் நோக்கியிருந்தார். வேகமாக வந்த டிவிஎஸ் அவரைக் கடந்து போனது.

ஏமாற்றத்துடன் வாகனம் வந்த திசையைப் பார்த்தார் வேதாசலம். ஒன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை. பதினைந்து நிமிடத்திற்கும் மேல் காத்திருந்துவிட்டு, பொறுமை இழந்தவராய் வீடு திரும்பினார்.

* * * * * * * *

தே நேரத்தில் டிவிஎஸ் குன்றத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தது. ராமுவின் தோள் மேல் இருந்த சங்கரின் கைகள், அந்த உருவம் அவன் மேல் இறங்க ஆரம்பித்த பயத்தில் தானாக ராமுவின் இடுப்பை சுற்றி வளைத்துக் கொண்டது.

"என்னடா திடீர்னு இடுப்பைப் பிடிக்கிற..?" என ராமு கேட்க சங்கரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சங்கரின் உடம்பில் அளவுக்கு அதிகமாக வியர்வை பெருகியதால், அது அவனது சட்டையை நனைத்தது மட்டுமின்றி, ராமுவின் முதுகுப் பக்கத்தையும் நனைத்தது.

"டேய் சங்கர்... உச்சா போறியா என்ன? முதுகு இப்படி நனையுது" என கிண்டலாகக் கேட்டான் ராமு. அதற்கும் சங்கரிடமிருந்து பதில் வரவில்லை. அதற்குப் பதிலாக அவனது கை ராமுவின் இடுப்பை மேலும் இறுக்க ஆரம்பித்தது.

"டேய்.... டேய்... முதுகை நனைக்கற, வயித்த இறுக்கற... என்னடா ஆச்சி உனக்கு..?" என சற்று கோபமாகவே கேட்டான் ராமு. அப்போதும் சங்கரிடமிருந்து பதிலில்லை.

இதனிடையே வண்டி குன்றத்தூருக்குள் நுழைந்து விட்டதற்கு அடையாளமாய் சாலையின் இரு ஓரங்களிலும் நின்று கொண்டிருந்த சோடியம் விளக்குகள் முட்டைக் கண்ணை விழித்துக் காட்டுவதைப் போல் விழித்துக் கொண்டிருந்தன.

"என்னடா... நான் கேட்டுகிட்டே வர்றேன்... பதிலே பேசமாட்டேங்கற... தூங்கி தொலைச்சிட்டியா..?" என்றபடியே வண்டியை சாலையின் ஓரமாக கொண்டு போய் நிறுத்தினான்.

வண்டியை நிறுத்தி விட்டு, உட்கார்ந்திருந்த படியே மெல்ல சங்கரின் கையைத் தொட்டான். அவனது கை சில்லிட்டிருந்தது.

'கை சில்லுன்னு இருக்கே...' என்று யோசித்தபடி கையை மெதுவாக விலக்கி விட்டு, தன் தலையை திருப்பி அவனது முகத்தைப் பார்த்தான்.

சங்கரின் தலை தொங்கிப் போயிருந்தது. “டேய்... தூங்காதடா... இன்னும் அரை கிலோ மீட்டர் தாண்டினா வீடு வந்துடும்” என்றவாறே அவனது கன்னத்தை தட்டினான்.

அவன் கை ஈரமாகவே, சங்கரின் முகத்தை தன் கையால் நிமிர்த்திப் பார்த்தான். சோடியம் விளக்கு வெளிச்சத்திலும் அவனது முகம் இருண்டு போயிருந்தது. அதுமட்டுமின்றி அவனது கடவாயின் ஓரம் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.
அதுவரை இயல்பாகப் பேசிய ராமு, அவனுடைய இருண்ட முகத்தைப் பார்த்த பிறகு சற்றே படபடப்பிற்குள்ளானான்.

"டேய் சங்கர்... சங்கர்..." என்று அவனது கன்னத்தை தட்டி கூப்பிட்டான். பதிலில்லை.

சங்கரின் தாடையை சற்று நிமிர்த்தினான். அவன் வாயில் ஒழுகிய எச்சிலைத் துடைக்கப் போனான். அப்போது சங்கரிடமிருந்து, “நற.. நற..” வென்று அவனது பல்லை கடிக்கும் ஓசை மட்டும் கேட்டது.

சத்தத்தைக் கேட்ட ராமு ஆடிப்போய் விட்டான். "ஐயோ என்ன ஆச்சின்னே தெரியலயே..? மாமாவுக்கும் அக்காவுக்கும் நான் என்னான்னு பதில் சொல்லுவேன்..?" என்று பிதற்றியபடி, சங்கரை தன் தோள் மீது பழையபடி கிடத்திக் கொண்டு, டிவிஎஸ்ஸை அதிவேகமாக உதைத்துக் கிளப்பினான்.

ராமுவின் உதை தாங்கமுடியாமல்... இதோ கிளம்பிட்டேன் என்பது போல் உறுமிக்கொண்டு ஓட ஆரம்பித்தது அந்த டிவிஎஸ்.

டிவிஎஸ்ஸின் சத்தத்தை விட சங்கர் பல்லைக் கடிக்கும் சத்தம் சங்கருக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.

சங்கர் முன்பு இருந்த எடையை விட, இப்போது அதிக எடை கூடியது போல் ராமுவுக்கு தோன்றியது.

அரைகிலோ மீட்டர் தூரத்தை அவஸ்தையுடன் கடந்து விட்டு, நேரே வேதாசலம் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான்.

வண்டி வந்த சத்தம் கேட்டதும், வராண்டாவில் கட்டிப்போட்டிருந்த பொமரேனியன் நாய் "வள்... வள்..." என்று குறைக்க ஆரம்பித்தது.

"டேய் ஜிம்மி..." என்று ராமு குரல் கொடுக்க... பழக்கப்பட்ட குரலைக் கண்டதும் குரைப்பதை நிறுத்திக் கொண்டது.

ஜிம்மியின் குரலையடுத்து, ராமுவின் குரல் கேட்கவே இவர்களுக்காக காத்திருந்த வேதாசலமும், கமலம்மாளும் கதவைத் திறந்தபடி வந்தனர்.

"ஏம்பா இவ்வளவு நேரம்..? மணி 12.30 மேலாயிடுச்சி..? இவ்ளோ நேரமாவா வசூல் பண்ணுணீங்க..?" என்றவாறே வெளி கேட்டை திறந்து விட்டார் வேதாசலம்.

"என்னப்பா சங்கர் வண்டியிலயே தூங்கிட்டானா..?" என்று வாசலில் நின்றிருந்த கமலம்மாள் கேட்டார்.

ஒன்றும் பேசாமல் இருந்த ராமு, வண்டியை விட்டு கீழிறங்கி சங்கரை கைத்தாங்கலாக, இறக்கி கூட்டிக்கொண்டு வரவும்... "எம்பையனுக்கு என்னாச்சி..?" என்று கத்தியபடியே கமலம்மாள் ஓடி வந்தார்.

"என்னாச்சின்னே தெரியல அத்தை... வர்ற வழியில ஒரு பாலம் இருக்குல்ல அங்க வந்திட்டிருக்கும் போது வண்டி திடீர்னு நின்னுடிச்சி..." என்று
சொல்லியபடியே சங்கரை அழத்துக் கொண்டு கேட்டை தாண்டி வராந்தாவிற்குள் வந்தான் ராமு.

ராமுவின் குரலைக் கேட்டு வாலாட்டிக கொண்டிருந்த ஜிம்மி, சங்கரைப் பார்த்ததும் "லொள்... லொள்.." என்று பெருங்குரலெடுத்து குரைக்க ஆரம்பித்தது.

"ஏய் ஜிம்மி... என்னாச்சி உனக்கு..? சும்மாயிருக்க மாட்ட..." வேதாசலம் ஜிம்மியை அதட்ட, அதட்டலை சட்டை செய்யாத ஜிம்மி தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.

"அடச்சே... சும்மா கிட... உன்னை வளர்த்தவனையே அடையாளம் தெரியலயா..?" என்றபடி ஜிம்மியை அதட்டினார் கமலம்மாள்.

அதற்குள் சங்கரை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான் ராமு. அதன்பிறகே ஜிம்மியின் குரல் அடங்கியது.

படுக்கை அறையில் சங்கரைப் படுக்க வைத்துவிட்டு, சற்று ஆசுவசுப்படுத்திக் கொண்டான் ராமு. சங்கரைப் பார்த்தான். அவன் முகம் களையிழந்து, இருண்டு போயிருந்தது. வாயின் ஓரம் எச்சில் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

அதைப்பார்த்த கமலம்மாள் "ஐயோ... எம்புள்ளைக்கு என்ன ஆச்சின்னே தெரியலயே..?" என அழ ஆரம்பிக்க... "செத்த நேரம் சும்மாயிருடி... என்ன ஏதுன்னு தெரியாம அழுது புலம்பாத..." என்று அதட்டிய வேதாசலம் ராமுவின் பக்கம் திரும்பி "என்ன மாப்பிள ஆச்சி..? எந்த பாலத்துகிட்ட வண்டி நின்னுச்சின்னீங்க..?"

"சிங்கபுரம் தாண்டினதுமே ஒரு பாலம் வருதுல்ல அந்த பாலத்துக்கிட்டதான் மாமா. வண்டியை எவ்ளோ நேரமா ஸ்டார்ட் பண்ணி பார்த்தேன் வேலைக்காவுல... அப்ப சங்கர் பாலத்துக்கு இடது பக்கமா பாத்துகிட்டிருந்தான்.
திடீர்னு என்னைக் கூப்பிட்டவன், மாமா அந்த இடத்துல வெள்ளையா ஒண்ணு தெரியுது மாமா'' என்பதில் ஆரம்பித்து, வீடு வந்தவரை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.

"அந்த பெரிய பாலத்துகிட்டயா..?" என்று கேட்ட வேதாசலத்தின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

"ஆமாம் மாமா..." என்றான் ராமு

"அந்த இடத்துல... அந்த இடத்துல..." இந்த ரெண்டு வார்த்தை சொல்வதற்குள் வேதாசலம் முகம் குப்பென்று வியர்த்துப் போனது.

"அந்த இடத்துல... அந்த இடத்துல என்ன மாமா..?" குழப்பத்தோடு ராமு கேட்டான் .

வேதசலம் பயம் கலந்த குரலில் “அந்த இடத்துல...”

(அடுத்த வாரம் தொடரும்) 
++++++++++++++++++

கதையின் மற்ற பாகங்கள் படிக்க...

முதல் பாகம்இரண்டாம் பாகம்மூன்றாம் பாகம்,

Tuesday, May 17, 2011

போர்க் குற்றவாளி ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க நீங்களும் எழுதுங்கள்!!


May 17, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் தீர்மானத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இந்த கோரிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின ஐக்கிய அமெரிக்கப் பிரதி நிதிகள் இருவர் முன்வைத்துள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோமாபுரி நியதிச்சட்டத்தை ஏற்று உறுதிப்படுத்தல்

முன்வைப்பவர்கள்: 



1)சான் சுந்தரம் (Shan Sundaram, New Jersey – USA)
2)ஜெயபிரகாஷ் ஜெயலிஙகம் (Jeyaprakash Jeyalingam, New York - USA)

நீதி வழங்கும் வல்லமையோ நாட்டமோ தேசிய அதிகாரிகளுக்கு இல்லை என்பதால், சர்வதேசக் குற்றங்களுக்கு இரையாவோருக்கு சர்வதேச அரங்குகளில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு,

அத்தகைய குற்றங்கள் புரிந்தவர்கள் தண்டனைக்கு உள்ளாகாமல் இருக்கும் நிலைமைக்கு முடிவுகட்டி, அத்தகைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கம் உண்டு என்பதையும்,

சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைத் தமது குற்றவியல் நியாயாதிக்கத்துக்கு உட்படுத்துவது ஒவ்வோர் அரசினதும் கடமை என்பதையும்,

இலங்கையின் வட, கீழ் மாகாணங்கள் ஈழத் தமிழர்களின் தாயகம் என்பதையும், அங்கு தற்பொழுது சிங்களப் படை நிலைகொண்டுள்ளது என்பதையும்,

இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் தமது அரசியல் விருப்பை சுதந்திரமாக எடுத்துரைக்க முடியாது என்பதையும்,

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தேர்தல் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்தமை, மக்களாட்சி நெறிப்படி தமது சுதந்திர விருப்பை வெளிப்படுத்தியதற்கு நிகர் என்பதையும்,

சிங்கள ஆதிக்கத்துக்கு உட்பட்ட இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழருக்கு நீதி வழங்கும் வல்லமையோ எண்ணமோ அற்றது என்பதையும்,

ஈழத் தமிழருக்கு நீதியை ஈட்டிக்கொடுப்பதற்குக் கிடைக்கும் அனைத்து வழிவகைகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பயன்படுத்தும் என்பதையும்,

இலங்கை ஆட்சியாளர், அதிகாரிகள், முகவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு ஏதுவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விபரம் அனுப்ப முயலும் என்பதையும்,

இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஐ.நா. அறிக்கைக்கு அமைய சிறிலங்கா அரசிற்கு எதிரான போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களுக்குரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதற்காக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுநருக்கு அனுப்பிவைக்க அது மேலதிக ஆதாரமாக அமையும்.

இச்சட்டமூலத்தை ஏற்று உறுதிப்படுத்தினால், சர்வதேச சமூகம் தமிழீழ அரசாண்மை பற்றிக் கலந்துரையாட அது வழிவகுக்கும் எனவும் கருதப்படுகிறது. இது தொடர்பான (http://www.icc-cpi.int) சகல விபரங்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகட்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் விவாதிக்கப்படுகின்றது.

இம் மசோதா பற்றி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தமது நாட்டின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகட்கு அல்லது comments@tgte.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தலாம். இம் மசோதாவானது ஜூன் மாதம் 5ம் தேதி,  வாக்கெடுப்பிற்கு விடப்படும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாக்களித்து முடிவிற்கு வருமுன்னதாக பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் கருத்துக்களை உங்கள் பிரதிநிதிகட்குத் தெரியப்படுத்துங்கள். இவ்வாறு தெரியப்படுத்துகையில் உங்கள் பெயர், நீங்கள் வாழும் நாடு, உங்கள் பூரண முகவரி போன்றவற்றையும் உங்கள் பிரதிநிதிக்கு வழங்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பின் இவ் விபரங்களை மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்

இப்படிக்கு
பொன். பாலராஜன்
அவைத்தலைவர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Monday, May 16, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை (உண்மைச் சம்பவம்)

(படிக்க செல்வதற்கு முன்... - 2000 மாவது ஆண்டு, நான் பகுத்தறிவாளனாக மாறிய ஆண்டு. சாமி, பேய், பூதம் என எல்லாம் கட்டுக் கதை என்பதை உணர்ந்த ஆண்டு. ஆனால் 2001- ஆண்டில், எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவம் ஏற்பட்டது. அது இன்றுவரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த ஆண்டில் நான் சந்தித்த உண்மைச் சம்பவத்தை உங்களிடம் தொடர்கதையாக்குகிறேன். 2003-ல் நான் நடத்திய 'இளஞ்சிறகு' என்ற மாத இதழில் இந்த தொடர்கதையை எழுதியிருந்தேன். அதன்பிறகு இன்று இணையத்தில் வெளியிடுகிறேன்.  உங்களின் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன். 


-என்றென்றும் அன்புடன்
உங்கள் மோகனன்)

ங்கரும் ராமுவும் ஒரே சீராக டிவிஎஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நேரம் இரவு பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

அன்று அமாவாசையானதால் ஊரெங்கும் இருளடித்திருந்தது. பியூஸ் போனதால் தெருவிளக்குகள் தேமே என்று நின்று கொண்டிருந்தன.

டிவிஎஸ் வண்டி தெருவை விட்டு சாலையில் திரும்பியது. அந்த சாலையில் இவர்களது வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரு வெளிச்சப் புள்ளிகூட கண்ணில் படவில்லை.

டிவிஎஸ்ஸின் வெளிச்சம் தார்ச்சாலையில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. ‘குறுகிய பாலம் மெதுவாக செல்லவும்’ என்ற அறிவிப்புப் பலகையின் மேல் பட்ட வெளிச்சம், இடது வளைவின் காரணமாக மின்னி மறைந்தது.

பாலம் மெல்ல மெல்ல இவர்களை நெருங்கிக் கொண்டிருக்க, டிவிஎஸ் வண்டியின் சத்தத்தினூடே தூரத்தில் நாய் ஒன்று குரைக்கும் சப்தம் மெலிதாகக் கேட்டது.

“டேய் சங்கரு... ஊர் போய் சேர்றதுக்கு... இன்னும் எவ்வளவு நேரம்டா..?” என்று வண்டியை ஓட்டியபடியே கேட்ட ராமுவுக்கு வயது முப்பதிருக்கும். சங்கருக்கு ஒன்று விட்ட உறவு முறையில் மாமன்.

“ஆச்சி மாமா. இன்னும் ரெண்டு கிலோ மீட்டர்தான்..” என்று சொன்ன சங்கருக்கு வயது 20 இருக்கும். திடகாத்திரமான உடம்பு. பார்வைக்கு இந்திப்பட வில்லன் போல இருந்தான்.

குன்றத்தூரில் மாடுகளை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வருபவர் சங்கரின் அப்பா வேதாசலம். பணவசூலுக்காகத்தான் இருவரையும் சிங்கபுரம் வரை அனுப்பி வைத்திருந்தார்.

பணம் வசூலாவதற்கு நேரமானதால்தான், இந்த நள்ளிரவில் இருவரும் குன்றத்தூருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

பாலத்தின் மீது விர்ரென்று சென்று கொண்டிருந்த டிவிஎஸ், பாலத்தைக் கடந்ததும் திடீரென ஊமையாகி, மெதுவாய் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.

“என்னடா இது வண்டி திடீர்னு நின்னுடிச்சி... பெட்ரோல் இருக்குல்ல..?” என்று ராமு கேட்டான்

“வரும் போதுதான் ரெண்டு லிட்டர் பெட்ரோல் போட்டேன். அதுக்குள்ள தீர்ந்து போயிடுமா என்ன. அதெல்லாம் இருக்கு மாமா... வண்டியை என்கிட்ட கொடு மாமா... நான் பார்க்கிறேன்” என்றபடி டிவிஎஸ்ஸை ராமுவிடமிருந்து கைப்பற்றினான் சங்கர். கிளட்ச்சை பிடித்த படி வண்டியை உதைத்தான்.

வண்டியை பல முறை உதைத்தும் உசுப்பேத்தியும் பார்த்தான். ம்ஹீம்... வண்டிக்கு உயிர் வருவதாக இல்லை... ஏதோ டிபி நோயாளி குறட்டை விடுவதைப் போல “டொர்..டொர்..டொர்..” என முனகியபடி முடங்கிப் போனது.

“தள்ளுடா நான் பார்க்கிறேன்...” என்ற ராமு டிவிஎஸ்ஸின் என்ஜின் பகுதிக்குள் கையை விட்டு சோக்கைத் தேடினான்.

டிவிஎஸ்ஸின் வெளிச்சம்தான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அதன் இயக்கமும் நின்று போகவே எங்கும் இருள் மயமாயிருந்தது.

நல்லவேளையாக இருவரும் வெள்ளை சட்டை போட்டிருந்த்தால் இருவரின் உருவங்களும் தோராயமாக தென்பட்டது.

மின்மினி பூச்சிகள் ஆங்காங்கே வட்டமடித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் இரண்டு நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்த சத்தம் இருவரின் காதுகளிலும் தெளிவாக விழுந்தது.

“டேய் ரொம்ப இருட்டா இருக்குது... ஏதாவது இருந்தா எடுடா..?”

“இந்தா மாமா... பென் டார்ச்...”

 “ம்ஹீம்... என்ன ஆச்சிடா இந்த சனியன் புடிச்ச வண்டிக்கு... ச்சே…“ ராமு சலித்துக் கொண்டே டிவிஎஸ்ஸிற்கு உயிர் கொடுக்கப் பார்த்தான்.

ம்ஹீம்... ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்பது போல “ட்ர்ர்.. ட்ர்ர்… ட்ர்ர்…” என குறட்டை சத்தம் மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே தூங்கிப் போனது.

ராமுவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சங்கர், சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவன், பாலத்திற்கு இடது புறம் உள்ள இறக்கத்தில் பார்வையில் சற்று நிதானித்தான்.

அந்த கும்மிருட்டிலும் அங்கே வெள்ளை வெளேரென ஒரு நிழலுருவம் படுத்துக் கிடப்பது போல் சங்கருக்குத் தோன்றியது. “அடச்சே... பிரம்மைடா…” என தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டபடி, பார்வையை வேறு பக்கம் திருப்ப முயற்சித்தான். ஆனால் திருப்ப முடியவில்லை.

படுத்துக் கிடந்த நிழலுருவம் மெல்ல மெல்ல எழுந்து உட்கார ஆரம்பித்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கருக்கு பயம் கவ்விக் கொள்ளவே, “மாமா... மாமா... மாமா...” என ராமுவைக் கூப்பிட்டானே தவிர அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வரவில்லை.

அந்த உருவம் அவனை பார்த்தபடியே எழுந்து நின்றது.

ராமு அருகிலிருக்கிறான் என்ற தைரியத்தில் வாய் திறந்து “மாமா.. மாமா... அங்க பாரு... ஏதோ ஒன்னு வெள்ளையா தெரியுது…” என்று கத்தினான். அவன் கத்தியது அவனுக்கு மட்டுமே கேட்டது. அவனுடைய வார்த்தைகளை பயம் விழுங்கிக் கொண்டது. அவனுடைய உள்நாக்கு, வெளிநாக்கு என எல்லா நாக்கும் உலர்ந்து போய்விட்டிருந்தது.

அந்த பயத்திலும் அந்த வெள்ளை உருவத்தை உற்றுப் பார்த்தான் சங்கர். அந்த உருவம் பார்ப்பதற்கு மனித உருவம் போல தோன்றியது. அதன் முகம் பஸ்ஸில் அரைபட்டதைப் போல மிகவும் நசுங்கிப் போயிருந்தது.

எழுந்து நின்ற உருவம் ஒரு கையை அவனை நோக்கி நீட்டியது. அப்போது சாலை ஓரமாக நின்றிருந்த கம்பத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஆந்தை ஒன்று, அங்கிருந்த அமைதியை கிழிப்பது போல், "கூகூகூகூகூகூ...” என வேகமாய் அலறியபடி பறந்தோடியது.

ஆந்தையின் அலறலைக் கேட்டு திடுக்கிட்ட ராமு, சங்கரைப் பார்த்தபடி “டேய் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது... வண்டியைத் தள்ளு ஸ்டார்ட் ஆகுதான்னு பார்ப்போம்…” என்றான்.

சில்லென்று வீசிக்கொண்டிருந்த இரவு நேரக் காற்று மட்டும் ராமு சொன்னதை காதில் வாங்கிக் கொண்டது போல, அவன் முகத்தை வருடி விட்டு போனது. தான் சொன்னதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், சிலை போல சங்கர் நின்றிருப்பதை பார்த்த ராமுவுக்கு கோபம் ஏற்பட்டது.

“டேய்... நட்டநடு ராத்திரியில, வெட்டவெளியில மாட்டிகிட்டிருக்கோம்... வண்டியத் தள்ளுடாங்கறேன்...” அப்போதும் சங்கர் திரும்பவில்லை.

“டேய் சங்கர் உங்கிட்டதாண்டா சொல்றேன்.. அங்க என்னடா பார்வை...” என்றபடியே சங்கர் பார்த்த இடத்தை ராமுவும் பார்த்தான்.

அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. கோபம் தலைக்கேறவே... “டேய்…” என்றபடி சங்கரின் முதுகில் அடித்தான்.

அப்போதும் அவன் அசையாமலிருக்கவே... “டேய்.. சங்கர்... உன்னைத்தாண்டா...” என்றபடி அவனைப் பிடித்து உலுக்கினான்.
“மாமா... மாமா... மாமா...” என்றான்

"என்னடா..?" என்றபடி சங்கரின் முகத்தைப் பார்த்த ராமு அதிர்ந்து போனான். சில்லென்று காற்று வீசிக்கொண்டிருக்கையில் சங்கரின் முகம் குப்பென்று வியர்த்துப் போயிருந்தது. அவனது கண்கள் பீதியில் இருந்ததை அந்த இரவிலும் தெளிவாகத் தெரிந்தது.

“என்னடா மாப்ள... என்னடா..?” என்றான் ராமு

“மாமா.. அங்க ஏதோ வெள்ளையா ஒரு உருவம் தெரியுது மாமா..?” என்று சொன்னானே தவிர, அந்த திசையிலிருந்து அவன் பார்வையைத் திருப்பவே இல்லை.

அவன் சொன்ன இடத்தில் பென் டார்ச் அடித்துப் பார்த்த ராமுவிற்கு ஒன்றும் தெரியவில்லை. “டேய்… அங்க ஒண்ணுமே இல்ல... ஏண்டா உளர்ற... இதுக்குத்தான் பேய் படம் எல்லாம் பாக்காதங்கறது. நீ முதல்ல வண்டியைத் தள்ளு…” என்றபடி வண்டியில் உட்கார்ந்து கொண்டான் ராமு.

பயத்துடன் திரும்பிய சங்கர், சற்றே ஆறுதலடைந்து டிவிஎஸ்ஸை தள்ளினான். வண்டி ரோட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது.

ஒரு பத்தடி தூரம் தாண்டிய பின்பு அதுவரை தூங்கிக் கொண்டிருந்த வண்டி, திடீரென விழித்துக் கொண்டதைப் போல “விர்ர்ர்ரும்...” என்றபடி ஸ்டார்ட் ஆனது.

“அப்பாடா... ஸ்டார்ட் ஆயிடுச்சி, வந்து உட்காருடா…” என்று சொன்ன ராமு பின்னால் திரும்பிப் பார்த்தான்.

மறுபடியும் சங்கர் அதே இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, ராமு கோபத்தின் உச்சிக்கே சென்றான்.

“டேய்... இப்பவே மணி 11.55 ஆகுது. எப்படா வீடு போய் சேருவோம்னு நானே தவிச்சிகிட்டு இருக்கிறேன். சும்மா அந்த இடத்தையே பார்த்துகிட்டு நிக்கற... வந்து வண்டியில ஏறு...” என்று அதட்டினான் ராமு.

அதட்டலை உள்வாங்கிய சங்கர் “மாமா... அங்க வெள்ளையா ஒண்ணு இருக்குது மாமா... அது என்னையே பாக்குது...” என்றான்.

“டேய்... வீணா எங்கிட்ட மிதிவாங்காத... அங்க ஒண்ணுமே இல்ல... முதல்ல வண்டியில ஏறு... ஏண்டா இவ்வளவு நேரம்னு உங்கப்பாவும், அம்மாவும் என்னை திட்டப் போறாங்க...” என்றபடியே வண்டியை அரைவட்டம் போட்டு, அவனருகே நிறுத்திய ராமு “ஏறுடா வண்டியில...” என்றான். ராமுவின் வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது.

வண்டியில் ஏறி உட்கார்ந்தான் சங்கர். ராமு டிவிஎஸ்ஸை வேகமாகக் கிளப்பினான்.

மறுபடியும் அந்தப் பக்கம் பார்த்த சங்கர், அங்கே அந்த உருவம் இல்லாதது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

ஆனால், அவன் நிம்மதி கணநேரம் கூட நிலைக்கவில்லை. அந்த உருவம் மெல்ல மெல்ல இவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சங்கரை பயம் ஆட்கொள்ள ஆரம்பித்தது. தலையை ராமுவின் முதுகுப் பக்கம் திருப்பிக் கொண்டான். வண்டி சாலையில் சீறியபடியே போய்க்கொண்டிருந்தது.

சற்று தூரம் போனதும் தலையை திருப்பியவன், மூச்சு விட மறந்தான். மிக பக்கத்தில் வந்து விட்டிருந்த அந்த உருவம் பார்வைக்கு சற்றே புலப்பட்டது. அந்த முகம் முழுதும் நசுங்கிப் போயிருந்தது. அதன் வயிற்றின் இடது புறம் நீண்ட வெட்டுக்காயம். நெஞ்சுப் பகுதியில் ஏதோ குத்தியது போன்ற ஓட்டை தெரிந்தது.

சங்கரின் இதயம் உச்ச வேகத்தில் துடிக்கத் தொடங்க, உடலெங்கும் குப்பென வியர்க்க ஆரம்பித்தது. எவ்வளவோ முயற்சித்தும் அந்த உருவத்திடமிருந்து சங்கரால் பார்வையைத் திருப்ப முடியவில்லை.

அந்த உருவத்தையே வெறிக்க வெறிக்கப் பார்த்தான். அது மெல்ல சிரித்தபடியே அவன் மேல் இறங்க ஆரம்பித்தது.
(அடுத்த வாரம் தொடரும்..!)
++++++++++++++++++

கதையின் மற்ற பாகங்கள் படிக்க...

முதல் பாகம்இரண்டாம் பாகம்மூன்றாம் பாகம்,