Thursday, July 31, 2008

உழைப்பாளிகளின் உறக்கங்கள்...

கதிரவன் எழுந்தது முதல், அந்தி சாயும் வரை உழைப்பாளிகளின் உடல் மட்டுமல்ல, அவனது நிழல் முதற்கொண்டு உழைக்கும். உடல் உழைப்பாளிகளுக்கு நேரம் எது..? காலம் எது..? ஓய்வு கிடைக்கும் போது, கிடைத்த இடத்தில் உறங்குகிறார்கள். அசதியின் மிகுதியில் அது பகலானாலும் அந்த உழைப்பாளிகளுக்கு உறக்கம் வந்து விடுகிறது.

சென்னையில், நான் கண்ட உழைப்பாளிகளின் உறக்கங்கள்... அப்படியே நிழற்படங்களாய்...


சென்னையின் பரபரப்பான அண்ணாசாலையோரம்... பயணிகளை ஏற்றி ரிக்ஷா வண்டி மிதித்த களைப்பில் உறங்கும் உழைப்பாளி. தன் வாகனமே தனக்கு பட்டு மெத்தையாக... மனித உழைப்பு ஓய்வெடுக்கிறது.. அவருக்கு பின்புறம் உள்ள ஆட்டோ ரிக்ஷா (இயந்திர வண்டி) ஓய்வின்றி அடுத்த பயணிக்காக காத்திருக்கிறது...


சென்னை, மெரீனா கடற்கரையில் ஓய்வெடுக்கும் மீன் வியாபாரத் தொழிலாளி... தன் மிதிவண்டியே தலையணையாய்...



சென்னை, மடிப்பாக்கம் ஏரியை தூர்வாரிய களைப்பில் ஓய்வெடுக்கும் பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனர்... அவ்வாகனத்தின் சக்கரமே அவருக்கு பஞ்சுமெத்தையாக... அதன் மேல் உறங்கும் உழைப்பாளி...

குழந்தையின் உறவுகள்

அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...

அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் ஆறுதல் மொழி
அண்ணனின் பாட்டு
அக்காவின் கொஞ்சல்
தாத்தாவின் அரவணைப்பு
பாட்டியின் பாசமொழி...
என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின் வீறிடல் நின்றது..!

இன்றோ வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது
அக்குழந்தையின் உறவுகள்..!

(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை (27.03.2005 -அன்று) எழுதியது)

இயற்கை

இவ்வுலகத்தை
படைத்து...
அதைக் காக்கவும்
அழிக்கவும்
பற்பல காரணிகளையும்
கானல் உயிர்களையும்
கண்டு உயிர்ப்பித்த
பிரம்மா..!

(03.11.2004 அன்று எனது தோழி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இக்கவிதை புனையப்பட்டது.)

பணம் ஒரு வேசி..!

விடாமல் விரட்டும் வறுமை
மனதில் படரும் வெறுமை
மற்றவர் பார்வையில் சிறுமை
மனம் கேட்கிறது பொறுமை..!

வாய்மையை கடைபிடித்தால்
வருவாய் கிடைக்காது..?
பொய்மையைப் பிடித்தால்..!- அதற்கு
வாய்த்திறமை வேண்டும்..!?

எல்லாம் பொய்யாய்ப்போன உலகில்
பொய்மையைப் பிடியேன்... - ஆனால்
இவ்வுலகில் எல்லாம் பணம்
பணம்... பணம்... பணம்..!

பணம் கிட்டாவிடில்
மனம் ஆகிவிடுகிறது ரணம்...
குணம் குமைந்து சாகிறது
மனம் அழுது தொலைக்கிறது..!

பணம் ஒரு வேசி
பணக்காரனிடம் மட்டும் ஒட்டும் பாசி
அவ்வேசி நம்மிடமிருந்தால்
சமூகம் நம்மை உயரத்தில் வைக்கும்
இல்லாவிடில் குப்பையில் தள்ளும்..!

(சென்னையில் வேலை தேடி.. வேலை தேடி ஓய்ந்து போனேன். காய்ந்து, தீய்ந்தும் போனேன்... அதன் விளைவாக, 17.03.2005 அன்று எழுதியது.)

Wednesday, July 30, 2008

ரஜினிகாந்துக்கு ஏன் இந்த வேலை..?

குசேலன் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அதுவும் கன்னட மொழியிலேயே... அவரது மொழிப்பற்றுக்கு பாராட்டுகள்...

மேடையில் ஒரு பேச்சு, மேடையில்லாதபோது ஒரு பேச்சு.. ரஜினிக்கு ஏன் இந்த வேலை. ஐயா..? குசேலன் கர்நாடகாவில் வெளியாகாமல் போனால் யாருக்கென்ன நட்டம் வந்துவிடப்போகிறது. உம்படம்தான் தமிழகத்திலேயே அதிக பணம் பார்க்கிறதே. அது போதாதா..? கர்நாடகத்தில் வெளியிட அனுமதி தாருங்கள் என்று வேண்டுகோள் எதற்கு..?

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படாமல் இருப்பதால் 6 கோடி தமிழர்களுக்குதான் நட்டம். அவர்களின் வாழ்வாதார உரிமை நசுக்கப்படுகிறது... அதற்காக நீங்கள் மேடையில் முழங்கியதோடு சரி... செயலில் என்ன காட்டினீர்கள்... அதுசரி அரசாங்கமே இத்திட்டத்தை 'அப்புறம் பாத்துக்கலாம், கிடப்பில் போடு' என்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள்....

உங்களுக்கு
தேவை... உங்கள் படம் ஓடவேண்டும்... ஒகேனக்கல் குடிநீர் தமிழகத்தில் தேவையான அளவிற்கு ஓடினால் என்ன..? ஓடாவிட்டால் என்ன..? தமிழனுக்கு தண்ணீர் கிடைத்தால் என்ன..? கிடைக்காவிட்டால் என்ன..? அந்தக்கவலை உங்களுக்கு எதற்கு..?

இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது கன்னட மொழியிலேயே கடிதம் அனுப்பியிருக்கிறீர்களா..? என்று கேட்க உள்ளம் துடிக்கிறது... ஆனால் நீங்கள் அரசு சார்ந்தவர் அல்ல என்பதால் விட்டுவிடலாம்.

எப்போதும் ஒரு நிலையில், கொள்கையில் இருக்க வேண்டும். மேடை கிடைத்தது என்பதற்காக... ''மக்கள் என்ன முட்டாள்களா..? ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா? ''என்றுவிட்டு... (இதே சமயம், கர்நாடகத் திரைப்படத்துறையினர் ஒகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தமானது என்று அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்...) இப்போது... ''ஹி... ஹி... நான் அப்ப பேசினது உங்களை காயப்படுத்தியிருக்கும்... அரசியல் வேறு... சினிமா வேறு... அதை விட்டுடுங்க... என் படம் வெளியாவணும்... வழி சொல்லுங்க..." என்று கடிதம் எழுதியிருப்பது ஏற்புடையதல்ல. அதெப்படி, (தமிழர்களை திருப்திப்படுத்த) அவர்களை வ சைபாடிவிட்டு, இப்போது அவர்களிடமே அனுமதி கேட்கிறீர்கள்..?

ஆக, அரசியல் எனில் ஒரு பேச்சு... சினிமாவெனில் ஒரு பேச்சு... 'பாம்புக்கும் நோகக் கூடாது, தடிக்கும் வலிக்கக் கூடாது' என்பது போல் இருக்கிறது உங்களது நடத்தை... கலை என்பது யாரிடமும் அனுமதி கேட்டு வெளிக்காட்டுவதல்ல... இதற்கு நீங்கள் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் உங்களை கண்ணியவான் என்று எண்ணியிருப்பேன். கடிதம் எழுதியதால் அப்படி நினைக்கத் தோன்றவில்லை...

அங்கு படம் வெளியாகவில்லை என்று யாரும் அழவில்லை. அப்படத்தை பார்ப்பதால் அவனுக்கு சோறோ... நீரோ... வந்துவிடாது... அதற்காக வரிந்துகட்டிக் கொண்டு கடிதம் எழுதுகிறீர்கள். அவர்களும் ரஜினி கடிதம் எழுதி கேட்டுக்கிட்டதால வெளியிட அனுமதிக்கிறோம் பந்தாவாக பேட்டியளிக்கிறார்கள்...

படத்துக்கே அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது... குடிநீருக்கு...? அட போங்கப்பா... தமிழர்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை சினிமாவும் சரி, அரசியலும் சரி நம்மை ஏய்த்து பிழைக்குமே தவிர, நல்லதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்..!

-----@-----@-----

ரஜினியின்
உண்ணாவிரதப் பேச்சு


தமிழக அரசு ஒகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்க கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு ஆதரவாக கர்நாடகத்தில் திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர்.

இதுபோல் அத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத் துறையினர் (கடந்த ஏப்ரல் 4, 2008, சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
''கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவுக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா?

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் போட்டு இது கர்நாடகம், இது தமிழகம் என பிரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா?

நான் மதிக்கும் ஓரு கர்நாடகத் தலைவர்... வட மாநிலத்தில் பொறுப்பில் இருந்தவர்... கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்கிறார். எதைச் சொன்னாலும் நம்பி விடுவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா? எப்போதும் உண்மையைச் சொல்லுங்கள். உண்மை, சத்தியம், நியாயம்தான் சோறு போடும்.

வெறும் அரசியல் காரணங்களுக்காக எந்தக் காலத்திலும் உண்மையை மறைக்க வேண்டாம். மேலே ஓருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அரசியல் சுயநலத்தையும் தேர்தல் ஆதாயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மக்கள் நலனைப் புறக்கணித்துவிடாதீர்கள் என தேவகௌடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, எஸ்.ஏம்.கிருஷ்ணா ஆகியோருக்கு நான் பணிவாக வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து இந்தப் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக முற்றுப்புள்ளி வையுங்கள் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்''
என்றார் ரஜினிகாந்த்.

----------@------------@--------

அப்போதே ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகளுக்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ரஜினிகாந்த் படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று பல கன்னட சங்கங்கள் அறிவித்ததுடன் போராட்டமும் நடத்தின.

இந்நிலையில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா நடித்த குசேலன் படம் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் திரையிடப்படுகிறது.

இதையடுத்து கர்நாடகத்தில் அப்படத்தைத் திரையிட ஓத்துழைப்பு அளிக்கக் கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவரான நடிகை ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஏழுதியுள்ளார்.
முற்றிலும் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ரஜினிகாந்த் கன்னடத்திலேயே கையெழுத்திட்டுள்ளார்.

ரஜினிகாந்த், கர்நாடக திரையுலக அமைப்பிற்கு எழுதிய கடிதம்

கடிதத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

'ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.

ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்'
என்று எழுதியிருக்கிறார்.

பெங்களூரில் 17 பிரிண்டுகளுடன் குசேலன் வெளியாகும் என்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் 5 தமிழ் பிரிண்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு, கர்நாடகாவெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியாவதால் கர்நாடகம் முழுவதிலுமே குசேலன் வெளியீடு களை கட்டியுள்ளதாம்.

பாவம் ஏமாளித் தமிழர்கள்....

வள்ளிக்கிழவி (சிறுகதை)

காலை வேளையில் அன்னவயல் கிராமம் வயல் வேலைகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. கதிரவனின் வசம் பார்த்து கருமமே கண்ணாக வேலை செய்ய கிளம்பியவர்களில் வள்ளிக் கிழவியும் ஒருத்தி...

வள்ளிக் கிழவி என்றால் அக்கிராமத்தில் தெரியாதவர்கள் இருக்காது. சிறு குழந்தைகளுக்கும் கூட அவளைத் தெரியும். அவளது குடும்ப பாரம்பரியம் அப்படி. காலம் செய்த கோலம்.. கணவனை இழந்து தம் இரு மகன்களுக்காக வாழ்கிறாள்...

ஐம்பதைத் தாண்டிய வயது. தனது இரு மகன்களுக்காக உழைத்து...உழைத்து சளைக்காத முகம். அவள் கைரேகையைப்போல் அவள் முகத்திலும் சுருக்க ரேகைகள் ஓடியிருந்தது. அவள் கால் வெடிப்புகள் அவள் பட்ட துன்பங்களை கதை கதையாக சொல்லும். அவளுக்கு சொந்தமாக இருந்த அரை ஏக்கர் நிலத்தில் விதைத்திருந்த நெற்பயிர்களில் இன்று களை பறித்தாக வேண்டும்.

அவளுக்கு சொந்தமான வயக்காட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் மனம் அங்கு ஒரு நிலையில் இல்லை... 'காஷ்மீர் பகுதியெங்கும் பதற்றம்' என எட்டு மணி செய்தி கேட்டதிலிருந்து மனது அடித்துக் கொண்டது. மூத்த மகன் மோகனனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. என்ன பண்ணிட்டிருக்கானோ... எப்படி இருக்கானோ... அவனிடமிருந்து ஒரு தகவலும் வரலயே... ம்ஹூம்... ' என்ற பெருமூச்சுடன் களத்துமேட்டிலிருந்து வயலுக்குள் இறங்கினாள்.

மோகனன், இந்திய ராணுவத்தின் இளஞ்சிங்கங்களில் ஒருவன். தாய்ப்பற்றை மனதிற்குள் வைத்து பூட்டிவிட்டு, தாய்நாட்டின் மீது பற்று வைத்து இராணுவத்திற்கு சென்றவன். தாய்நாட்டிற்கு உழைத்தாலும் பெற்ற தாயை மறந்து விடுவானா என்ன... மாதா மாதம் அவனிடமிருந்து பணமும், கடிதமும் வரும். அக்கடிதம்தான் அவளுக்கிருக்கும் பெரும் ஆறுதல்...

இளையவன் செல்வம். கல்லூரியில் இளங்கலை படிப்பில் இறுதியாண்டு மாணவனாக பயின்று கொண்டிருக்கிறான். இன்று ஏதோ ''என்.சி.சி ஷ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா...'' என்றுவிட்டு சீக்கிரமாகவே கல்லூரிக்கு சென்று விட்டான்.

நானெல்லாம் படிச்சிருந்தாதானே இதெல்லாம் தெரியும். நம்ம அப்பந்தான் நம்மளை வீட்டை விட்டே வெளியவே அனுப்பலியே..என சிந்தித்துக் கொண்டே களையெடுத்துக் கொண்டிருந்தவளை தபால்காரர் பரமசிவம் குரல் கேட்டு நிமிர்ந்தாள்...

''வள்ளியம்மா... உன் பெரிய மகன்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு...''
இந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் முகத்தில் இருந்த சுருக்கங்கள், சட்டென்று மறைந்து மகிழ்ச்சிக்கு வழிவிட்டது. அவள் முகம் பரவசத்தில் பிரகாசித்தது. 'ராணுவத்துக்கு போயி 5 வருசமாச்சு... மாசத்துக்கு ஒரு கடுதாசி போடுவான்... எப்பவாச்சும் கோன் பண்ணுவான்... என்ன இந்த மாசம் ரெண்டாவது கடுதாசி அனுப்பியிருக்கான்...ஊருக்கு வரேன்னு சொல்லியிருக்கானோ....' என நினைத்தபடியே களத்துமேடேறினாள்.

''தபால்காரரே அதை கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்...'' என்றாள்.

அவரும் கடிதத்தை பிரித்தார். உள்ளே மோகனனின் கையெழுத்து ஆற்றுப் பிரவாகமாக நேர்த்தியாக ஓடியிருந்தது... உடன் படிக்கலானார்...

''அன்புள்ள அம்மாவிற்கு...

தாய்நாட்டைக் காக்கும் இராணுவ வீரன் மோகனன் எழுதிக் கொள்வது... இதுவரை உன் மகன் என்றுதான் எழுதி வந்திருக்கிறேன். இன்று இப்படி எழுதுவதற்கும் அர்த்தமிருக்கிறதம்மா... என்னை, இத்தேசத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து விட்டேன். அதான் அப்படி எழுதியிருக்கிறேன்...

உன் முகம் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டது. உன்னையும் தம்பியையும் பார்க்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது அது முடியாது.
எப்படி அம்மா இருக்கிற... தம்பி எப்படி இருக்கான்... அம்மா நாங்களிருவரும் உன் முகம் மட்டுமே அறிந்தோம். அப்பா நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே இறந்து விட்டதால்... நீ எங்களை வளர்க்க, நீ பட்ட துன்பங்களை நானறிவேன்...

இதோ நாங்கள் வளர்ந்து விட்டோம். அம்மா... நீ எனக்கு நிலாச் சோறு ஊட்டிய தருணங்கள்... சிறு வயதில் நானும் தம்பியும் நமது கிராமத்தில் போட்ட ஆட்டங்கள், ஏரியில் மீன் பிடித்தது என என் நினைவுகள் என்னுள் வந்து, வந்து செல்கிறது. தீபாவளியன்று பொம்மை துப்பாக்கிக்காக நானும் தம்பியும் போட்ட சண்டையை இன்னமும் நினைத்து மகிழ்கிறேன்.

பொம்மை துப்பாக்கியை கையில் பிடித்தவன் இன்று உண்மையான துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கிறேன். இதோ எனது சரித்திரம் ஆரம்பித்து விட்டதம்மா... நான் பிறந்த பிறப்பின் பயனை இனிதான் அடையப் போகிறேன். நீ கொடுத்த தாய்ப்பாலுக்கு வேலை வந்து விட்டது. நம் தேசத்தின் நலன் காக்கும் வேளை வந்துவிட்டது.

கார்கில் போர் எனக்கு கடுகளவாக தெரிகிறது இன்று. ஏனெனில் அதைவிடப் பெரிய போருக்கு உன் மகன்... இல்லை... இந்த பாரதத்தாயின் மகன் கிளம்பப் போகிறான்.

இந்திய மண்ணையும், காற்றையும் சுவாசித்த எனக்கு, எதிரி நாட்டின் சுவாசத்தை அழிக்க ஆணை வந்துவிட்டது. இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை நோக்கி இந்த புலி பாய்ந்து செல்லப் போகிறது.

நான் பெற்ற பயிற்சியின் முழு பலமும் இங்கே பரிசோதிக்கப்படும். இதுவரை அப்பகுதிக்கு சென்ற 10 கமாண்டோ படையினரில் இருவர் மட்டுமே மீண்டிருக்கின்றனர். இதே எனது படை... இதற்கு நான்தான் தலைவன்...

தாக்குதலுக்கு வேண்டிய ஆயுதம்... தாக்க வேண்டிய இடம்... உள்பட அனைத்தும் வந்துவிட்டது. நம் நாட்டின் எதிரிகள் காலனை சந்திக்கும் நாள் மட்டும் இன்னும் குறிக்கப்படவில்லை. விரைவில் அதுவும் குறிக்கப்பட்டு விடும். தகவல் கிடைத்ததும் வில்லிலிருந்து புறப்படும் அம்பெனப் புறப்பட்டுவிடுவோம்...

கடைசியாக உன்னிடம் நான் போனில் பேசியபோது, ''எப்பய்யா... ஊருக்கு வருவ.. அம்மாவை பாக்க வரமாட்டியா... அம்மா ஞாபகம் இல்லியா..?'' என்று நீ உன் அடிவயிற்றிலிருந்து உச்சரித்த வார்த்தைகள் மட்டும் என் மனதை கீறிக் கொண்டிருக்கிறதம்மா...

எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டால், அதற்கு அடையாளமாக நட்சத்திரங்களை கொடுப்பார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால்... வீரமரணம் அடைந்தாலும் நட்சத்திரங்காளாய் ஒளிவீசுவோம் என்பதைக் காட்டத்தான் அம்மா. என்னை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தக்கூடாது. அப்படி சிந்தினால் அது சுயநலமாகி விடும்.

நான் சென்று, வெற்றியுடன் திரும்புவேன். அப்படி ஒரு வேளை திரும்பவில்லையெனில் கவலைப்படாதே... என் மனதில் நீக்கமற நிறைந்திருப்பது நீயும், எனது தேசமும்தான்...

அன்னவயலிற்கு நான் அனுப்பும் கடைசி கடிதம் இதுவாகக் கூட இருக்கலாம். கடைசி காலத்தில் பெற்ற தாய்க்கு வேண்டிய பணிகளை செய்யவேண்டியவனாயிற்றே... என கலங்காதே. அப்பணியை நம் பாரத தாய்க்கு செய்து கொண்டிருக்கிறேன்.

எதிரிகளை அழிப்பதில் எமனாக செல்கிறேன். ஒருவேளை நான் இறந்தால் என்னைப் போல் பலர் இத்தேசத்திற்காக பிறப்பார்கள்.. கவலை வேண்டாம் அம்மா..

கடைசியாக உன்னிடம் வேண்டுவது, ''தம் தேசத்திற்கு துடிப்பான இளைஞர்கள் தேவை. இக்கடிதம் கண்டவுடன் தம்பி செல்வத்தையும் இராணுவத்திற்கு அனுப்பு.. ஏனென்றால் எங்களைப் போன்ற பிள்ளைகளால்தான் நம் பாரதத்தாய் நிம்மதியாக வாழமுடியும். கண்கலங்காமல் இதை நிறைவேற்றம்மா...

சென்று, வென்று வருகிறேன். வாழ்க பாரதம்..!

இப்படிக்கு
உன் மகன்
மோகனன்''

கடிதத்தை படித்து முடித்தவுடன், பரமசிவத்தின் கண் கலங்கியிருந்தது. வள்ளிக்கிழவியின் முகத்தைப் பார்த்தார். அவள் கண்ணில் இருந்து ஆறாய் ஓடிய கண்ணீர் சட்டென்று நின்றது. அக்கண்ணில் தீர்க்க சிந்தனையின் சாயல் 'இளையவன் செல்வம் வந்ததும், அவனையும் இராணுவத்திற்கு அனுப்ப வேண்டும்'.

(09.07.2002 அன்று, எனது சொந்த ஊரான ஆத்தூரில் இருந்தபோது எழுதிய சிறுகதை)

Tuesday, July 29, 2008

தமிழுக்கும் பதினாறு பேறு..!

உலகில் 'கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி... நம் தமிழ்க்குடி' என்றார்கள் நம் தமிழாய்ந்த ஆன்றோர்கள். உலகின் பழமையான மொழிகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. அச்சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உலகறிந்த உண்மை. அது என்றுமே செம்மொழிதான் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி'. ஆயினும் நமது நடுவண் அரசு. அதிகாரபூர்வமாக 12-10-2004-இல் தான் தமிழ் மொழி செம்மொழி என அறிவித்தது. அதன் சிறப்புகள் அரசியல் பின்புலம் காரணமாகவே வெளியே வந்தது போல் ஒரு மாயையும் ஏற்பட்டிருக்கிறது..(அதாங்க... எங்களுக்கு ஆதரவு தந்தா... உங்களுக்கு வேண்டியதை செய்வோம்னு ஆளும் மத்திய அரசு சொல்லிச்சே...)

'ஞாயிறைக் கையால் மறைப்பார் இல்' என்பது நம் முன்னோர் வாக்கு. அதுபோல தமிழ்த்தாயின் சிறப்பை இவர்கள் மறைத்தாலும். காலந்தாழ்த்தி அனுமதி வழங்கினாலும், அவளுக்குரிய சிறப்பை அவள் இழக்கமாட்டாள்.

நம் தாய்த்தமிழிடம் பிறமொழிகளிடம் இல்லாத தனிச்சிறப்புகளும் பெருமைகளும் எண்ணற்றவை இருப்பதாக மொழிப் பேராசிரியர்கள் (மட்டும்தான்) மொழிகிறார்கள். ஆனால் தமிழ் மரபில் பிறந்தவன் மொழிய மறுக்கிறான்...? (அவனுக்கு அது தெரிந்தால்நானே என்று கேள்வி கேட்பது புரிகிறது). ஆனால் பிற நாட்டினர் தமிழின் தனித்தியங்கும் தன்மைகண்டு வியக்கிறார்கள், போற்றுகிறார்கள்.

தமிழின் சொந்தங்களாகிய நாம்தான் சீரிளமைத் தமிழின் சிறப்பினை உணராமல் இருக்கிறோம். இவற்றைக் களைய 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவணர் இதோ செம்மொழியாம் நம் மொழியின் 16 சிறப்புகளைப் பட்டியலிடுகிறார் படியுங்கள்.

தொன்மை - பழமைச் சிறப்பு
முன்மை - முன்தோன்றிய சிறப்பு
எண்மை - எளிமைச் சிறப்பு
ஒண்மை - ஒளியார்ந்த சிறப்பு
இளமை - மூவாச் சிறப்பு
வளமை - சொல்வளச் சிறப்பு
தாய்மை - சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை - கலப்புறாச் சிறப்பு
செம்மை - செழுமைச் சிறப்பு
மும்மை - முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை - இனிய சொற்களின் சிறப்பு
தனிமை - தனித்தியங்கும் சிறப்பு
பெருமை - பெருமிதச் சிறப்பு
திருமை - செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை - இயற்கைச் சிரிப்பு
வியன்மை - வியப்புச் சிறப்பு


(முதலிய 16 பேறுகளைப் பெற்ற நம் தமிழுக்குப் பெருவாழ்வு கிடைக்கப் பாடுபட வேண்டாம். அவளை சிதைக்காமல், நவீன முறையில் வாழவிட்டால் போதும். நன்றி)

Monday, July 28, 2008

'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' சரி..! அந்த பதினாறு..?

திருமணத்திற்கு செல்கிறோம். திருமணம் முடிகிறது. புதுமணத் தம்பதிகள் பெரியவர்கள் கால்களில் விழுந்து வாழ்த்து பெறுகிறார்கள். அப்போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' என பெரியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது திருமண வீடே சிரிப்பினால் அதிரும்.

இதற்கு "பதினாறு பிள்ளைகளைப் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இதற்கு அது சரியான பொருள் இல்லை. பெரியவர்கள் கூறும் பதினாறு பேறுகளில் ஒரு பேறு குழந்தை ஆகும். மற்றவை எவை..? எங்கிருந்து வந்தது இந்த வாக்கியம்..? யார் சொன்னது..?

நமது தமிழ் இலக்கியங்களில் ஒன்றான அபிராமி அந்தாதியை இயற்றிய அபிராமி பட்டர்தான் இதன் ஆசிரியர். அவர்தான், அவருக்கு பிடித்த அபிராமியிடம், மக்களுக்கு பதினாறு பேறுகளை வழங்கு என வேண்டினார்...

அச்செய்யுள்...

''சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில்
நோயின்மை கல்வி தனதானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!''


--அபிராமி பட்டர்

பதினாறு
பேறுகள் (பதினாறு செல்வங்கள்)

(1) நோயற்ற வாழ்வு
(2) கல்வியறிவு
(3) உணவு. அரிசி கோதுமை, துவரை, கடலை போன்ற தானியங்கள்
(4) தனம் (பொன், பொருள், பிற செல்வங்கள்)
(5) அழகான வதனம், உடல்
(6) நீங்காப் புகழ்
(7) ஆணவமில்லாத நற்பெருமை
(8) நீடித்த இளமை (மனதிற்கும், உடலிற்கும்)
(9) நற்செயல்கள்
(10) நன்மக்களைப் பெறுதல் (இதுதான் குழந்தைப் பேறு)
(11) உடல் மற்றும் உள்ளத்து வலிமை
(12) துணிவு
(13) நீண்ட ஆயுள்
(14) எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி
(15) நல்லெண்ணம் (நல்வினை)
(16) (மேற்சொன்ன பதினைந்து பேறுகளையும் ஒரு சேர அனுபவிக்கும்) நுகர்ச்சி.

(இது குறித்து மேலும் அறிந்த தமிழ் கூறும் நல்லுலகவாதிகள், இதில் பிழையிருப்பின் தகுந்த சான்றுகளுடன் குறிப்பிட்டால் திருத்திக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி.)

தொடர் குண்டு வெடிப்புகள்- மத்திய அரசின் கையாலாகத்தனம்..!

பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்பு... அஹமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு... 45க்கும் மேற்பட்டோர் பலி... 100 மேற்பட்டோர் படுகாயம்... நாம் என்ன இந்தியாவில் இருக்கிறோமா.. ஈராக்கில் இருக்கிறோமா... எங்கே போய்க் கொண்டிருக்கிறது நம் தேசம்.

''........தண்ணீர் விட்ட வளர்த்தோம்..........
எங்கள் கண்ணீரல் காத்தோம்...'' என்று அன்றே முழங்கினான் முண்டாசு கவிஞன் பாரதி. இன்று அத்தேசத்தை வெடிகுண்டுகளுக்கும், அந்நிய சக்திகளின் ஊடுருவல்களுக்குமல்லவா இடம் கொடுத்து விட்டோம்...

அமைதிப் பூங்காவில் வெடிகுண்டு... அப்பாவி மக்கள் உயிரிழப்பு... இதற்கு மானங்கெட்ட மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததோடு அடங்கி விட்டது. அட அயோக்கிய அரசே... உங்கள் கண்டனம் யாருக்கடா வேண்டும்... எந்தன் சகோதரர்கள் அங்கே வெடிகுண்டிற்கு பலியாகி விட்டனரே... யார் அவர்களை திருப்பித் தருவார்கள்... உனது கண்டனம் அவர்களைத் திருப்பித் தருமா..? இல்லை உந்தன் கண்டனம்தான் அந்த தீவிரவாதிகளை திருந்தச் செய்து விடுமா..?

நல்லாட்சி செய்வீர்கள் என்றுதானே 100 கோடி மக்களில் 60 கோடி மக்கள் உங்களை ஆட்சியில் ஏற வைத்தனர்... மக்களைக் காக்க வேண்டிய நீங்கள்... மனிதர்களை இரையாக்கி விட்டீர்கள்..? நாங்கள் என்னடா பாவம் செய்தோம்...

இதற்கு 'மத்திய உளவுத்துறை செயலிழந்து விட்டது' என்று எதிர்கட்சியினர் அறிக்கை விட்டுள்ளனர். அவ்வளவே... அவர்களுக்கு தேவை அந்த அரியணை...

ஐயா.. உளவுத்துறை செயலிழக்கவில்லை ... அவர்களுக்கு (ஆளும் மத்திய அரசிற்கு) சாதகமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க தொண்ணனுடன், ஆளும் கட்சி அணுசக்தி கூட்டு, பொறியல், அவியல் என்ற விவகாரத்தில் பங்கு போட்டது. இதில் சம்பந்தி கிடைக்கவில்லையோ அல்லது சம்பங்கு கிடைக்கவில்லையோ (அவர்களுக்கே வெளிச்சம்) இடதுசரிகள் பின்வாங்கிவிட்டனர்.. ஆதரவு மறுத்தோம் உமக்கு... ஆட்சியை விட்டு இறக்கு... என வாய்ப்பந்தலிட்டனர்.

ஆளும்கட்சி விட்டார்களா... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவோம் என்றார்கள்... அங்கே செயலாற்றியது உளவுத்துறை.. எந்த அமைச்சர் என்ன செய்கிறார்.. அவர் யாருக்கு சாதகமாக இருக்கிறார்... ஒருவேளை அரசுக்கு எதிராக இருந்தால்... அவரது (சுய) தேவைகள்..(?!) என்ன..? எப்படி அவர்களை ஆளுங்கட்சி தரப்பில் திருப்பலாம் என்று அத்துறையினரை முடுக்கி விட்டு வேலை வாங்கினர்.

விளைவு... ஆளுங்கட்சி பல கோடிகளை கொட்டியது... வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.. அவர்களை நம்பி வாக்களித்த ஏமாளி மக்களுக்கு குண்டுவெடுப்புகள் மூலம் வாய்க்கரிசி போட்டது.

ஆளுங்கட்சியின் கைப்பாவைகள்தானே அரசியந்திரங்கள்.. அப்புறம் எங்கே... அந்நியர் சதி, ஊடுருவல்... குண்டு வெடிப்பு... தீவிரவாதச் சதி... இவற்றையெல்லாம் கண்காணிக்கப் போகிறார்கள்... அவர்களை கையும் களவுமாக பிடிக்கப் போகிறார்கள்...

'ஊசி இடம் கொடுத்தால்தான்... நூல் நுழைய முடியும்' என்பது நமது மூத்தோர்களின் (பட்டறிவால் கிடைத்த) சொலவடை. அதுபோல அந்நிய சக்திகளுக்கு இந்திய மண்ணில் இடமளித்தது முதல் தவறு... அவர்களை சுதந்திரமாக உள்ளே நடமாட விட்டது அதைவிட மாபெரும் தவறு...

விளைவு தொடர் குண்டு வெடிப்புகள்... கோவை, மும்பை, இந்திய பாராளுமன்றம், காஷ்மீர், பெங்களூர், அஹமதாபாத் என குண்டுவெடிப்பு சம்பவங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

பெங்களூரில் கட்டவிழ்து விடப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு நடந்ததும் அடுத்த நிமிடமாவது சுதாரித்திருக்க வேண்டாமா... இவைகளை ஏன் செய்யவில்லை... என்னாயிற்று உளவுத்துறைக்கு... காவல் துறைக்கு..? அவர்களை சரியான முறையில் வேலைவாங்கும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் என்னாயிற்று..?

'அட போங்க தம்பி.. அவனுங்க அரசாங்கத்தை காப்பத்தறதுக்கே... அவனுங்களால முடியல... ஆதரவு இல்லை..அதான் தொல்லை...ன்னு அமைச்சர்களை சந்தோஷப்படுத்தறானுங்க.. மக்களை காப்பத்தறதாவது... போப்பா...' என்று எனது பக்கத்து வீட்டு பெரியவர் இரு தினங்களுக்கு முன்பு சொன்னது இன்னும் என் மனதில் அசிரிரியாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவு... அடுத்த தாக்குதல் அஹமதாபாத்தில்... அப்பாவி மக்கள் கைசிதறி, கால் சிதறி... எதனால் இறக்கிறோம் என்றுணரும் முன்னே மரணவாசலுக்குள் இழுத்துக் கொள்ள(ல்ல)ப்படும் அவலம்...எல்லாம் அரசின் மெத்தனத்தால் வந்ததுதானே...

மக்களைக் காப்பாற்றவே மக்களாட்சி... அழிப்பதற்கு அல்ல... உளவுத்துறையை ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திருப்பி விடுங்கள்... அந்நியர்களை இந்திய மண்ணில் கால் அல்ல அந்த கேடு கெட்ட நாய்களின் நிழல் கூட நம்மண்ணில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மீறினால் பார்ததும் அவர்களைக் கொல்லுங்கள்...

என் மனசாட்சியே என்னை கேள்வி கேட்டது... 'அட மடையா... நாடாளுமன்றத்தையே குண்டு வீசித்தாக்கிய கொலைபாதகன் அப்சல் குருவுக்கு ஆயுதம் தாங்கிய காவல் வைத்து, ஊட்டமுடன் இருக்க கறி சோறு இட்டு காத்து வருகின்றனர்...

இம்மாதிரியான ஈனப்பன்றிகளை இன்னும் வைத்திருக்கிறது இந்த அரசு... இவன் இங்கு செய்தது போல் சவுதியிலேயோ, குவைத்திலேயோ குண்டுவெடிப்பை நிகழ்த்தி, மாட்டிக் கொண்டால்... இன்னேரம் அவனை விட்டு வைத்திருப்பார்களா.... அவனை உப்புக்கண்டம் போட்டு கைமா (அ) மவுத்தாக்கியிருப்பார்கள்... இந்தியாவாயிற்றே... போடா....

அவர்களுக்கு பிடிக்காதவர்களை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுத் தள்ளுவார்களே தவிர... தீவிரவாதிகளை அல்ல... பாவம் நமது தேசம் தாங்கிகள் (எமது இராணுவத்தினர்)... கடுங்குளிரென்றும் பாராமல், சூறாவளியென்றும் பாராமல்... கார்கில், காஷ்மீர் என அனைத்து பகுதிகளையும் தமது இன்னுயிரையும் ஈந்து காத்து வருகின்றனர்...

இங்குள்ள ஆட்சியாளர்களோ.. அவர்களை காவு கொடுப்பது மட்டுமின்றி அப்பாவி மக்களையும் காவு கொடுக்கின்றனர்... அவனவன் மடி நிறைந்தால் போதும்.. அடுத்தவன் நிலை எப்படி ஆனால் என்ன என்ற நிலைதான் இன்றைய ஆட்சியாளர்களிடம்...' என்று குமுறுகிறது.

நாம் இதுவரை வெற்றிகரமாக சோதனை செய்து வந்த (அக்னி) ஏவுகணைகளின் வேகத்தை மிஞ்சியது... விலைவாசி... பெருந்தனக்காரனின் வயிறு போல் பணவீக்கம்... சோம்பித் திரியும் ஓநாய்கள் போல் அரசியல் வாதிகள்... அதில் அண்ட நினைக்கும் அரசு இயந்திரங்கள்...

ஏழை, பணக்காரன். உயர்ந்தவன், தாழ்ந்தவன். வேலை உள்ளவன், வேலை இல்லாதவன்... என ஏற்றத்தாழ்வு நிலை இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது... அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. 8 மணி நேரம் குளுகுளு அறையில் இருந்தபடி அந்நிய நாட்டிற்கு பணிசெய்கிறவருக்கு 5 முதல் 6 லகரத்தில் சம்பளம். வாரம் இருநாள் விடுமுறை.. உல்லாச வாழ்க்கை...

24 மணி நேரமும் மக்களைக் காக்கும் (?) காவல்துறை நண்பர்களுக்கு 4 லகரத்தில் சம்பளம்... விடுமுறையா... மூச்..... (அதிலு பலர் மாமூல் வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது தனிக்கதை...)

இப்படி இருந்தால் காவல் துறை ஏன் கள்ளத்துறையாக மாறாது... கயவர்களை விட்டுவிட்டு கண்ணியமானவர்களை அடிக்காது... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள்... அவர்களுடைய சேவை மேம்படும்.

அந்நிய நாட்டு சக்திகள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம். எவ்வளவு அந்நிய செலவாணி கொட்டுகிறது என்றாலும் யாரையும் அனுமதியாதே... தீவிரவாதிகளை அழிக்க ஆயுதம் தூக்கு... விரைவான விசாரணை.. உடனடி தீர்ப்பு... நிறைவேறட்டும் தண்டனை.

ஒரு அப்சல்குருவை விட்டு வைத்ததன் விளைவு.. இன்று பல அப்சல் குருக்கள் இந்தியத்தாயின் மடியில் வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர்... இவர்களை எப்படி ஒழிப்பது.. அழிப்பது...

இவ்விஷக்கிருமிகள் செய்யும் வேலையால், இவர்களது சமுதாயமே தலைகுனிகிறது... எங்கே நிமிரும் இந்தியா... எப்போது வல்லரசாகும்... என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை உங்கள் வசதிக்கேற்ப நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்...

வாழ்க பாரத அரசியல்... வளர்க அதன் புகழ்... வாழ்க மக்கள் (நெற்றியில் பட்டை) நாமம்

Friday, July 25, 2008

காதலின் நியதி

இருட்டும் வெளிச்சமும்
பிரபஞ்சத்தின் நியதி..!
பிறப்பும் இறப்பும்
இயற்கையின் நியதி..!
இன்பமும் துன்பமும்
வாழ்க்கையின் நியதி..!
வெற்றியும் தோல்வியும்
வீரத்தின் நியதி..!
உலக நியதிகளெல்லாம்
இப்படியிருக்க
நீ யுவதியாகி என்னை
அவதிப்பட வைப்பது மட்டும்
எவ்வகை நியதி..?
ஓ... இது காதலின் நியதி..!

என் தேகத்தில் சந்தேகம்

அழகிய நீர்நிறை குளத்தில்
வெண்தாமரை வீற்றிருப்பதை
கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...
இன்றோ சாலையில் காண்கிறேன்
ஓர் அழகிய வெண்தாமரை
நீரில் நனைந்தபடி..!

என்ன விந்தையடா..?
யார் செய்த மாயமடா..?
சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!
தாமரையை நீர் நெருங்காதே...?

என் தேகத்தில் சந்தேகம் முளைக்க
அத்தாமரையை நெருங்கினேன்...
அருகில் சென்றபோதுதான் தெரிந்தது
அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?

அழகிய அன்னம் அற்புதமாக
மழையை ரசித்தபடி நின்றிருக்க
அதனிடம் வினவினேன்...
மழை கண்டு வந்தாயோ அன்னமே..?
இந்த மனம் வேண்டி வந்தாயோ
பொற்கிண்ணமே..?

பதிலில்லை...
அதற்கு பதிலாக
தன் வெண்முத்து பற்கள்
தெரியும்படி மின்னலாய்
சிந்திய புன்னகையை என் முகத்தில்
விசிறியடித்தது...

கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு
இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?

(தன் காதலி மழையில் நனைந்தபடி, மழையை ரசித்துக் கொண்டிருக்க... அவளது காதலனோ அவள் நனையும் அழகைக் கண்டு கவிதையாக உளறுகிறான்.. அதன் விளைவே இக்கவிதை...)

Thursday, July 24, 2008

'காதி'யின் புலம்பல்

கா(ந்)தியில் உள்ளதால்தானோ
என்னவோ
காந்தி மறைந்ததும்
அவரை மறந்த கையோடு
என்னையும் மறந்து விட்டார்கள்...

பெரும்புள்ளி

எங்கள் தலைவர்
அரசியலில் பெரும்புள்ளி
காக்காய் பிடித்து காரியம்
சாதிப்பதில் வல்லவர்
அதால்தானோ என்னவோ...
அவர் இறந்தவுடன் அவருக்கு
வைத்த சிலையில்
காகங்கள் வைத்தன எச்சப்புள்ளி...

கற்றுக்கொள்

ஒருவனுக்கு ஒருத்தியென
வாழக் கற்றுக் கொள்...
ஏனென்றால் எமன் ஒன்றும்
எருமையில் வரவில்லை அப்பனே
மெதுவாக வருவதற்கு...
எயிட்ஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறான்
ஏவுகணை போல்...

நீர்க்குமிழிகள்

வழிதவறி உருவான
நீர்க்குமிழிகள்...
இலக்கில்லாமல்
ஆற்றின் நீரோட்டத்தில்
மிதந்து செல்கின்றன...
விரைவில்
பட்டுடைந்து போக...
மனித சமுதாயத்திலும்
நீர்க்குமிழிகளாய்
எயிட்ஸ் நோய்க் குழந்தைகள்...

ஒரு பேதையின் சபதம்

உன்னைப் போல் நானும்
பிறருடன் சிரித்துப் பேசத்தான் ஆசை..!
படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
பறக்கத்தான் ஆசை..!
குயிலை விட அழகாக
பாடத்தான் ஆசை..!
பி.டி.உஷாவைப்போல்
ஒலிம்பிக்கில் ஓடத்தான் ஆசை..!
இத்தனையும் என்னுள்
விதைத்துக் கொண்டிருக்கிறேன்..!
'கேவலம் நீ ஒரு பெண்தானே'
என்று நீ சொன்ன அந்த
ஒ(தி)ரு வார்த்தையால்
இவ்வளவு மாற்றமும்..!

வற்றாதது

பசியால் வயிறு வற்றினாலும்
கண்ணீர் மட்டும் வற்றவேயில்லை
இந்த ஏழை மக்களுக்கு...

தாஜ்மஹால்

இரு பறவைகளின் இல்லற இன்பத்தில்
ஒரு பறவை இறந்துவிட
மறு பறவை கட்டிய வெள்ளைக் கூடு...

Wednesday, July 23, 2008

பெண் குழந்தையின் கேள்வி


அம்மா...
நான் செய்த
தவறென்ன...

உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...

நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்... அந்த பத்து எது?

'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அவர்களிடம் யார் இதை சொன்னாங்க... இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்... எல்லோரும் சொல்றாங்க அதான் சொன்னேன் என்பார்கள்... இதனை கூறியது யார்..? எங்கே..? எப்போது..? ஏன்..? என்ற கேள்விக்கு தினமணியில் வெளிவந்த தமிழ்மணி சிறுகோடிட்டு காட்ட.., அதை நான் ஆய்ந்து அகழ்ந்தெடுத்ததில் (இப்படியெல்லாம் சொல்லனுமா...?) கண்டுபிடித்'தேன்'. படித்'தேன்'. உண்மையில் அது 'தேன்' தான்..!

இந்த வார்த்தையை நமக்களித்தவர், நம் தமிழ்க் குலத் தோன்றல், தமிழாய்ந்த மூதாட்டி ஔவைதான். அவர் மானுடருக்கென்று 'நல்வழி' என்னும் தலைப்பில் 40 செய்யுளை நமக்கு (சு)வாசிக்கத் தந்திருக்கிறார்.
அதில் 26 வதாக வரும் செய்யுள்.. இதோ...

'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்'

- நல்வழி, 26வது செய்யுள்

இதன்
பொருள் 'பசியென்று வந்துவிட்டால் மானம், உயர்குலம், கல்வி, வலிமை, அறிவுடைமை, ஈகை, தவம், உயர்வு, முயற்சி, தேனின் கசிவு போன்ற சொல்லுடைய நற்குலப் பெண்களைத் காதலித்தல் போன்ற பத்து பண்புகளையும் பறந்து போகச் செய்து விடும்' என்பதே ஆகும்.

ஒரு செய்யுளில் உலகிற்கே உணர்த்தும் கருத்து இதுவெனில், இப்பெருமை நம் ஔவைக்கு மட்டுமன்று, நம் தமிழ்க் குலத்திற்கும்தான். வாழ்க எந்தமிழ்.

முக்கனிகள் எவை..?

நம்மிடம் முக்கனிகள் எவையென்று கேட்டால் மா, பலா, வாழை என்போம். ஆனால் சங்க காலத்தில் இதற்கு சரியான பதில் கடுக்காய், நெல்ல்லிக்காய், தான்றிக்காய் (அதாவது இதன் கனிகள்) ஆகும். எப்படி என்று வினவுபவர்கள்...மேலும் படியுங்களேன்..

"விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்பழச்சுனை
தலைத்தணீர் மலரணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலைத்தலைய வேற்கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நிலத்தலைய துப்பெலா நிறைது ளும்பும் ஊர்களே''

-(சீவகசிந்தாமணி, 75வது செய்யுள்)

இச்செய்யுளுக்கான விளக்கம்:

இந்நாட்டிலுள்ள ஊர்கள் தோறும் யாவர்க்கும் விலக்குதல் இல்லாத அன்னச் சத்திரங்கள் உள்ளன. வெம்மையில்லாத சுனையில் காலையில் எடுத்த தண்ணீரில் பூவும் சந்தனமும் இட்ட தண்ணீர்ப் பந்தல்கள் உள்ளன. வேல்போன்ற விழிபெற்ற மாதர் கூத்தாடும் இடங்கள் உள்ளன. மேலும் அங்கே ஐம்பொறிகளால் (ஐம்புலன்கள்) நுகரும் பொருள்கள் அனைத்தும் நிறைந்து ததும்பும் என்கிறார் சீவகசிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கத்தேவர் .

இச்செய்யுளில் வந்துள்ள 'முப்பழம்' (முக்கனிகள்) என்பதற்குச் சாதாரண உரையாசிரியர்கள் உரையெழுதினால், முப்பழம் - மா, பலா, வாழைக் கனிகள் ஏன்றெழுதிவிடுவர். 'காய்மாண்ட தெங்கின் பழம் வீழ......'(சீவகசிந்தாமணி - 31வது செய்யுள்) எனத் தொடங்கும் நாட்டு வளப் பாடலில் இம்முக்கனிகளைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிட்டுள்ளார்.

நச்சினார்க்கினியர் (உரையாசிரியர்), முன்பு முக்கனிகள் கூறப்பட்டதை நினைவில் கொண்டு இங்கே (சீவகசிந்தாமணி-75வது செய்யுள்) முப்பழம் - கடு(க்காய்), நெல்(ல்லிக்காய்)-, தான்றி(க்காய்) என்பனவற்றின் பழங்கள் என்று சரியாக எழுதினார்.

பண்டைத் தமிழர், நாவிற்கு நலம் தரும் மா, பலா, வாழைக் கனிகள் தரும் மரங்களை மட்டும் வளர்க்கவில்லை. உடலுக்கு நலந்தரும், பிணிகளைப் போக்கும் மருத்துவ குணம் கொண்ட மரங்களையும் வளர்த்தனர் ஏன்பதை உளங்கொண்டு கடு, நெல், தான்றி என்று முப்பழத்துக்கு விளக்கம் தந்தார்.

சரிதானே..!

Saturday, July 19, 2008

இல்லை... இல்லவே இல்லை..!

ஆப்கானிஸ்தானில் ரயில்கள் இல்லை..!
ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை..!
ஈக்களுக்கு பற்கள் இல்லை..!
ஈசலுக்கு வயிறு இல்லை..!
சவுதியில் நதிகள் இல்லை..!
சந்திரனில் வாயுமண்டலம் இல்லை..!
சுண்டெலிக்கு வியர்ப்பது இல்லை..!
மண்ணுளி பாம்பிற்கு கண்கள் இல்லை..!
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை..!
மலைப்பாம்பிற்கு விஷமில்லை..!
பாம்பு, மீன் போன்றவற்றிற்கு கண்ணிமைகள் இல்லை..!
யமுனை ந்தி கடலில் கலப்பது இல்லை..!
வடதுருவத்தில் நிலப்பரப்புகள் இல்லை..!
வண்ணத்துப்பூச்சிக்கு வாயில்லை..!
முதலைக்கு நாக்கில்லை..!
பாம்பிற்கு காதில்லை..!
வௌவாலிற்கு பார்வை இல்லை..!
தவளைக்கு கழுத்து இல்லை..!
நண்டிற்கு தலை இல்லை..!
காண்டாமிருகம் தன் கொம்பினால் யாரையும் தாக்குவது இல்லை..!(கடைசியில் உள்ளது மிகவும் முக்கியமுங்கோவ்...)
அல்பேனியாவில் மதங்களே இல்லை..!

மோகனனின் கலாட்டா

(மோகனன் அவனது நண்பரை வழியில் சந்திக்கிறான்… அப்போது நண்பர் மோகனனைப் பார்த்து …)

"வாடா… எப்ப வந்த"
"நான் வந்து 28 வருடமாச்சு…"
"நான் அதை கேக்கலடா"
"அப்ப வந்தவனை ஊரிலிருந்து எப்ப வந்தன்னு கேக்கமாட்ட..?"
"வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா...?"
"போகும்போது ஆரம்பிக்க முடியாதே…"
"சரி அத விடுடா…"
"நான் எதையும் பிடிச்சிகிட்டு இருக்கலையே… நீ எதை விடச் சொல்ற…"
"டே அப்பா… உங்கிட்ட…"
"நான் எப்படா உனக்கு அப்பாவானேன்…"
"உன்னைச் சொல்லலடா…"
"என்னைச் சொல்லன்னா…....... டேய்… ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம்டா… உன் அப்பாவை ‘டே’ அப்பாங்கற…"
"ஐயோ………?"
"ஏண்டா எங்கயாவது அடி பட்டுடிச்சா…"
"(கோபமாக…) இ... இல்லடா…"
"அப்ப எதுக்குடா ‘ஐயோ’ன்ன..?"
"உங்கிட்ட பேசறதுக்கு பதிலா… சுவர்கிட்ட பேசலாம்டா…"
"சுவர்கிட்ட பைத்தியம்தாண்டா பேசும்…"
"ஆமா நான் பைத்தியம்… ஆமா நான் பைத்தியம்…" (என்று அலறியபடியே என் நண்பன் தலைதெறிக்க ஓடியதைப் பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை…" )

(மோகனன் கலாட்டா தொடரும்)

Thursday, July 17, 2008

கும்பகோணம் பள்ளி தீ விபத்து - கவிதாஞ்சலி

கும்பகோணத் துயரம்




கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இறுமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

-மோ. கணேசன்.


(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து நான்காமாண்டு நினைவு நாள் (16.07.2008) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர்க் கவிதாஞ்சலி...


Friday, July 11, 2008

பெண் உருவ காய்களைத் தரும் தாய்லாந்து மரம் 'நரீபோல்' (Nareepol)

பணம் என்ன மரத்திலயா காய்க்குது என்ற சொலவடை நம்மில் உண்டு. இங்கு பெண் மரத்தில் காய்க்கிறாள். நம்புங்கள். இயற்கையின் படைப்பில் இப்படியும் ஒரு விந்தை..!


எனது அலுவலக நண்பர் ஒருவர், அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்ததும் அசந்து விட்டேன். என் கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. தாய்லாந்திலுள்ள 'நரீபோல்' (Nareepol) என்ற மரத்தின் காய்கள் அத்தனையும் பெண்களைப் போல் இருக்கின்றன. என்னால் நம்பமுடியாமலும் இருக்க முடியவில்லை.


கூகிள் தேடுபொறியில் இம்மரம் பற்றி கேட்டதில்.. 'உண்மைதான் நண்பா... நம்பு...' என்று சொல்லாத குறையாக 1000 ஆதாரங்களை நிழற்படத்துடன் என் கணினியில் துப்பியது. பார்த்தேன். அம்மரத்தில் காய்த்திருக்கும் காய்கள் அனைத்தும் அடிபிறழாமல் அப்படியே பெண்ணாக இருக்கின்றன.


தாய்லாந்து மொழியில் நரீ(Naree) என்றால் பெண் என அர்த்தமாம். போல் (Pol) என்றால் மரம் என அர்த்தமாம். பெண் வடிவ காய்கள் காய்ப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததாம்.

பெண் வடிவத்திலுள்ள காய்கள்... ஏதோ மாங்காய் தொங்குவது போல தொங்கிக் கொண்டிருக்கின்றன. இம்மரத்தை நேரில் பார்க்க வேண்டுமெனில் பேங்காக்கிலிருந்து 500 கி.மீட்டர் தொலைவிலுள்ள பெட்சாபூன் மாகாணத்திற்கு (Petchaboon province) செல்ல வேண்டுமாம்...

இணையத்தில் இதுகுறித்து கண்ணில் விளக்கெண்ணெய் விடாமல் தேடியதில் தாய்(லாந்து) மொழியிலுள்ள விக்கிபீடியாவில் தகவல் இருக்கிறது. இம்மொழி தெரிந்தவர்கள் இந்த இணைப்பை சொடுக்கினால் அப்பக்கத்தை பார்க்கலாம்.

கீழே உள்ள ஓவியங்கள் இரண்டும், தாய்லாந்தின் பழமையான ஓவியங்கள் என சொல்லப்படுகிறது. அதிலும் இந்த மரம் இடம்பிடித்துள்ளது...






(இயற்கையின் குறும்பா... இல்லை, செயற்கையாக யாராவது குறும்பு வேலை செய்து விட்டார்களா என்றும் தெரியவில்லை... சந்தேகம் இன்னும் அகலவில்லை... தாய்லாந்து நண்பர்கள் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்... இது குறித்து அதிகம் தகவல் தெரிந்தவர்கள், எனக்கு மின்னஞ்சல் செய்யவும்... தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்..)

அக்மார்க் முத்திரை


அக்மார்க் முத்திரை, அக்மார்க் பொருட்கள் என்று கேள்விப் பட்டிருப்போமல்லவா.... அதன் பணி என்ன, எதற்கெல்லாம் தரச்சான்றிதழ் வழங்குகிறது என்பதை அறிந்துகொள்ள அக்மார்க் இணையதளத்திற்கு செல்லுங்கள்

Monday, July 07, 2008

தமிழ் சொற்களை அகர வரிசைப்படுத்த...

தமிழ் எழுதுகருவியான NHM Writer மற்றும் NHM Convertor ஆகியவற்றைத் தந்த நியூ ஹொரைசான் மீடியாவின் தொழில் நுட்பக் கலைஞர் திரு நாகராஜனின் புதிய படைப்பு NHM Lister. இது ஒரு ஆன்லைன் கருவி.

இதன் பயன்கள்.

யூனிகோடில் எழுதப் பட்ட தமிழ் பட்டியல்களை உருவாக்க, ஒரே சொடுக்கில் அகர வரிசைப் படுத்த உதவுகிறது. ஆங்கிலச்சொற்கள், எண்கள், சின்னங்களை நிராகரித்தோ இணைத்தோ பட்டியலை வரிசைப் படுத்த முடியும்.

தனிச் சொற்களின் எண்ணிக்கை, மொத்தச் சொற்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டுத் தருகிறது. அகர வரிசைப் படுத்தப் பட்ட பட்டியலை சொற்களின் எண்ணிக்கையுடனோ தனிச் சொற்களின் பட்டியலாகவோ copy செய்து கொள்ளலாம்.

பட்டியல்களை உருவாக்க, வரிசைப்படுத்த, சொற்களைக் கணக்கிட என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு கருவி அவசியமாக இருக்கும்.

இதன்
பயன்கள், நிறைகுறைகள் பயனாளிகளின் தேவையின், பயன்பாட்டின் அடிப்படையில் இருக்கும்.

குறையாடுகள் ஏதேனும் இருந்தாலோ, இன்னும் தேவையான வசதிகள் பற்றியோ தெரிவித்தால் நண்பர் நாகராஜன் அவர்கள் இக்கருவியை மேம்படுத்த உதவும்.

தமிழ் சொற்களை அகர வரிசைப்படுத்த NHM Lister -ஐ பயன்படுத்துவதற்கு இங்கே சொடுக்கவும்.

நன்றி: சிந்தாநதி

பயர்பாக்ஸில் தமிழை சிதையாமல் படிக்க...

இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்தபடியாக வேகமாக முன்னேறி வந்த பயர்பாக்ஸ் உலவி தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில் மட்டும் சில பிரச்சினைகளை சந்தித்தது. ஒழுங்கு படுத்தப்பட்ட (Align) பத்திகளை கொண்ட வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் இழைபிரிந்து, தமிழ் குதறப்பட்டு காட்சியளித்தது.

இந்தப் பிரச்சினை அடுத்த பதிப்பிலாவது நீங்காதா என்ற நப்பாசையில் அடுத்தடுத்த பதிப்புகளுக்காக காத்திருப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது அதற்கு தக்க நிவாரணம் கிடத்திருக்கிறது.

பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 என்ற மேம்படுத்தப்பட்ட உலவி மூலம் அது சாத்தியமாயிருக்கிறது! தற்போது தமிழ் சிதையாமல் பயர்பாக்சில் வேலை செய்கிறது!! தமிழ்த்தளங்களில் ஒழுங்காக வேலை செய்கிறது!!!

விண்டோஸ் பயனர்களுக்கான ஆங்கில இடைமுகப்பு பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மேக், லினக்ஸ், மற்றும் பல மொழிகளுக்கான பயர்பாக்ஸை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இடைமுகப்பு இந்திய மொழிகளில் இந்தியோ, தமிழோ இல்லை. மாறாக குஜராத்தி, பஞ்சாபி மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

நன்றி: சிந்தாநதி

Wednesday, July 02, 2008

பிரபலங்களின் முழுப் பெயர்கள்

நாம் அறிந்த தலைவர்கள், பிரபலங்கள், அறிஞர்கள் ஆகியோர்களின் முழு அல்லது இயற்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், பட்டப் பெயர்களாலேயே பொதுவாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதன் சிறு முயற்சிதான் இது... இதில் பிழையிருப்பின் தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். நிறைய பிரபலங்களின் பெயரை சேர்க்கப்படவில்லயென்பது உண்மையே. ஏனெனில் எனது சிற்றறிவிற்கு எட்டியவரை கொடுத்துள்ளேன். அப்பிரபலங்களும் இதில் இடம்பெறச் செய்யவேண்டுமென்று நீங்கள் கருதினால், அவர்களது பெயரை எமக்கு அனுப்பி வைத்து உதவுங்கள்... நன்றி.

(சாதிப் பெயர்களில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் எடுத்துக்கொண்ட தலைப்பு அப்படி என்பதால், என்னை சமாதானப்படுத்திக் கொண்டு பதிவுசெய்கிறேன்)


நேதாஜி சுபாஷ் சந்திரா - 'மாவீரன்' நேதாஜி
கோபால்சாமி துரைசாமி நாயுடு - ஜி. டி. நாயுடு
வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் - வ.வே.சு.ஐயர்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - 'மகாத்மா' காந்தி
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் - டாக்டர் அம்பேத்கர்
குமாரசாமி காமராஜ் - 'பெருந்தலைவர்' காமராசர்
மொரார்ஜி ரஞ் சோட்ஜி தேசாய் - மொரார்ஜி தேசாய்
மேரி தெரசா போஜாக்சியூ - அன்னை தெரசா
ஈரோடு வெங்கட்ட நாயக்கர் ராமசாமி - தந்தை பெரியார்
நெல்சன் ரோலிக்லாஹ்லா மண்டேலா - நெல்சன் மண்டேலா
காஞ்சீவரம் நடராஜன் அண்ணாதுரை - பேரறிஞர் அண்ணா
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் - ம.பொ.சி

மருதூர் கோபலன் ராமச்சந்திர மேனன் - 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்
வைக்கம் நாராயணி ஜானகி - வி.என்.ஜானகி (எம்.ஜி.ஆரின் 3 - வது மனைவி)
கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் - கே.பி. சுந்தராம்பாள்
மதராஸ் ராஜகோபால் நாயுடு ராதாகிருஷ்ணன் - எம்.ஆர்.ராதா
பலுவாயி பானுமதி ராமகிருஷ்ணா - நடிகை பானுமதி
பொள்ளாச்சி சின்னப்பா வீரப்பா - பி.எஸ்.வீரப்பா
புரூஸ் ஜுன் ஃபேன் லீ - புரூஸ் லீ
கோச்சேரில் ராமன் நாராயணன் - கே.ஆர். நாராயணன்
பாமுலபார்தி வெங்கட நரசிம்மராவ் - பி.வி. நரசிம்மராவ்
இந்தர் குமார் குஜ்ரால் - ஐ.கே. குஜ்ரால்

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா - ஜே.ஆர்.டி. டாடா
புதுக்கோட்டை உலக நாதப்பிள்ளை சின்னப்பா - பி.யூ.சின்னப்பா
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியகராஜ பாகவதர் - எம்.கே. தியகராஜ பாகவதர்
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - எம்.எஸ். சுப்புலட்சுமி
அவுல்
பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
சான் கோங் சாங் - ஜாக்கி சான்
கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் - கே.ஜே.யேசுதாஸ்
அல்லா ரகா ரஹ்மான் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

Saturday, June 28, 2008

கற்பின் விலை..? (குறுங்கவிதைகள்)

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

--*--*--*--*--*--*--*--

எருது

மனிதர்களின் வாழ்க்கை
வண்டியை ஓட்ட
நான் சுமக்கிறேன் பாரத்தை..!

--*--*--*--*--*--*--*--

இசை

ஐந்தறிவு மாக்களையும்
வசப்படுத்த
ஆறறிவாளன் கண்டுபிடித்த
அற்புத சக்தி..!

--*--*--*--*--*--*--*--

கங்காரு

கர்ப்பப்பையில் சுமந்தது
போதாதென்று
வயிற்றுப்பையிலும் சுமக்கும்
உத்தமத்தாய்..!

--*--*--*--*--*--*--*--

அரசின் அறிவிப்பு

இன்று உலக
எயிட்ஸ் ஒழிப்பு தினம்
கடைபிடியுங்கள்
காண்டத்தோடு..!

--*--*--*--*--*--*--*--

மழை

பூமிப்பெண்ணைப்
பார்த்து
வானமகன்
விடும் ஜொள்..!

--*--*--*--*--*--*--*--

முகில்

பூமிப்பந்தை
குளிர்விக்க
இயற்கையளித்த இலவச
குளிர்சாதனக் கருவி..!

--*--*--*--*--*--*--*--

விதவை

பிறருக்கு
வெளிச்சம்
கொடுப்பதற்காக
தன்னையே அழித்துக் கொள்ளும்
மெழுகுவர்த்தி....

--*--*--*--*--*--*--*--

Friday, June 27, 2008

ஹைக்கூ கவிதைகள் அல்ல குறுங்கவிதைகள்..!

மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதப்படும் கவிதைகளை... 'ஹைக்கூ கவிதைகள்' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஜப்பானிய வடிவமாக இருக்கும் 'ஹைக்கூ', கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான நம் தமிழ்க்குடியின் முதுபெரும் மூத்த புலவரான வள்ளுவர் எழுதிய குறள் வடிவம்தான். வித்தியாசம் எனெனவெனில், அவர் இலக்கணச் சுத்தமாக, மரபு நடையில், இரண்டே அடிகளில் ஐயந்திரிபர சொல்லிவிடுவார். அந்த இரண்டு வரிகளில் முதல் வரியை இரண்டாக மடித்து எழுதினால் குறள் மூன்று வரிகளாகிவிடும். அதைத்தான் 'ஹைக்கூ' வும் செய்கிறது. ஆனால் புதுக்கவிதை நடையில்...

நமக்குதான் தமிழிலேயே அனைத்தும் இருக்கிறதே பிறகு ஏன் 'ஹைக்கூ' கவிதை என்கிறீர்கள். முத்து, முத்தாய் மூன்றே வரிகளில் எழுதுவதை, நறுக்குத் தெரித்தாற்ப் போல் நான்கே வரிகளில் எழுதுவதை இனி குறுங்கவிதைகள் என்ற அழைக்கலாமே..! இதுநாள்வரை நான் அப்படித்தான் அழைத்திருக்கிறேன். அழைத்துக் கொண்டே இருப்பேன்.

இனி எனது குறுங் கவிதைகள்...

--0--0--0--0--0--0--0--

தண்ணீர்க்குடம்

எத்தனை முறை தூக்கிலிட்டாலும்
உயிர் பிரியாமல் உறவாடும்
உலோக உயிரி..!

--0--0--0--0--0--0--0--

பிச்சைக்காரன்

நிகழ்கால சோகந்தன்னை
எதிர்காலம் வென்றிடவே
ஏந்துகிறான் திருவோடை..!

--0--0--0--0--0--0--0--

வேண்டுதல்

குந்த குடிசை வேணும்
கடவுளே..?
வேண்டுதல்
அரச மரத்துப் பிள்ளையாரிடம்..!

--0--0--0--0--0--0--0--

எயிட்ஸ்

நவயுக
எமதர்மனின்
கலியுக
எமவாகனம்..!

--0--0--0--0--0--0--0--

கடியாரம்

கால தேவனை
நொடிக்குள் அடக்கும்
எந்திரக்குருவி..!

--0--0--0--0--0--0--0--

கருமி

எதிர்காலம் சிறக்க
நிகழ்கால வாழ்வை
சிதைக்கும் கிருமி..!

--0--0--0--0--0--0--0--

அகிம்சை

அண்ணலின் ஆயுதமாம்
அகிம்சை..!
இங்கேயும் 'ஆயுதம்'..!

--0--0--0--0--0--0--0--

எரிமலை

பூமித்தாயின்
சிவப்பு
எச்சில்..!

--0--0--0--0--0--0--0--

இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்)

கலியுக பிரம்மாக்கள்
படைத்த
நவயுக மானி(ட்)டர்கள்..!

--0--0--0--0--0--0--0--

குளோனிங் முறை

மெய் ஞானம் கொண்ட
விஞ்ஞான மனிதர்களின்
அஞ்ஞான முயற்சி..!

--0--0--0--0--0--0--0--

முதுமை

மானுட காவியத்தின்
கடைசி
அத்தியாயம்..!

--0--0--0--0--0--0--0--

மரணம்

மனிதமெனும் சரித்திரத்தில்
கடைசி வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி..!

--0--0--0--0--0--0--0--

திருக்குறள்

தருமி எனும் தமிழ்மக்களுக்கு
தெய்வப்புலவன் தந்த
பொற்கிழி..!

--0--0--0--0--0--0--0--

பள்ளி...

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி - பெயர் மட்டும்
ஔவையார் அகாடமி..!

--0--0--0--0--0--0--0--

Saturday, June 21, 2008

நிலத்தின் அளவீடுகள்

நடுத்தர வர்க்கத்தினரும், ஏழையும் வேண்டுவது குடியிருக்க ஒரு வீடு. இப்போது வீடு வாங்குவது நடக்கின்ற காரியமா? நிலம் வாங்குவோம் என்பவர்களுக்கு நிலத்தின் அளவீடுகள் சரிவரத் தெரிவதில்லை (நான் உள்பட) அதற்காக இந்த பதிவு...

1சதுர அடி - 1 அடி'' x 1 அடி''
10 சதுர அடி - 10 அடி'' x 10 அடி''
435.6சதுர அடி - 1 சென்ட் (Cent)
1076 சதுர அடி - 1 ஏர் (Are)
1200 சதுர அடி - ½ கிரவுண்டு (Ground)
2400 சதுர அடி - 1 கிரவுண்டு
43560 சதுர அடி - 1 ஏக்கர்
107637.8 சதுர அடி - 1 ஹெக்டேர்

1 சென்ட் - 435.6 சதுர அடி (Sq. ft)
10 சென்ட் - 4356 சதுர அடி
100 சென்ட் - 43560 சதுர அடி

1 ஏக்கர் = 43560 சதுர அடி
= 100 சென்ட்
= 40.5 ஏர்கள்
= 0.471 ஹெக்டேர்
= 18.15 கிரவுண்டுகள்

1 குழி - 144 சதுர அடி
3 குழி - 1 சென்ட்
30 குழி - 1 மா(Maa)
1 காணி - 1.322 ஏக்கர்

1 மீட்டர் - 3.280833 அடி (Feet)
1 மைல் - 5280 அடி (Feet)

@இதில் என் அறிவிற்கு எட்டியவரை சரியாகத் தந்திருக்கிறேன். பிழையிருப்பின் தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். நன்றி.

('காணி நிலம் வேண்டும்' என்று மகாகவி பாரதி குறிப்பிட்ட நிலத்தின் அளவு இதை நான் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்)

Tuesday, June 17, 2008

சாதி ஒழிப்பு

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் 2004, ஆகஸ்டு 2-ம் தேதி தினமலரில் வந்த செய்தி...'(படிப்பதற்காக..?)சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக 9 வகுப்பு மாணவி தற்கொலை' படித்ததும் பதறித் துடித்தது என் மனம்... என் உள்ளக்குமுறல்கள் இதோ...)

அட கேடு கெட்ட சமுதாயமே
சாதி வெறி பிடித்த
சமுதாயமே
உன்னால் இன்று ஒரு உயிர்
போய்விட்டதே...
மீட்டுத் தரமுடியுமா உன்னால்..?

அட மதிகெட்ட அரசே
அழுகிய மனம்
கொண்ட அரசே
சாதிகள் இல்லையென்று
வீதிக்கு வீதி
விளம்பரம் செய்வாய்...
ஆனால் சட்டப்படி சாதி பார்த்து
சாதிச் சான்றிதழ் வழங்குவாய்...

எதற்கிந்த
பச்சோந்தி வேடம்
சாதிப்பிரிவால்
கிடைத்ததென்ன உனக்கு..?

வேற்றுமையில் ஒற்றுமை
என ஓதிவிட்டு
இன்ன சாதி இவன்
இவள் இன்ன சாதி என
சான்றளிக்கிறாயே...

சாதிப் பேய் பிடித்த
சதிகார அரசே
சனியன் பிடித்த அரசே
என்று நீ மாறுவாய்..?
எப்போது நீ
எளியவர்களைக் காப்பாய்..?

நடுவண் அரசு
நல்லரசு...
மக்களுக்கு
நன்மை பயக்கும் அரசு...
என பத்திரிகைகளில்
பக்கத்திற்குப் பக்கம்
பகட்டாய் விளம்பரம்..?

இதோ ஓர் உயிர்
கேவலம் ஒரு
சாதிச் சான்றிதழ்
கிடைக்கவில்லை என
தன்னுயிரை மாய்த்துக் கொண்டது பார்..!
மதிகெட்ட அரசே
பொய் வேடம் உனக்கெதற்கு..?

அம்மாணவி
ஓர் அன்னை தெரசாவாக
ஜான்சி ராணியாக
விண்வெளி வீரங்கனையாக
ஏன் ஒரு வீரத்திருமகளாக
வந்திருப்பாள்..!

நடந்ததா அது..?
உன் கேடு கெட்ட சாதித்தனத்தால்
உனது அதிகாரத்திலுள்ள
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்...
அவர்கள் குடும்பம்
உற்சாகத்தில் ஊறித் திளைக்க
வறியவர்களிடம்
வஞ்சகமில்லாமல் லஞ்சம்
கேட்டதால்...
தீயிலே வெந்து விட்டாள்...

சாதிகளைச் சொல்லி சான்றிதழ்
தரும் உன்னை
தீயிட்டுக் கொளுத்துவேன்
உன் தீங்கான எண்ணங்களுக்கு
எழுத்தாணி தீட்டுவேன்
உன் சவப்பெட்டி
சாதிச் சட்டங்களை
ஆணி கொண்டறைவேன்..!

மக்கள் நலன் காக்கும்
அரசு நீ என்றால்
சாதிகளை ஒழி..!
சாதிச் சான்றிதழை ஒழி..!

சாதிகள் உண்டெனில்
அது ஆணொன்று
பெண்ணொன்று சொல்..!
சாதி வெறி பிடித்த நாய்களின்
காதில் விழும்படி சொல்..!

இல்லையேல் விழுந்தடித்து ஓடு
இல்லையெனில்
நான் ஓடவைப்பேன்..!

எந்த நாட்டிலும் காணா
பல சாதிகள் இங்குண்டு பாரீர்...
அதன் பேரில் பல சாதிக்
கட்சிகளுமுண்டு பாரீர்...
சாதிக் கட்சித் தலைவர்கள்
சாதியின் பெயரைச் சொல்லி
உண்டு கொழுக்கிறார்கள் பாரீர்...

அவன் சாதியாக இருந்தாலும்
ஏழையாக.. ஏமாளியாக
இருப்பவனிடம்
சாதிவெறி தூண்டி விட்டு
குளிர் காயும் குள்ள நரிகள்
இங்குண்டு பாரீர்...

இவ்வளவு நடந்தும்
குட்டக் குட்டக் குனியும்
ஏமாளி மக்களே..?
முதுகெலும்பில்லாத அப்பிராணிகளே
சாதிகளுக்கெதிராக என்று
எழுவீர்கள்..?
இந்த தேசத்தை
எப்போது காப்பீர்கள்..?

எழுங்கள்... இன்றிலிருந்தாவது
விழித்தெழுங்கள்...
விரைந்தெழுங்கள்...
சாதிகள் இல்லையென்று
சொல்லுங்கள்...
அச்சகதியிலிருந்து
வெளியே வாருங்கள்..
சாதியை விட்டொழியுங்கள்...

நீ என்ன சாதி என்று
கேட்பவனின்
வாயைக் கிழித்தெறியுங்கள்...
மதங்களை மறந்து
மனிதர்களை நேசியுங்கள்...

நமக்காகவே அரசு
நல்லோர்களைத் தேர்ந்தெடுங்கள்
அவர்கள் துணையோடு
சாதியை விரட்டுவோம்
சாதி மதமில்லா
சமுதாயம் படைப்போம் வாருங்கள்...

என்னருமை மக்களே
எனது உடன் பிறவா உள்ளங்களே
நம் எதிர்கால சந்ததிகளாவது
சாதியைப் பேசாமல்
கேட்காமல் இருக்கச் செய்வோம் வாருங்கள்..!

மோ. கணேசன். 02.08.2004.

அரசியல்வாதியின் வேண்டுதல்..?

திருப்பதி ஏழுமலையானே...
இந்த தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 20.08.2004 அன்று காலையில் எழுதியது)

Monday, June 16, 2008

புரட்சித் திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம் - எப்படி
இந்தச் சாதிக்காரனுக்கு
அவனுடைய சொந்த சாதியில்தான்
மணமுடிக்கப்பட வேண்டுமென்று...

மதம் விட்டு மதம் மாறியோ
சாதி விட்டு சாதி மாறியோ
மணக்கக் கூடாது... - மாக்கள்
செய்து வைத்திருக்கும் மடத்தனமான வரையறை..!

மடத்தனம் இது மடமைத்தனம்
என்று எதிர்த்துச் செய்தால்
ஏசல் விழும்... பூசல் எழும்...
பல சமயங்களில் உயிரே வீழும்..!

சாதி விட்டு சாதி மாறி மணம் செய்தால்
அது கலப்புத் திருமணமாம்...
எந்த அறிவாளியடா(?) இதற்கு அப்படியொரு
கேவலமான பெயர் வைத்தான்..?

மனித இனத்தை விட்டுவிட்டு
விலங்கினத்தையா மணம் செய்தோம்?
அதை கலப்பு மணம் என்று
கடிந்து சொல்வதற்கு..?

அந்தத் திருமணத்தை...
சாதிகள் ஒழிய... சமத்துவம் மலர...
நற்சமுதாயம் வளர மனமொத்த தம்பதிகள்
செய்த புரட்சித் திருமணமென்று சொல்லுங்கள்..!

சமயசார்பற்ற நாடு என்பதை விட
சாதி மதமற்ற நாடு என்று
சொல்லிக் கொள்வதில்
நாம் பெருமைப் படலாம்..!

இனியேனும் அதை கலப்பு மணம்
என அழைக்காதீர்கள்...
புதிய சமுதாயம் படைக்கும்
'புரட்சித் திருமணங்கள்' என்று சொல்லுங்கள்..!

சாக்காடான சாதிகளின் பெயரால்
மதம் பிடித்த மதங்களின் பெயரால் - இனி
எக்கொடுமைகளும் நடவாமலிருக்க
நாடெங்கும் நடக்கட்டும் 'புரட்சித் திருமணங்கள்'
அதற்கு ஆதரவு நல்கட்டும் இளைஞர் மனங்கள்...

- மோ. கணேசன்.

Saturday, June 14, 2008

காதலனின் ஏக்கம்...

ம் பெற்று வந்தேனோ உனைப் பார்க்க
திநிறை மலர் கண்ணால் எனை நீ நோக்க
மோம் கொண்டேனடி உன்மேல் பெண்ணே..!
நாணேறும் அம்பைப் போல் உன் முன்னழகும்
ரடிக்கும் பின்னழகும், மயக்கும் உன் சிரிப்பும்
ன்மத்தம் ஊட்டுதடி என்னன்பே அருகில் வா..!

Tuesday, May 27, 2008

எனது நண்பனுக்கு திருமண வாழ்த்து...



சு
கமான சுமைகளை சுமக்கப் போகும்
எங்கள் அருமை நண்பர்களே..! - ஈ
ரேழு ஜென்மங்கள் நிலைத்திருக்கும் திருமண
பந்தத்தில் இணையவிருக்கும் நல் இதயங்களே..!
ஷ்டமும் கஷ்டமும் நிறைந்தது வாழ்க்கை
அதில் இனிமையைக் காண்பது உங்கள் வேட்கை..!

ட்டுப்பாடுகள் நிறைந்த இச்சமூகத்தில்
புரட்சி மணம் செய்கின்ற வைரங்களே..!
வினைகள் பல உண்டு திருமண வாழ்க்கையில்
விட்டுக்கொடுத்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்ந்தால்
தாழ்வில்லை உங்கள் வாழ்வில்..! - என்றென்றும்
தொடரட்டும் உங்கள் பந்தம்... வாழ்க நீவீர்..!

-அன்பு நண்பா... உன் திருமண வாழ்வில் உன்னத நிலையை அடைய எனது நல்வாழ்த்துகள்..!



என்றென்றும் நட்பு'டன்'

மோ. கணேசன்.

(எனது நண்பரின் பெயர் சுரேஷ். அவரது மனைவியின் பெயர் கவிதா. நான் எழுதிய வாழ்த்து மடலில் இவர்களிருவரின் பெயரும் முதலெழுத்தாக வரும்படி எழுதியிருக்கிறேன். கண்டுபிடித்தாயிற்றா...)

Thursday, May 08, 2008

எனது முதல் வசன கவிதை!

(மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்.., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின் முதல் முயற்சி இந்த 'ஏற்றத்தாழ்வு என்னும் பிணி' )

ஏற்றத்தாழ்வு எனும் பிணி

பிரபல மருத்துவர் அவர்...
பிணிகளைத் தீர்ப்பதில் வல்லவர்
அரசு மருத்துவமனையில்
பணியாற்றுபவர்...
பணி நேரம் போக தனியாகவும்
மருத்துவம் பார்ப்பவர்...

அரசு மருத்துவ மனையில்
அமர்ந்திருந்த
மருத்துவரிடம் வந்தார்
ஓர் ஏழை...

என்னென்று வினவினார்
மருத்துவர்

ஐயா...
வயிற்றில் சுரீரென்று வலி
வாயினில் புண்...
தாளமுடியவில்லை
பிணி நீக்கவேண்டும் ஐயா...

மருத்துவர் தன்
பரிசோதனைகளைச் செய்தார்...
உடலில் உள்ள குறைகளை
ஓரளவு கண்டறிந்து கொண்டபின்
ஏழையிடம் வினவினார்...
ஐயா நேற்று என்ன சாப்பிட்டீர்..?

ஒன்னும் சாப்பிடலீங்க
சாயங்காலம்தான்
கொஞ்சம் கஞ்சி குடிச்சேன்...

அதற்கு முதல் நாள்
என்ன சாப்பிட்டீர்..?

காலையில் கொஞ்சம்
பழையது சாப்பிட்டனுங்க...
அப்புறம் ராவுப்பொழுதுக்கு
கொஞ்சம் கஞ்சிங்க...

பிணிக்கு காரணம் புரிந்தது
சரியான ஆகாரம் அந்த
ஏழைக்கு இல்லை...
அதனால் வந்த பிணி இது என்று...

தேவையான மருந்துகளை
குறித்துக் கொடுத்து...

ஐயா உணவு உண்டபின்
இந்த மருந்துகளை
உட்கொள்ளுங்கள்...

சாப்பிட்டதுக்கு பொறவு
மாத்திர சாப்பிடனும்னு
சொல்றீங்க சாமி...
அந்த சாப்பாடுதாங்க
என் வீட்ல பிரச்சினை...
உழைக்கத் தயரா இருந்தும்
வேலை வெட்டியில்ல...
அதனால
எங்க சட்டியும் காயுது
வட்டியும் காயுது...

அதனாலதாங்க உங்க
வயிறும் இப்ப நோகுது...
என்று பதிலிறுத்த மருத்துவர்
கவலை கொள்ளாதீர்
நாளை வந்து எனை பாரும்
வேலைக்கு வழி சொல்கிறேன்...
என்று ஏழையை
வழியனுப்பினார்
நம் மருத்துவர்.

மாலை வேளையில்
தனது தனி மருத்துவமனையில்
மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்
அம் மருத்துவர்.

வாசலில் வந்து நின்றது
வாட்டமான கார் ஓன்று
அதிலிருந்து நடக்க முடியதாபடி
நடந்து வந்தார்
அவ்வூரின் செல்வந்தர்களில்
ஒருவரான செல்வராஜ்...

டாக்டர்...
நடக்க முடியல...
மூச்சு வாங்குது...
வயிறு திம்முன்னு இருக்குது...

இதைச் சொல்லவே அவருக்கு
மேல் மூச்சுகீழ் மூச்சு வாங்கியது...

பரிசோதித்தார் மருத்துவர்
உங்களுடைய அன்றாட
உணவு முறை பற்றி
சொல்லுங்கள் என்றார்...

காலையில் டிபன்
மதியம் புல் மீல்ஸ்
மாலையில் சிற்றுண்டி
இரவு பிரியாணி
இடையிடையே நொறுக்குத் தீனி
இதுதான் என்னுடைய
அன்றாடஉணவு முறை...

நாளையே பிரசவித்துவிடும்
நிலையில்
அவரது வயிறு
உப்பிக் கொண்டு நின்றது...

பிணியின் காரணத்தை
அறிந்து கொண்ட மருத்துவர்
மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு

உணவு முறைகளை
மாற்றுங்கள்...
நொறுக்குத் தீனிகளை
ஒழியுங்கள்...
எளிய உணவுகளும்
காய்கறி, கனிகளையும்
சாப்பிடுங்கள்
தினமும் அரை மணி நேரம்
நடைப் பயிற்சி...
கார் வேண்டாம்
சைக்கிள் ஓட்டுங்கள்...
என்றார் மருத்துவர்...

தனிமையில் இருந்த
மருத்துவரின் சிந்தையில்....
காலையில் வந்த
ஏழையின் வயிறு தோன்றியது...
சுவற்றில் ஓட்டப்பட்ட
காகிதம் போல்
கறுத்துச் சிறுத்த வயிறு...

மாலையில் வந்த
செல்வந்தரின் வயிறும்
தோன்றியது...

செல்வச் செழிப்பும்
உணவுக் கொழிப்பும் மிகுந்த
பானையைப் போன்ற வயிறு...

இருவரும் ஒரே திசையிலிருந்துதான்
வருகின்றனர்... ஆனால்
எதிரெதிர் திசையில் நிற்கின்றனர்...

ஏழைக்கு... வேலையுமில்லை
உணவுமில்லை...
பசியும் பிணியும் வாட்டுகிறது..?

செல்வந்தனுக்கு வேலையுமுண்டு
அதிகப்படியான உணவுமுண்டு
தொப்பையும், பிணியும்
வாட்டுகிறது..?

இந்த ஏற்றத் தாழ்வு
எங்கிருந்து வந்தது?
இதை எப்படி ஒழிப்பது..?

இருப்பவன் இல்லாதவனுக்கு
கொடுத்து உதவ வேண்டும்..!

முடிகின்ற காரியமா இது?

எல்லோரும் சமம்
என்ற நம் அரசின்
கொள்கை, கோட்பாடு
இங்கு கோமாளித்தனமாகி விட்டதே..?

இல்லாதவன்
உழைக்கத் தயாராக இருந்தும்
வேலையுமில்லை..?
வேளா வேளைக்கு
உணவுமில்லை..?

அட என் பாரதமே...
இந்த ஏழைகள் நிலை
என்று மாறும்..?
அவர்களின் துயரங்கள்
என்று தீரும்..?

மருத்துவரின் மனதில்
ஆயிரம் கேள்விக்கணைகள்...
பதிலளிப்போர் யார்..?
பாமர மக்களைக் காப்பவர்கள் யார்..?

உங்களுக்காவது
விடை தெரிந்தால் சொல்லுங்களேன்..!

(இதை எழுதிய சூழல்: பண்ருட்டியில் பணி நிமித்தமாக அறை எடுத்து 6 மாத காலம் தங்கியிருந்தேன். அதில் ஓரு நாளான 16.10.2004, அன்று காலை 8.00 மணியிலிருந்து, காலை 8.30-க்குள் எழுதி முடித்து விட்டேன். அதை சிற்சில மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறேன்..)

Tuesday, January 01, 2008

எனது மகன் க. ஆதித்தனின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து


வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

செல்வன். க. ஆதித்தன்.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

அன்பிற்கினிய வாசகர்களுக்காக நவீன ஆத்திசூடி..!

ன்பைக் கொடு..!
ணவம் அழி..!
ன்பத்தை நுகர்..!
கையை வளர்..!
வகையைப் பெருக்கு..!
க்கத்தை உயர்த்து..!
ளிமையைப் புகுத்து..!
ற்றம் பெற உழை..!
யம் நீங்கப் பயில்..!
ழுக்கம் நிறை..!
யாமல் சேவை செய்..!
ஓளவை சொல் கேள்..!
தே உமக்கு உயர்வு தரும்..!


எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2008

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்
மோ. கணேசன்.

Monday, December 31, 2007

Happy new year - 2008

H ours of happy times with friends and family
A bundant time for relaxation
P rosperity
P lenty of love when you need it the most
Y outhful excitement at life's simple pleasures

N ights of restful slumber (you know - don't worry be happy)
E verything you need
W ishing you love and light

Y ears and years of good health
E njoyment and mirth
A angels to watch over you
R embrances of a happy years!

2008

Saturday, September 29, 2007

பெருந்தலைவர் காமராசர்


இந்தியாவின் 'கிங் மேக்கர்' என்றும், 'கருப்பு காந்தி' என்றும் அழைக்கப் பட்டவர் பெருந்தலைவர் காமராசர். தமிழகத்தில் கல்விக் கண் திறந்த கர்ம வீரர். எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். அரசியல் என்ற அகராதியில் இவர் ஓர் அத்தியாயம்.

யானையம்மா யானை..!


யானையம்மா யானை..!
எம்மாம் பெரிய யானை ..!
கனத்த உடம்பு யானை..!
கருத்த நிற யானை..!

அசைந்து வரும் யானை..!
அழகு வடிவ யானை..!
முறக்காது யானை..!
முன் துதிக்கை யானை..!

அம்பாரி வச்ச யானை..!
அதிக பளு தூக்கும் யானை..!
வெண் தந்தம் யானை..!
விவேகமான யானை..!

இலை தழை தின்னும் யானை..!
இரும்பு பலம் யானை..!
கரும்பு தின்னும் யானை..!
காட்டு மலை யானை..!

குட்டி போடும் யானை..!
குதிக்கத் தெரியா யானை..!
கூர்ந்த மதி யானை..!
கூட்டமாய் வாழும் யானை..!

Tuesday, September 11, 2007

மகாகவி பாரதிக்கு கவிதாஞ்சலி

புரட்சிக் கவி பாரதி நினைவு நாள் கவிதை


பெண்களை உயர்த்துவோம் பேதமை அகற்றுவேம்
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோம்..!

பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!

பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கு ஏழுதினான்
வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய்..!

கோட்டுச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தான்
பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெற்றனர்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!

பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டிக் கொண்டு சமூக
முரண்பாடுகளை வேரறுக்க நினைத்தவன்..!

எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி
எட்டயபுரத்தில் பிறந்து ஏட்டு திக்கும்
தமிழால் முழங்கி சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!

தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன்
நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் புகழ் நீங்காது
நின் கவி மறையாது... கருத்துக்கள் குன்றாது..!
-மோ. கணேசன். 11.09.2007

Saturday, September 08, 2007

ஆதித்தனுக்கு ஆத்திச்சூடி


ன்பின் மிகுதியில்
தித்தா நீ மலர்ந்தாய்..!
ன்றோடு நீ பிறந்து

ராண்டு முடிந்தாலும்
ந்தன் வளர்ச்சிக்கு
ட்டமாய் உன் அன்னை..!
திலும் நீ வெற்றி காண
ணியாய் உன் தந்தை..!
யங்கள் அகற்று..!
ற்றுமையைக் கற்றுக் கொள்..!
ய்வின்றிப் பயில்..!
ஓளவையின் மொழி கேள்..!
தே உனக்கு ஆயுதம்..!

Sunday, September 02, 2007

நிழற்படக் கவிதைகள்...

('நீரின்றி அமையாது உலகு' - திருக்குறள்.)


(விதியை மதியால் வெல்லலாம் - பழமொழி)

நிழற்படத்தினுள்ளே கவிதைகள்...

Saturday, September 01, 2007

கோட்டுக் கிறுக்கல்கள்

தாயும் சேயும்

தாயும் அவள் சேயும்



கள்ளமில்லாத வயது



குடிநீர் கிடைத்த மகிழ்ச்சி...







சிறுமியும்
அவளது நாய்குட்டியும்


நான் ரசித்து வரைந்த ரதி...


அழகிய வாத்து



(இந்த வாத்து படத்தை உற்று நோக்கினால் ஒரு செய்தி படிக்கக் கிடைக்கும்)



தமிழ்ப் பெண்



முப்பரிமாண கோட்டுச் சித்திரம் (இந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தால் ஒன்பது விதமாக இந்த சிறுவர்கள் கண்ணுக்கு தெரிவார்கள்... கண்டுபிடிக்க முடிகிறதா..?)



(நான் ரசித்த ஓவியங்களை, கோடுகளால் கிறுக்க முற்பட, இறுதியில் கிடைத்தவைகள்தான் இவை...)

வைரவிழா சுதந்திர தினக் கவிதை

வீறு கொண்டெழுவோம் வாரீர்..!

வீசுநறு மணங்கமழ் சோலை நிறை நாடு
பேசுகிளி யன்ன மயிலாடி நின்ற நாடு
சுகவி பேசு கலையாயிரம் படைத்த நாடு
காசுபண செல்வ நிறையெம் பாரதத் திருநாடு..!

நி
முமிப்படி யின்பமெய்தி யிருந்த போழ்து
பாமலர் பணியவேண்டிய பாரதத் தாயினை
சேமுறச் செய்ய வேண்டி மண்ணாசை கொண்ட
பேதம் நிறைந்த பாதகர் களொன்று சேர்ந்தனர்..!

விந்திய மிமயமலை போல் நிமிர்ந்திருந்த எம்
இந்திய தேசத்தை கூறுபோட்டாள நினைத்த
குந்தகத் துரோகிகள் பரங்கியரிடம் அடகு வைக்க
மந்திகளிட மகப்பட்ட மாலை போலான திந்தேசம்..!

நாதியற்றிருக்கும் வீடு போலிருந்த தேசத்தில் தியாக
சோதிநிறை யெம்மக்களில் சிலர் வீறு கொண்டெழ
காதியாடை முதல் கந்தலாடை யணிந்தவர் வரை பரங்கியச்
சதியை முறியடிக்க புது சக்தி கொண்டெழுந்தனர்..!

பீங்கிகளைக் கண்டஞ்சவில்லை யெம்மக்கள் - யம
சூரர்கள் போலின்ற சிப்பாய்களைக் கண்டஞ்சவில்லை
பரங்கியரைத் துரத்த அகிம்சை யென்ற ஆயுதமேந்தினர்
வீரத்தின் மேலின் பால் பலர் இரும்பாயுத மேந்தினர்..!

வீதிகளெங்கும் வந்தேமாதர முழக்கம் வானையிடிக்க
சதிராட்டம் போட்ட சண்டாளர்கள் சடசடவென வீழ
கொதித்தெழுந்த சுதந்திர வீரர்களைக் கண்ட பரங்கியர்
பீதி கண்டோடிப் போயின ரித்தேசத்தை விட்டு..!

மெங்கும் மகிழ்ச்சிப் பிரவாக மூற்றெடுக்க - சுதந்திர
தினமொன்று கிட்டியது காணீர் எம்தேசத்தோரே
வனவாசம் முடிந்து சன விடுதலை (சு)வாசம் பெற
வானமாமலை போன்ற நல்லிதயங்களை இழந்தோம் நாம்..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கேளீர் மக்களே
அம்மாவோ... எத்துனை உயிர்களை பலிகொடுத்து
சிம்மக்குகை போலிருந்த சிறைகளி லகப்பட்டு
நம் சந்ததிகள் நலம்பெற ஈந்தனர் அவரின்னுயுரை..!

பொன்போல் காத்த யித்தேசத்தில் தீவிரவாதிகளின்
வன்கொடுமை மதச்செயல்களுக் கெதிராகவும்
ஓன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்
பன்றிகளுக்கெதிராகவும் தேவை மீண்டுமொரு போராட்டம்..!

று விளைவிக்கும் அரசியல் கபடதாரிகளொழிய - நம்முள்
வேறுபாட்டை ஏற்படுத்தும் தீவிரவாதிகளைத் தீயிட்டழிக்க
ஈறுகாட்டி ஏமாற்றும் போலி (ஆ)சாமி'களை' யொழிக்க- இந்த
அறுபதாவது சுதந்திர தினத்திலாவது வீறு கொண்டெழுவோம் வாரீர்!

-மோ. கணேசன். ஆகஸ்டு 15, 2007
(ஒவ்வொரு கண்ணியிலுள்ள வரிகளின் இரண்டாவது எழுத்துக்களை வரிசைப்படி படித்துப் பார்த்தால் செய்தி ஒன்று கிடைக்கும்)

Monday, July 16, 2007

கும்பகோணம் பள்ளி தீவிபத்து

கும்பகோணத் துயரம்




கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இருமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

-மோ. கணேசன்.


(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து மூன்றாமாண்டு நினைவு நாள் (16.07.2007) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி...


Sunday, July 08, 2007

The new 7 Wonders announced in 07.07.07

The new 7 wonders will be announced at lisben city in 07.07.'07
the first place got Our Taj Mahal... wow...


Other 6 places given below...

* The Colosseum, Italy






* The Great Wall of China, China






* The Statue of Christ Redeemer, Brazil


* Machu Picchu, Peru



* Chichen Itza, Mexico







* Petra, Jordan